குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம். Show all posts
Showing posts with label நிலம். Show all posts

Friday, January 24, 2020

நிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க

அளவான ஒரு குடும்பத்தலைவரின் கனவு - வீடு, கார், ஓரளவு நிரந்தர வருமானம், பிள்ளைகள் படிப்பு, தனக்கும் பிள்ளைகளுக்கும் எதிர்கால பாதுகாப்புக்கு சேமிப்பு. இது இல்லாதவர் எவரேனும் உண்டா?

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. பொருளை ஈட்டும் பொருட்டு, நகரங்களுக்குச் சென்றவர்களுக்கு, அங்கு சொத்து வாங்கவோ, வீடு கட்டவோ அவற்றின் விலை மிக அதிகம் என்பது முக்கிய காரணமாய் உள்ளது.

அபார்ட்மெண்ட்களில் வீடு கிடைத்தாலும், அந்த வாழ்க்கை உவப்பாக இருப்பதில்லை. தண்ணீர் பிரச்சினையிலிருந்து, இன்னும் பலப்பல பிரச்சினைகளை தினமும் சந்திக்க வேண்டி இருக்கும்.  நிர்வாகச் செலவுகள் வாடகை போல தொடரும். அபார்ட்மெண்ட் வீடுகள் விலையேற்றம் என்பது கிடையாது. 

நகரங்களை ஒட்டிய இடங்கள், வீடுகள் காலப்போக்கில் விலையேறலாம். நகரங்களை ஒட்டிய வீடுகளை விலைக்கு வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.

கடன் பெற்று வீடு வாங்குவது மட்டுமே பெரும்பான்மை மக்களுக்கு இப்போதைய ஒரே வழி. வீடுகளின் விலைகள் உயர்ந்து உள்ளன. வாடகை கொடுக்கும் பணத்துக்கு, மாதா மாதம் டியூ கட்டி விடலாம் என்று நினைத்து கடன் வாங்கும் நபர்களுக்கு மாத வருமானம் சரியாக கிடைக்கவில்லை என்றால் கடன்காரர்களின் தொல்லைகள் பெரிய அவஸ்தையை உருவாக்கும். 

அரசு அலுவலர்கள் ஓரளவு சமாளிக்கலாம். பிள்ளைகள் படிப்பு, நோய், அவசரச் செலவுகள், விழாச் செலவுகள், உறவுகள் என்றெல்லாம் கண் முன்னே செலவுக்கான வழிகள் கைகட்டி நிற்கும் போது வீட்டுக்கடன் அடைக்க இயலாமல் போனால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வந்து விடும். நிம்மதியற்ற வாழ்க்கை கடன் பெற்று வீடு வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அமைந்து விடுகிறது.

நகர வாழ்க்கை முறை வருடம் தோறும் புதுப்புது வைரஸை, நோயை உருவாக்கி மக்களை மரண பீதியடைய வைக்கிறது. தன்னளவில் பொருளாதார மேம்பாடு அடைய, மனிதர்கள் தங்களின் உடல் நலத்தை பணயம் வைப்பது,  சம்பாதித்து சேர்த்து வைப்பதில் பாதி நோய்க்காக, உடல்நலத்துக்காக செலவழிக்கப்படுகிறது. 50, 60களில் இருப்போரிடம் பேசிப் பார்த்தால் சொல்வார்கள்.

அந்தக் காலத்தில் கூரை - ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் 80, 90 வயது வரை நோயின்றி வாழ்ந்தார்கள். உடல் உழைப்பு மட்டுமல்ல வீடு என்பது முழு ஓய்வுக்கான இடமாக இருந்தது. கவலையற்ற வாழ்வு, அவர்கள் சுயசார்பு வாழ்க்கை முறையில் வாழ்ந்ததால் நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தது. சுயசார்பு வாழ்க்கை என்றால் என்ன என கேட்கத் தோன்றும்

வீட்டில் இரண்டு தென்னை மரங்கள், ஒரு கொய்யா, கருவேப்பிலை, கொடத்தடிப் பக்கம் நான்கு கத்தரி, வெண்டைச் செடிகள், அவரை, பரங்கிச் செடி, புடலைச் செடி, பீர்க்குச் செடிகள், கீரைகள் இருந்ததால் உணவுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவைகள் முழுச் சுகாதாரமான, உரங்கள் அற்ற சுத்தமான காய்கறிகள். நல்ல வெளிச்சம், காற்றோட்டமாய் வீடுகள் என கொசுக்கள் இல்லாத வீடுகளில் அவர்கள் வசித்தார்கள். மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மட்டுமே அவர்கள் அரசை நாடினார்கள். நோய்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களையே மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். நல்ல செழிப்பும், வளமும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கும் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் அவ்வாறுதான் வாழ்கிறார்கள்.

இப்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறை, நோய் இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உள்ளார்கள் என தேட வைத்திருக்கிறது. சுகர், பிரஷர் எல்லாம் ஃபேஷன் நோய்கள். அதற்கும் மருந்துச் செலவுகள் ஆகிக் கொண்டிதான் இருக்கின்றது. மக்கள் அதையும் ஏற்று வாழப் பழகிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. 

இதையெல்லாம் யோசித்து, மிகக் குறைந்த விலையில் 30 வருட உத்தரவாதமளிக்கும் சுயச்சார்பு ஆரோக்கிய வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கு வழங்கி, கடனற்ற வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்ற ஆவல் இதே ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 15 வருட அனுபவத்துடன் இருக்கும் எனக்கு ஏற்பட்டது.

இந்த ஆவலில் விளைந்ததுதான் ஆரோக்கிய வீடுகள் கட்டும் திட்டம். அதுவும் மிகவும் குறைந்த விலையில். மாதா மாதம் தவணைகள் இல்லா வாழ்க்கை முறை. சொர்க்கத்தை வழங்கும் இயற்கைசார் வீடுகள். வருமானமே வரவில்லை என்றாலும் மிகச் சொற்பமான செலவில் அமைதியாக வாழும் வீடுகள்.

விரைவில் வெளியிட இருக்கிறேன். எனது பிளாக்கிலும் எனது யூடியூப் சேனலான https://www.youtube.com/user/fortunebricksindia இணைந்திருங்கள். வெகு விரைவில் அவ்வகை வீடுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

ஊட்டியில் 25 செண்ட் ஃபார்ம் ஹவுஸ் வீடுகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. அதைப் பற்றியும் எனது பிளாக்கிலும், யூடியுப் சேனலிலும் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, November 26, 2019

நிலம் (60) - பட்டா வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.  அதற்கு முன்பாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு தொடர்கிறேன்.

முஸ்லிம் மதத்தினர் கண்டிஷனல் பட்டா நிலங்களை வாங்கலாமா? என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பட்டாவின் கண்டிஷன் என்ன என்பது தெரிந்தால் தான் வாங்கலாமா? வேண்டாமா? என்று சொல்ல இயலும். பொதுவாக கருத்துரு வழங்க இயலாது. ஆகவே பட்டாவின் நகலினை எனக்கு அனுப்பி வைக்கவும்.

இனி வெகு முக்கியமான இந்த விஷயத்துக்கு வருகிறேன்.

ஒருவர் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தினைப் பட்டா மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார். இப்போதெல்லாம் ஆன்லைனில் எளிதாகப் பட்டாவுக்கு அப்ளை செய்து விட்டால் இரண்டொரு மாதங்களில் இன்ஸ்பெக்‌ஷன் முடிந்தவுடன் பட்டா மாறுதல் ஆகி விடும். கொஞ்சம் அலைச்சல் ஆகும். இவர் எதற்கு என்னிடம் பட்டா மாற்றித் தரும்படி வந்திருக்கிறார் என்று தெரியவில்லையே என நினைத்துக் கொண்டேன். ஆனால் கேட்கவில்லை.

அவர் கொடுத்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் புறம்போக்கு நிலத்தினைப் பட்டா பெற்ற உரிமையாளரிடமிருந்து, இவர் கிரையம் பெற்று இருப்பதும், அந்த நிலத்தின் பட்டா இவர் பெயருக்கு மாறவில்லை என்பதும் தெரிய வந்தது. 

’பலமுறை பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பம் செய்து, ஒன்றும் ஆகவில்லை, என்னால் அலைய முடியவில்லை, எனவே நீங்கள் செய்து தாருங்கள் என்றும், அதற்கு கட்டணமும் கொடுத்து விடுகிறேன் எனவும், கட்டணமாக அதிகத் தொகையையும் குறிப்பிட்டார்’. குடுமி சும்மா ஆடாது என்று புரிந்து போனது.

ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கொஞ்சம் அசந்தால், நேரமும் உழைப்பும் வீண். ரியல் எஸ்டேட் தொழிலில் நிதானம் ரொம்பவும் முக்கியம். நிதானம் தவறினால் படுகுழிக்குள் தள்ளி சுவடு தெரியாமல் மூடி விடுவார்கள். அந்தளவுக்கு நல்லவர்கள் இந்தத் தொழிலில் அதிகம்.

ஒரு புரோக்கர், அவருக்கு கமிஷன் கிடைக்காது எனத் தெரிந்தால் போதும், இன்னொருவரின் பிழைப்பில் செம்மண்ணை அள்ளிப் போட்டு விடுவார். 16 ஆண்டுகால அனுபவத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், எப்படியெல்லாம் சிக்க வைப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். வேற லெவல் ஆட்களை இங்குப் பார்க்கலாம். கசங்கிய சட்டையுடன், படிக்காதவர்கள் போல, அப்பிராணிகளாய் இருப்பார்கள். மனசாட்சியே இல்லாமல் பிடுங்கி விடுவார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில, நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள முடியவே முடியாது. அக்ரிமெண்ட் போடுவார்கள், பணம் பெற்றுக் கொள்வார்கள். கிரையத்துக்கு ஆளைப் பிடிக்க முடியாது. அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றால், ’எங்க வீட்டில் இந்த விலைக்கு விற்காதே, விற்றால் தூக்குப் போட்டுக் கொள்கிறேன் என்று ஒரே பிரச்சினை சார்’ என்பார்கள். இங்கு நான் சொல்வது ஒரே ஒரு பர்ஜெண்டேஜ் பிரச்சினை. பல வித முயற்சிகளுக்குப் பின் புரோக்கர் ஒருவர் நிலத்தினை விற்றுக் கொடுப்பார். அவருக்கு கமிஷன் கூட கொடுக்கமாட்டார்கள் ஒரு சிலர்.  இதெல்லாம் எளிய பிரச்சினைகள். இதை விட கொடூரமாக புதிய புதிய பிரச்சினைகள் வரும்.

பட்டா மாற்ற வந்தார் அல்லவா? அவருக்குத் தெரிந்திருக்கும் அந்த நிலத்தில் ஏதோ பிரச்சினை என்று. என்னிடம் இது ஏதோ எளிதான வேலை என்பது போலவும், நம்மால் அலைய முடியவில்லை என்பதால் தான், உங்களிடம் வந்திருக்கிறேன் என்பது போலவும் பேசினார்.

அய்யோ பாவம் என்று நினைத்தால் போதும். ஜபர்தஸ்தாக உட்கார்ந்து கொண்டு என்ன ஆச்சு சார்? என்று கேள்வி கேட்கலாம் அல்லவா? கொடுத்த பணமும் வேலை முடியவில்லை எனில் திரும்பக் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் அவர்  வந்து இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

அவரால் ஏன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை என்பதை இப்போது பார்ப்போம்.


அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. சமீப காலமாக, அதை புறம்போக்கு நிலம் எனச் சொல்லி, அனுபோக பாத்தியம் ஏற்பட்டு விட்டதாக அறிக்கை கொடுத்து, அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கினார்கள். ஒரு சிலர் அவ்வாறு பெறப்பட்ட பட்டாவை வைத்துக் கொண்டு, நில  உபயோகத்தின் தன்மையை மாற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்க ஆரம்பித்தனர். நிலத்தின் தன்மையை ஆராய்ந்த சென்னை அலுவலகம், மனுக்களைத் திருப்பி அனுப்பி வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் ஏக்கர் கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்களையும், மந்தை வெளி நிலங்களையும், பல கில்லாடி வேலைகளைச் செய்து பட்டா பெறப்பட்டு மனை நிலங்களாக மாற்றப்பட்டதை அரசாங்கம் கண்டு பிடித்து அதற்கு தடை போட்டு விட்டது.

அதென்ன மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று கேட்க தோன்றும். மேய்ச்சல் நிலம் என்பது கால் நடைகள் மேய்ச்சலுக்காக அரசால் விடப்பட்டிருக்கும் பொது உபயோகத்துக்கான புறம்போக்கு நிலமாகும். அதில் கால் நடைகள் மேயும்.

மந்தை வெளி நிலம் என்பது நத்தம் என்கிற பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருப்பதால், கால் நடைகளை ஓட்டிச் சென்று காலையிலும், மாலையிலும் இந்த இடத்தில் ஒன்று சேர்த்த பிறகு மேய்ச்சலுக்கும், வீட்டுக்கும் பிடித்துச் செல்வார்கள். அந்தக் காலத்தில் இது போல ஒன்று சேரும் மாடுகளை மேய்க்க ஆட்கள் தனியாக இருந்தனர். கால்நடைகள் ஒன்று சேர்க்கப்பட்டு மேய்ச்சலுக்கும், மாலையில் அவரவர் வீடுகளுக்கும் பிரித்து பிடித்துச் செல்ல பயன்படுத்திய நிலத்தினை மந்தை வெளி நிலம் என்று சொல்வார்கள். இந்த நிலத்தில் பொங்கல் விழா கொண்டாடுவார்கள். இந்த நிலத்தில் மாடுகளின் கழிவுகள் சேரும். அதனை விவசாயிகளுக்கு உரமாக விற்பனை செய்வார்கள். எனது கிராமத்தில் மாட்டுச் சாணத்திற்காக  ஏலம் விடுவார்கள். ஆள் வைத்து காலையிலும் மாலையிலும் சேரும் சாணத்தை சேகரம் செய்து, நெல் வயல்களுக்கு உரமாகப் போடுவார்கள்.

இந்த இரண்டு இடங்களும் அரசின் சொத்து. இந்த நிலங்களைக் கூட விடாமல் புறம்போக்கு என ஆவணங்கள் தயார் செய்து,பட்டா பெற்று விடுகின்றார்கள் ஒரு சிலர்.

இப்படியான நிலத்தில் ஒரு பகுதியை அவர் ஏமாந்து வாங்கி விட்டு, பட்டா பெற முடியாமலும், நிலத்தினை விற்றவரிடம் பணத்தினைப் பெற முடியாமலும் ஏமாந்து விட்டு, என்னிடம் வந்து நின்றார் அவர். இந்த விஷயம் அவருக்குத் தெரிந்து இருக்கும். தெரிந்து ஏன் என்னிடம் வந்தார் என்றால் ஏதாவது செய்து பட்டா மாற்றி தந்து விட்டால் லாபம் தானே என்ற நினைப்பு.

அவரிடம்,” இது மேய்ச்சல் நிலம் என்று உங்களுக்குத் தெரியும். அதனால் தான் பட்டா பெற முடியவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். அத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு என்னிடம் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“அய்யோ...! சார்... ! எனக்குத் தெரியவே தெரியாது சார். இது மந்தை வெளி நிலமென்று ஊரில் ஒருத்தர் சொன்னார் சார். பல பேரு பட்டா வாங்கி இருக்காங்க சார். அதான் சார் உங்களிடம் வந்தேன்” என்று ஆரம்பித்தார்.

”அரசாங்கம் இந்த வகையான நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து விட்டது. இல்லை எனக்கு இந்த நிலம் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் வைத்திருக்குமிடத்தின் அளவுக்கு வேறு இடத்தில் நிலம் வாங்கி, அதை சுத்தப்படுத்தி அரசிடம் ஒப்படைப்புச் செய்த பிறகு, இந்த நிலத்துக்கு பட்டா பெறலாம். இது ஒன்று தான் வழி, வேறு வழி ஏதும் இல்லை” எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

நிலம் (59) வது பகுதியில் பட்டாக்களின் தன்மையை ஆராய வேண்டுமென்று எழுதி இருந்தேன் அல்லவா? இதைப் போன்றதொரு நிலமாக இருந்தால் நிலம் வில்லங்கம் ஆகி விடும் அல்லவா? அதற்காகத்தான் லீகல் பார்க்கும் போது பட்டாவை ஆராய வேண்டும் என எழுதி இருந்தேன். இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இனி கிராமங்களில் மட்டும் அல்ல நகர்புறங்கள் கூட ஒரு காலத்தில் கிராமப்புறங்களாக இருந்தவை தான் என்பதையும், அந்தக் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்கள் இருந்திருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

மேய்ச்சல் நிலம் என எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டீர்கள் எனில் அதற்கு தான் அடியேன் இருக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ளவும். ஒரு சிலர் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஆவணங்களைப் படித்துப் பார்க்காமல் நிச்சயம் என்னால் எதுவும் சொல்ல இயலாது. அவ்வாறு சொன்னால் அது தவறாகப் போய் விடும் ஆபத்து உள்ளது என்று ஒரு சில ஆலோசனைகள் வழங்கிய பிறகு தெரிந்து கொண்டேன். ஆகையால் ஆவணங்களைப் படிக்காமல் ஆலோசனை வழங்க இயலாது என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என இருவகை நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* * *
ஒரு செய்தி உங்களுக்காக....!

மாடுகளைத் தெய்வம் எனச் சொல்லும் நம் பாரதப் பிரதமர் முன்பு முதலமைச்சராய் இருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை, பாரதப் பிரதமரின் மலிவு விலை வீடுகள் கட்ட பயன்படுத்த ஒதுக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி தர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குஜராத் மந்திரி சபை முடிவு செய்திருக்கிறது என்கிறது கீழே இருக்கும் செய்தி. 

Wednesday, November 20, 2019

நிலம் (59) - நில உரிமைக்கான பட்டாக்களின் வகைகள்

நண்பரொருவர் “சார் சொத்து உரிமைக்கு பட்டா மட்டும் இருந்தால் போதுமா? பத்திரம் தேவையில்லையா?” என்று கேட்டார். இது பற்றி பல முறை எழுதி இருந்தாலும் பட்டாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்பதால் இந்தப் பதிவு. 

ஆரம்பகாலத்தில் அதாவது பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் பத்திரங்கள் என்று எதுவும் இல்லை. நில உடமைப் பதிவு 1850ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பின்னர் நில அளவை மூலம், நில உரிமைக்கானப் பதிவுகள் 1900, 1955 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தொடங்கி அரசின் நில உடமைப் பதிவேட்டில் உரிமையாளர்கள் பெயர்கள் பதியப்பட்டன.

1850ஆம் ஆண்டின் நில உரிமைப் பதிவேட்டிற்குப் பிறகு, இந்தியப்பதிவு சட்டம் 1908ன்படி பத்திரப்பதிவு தொடங்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பாக, நில உடமைப் பதிவேட்டில் உள்ளபடி நில உரிமை மாற்றங்கள், அந்தந்த கிராமக் கணக்காளர் மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டன என்கிறார்கள். பத்திரப்பதிவு வந்த பிறகு, நில உரிமை மாற்றத்திற்கான மூலம் பத்திரங்கள் என்று உறுதி செய்யப்பட்டன. பெரும்பான்மையான நில உரிமை மாற்றம் ,பத்திரங்கள் மூலம் தான் தற்போது செய்யப்படுகின்றன. இருப்பினும் சில நிலங்களின் உரிமை மாற்றங்கள் பட்டாக்களின் மூலமாக செய்யப்படுகின்றன. 

பட்டாக்களின் மாற்றங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கிறன. உரிமையை விட்டுக் விடுதல், ஒப்படைப்பு, அரசால் வாங்கப்பட்டவை, தனி நபரால் வாங்கப்பட்டவை, நீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம், கொடையினால் பெறப்பட்டவை, வாரிசுகளால் உரிமை மாற்றம் செய்யப்பட்டவை, 12 ஆண்டுகளுக்கும் மேல் அனுபோகப் பாத்திய ஏற்பட்டவை, வாரிசு இன்றி அரசுக்கு சேர்ந்தவை, உட்பிரிவு செய்தல், பரிவர்த்தனை செய்தல், பாகப்பிரிவினை ஆகியவைகளின் மூலம் நிலத்தின் உரிமை மாற்றங்கள், பட்டாக்களில் பதிவு செய்யப்படுகின்றன என்பதினை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு சொத்து வாங்கப்படும் போது, அதன் உரிமை மாற்றங்கள் எப்படியானவை என்று கண்டுபிடித்து, அதன் உரிமை மாற்றம் மிகத் துல்லியமாக ஆராயப்பட வேண்டும். இதைத்தான் அடியேன் செய்கிறேன். எந்தெந்த ஆவணங்கள், யாரிடம் இருக்கும் என்ற அனுபவ அறிவினால், சொத்தின் உரிமை மாற்றத்துக்கான ஆவணங்களைப் பெற்று, ஆராய்ந்து பின்னர் தான் லீகல் எப்படி இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறேன். ஐந்து செண்ட், பத்து செண்ட் நிலங்களுக்கு அதாவது டிடிசிபி அப்ரூவல் மனைகளுக்கு என தனியான ஆராய்வுகள் உண்டு. 

ஒரு சிலர் கிராமம், புல எண்களைக் கொடுத்து, “சார், இந்தச் சொத்தினை வாங்கலாமா? வேண்டாமா? எனச் சொல்லுங்கள்” என போனில் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில் மெளனம். இல்லையெனில் என்னால் இயலாது என்பதுதான். நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

பட்டாக்கள் பொதுவாக 
  1. தனிப்பட்டா 
  2. கூட்டுப்பட்டா
  3. 2சி (மரம் வளர்க்க) பட்டா
  4. நத்தம் பட்டா
  5. கண்டிஷனல் பட்டா (பஞ்சமி, எஸ்.ஸி/எஸ்.டி/, மலைவாழ் மக்கள் பட்டா இப்படிப்பல இனங்கள்)
  6. பி மெமோ பட்டா (புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கப்படுபவை),
  7. டி.கே.டி.(நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கண்டிஷனல்)பட்டா

என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டாக்களின் மூலமாக உரிமை மாற்றங்கள் பதியப்படுகின்றன.

தனிப்பட்டா என்பது ஒரு உரிமையாளருக்கு உரிமையான மொத்த நிலமும் தனியாகக் குறிப்பிடப்பட்டு வழங்குவது.

கூட்டுப்பட்டா என்பது பல உரிமையாளர்களுக்கு உரிமையான பல புல எண்களோ அல்லது ஒரே புல எண்ணோ கொண்ட மொத்த நிலத்தின் அளவு குறிப்பிடப்பட்டு வழங்குவது.

2சி பட்டா என்பது அரசின் புறம்போக்கு நிலத்தில் மரங்கள் வளர்க்க வழங்கப்படுவது.

நத்தம் பட்டா என்பது அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுபவை.

கண்டிஷனல் பட்டா என்பது பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

ஷெட்யூல்ட் கேஸ்ட் (SC) இனத்தினருக்கு வழங்கபடுவை, இராணுவத்தாருக்கும் வழங்கப்படுபவை, சிறப்பு வீட்டுமனை திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவை, நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படுபவை, தியாகிகளுக்கு வழங்கப்படுபவை, அரசே நிலம் வாங்கி எஸ்.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டவை, பஞ்சமி (Depressed Class) நிலப்பட்டாக்கள் என மேலே குறிப்பிட்ட பட்டாக்க்கள் மூலம் நில உரிமையாளர்கள் ஆக்கப்படுவார்கள். ஆனால் அந்தப் பட்டாக்களில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் கண்டிஷனல் பட்டா நிலங்களைக் கிரையம் பெறக்கூடாது.

தற்போது என்ன செய்கிறார்கள் என்றால், கணிணி பட்டா வந்தவுடன் அதைக்காட்டி கிரையம் செய்து விடுகிறார்கள். அவ்வாறு கிரையம் பெற்ற பலர் இன்றைக்கும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலாமல் திகில் அடைந்து கிடக்கின்றார்கள். 

நாட்டின் உயரிய பதவி வகிப்பவரின் ஆலோசகர் ஒருவர் இப்படித்தான் சிக்கி இருக்கிறார். நில ஆவணங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றம் செய்ய முற்பட்டால் பின்னாட்களில் மாற்றம் செய்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்பதால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இன்று வரைக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலவில்லை.

பி மெமோ பட்டா என்பது ஊரின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவருக்கு வழங்கப்படுபவை. அது பி மெமோ ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

டி.கே.டி பட்டா என்பது நிலம் இல்லா மலை வாழ் மக்களுக்கு அரசால் வழங்கப்படுபவை. ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் டி.கே.டி பட்டாக்கள் அதிகம். இங்கு நிலம் வாங்கும் போது, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் நிம்மதியாக இருக்கலாம்.

சொத்து வாங்கும் முன்பு நிலத்தின் பட்டாவை பரிசீலனை செய்வது மிகவும் சாலச் சிறந்தது என்று இப்போது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இது தவிர இன்னும் ஒரு சில பட்டாக்கள் உண்டு. அதையெல்லாம் பொதுமைப் படுத்தி தான் விவரித்திருக்கிறேன். பட்டாக்கள் பற்றி இந்த விஷயங்கள் போதுமானவை.

குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வகையான லீகல் பார்க்க வேண்டும். இந்தக் குறிப்புகளை வைத்து எந்த முன் முடிவுக்கு வர வேண்டாம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

விரைவில் தர ஏக்கர் என்றால் என்ன என்பது பற்றிய விரிவான பதிவினை எழுத இருக்கிறேன். 

இந்த தர ஏக்கர் விபரம் தான் எதிர்காலத்தில் நிலம் வாங்குவதற்கு உண்டான முக்கியமான காரணியாக இருக்கப் போகிறது. நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி, பெரும் சொத்துக்காரர்களிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க...! வளமுடன்....!

மேலும் ஒரு குறிப்பு: 50 ஏக்கர் நிலம் வாங்கப் போகிறேன், பண்ணையம் செய்யப் போகிறேன் என்று திட்டமிடுபவர்கள் சரியான திட்டமிடல் செய்த பிறகு வாங்குங்கள். இல்லையெனில் நிலம் உங்களை விட்டு போய் விடும்.

Thursday, November 14, 2019

நரலீலைகள் - பீமா (18+ மட்டும்) (7)

அவர்கள் இருவர், பீமா மற்றும் ஜூனா.

விடிகாலைக்கும் முந்தைய பொழுது. செயற்பொறியாளர், பொதுப்பணித்துரை என பித்தளை தகட்டினில் எழுதப்பட்டிருந்த வீட்டு கேட்டினை தாண்டிக் குதித்தனர். பூட்டப்பட்ட கதவினை பீமா எதையோ ஒன்றினை வைத்து திறந்து உள்ளே சென்றான்.

செல்வம் கொழிக்கும் வீடு. கிரானைட்டால் மெழுகி இருந்தார் அந்த செயற்பொறியாளர்.

இருவரும் படுக்கை அறைக்குள் சென்றனர்.

செயற்பொறியாளர் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தார். வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

எதிரில் அவரின் செல்ல மகன்கள் இருவரும், அழகிய மனைவியும் கைகள் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுக் கிடந்தனர்.

செயற்பொறியாளரின் கண்கள் விரிந்து கிடந்தன. கண்ணீரில் கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கத்தவும் முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அகலமான ஏசி ஓடிக் கொண்டிருந்த படுக்கையில் மூவரும் கிடந்தனர். அவர்கள் மீது கைகளால் அழுத்தி அமர்ந்து கொண்டு, கையில் கூர்மையான கத்தியுடன் ஜூனா.

கையில் ஒரு பேப்பருடன் பீமா பொறியாளர் முன்னிலையில் நின்றிருந்தான். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

இது வரை தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளமாகப் பெற்றது ஒன்றைரைக் கோடி. லஞ்சமாகப் பெற்றது 20 கோடி. இது அத்தனையும் இதோ உங்கள் முன்னால் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கும், மகன்களுக்கும் பெறப்பட்டவை. ஆகையால் இவர்கள் மூவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படப் போகின்றார்கள். உங்களைக் கொல்லப்போவதில்லை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் லஞ்சமும், கமிஷனும் இவர்களுக்காக என்பதால், இனி இவர்கள் இருக்கப் போவதில்லை. 

இந்தக் கொலைகளைச் செய்வது பீமா மற்றும் ஜூனா ஆகிய நாங்கள். இதை ஒப்புதல் வாக்குமூலமாக உங்களிடம் கொடுத்து விடை பெறுகிறோம்.

”ஜூனா, மூவரின் கழுத்தையும் அறுத்து, தலையை மட்டும் இவரின் காலடியில் வைத்து விடு. இவர்களைக் கொன்றது இவரின் பேராசை”

“சரி, அண்ணா...!”

முதலில் மகன்களின் தலையை அறுத்தான். ஒவ்வொருவரின் உடம்பு துடித்து அடங்கியது. கடைசியில் மனைவியின் கழுத்தை அறுத்தான் ஜூனா. பீமா அமைதியாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். செயற்பொறியாளர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

அவர் கண்களை மூடிக் கொண்டார். கண்கள் பீமாவைப் பார்த்துக் கெஞ்சியது. அழுதன. எல்லாம் முடிந்தன.

ஆர்ப்பாட்டமின்றி இருவரும் வெளியில் சென்றனர்.

அவர்கள் வெளியேறுவதைக் கண்டு புன்னகைத்த அஸாஸில் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். 

* * *

”ஆஹா...! நாவல் ஆரம்பித்து விட்டது. எழுத்தாளன் எழுத ஆரம்பித்து விட்டான். இனி அதகளம் தான். நாவல் வடிவம் பெற ஆரம்பித்து உள்ளது. இனி பீமாவும், ஜூனாவும் உலகில் நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களுக்கு காரணமானவர்களைக் கொன்று ஒழிப்பார்கள். இனி உலகம் சுபிட்சம் பெறும். ஆஹா, அற்புதம். அஸாஸிலைக் காவல்துறையினர் கைது செய்து தூக்கில் போடுவர். இனி அஸாஸில் ஆட்டம் குளோஸ்” 

”மாயாண்ணே, இதெல்லாம் நடக்குமா?”

”சந்து, நிச்சயம் நடக்கும். இந்த நாவல் ஆசிரியன் ஆரம்பகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கொட்டைப் பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை படித்தவன். தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுவான். யோக்கிய சிகாமணி”

“அண்ணே, ஒருத்தன் யோக்கியன் என்றால், அவனுக்குப் பயம் ஜாஸ்தி என்று அர்த்தம்னே. தைரியசாலிதான் அயோக்கியத்தனம் செய்வான். யோக்கியன் என்பவன் பேசிக்கல்லி பயந்தாங்கொள்ளிண்ணே”

“அட, சந்து, நீயாடா இதெல்லாம் பேசுறே, நீ சொல்றது கூட சரியாத்தான் படுது”

“உண்மைதாண்ணே, வாழும் வரை வாழ்ந்து பார்த்துடுவோம், பின்னால் எது வந்தாலும் பார்த்துக்கிடலாம்னு பயமின்றி இருப்பவன் தான் அக்கிரமங்களைச் செய்கிறான், இதுதான் உண்மையும் கூட”

“சந்து, நீ ரொம்ப அறிவாளியாப் பேசுகிறாயே, ஆச்சரியம் தான் போ...!”

”அண்ணா, எழுத்தாளன் வந்து விட்டான் மீண்டும். என்ன எழுதுகிறான் என பார்ப்போம்”

* * *

செயற் பொறியாளர் படுக்கையில் இருந்து பதறி எழுந்தார். வியர்க்க விறுவிறுக்க அருகில் பார்க்க மனைவியும், மகன்களும் ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு சற்றே நிம்மதியானது. அறையின் மூலையில் நின்று கொண்டிருந்த அஸாஸில் புன்னகையுடன் வெளியேறினான்.

“நான் இருக்கும் வரையில் இங்கு எதையும் உங்களால் மாற்ற முடியாது பீமா. உங்களை விட சக்தி வாய்ந்தவன் இந்த அஸாஸில். நான் ராதை மீது காதலில் விழுந்து விட்டேன் என நினைத்தீர்களோ? அது காமம். இது எனது டிசைன். மனிதர்களை அயோக்கியர்களாக மாற்றி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் வரை விடமாட்டேன். ”

”நீதியின் பால் நம்பிக்கை வைத்திருந்தீர்களே! அதுவும் இனி நடக்காது. ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் தினமும் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறேன். இனி கோடிகளில் வீடு சென்று சேரும். என்னிடம் பணம் என்று ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் மாற மாட்டார்கள் பீமா. விடவும் மாட்டேன்”

கொக்கரித்தான் அஸாஸில்.

பீமாவும், ஜூனாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

* * *

செயற்பொறியாளரின் மனதில், கனவில் தன் முன்னே வந்து நின்று கொண்டு, தான் வாங்கிய சம்பளம் முதற்கொண்டு, லஞ்சம் பணம் மொத்தம் எவ்வளவு என சொன்ன பீமாவின் உருவமும், கையில் கத்தியுடன் ஆழ்ந்த அமைதியாக அவரைப் பார்த்த ஜூனாவின் பார்வையும் மறையவே இல்லை. உள்ளுக்குள் நடுங்கினார் அவர்.

அவர் காலத்தின் சுழல் அச்சை நோக்கி ஒரு இஞ்ச் நகர்ந்தார்.

அஸாஸிலின் கால் நகத்தில் சிறிய கரும்புள்ளி தோன்றியதை அவன் கவனிக்கத் தவறினான்.

காலம் சிரித்தது.
* * *

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!

Tuesday, September 24, 2019

நிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்

என்னிடம் ஒருவர் ஒரு சிறிய சைட் ஒன்றிற்காக லீகல் ஒப்பீனியன் கேட்டிருந்தார். தேவைப்படும் ஆவணங்களை குறிப்பிட்டு, அவரிடம் இந்த ஆவணங்களைத் தருமாறு கேட்டேன்.

“சார், இதெல்லாம் எதுக்கு சார்? நீங்கள் இதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்” என அவரின் வசதிக்காக என்னை வேலை செய்யச் சொன்னார். அதற்கு அடியேன் சரிப்பட்டு வர மாட்டேன் என்பதால், அவரிடம் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்து, “உங்கள் விருப்பப்படி, என்னால் வேலை செய்ய இயலாது,  ஆகவே மன்னித்து விடுங்கள்” என்றேன்.

அவருக்கு பிபி அதாவது பிளட் பிரஷ்ஷர் உச்சத்தில் ஏறி விட்டது.

”அப்படி என்ன நீங்கள் லீகல் ஒப்பீனியன் பார்க்கின்றீர்கள்? வில்லங்கம் போடுவீர்கள், 1900லிருந்து ஆர்.எஸ்.ஆர் எடுத்துப் பார்ப்பீர்கள், ஒவ்வொரு பத்திரமாக டேலி பண்ணுவீர்கள், சரியாக இருந்தால் ஓகேன்னு சொல்வீர்கள், இதைத் தவிர வேறு என்ன புதிதாக லீகல் பார்க்கப் போகின்றீர்கள். என் வக்கீல் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள்” என்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

சரி, இது வேற ஆள், இவருக்குப் புரிகின்ற மாதிரி சொல்லி ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவரை உட்காரச் சொன்னேன்.

மெதுவாக ஆரம்பித்தேன்.

”ஏரியல் வியூப்படி அரசு சாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அல்லது அரசின் நிலங்களுக்கோ கையகப்படுத்தும் நிலையில் உள்ள நிலங்களின் அருகில் உங்களது நிலம் வருகிறதா என முதல் லீகல் ஆரம்பிப்பேன்” என்றேன்.

”என்ன? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது, இதையெல்லாம் ஏன் பார்க்கின்றீர்கள்?” என அடுத்த கேள்வி.

”இந்த நிலத்தை ஏன் வாங்குகின்றீர்கள்? வீடு கட்டணும் அல்லவா? அவ்வாறு வீடு கட்ட வேண்டுமெனில், உமது நிலம் இந்த விதிகளின் படி பாதிக்கப்படாமல் இருந்தால் தான் அனுமதி கிடைக்கும் என அரசு விதி இருக்கிறது” என்றேன்.

சட்டென்று உட்கார்ந்து விட்டார்.

”கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள். ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு ஏன் வாங்குகிறோம், என்ன பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என முடிவெடுப்பீர்கள். தமிழக அரசும், மத்திய அரசும் குறிப்பிட்டிருக்கும் பல விதிகளின் படி நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சொத்தின் உரிமையை மட்டும் சரி பார்த்தல், லீகல் ஒப்பீனியன் ஆகாது. அரசு விதிகளுக்கு உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் அந்த நிலம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் எனது வேலை” என்று விவரித்தேன்.

அமைதியானார் அவர்.

இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொடர்ந்தேன்.

“நீதிமன்றத்தில் வாதியால் சிவில் வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும். பிரதிவாதி என்பவருக்கு இன்னொரு பெயர் எதிரி. பிரதிவாதிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர் தனக்காக வாதாட வக்கீல் வைக்க வேண்டும். என்ன வழக்கு எனத் தெரிந்து அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என சட்டத்துக்கு உட்பட்டு வக்கீல் மூலம் வாதாட வேண்டும். ஆவண சாட்சியங்களை அளித்தல் வேண்டும். நீதிபதி வாதி, பிரதிவாதிகளின் வக்கீல்கள் மூலம் பெறப்படும் ஆவணங்கள், சட்ட மேற்கோள்கள், முன் தீர்ப்புகள், வாதி/பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு அளிப்பார். இது நடைமுறை.”

”ஆனால் ஒரு சில அறிவாளி வக்கீல்கள் என்ன செய்வார்கள் என்றால், பிரதிவாதிக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை ஆள் செட்டப் செய்து வாங்கிக் கொள்வார்கள்.  பிரதிவாதிக்கு தன் சொத்தின் மீது வழக்கு இருப்பதே தெரியாமல் போய் விடும். கோர்ட் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்தையும் பிரதிவாதிக்கு கிடைக்க விடாமல் செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதிவாதியின் முகவரியை தவறாக கொடுத்து விடுவார்கள்.”

”எந்த தபால்காரர் ஒழுங்காக தபாலைக் கொடுக்கிறார் இந்தக் காலத்தில். எனக்கு வர வேண்டிய புத்தகங்களைக் கூட, அவர் வசதிக்குத்தான் கொண்டு வந்து தருகின்றார். அந்த இலட்சணத்தில் தபால் அலுவலகம் இயங்குகிறது.”

”இப்படி பிரதிவாதியால் ஆஜராகாமல் இருக்கும் வழக்குகள் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். இந்த வகையில் வழங்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்புகளை மீண்டும் அந்த பிரதிவாதி வழக்காக மாற்றலாம். அதற்கு இத்தனை நாட்கள் என கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்புகளின் படி உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்துக்களை வாங்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

”இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கின்றீர்கள்” என்று வினவினார்.

”நான் என் தொழிலை நேசிக்கிறேன்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்ட ஆவணங்களையும், உங்களது கட்டணத்தையும் இரண்டொரு நாளில் கொண்டு வந்து தருகிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த இடத்திற்கான லீகல் பார்த்து, டிராப்ட் எழுதி, கிரையம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இருப்பதன் விளைவு அவரின் கோபம், அதனால் அவரிடம் தப்பில்லை என்று அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது, அவரின் கோபத்தை நியாயப்படுத்தினேன். கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. ஆனால் அதுதானே உண்மை?

ஒரு காரியம் செய்யப் போகும் முன்பு அதற்கான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு துறைக்கான ஆவணங்கள் அனைத்தும் தேடித் தேடி கண்டுபிடித்து, வாங்கி வைத்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள நிலங்களில் 90 சதவீதம் விபரம் என்னிடம் இருக்கிறது. 10 வருட காலமாய் உழைத்ததன் பலன் அது. லீகல் பார்க்க என்னெவெல்லாம் தேவை என்பதையும், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகளின் தீர்ப்புகளையும், தமிழக அரசு, இந்திய அரசுகள் வழங்கும் குறிப்பாணைகள், கெஜட்டுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுக்கிறேன், தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் தன்மை, அனுமதிக்கான விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய முடிகிறது. ஆனாலும் எனக்கே அவ்வப்போது அல்வா கொடுக்கும் ஒரு சில நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் அதை என்னளவில் சாத்தியப்படுத்தினேன். ஒரே ஒரு நிலமோ வீடோ வாங்குபவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை எனலாம். இது கலிகாலம் அல்லவா? யார் என்ன செய்து வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதே பெரிய வேலை.

உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழக அரசு அனுமதி பெறாத மனை இடங்களை அனுமதி பெற வரையறைகளை செய்து பணம் கட்டச் சொல்கிறது அல்லவா? இதே போல கோவையில் ஒரு வரையறை நடந்து, சுப்ரீம் கோர்ட்டில் அந்த வரையறைச் செல்லாது என தீர்ப்பு பெறப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் சும்மா கிடக்கிறது. பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணம் இதுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் வீடுகள், இடங்கள் கிரையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் தேவை அல்லது ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஒரு விதியை மீற ஒரு வரையறை என்பதெல்லாம் சட்ட விரோதமானது. அரசு இந்த விஷயத்தில் கொள்கை முடிவெல்லாம் எடுக்க முடியாது. சட்ட விதிகளை மேம்படுத்தலாம், கொஞ்சம் எளிதாக்கலாம். ஆனால் அதை நீக்க முடியாது.

காஷ்மீர் 370 அப்படியே. சரியான வக்கீலிடம் இந்த வழக்குச் சென்றால், பிஜேபி அரசின் மூக்கு உடைக்கப்படும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பு அப்படி. பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஒரு காரியத்தைச் செய்து விடலாம் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம். வாழ்நாள் வரையிலும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்க முடியாது. வரும் காலத்தில் வரக்கூடியவர் வெச்சு செய்வார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அன்றைக்கே ஆரம்பித்தார் அவர் தன் திருவிளையாடல்களை என என்னிடம் ஒரு முக்கியமான நபர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விதி ஆட விட்டு, என்றைக்கு முடியாத நிலையில் இருக்கின்றார்களோ, அன்றைக்குப் பார்த்து, கயிற்றை இருக்கி முடிச்சுப் போட்டு விட்டது. இனி விதி போட்ட முடிச்சை தில்லை வாழ் நாயகனால் கூட அவிழ்க்க முடியாது. கொஞ்சமாவது மக்கள் பணத்தை விழுங்குகிறோம் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். எவருக்கு இருக்கிறது இங்கே?

நாம் அனைவரும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆளைச் சந்தித்திருப்போம். அவர் பெயர் பொதுவாக துரோகி என அழைக்கப்படும். அவரை நம் வாழ் நாள் வரையிலும் மறக்க முடியுமா? நெஞ்சில் குத்தாமல், முதுகில் குத்தியிருப்பார் அந்த துரோகி. அப்படியானவர்களை நாம் முதலில் மன்னிப்போமா? ஆனால் இப்போது என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்?

ஒழுங்கீனம் இப்போது ஒரு தகுதியாக மாறிப் போனது. எல்லாம் மனித வாழ்க்கையில் சாத்தியம் தான். ஆனால் எது ஒன்று காலை, மாலை, பிறப்பு, இறப்பு என மனிதனையும், அவன் சூழலையும் இயக்குகிறதோ அதன் வாசலில் நிற்கும் போது ஒவ்வொருவரின் கணக்கும் சரி செய்யப்படுகிறது என்பது நிதர்சனம்.

ஆடும் வரை ஆடி விடுவோம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது அறிவிலித்தனம். எதுவும் முடியாமல் ஓய்வாக இருக்கும் போது, கண் முன்னால் ஒவ்வொன்றும் அழிக்கப்படும் அவலத்தைக் கண்டு துடித்து துடித்துச் செத்துப் போக விரும்புவர்கள் ஆடுவார்கள். அது அவரவர் வசதிக்கு உட்பட்டது.

வாழ்க வளமுடன்...!



அடியேன் செய்யும் வேலைகளில் ஒரு சில உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் அணுகலாம். 

Saturday, August 24, 2019

நிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது

”டாக்குமெண்ட்  தவறு என்றால்  சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள். 

“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை,  வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன். 

”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.

அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.

கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005  உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர்  மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள்.  தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது. 

இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள். 

வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல்,  பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.

பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை. 

சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.

டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.

கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார். 

கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்....!

நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி


Wednesday, August 21, 2019

நிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்

மனிதன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காலம் எல்லாம் போயே போய் விட்டது. வார்த்தை சொல்லி விட்டேன் - ஆண்மைத் தனம் இப்போது எங்கும் காணப்படுவதில்லை.

ஆறு மணி நேரம் வரிசையில் நின்று, அத்திவரதரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் முன்பு வீட்டுக்குள் பணம் வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஆலந்துறைப் பக்கம் பாட்டி ஒருத்தி இட்லி விற்கிறார். கூட்டம் இன்றும் குறையவில்லை. ஒரு பக்கம் இரண்டு இட்லிக்கு 250 ரூபாய் கொடுத்து சாப்பிடும் கூட்டம். பாதி விள்ளலில் எழுந்து நாசூக்காய் கை துடைத்துக் கொள்ளும் அக்கிரமக்காரர்கள் அலட்டலாய் திரிகின்றார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் என்னைச் சந்தித்தார். ’எனக்கொரு பிரச்சினை, சரி செய்து தர இயலுமா?’ என்று கேட்டார். 

”பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள், இயலுமா? எனச் சொல்கிறேன்”

நண்பர்களே, கவனக்குறைவு என்று சொல்ல மாட்டேன். ஏமாற்ற வேண்டும் என நினைத்து விட்டால் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் சரி, சட்டக்காவலர்களும் சரி எவருக்கும் கொஞ்சம் கூட மனச்சாட்சி என்பதே கிடையாது. எவன் செத்தால் எனக்கென்ன, என் வீட்டு உலை கொதிக்கிறதா? என நினைக்கிறார்கள். அப்படி ஒரு அழிச்சாட்டியத்தைச் செய்திருக்கிறார் அந்த புரமோட்டர் ஒரு சில அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்து. ரத்தம் கொதிக்கிறது நினைத்து நினைத்து.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் சைட் விற்பனை ஆனது பல வருடங்களுக்கு முன்பு. பல அரசுத் தொடர்புடையவர்களுக்கு பல கட்ட அனுமதிகள் பெற்று அந்த வீட்டு மனையினை, மாதத்தவணை முறையில் வாங்கி இருக்கின்றார்கள். வீடும் கட்டி விட்டார்கள்.

டிடிசிபி அனுமதியை சென்னையில் பெற்று இருக்கிறார் அந்த புரமோட்டர். அந்த அனுமதியை பஞ்சாயத்தில் அப்ரூவ்ட் பெறும் போது மனை வரைபடத்தை மாற்றி அனுமதி பெற்று, வீட்டு மனைகளின் எண்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கிறார். பொது இடத்திற்கு என ஒதுக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தையும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து விட்டார். எந்தப் பத்திரத்திலும் மனையின் அளவீடுகள் குறிப்பிடவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  இந்த இடத்தில் மனை வாங்கியவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள், பெரிய மனிதர்கள். இனி என்ன, எவராவது கோர்ட்டுக்குச் சென்றால் மனை அனுமதி ரத்தாகிப் போகும். சரி செய்ய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால், எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர்  அந்த இடத்தில் மனை வாங்க இருப்பதாகத் தெரிவித்து, பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 32 வகையான ஆவணங்கள் தேவையென லிஸ்ட் போட்டுக் கொடுத்தேன். ஆள் அவ்வளவுதான். கிரையம் பெற்று விட்டார். அவ்வளவு அவசரம் அவருக்கு. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வீடோ அல்லது மனையோ பிடித்து விட்டால், அவர்களே தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வார்கள். எல்லோரும் வாங்கி இருக்கின்றார்கள், நாமும் வாங்கி விடலாம் என்று சமாதானமாகி விடுகின்றார்கள். பின்னர் அலையோ அலையென அலைந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மனை அப்ரூவல் ரத்தாகுமா? இல்லையா? எனத் தெரியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு மனை வாங்கியவர்களில் சிலர். புரமோட்டர் என்ன ஆனாரோ தெரியவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் யானை ராஜேந்திரன் அவர்களின் வழக்கின் மீது என்ஃபோர்ஜ்மெண்ட் தீர்ப்பு ஒன்றினை ஹைகோர்ட் வழங்கியது. முறைப்படி அனுமதி பெற்று கட்டப்படாத கட்டிடங்களை எவரின் அனுமதியும் இன்றி இடித்து தள்ளுங்கள் என்கிறது கோர்ட். மனைப்பிரிவும் அப்படி ஆனால் என்ன ஆகும்? 

அந்த புரமோட்டரின் ஆசையால், அக்கிரமத்தால் அந்த வீட்டு மனைகள் போலியாக பிளான் தயாரிக்கப்பட்டு, ஏமாளிகளுக்கு விற்று விட்டார். பாவம் அவர்கள் அலைகின்றார்கள். இன்னும் பட்டா வாங்க முடியவில்லை. மனைப்பிரிவினை ஒழுங்குப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் பலப்பல இருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டுமெனச் சொல்லி அப்பெரியவரை அனுப்பி வைத்தேன்.

ஆகையால் நண்பர்களே, டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை வாங்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஆலோசகர்களிடம் தகுந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்துக் கிரையம் பெறுங்கள்.

அப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் போனில் அழைத்தார்.

“தம்பி, ஒரு அபார்ட்மெண்ட் கிரையம் செய்ய வேண்டும், என்ன சார்ஜ் செய்கிறீர்கள்” என்றார்.

“முதலில், அபார்ட்மெண்ட் அனுமதி சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து விட்டுத்தான், பத்திரம் பதிவு செய்வேன், ஆகவே அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்” என்றேன்.

அவர் டென்சாகி விட்டார். ”பத்திரம் மட்டும் போட்டுத்தாங்க” என்றார்.

“முடியாது” என மறுத்து விட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், போனில், ”தம்பி, நீங்க பெரிய ஆளா வருவீங்க, வாழ்த்துகிறேன்” என்றார்.
* * *

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Tuesday, May 28, 2019

நிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.

நல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.

மக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்? நல்லது நடக்கும்.

சரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

இனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.

அது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

மாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.

இதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.

மலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும். 

விரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்படி வசதிகளும் செய்து தரப்படும்.

மிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்....!

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள். 

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

Friday, April 5, 2019

நிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன?

நிலம் தொடர் 50வது பாகத்தை எழுதுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. காலம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. கணிணி ஆசிரியனாக வாழ்க்கையைத் துவங்கியவன் இன்றைக்கு ரியல் எஸ்டேட் தொழிலே மூச்சாக இருப்பதற்கு, காலத்தை மட்டுமே காரணம் சொல்வேன். 

இந்த துறையில் அனுபவப்பாடம் பயின்றது வில்லன்களிடம். மக்களை எப்படி ஏமாற்றலாம் என நினைத்த வில்லத்தனமானவர்களிடம் தொழில் கற்றேன். எதைச் செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொண்டேன். பின்னர் எது சரி எனப் புரிந்து கொண்டேன். யார் யாருக்கு என்னென்ன தெரியுமோ அந்த அறிவினை வைத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்கின்றார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் அதுவல்ல. அது ஒரு கடல். பல அரசுத் துறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட மர்மங்கள் மண்டிக் கிடக்கும் மாயக்கடல்.

இதற்கென பல தனித்தனியான துறைகள் இருக்கின்றன. நில ஆவணங்கள் பதிவு செய்வது, அரசு ஆவணங்களை உருவாக்குவது, அளப்பது என இதற்கே இரண்டு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைகளும் தனக்கென தனித்தனி ஆவணங்களை வைத்திருக்கின்றன. அந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு நிலத் தொழில் செய்வது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புரியும்படிச் சொன்னால் இந்திய சாலை அமைச்சகம் கூட நிலத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்தால் அதை ரெவின்யூ ரெக்கார்டில் கொண்டு வர எத்தனை காலம் பிடிக்கும் என உங்களுக்குச் சொல்லித் தெரியாத ஒன்றில்லை. ஏர்போர்ட் அத்தாரிட்டி மூலமாக கூட ஒரு நிலத்தின் ஆவணம் மாற்றப்படலாம் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

வங்கிகளில் லீகல் ஒப்பீனியன் பார்ப்பார்கள். அது சரியானதுதான் என்று என்னிடம் வாதிடுவார்கள். வக்கீல்கள் எப்படி லீகல் பார்ப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்ப்பார்கள். அவரிடம் அனைத்து டிபார்ட்மெண்ட்களின் ஆவணங்கள் இருக்குமா? என்றால் இருக்காது. நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு  அவர் சரி பார்ப்பார். ஆனால் உண்மை என்ன?  பல துறைகளில் பங்கெடுத்துக்கு இருக்கும் ஆவணங்களை அவர் எப்படி சரிபார்ப்பார்? இயலாது அல்லவா? ஒரு வாங்குபவரால் அத்தனை ஆவணங்களைத் திரட்ட முடியுமா? அது அவ்வளவு எளிதானதும் அல்ல. விற்பவர் தன்னிடம் இவ்வளவு தான் ஆவணங்கள் இருக்கின்றன என்பார். இருக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு சரி பார்ப்பது மட்டுமே இயலும். 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பெரும்பான்மையான தமிழக நிலங்களின் விபரங்களைச் சேகரித்து வைத்து இருக்கிறேன். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நிலங்களை அலசி விட நீண்ட வருடங்களாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன். கடின உழைப்பின் காரணமாக இதைப் போன்ற ஆவணங்களைத் தேடித் தேடி அலைந்து திரிந்து டிஜிட்டலாக்கி பாதுகாத்து வருகிறேன். உதாரணமாக ஒரு நிலத்தை வாங்கி சைட் போட்டு விற்கலாம் என முடிவு செய்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அந்த நிலம் சைட் போட தகுதியானது தானா எனக் கண்டறிய எளிதில் முடியாது. அதை ஒரு நிமிடத்தில் கண்டறிய தேவையானவைகள் என்னிடம் இருக்கின்றது. இப்போது புரியும் என நினைக்கிறேன்

கோடிக்கணக்கில் பொருள் முதலீடு செய்யும் போது இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு, எதிர்கால சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வது வாங்குபவர்களிடம் இருக்கிறது. கவனம் தேவை ! அவ்வளவுதான்.

இப்படி நான் ஆவணங்களை வகைப்படுத்திக் கொண்டு வரும் போது மானிய நிலங்கள் என்ற சொல்லை அடிக்கடி கேட்க ஆரம்பித்தேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவில் இருந்த நிலங்களை எல்லாம் முன்னர் இருந்தவாறே பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயே முறைப்படிதான் இன்றைய நில அளவுகள் தொடர்கின்றன. அவ்வப்போது அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.

இந்திய அரசு விடுதலை பெற்ற போது, திருவாரூர் ஆதீனத்தில் இருந்து ஒருவர் டெல்லி சென்று திருப்பதிகப் பாடல்களைப் பாடி மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலைப் பெற்று நேருவிடம் கொடுத்தார் எனவும், அது பற்றிய ஒரு புகைப்படம் திருவாரூர் மடத்தில் இருப்பதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்திய மக்களின் பிரதி நிதியான நேருவிடம் இப்படித்தான் மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நான்கு போர் விமானங்களும், கொஞ்சம் ராணுவ வீரர்களும், இந்தியா முழுவதும் பசியும், பட்டினியும் தான் இருந்தனவாம். ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தான் இன்றைய இந்தியாவை உருவாக்கியது. இதில் பல்வேறு இடைத் துரோகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் “நரலீலைகள்” நாவலில் படித்துக் கொள்ளுங்கள்.

பிஜேபியின் மோடி இன்றைக்கு எதெற்கெடுத்தாலும் காங்கிரஸைக் குற்றம் சாட்டி, எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருக்க காரணம் அந்த காங்கிரஸ் தான். உலகமே இருண்டு கிடப்பதாய் நினைத்துக் கொண்டு கோயபல்ஸ் வசனங்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள் பிஜேபியினர். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையைப் பற்றிப் பேசும் போது, பொய் எதிரில் வந்து விடுகிறது. அது போகட்டும் அரசியல் அந்தப் பக்கம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் பதிவு செய்த நில ஆவணங்களில் மானிய நிலங்கள் என்ற பகுதி உண்டு. இதற்கென நில ஆவணத்துறையில் இதற்கென தனி பதிவுகளே உள்ளன. மானியம் என்றால் இலவசம் என அர்த்தம் வரும். இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களே தற்போது அரசு ரயத்துவாரி என்றுக் குறிப்பிட்டு வரி வசூலிக்கின்றது. ரயத்துவாரி என்பது வரி வசூல் நிலங்களைக் குறிப்பது ஆகும்.

1953ல் இனாம் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு பெரும்பான்மையான நிலங்கள் ரயத்துவாரிகளாக மாற்றப்பட்டன. அவைகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. ஒரு சில நிலங்கள் ரயத்துவாரிகளாக்கப்பட்டு வரி பெறாமல் பொது மக்களின் உபயோகத்துக்காக, நன்மைக்காக, ஆன்மீகத்துக்காக விடப்பட்டன. அப்படி ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டதற்கு முன்பு என்னென்ன மானிய நிலங்கள் இருந்தன என்பது பற்றிப் பார்க்கலாம்.

ஒரு வெகு சுவாரசியான தகவல் ஒன்றினைப் பகிரலாம் என நினைக்கிறேன். இன்றைக்கு அக்ரஹாரம் என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது மானிய நிலத்தைக் குறிக்கும் சொல். பிராமணர்களுக்கு மன்னர்களால் கொடுக்கப்பட்டதுதான் அக்ரஹாரம். இந்த நிலத்திற்கு வரி வசூலிக்கப்படவில்லை. வேதம் சொல்லித் தரவும், வேதங்களைப் பரப்பவும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் இருக்கும் பகுதிதான் அக்ரஹாரம். பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை பார்க்கும் போது, பிராமணர்களுக்கு ஏன் மானிய நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அது பற்றி இப்போது பேசத் தேவையில்லை.

ராணுவ வீரர், படைத்தளபதி, ஆசை நாயகிகள், தேவதாசி, கலைஞர்கள், நாட்டை ஆண்ட அரசர்களுக்கு, நொடித்துப் போன அரசர்களுக்கு, நாவிதர், தச்சர், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி ஆகியோருக்கு மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கோவில், ஆதீனங்கள், மடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவற்றுக்கும் மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. மேற்படி மானிய நிலங்களை வகைப்படுத்தி இருந்தார்கள். தர்மதாயம், தேவ நாயம், பந்த் விருத்தி, ஸ்தோத்திரியம், ஜாகிர், தேஸ்முக்/தேஸ்பாண்டே, அமாம், நோபந்தம் என்ற பெயர்களில் மானிய நிலங்கள் வழங்கப்பட்டு, வரி இல்லாமல் மானியம் பெற்றவர்கள் பயனடைந்து வந்தார்கள்.

அக்ரஹாரத்தில் கூட சர்வ, பிலுமுக்த, ஜோடி என உட் பிரிவு மானிய நிலங்கள் இருந்தன. இந்த பிரிவுகளுக்கு தக்கவாறு வரி இல்லாமலும், ஒரு முறை வரி செலுத்துவதாகவும், குறைந்த வரி செலுத்துவதாகவும் நிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. கைரதி மானிய நிலங்கள் முஸ்லிம் உலமாக்களுக்கு வழங்கப்பட்டன என ஆவணங்கள் சொல்கின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக பந்த் விருத்தி மானிய நிலங்கள் தான் இருந்தன. இந்த நிலங்கள் தான் இப்போது இருக்கும் நிலங்கள்.

மேற்கண்ட எல்லா வகையான மானிய நிலங்களையும் 1953க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் அரசு ரயத்துவாரி என வரி விதிக்கும் நிலங்களாக மாற்றியது. அதன் பிறகு வரி இருந்தாலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு கொடுத்தது. இன்றைக்கு இருக்கும் நிலங்களின் முன் வரலாறு இதுதான்.

தற்போது அரசாங்கம் தேவதாயம், தர்மாதாயம், தசபந்தம், பிரம்ம தேயம், காவல் ஊழியம், கிராம ஊழியம், கைவினைஞர் இனாம் என்பதாகப் பிரித்து நில ஆவணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான பல்வேற் விஷயங்களை இப்பதிவில் எழுத இயலாது. நீண்டு விடும். அவ்வப்போது எழுதுகிறேன். தொடர்ந்து பிளாக்கினைப் படித்து வாருங்கள்.

பூமி ஒன்றுதான் அதற்குப் பெயர்கள் தான் வேறு வேறு. அரச காலங்கள் தொட்டு, ஜன நாயகம் காலம் வரை நிலம் தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. அதன் பெயர்களும், தன்மைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடு அடைகின்றன.

மேலும் ஒரு குறிப்பு :

நீங்கள் வரிக் கட்டும் போது பசலி ஆண்டு என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? அக்பர் காலத்தில் நிலவரி வசூலைப் பிரிக்க பசலி ஆண்டு என ஒரு கணக்கினை உருவாக்கினார்கள். ஷாஜகான் காலத்தில் தென்னிந்தியாவிற்கும் பசலி ஆண்டு வந்து சேர்ந்தது.  அப்போது ஆடி மாதம் 1ம் தேதி பசலி ஆண்டு தொடங்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்தில் ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30 தேதி வரை என வரையறுக்கப்பட்டு இது காலம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

Saturday, January 26, 2019

நிலம் (49) - சத்தமின்றி அமலாகும் நில உச்சரவரம்புச் சட்டம்

பொங்கல் அலுப்புகள், இனிப்புகள், கசப்புகள், அசதிகள் எல்லாம் உள்ளத்தை விட்டு அகன்றிருக்கும். காலம் தான் எல்லாவற்றுக்குமான விடையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ’இன்றைய நிலை, நாளை இல்லை. நாளையோ நம் கையில் இல்லை’ என்கிறார்கள் முதியோர்கள். ஆம் வாழ்க்கை எவரிடமும் கேட்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. (உண்மையில் அது நகரவும் இல்லை, நகர்த்தவும் இல்லை. நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)

வாழ்வியல் சூழல்கள் கற்பிதங்களுக்கான கற்பனைகளோடு இயைந்து மனிதனை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாய வலையிலிருந்து எந்தக் காலத்திலும் வெளி வர  முடியாது. கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்க வேண்டும் என உலகம் கேனத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் நலனுக்காக உருவான கட்டுப்பாடுகள், இப்போது மனிதன் கட்டுப்பாடுகளுக்காக வாழ வேண்டும் என மாறிப்போனது. 

அரசியல் செம கேவலமாக இருக்கிறது. கொலை கொள்ளை வரைச் சென்றிருக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள். என்ன மாதிரியான அரசியல் இது என்றே தெரியவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து நாற்றமடிக்கிறது. மக்கள் அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து சுகம் சுகம் என்று பாடிக் கொண்டலைகின்றார்கள்.

இதற்கிடையில் கோவையில் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தின் இயக்குனர் எனது பிளாக்கைப் படித்து விட்டு என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். பெரிசு ஏன் சிறிசுவைச் சந்திக்கணும்? தீர்க்க இயலா ஏதோ பெரும் பிரச்சினை போலும், வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு வரச்சொன்னேன்.

பெரிசுகள் எப்போதும் சூதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். நாம் தான் சூட்டின் மீது உட்கார்ந்திருப்பது போல கவனமாக இருக்க வேண்டும். மனசில ஓரமாக் வச்சுக்கங்க.

என்னைப் பற்றி விசாரித்து விட்டு, மெதுவாக ஆரம்பித்தார் அவர் கம்பெனியின் வேலைகள், தொழில்கள், அதன் வளர்ச்சிகள், பிரச்சினைகள் எனத் தொடர்ந்தது அவரின் பேச்சு. இதையெல்லாம் ஏதோ நம் மீது கொண்ட பிரியத்தின் மீதான காரணத்தால் சொல்கிறார் என்று நினைக்க நானென்ன சசிகலாவா? சிரித்துக் கொண்டேன். நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றாராம் அவர். ஆகையால் இந்தச் சின்ன வேலையை என்னைப் போல ஆட்களிடம் கொடுத்து ஃபாலோ செய்யச் சொல்லி முடிப்பது அவரின் வாடிக்கையாம். இப்படித்தான் தொடர்ந்தது பேச்சு. 

பெரிய பிரச்சினையுடன் ஆள் வந்திருக்கிறார் என்று நன்கு புலப்பட்டது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என என்னை நம்ப வைக்கவும், எனக்கு நேரமில்லாத காரணத்தால் தான் இதை உன்னிடம் தர உள்ளேன், அந்தளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மை எனவும் நான் அறிய வேண்டுமென விளக்கிக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமெனில் பத்து மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள். ஆள் அந்த வகையானவர். 

இன்னொரு கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. யூடியூப்பில் என்னிடம் விற்பனைக்கு வந்த ஒரு தென்னந்தோப்பைப் பற்றி விபரம் வெளியிட்டிருந்தேன். வெளி நாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் போன்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல இடம் எங்கே இருக்கிறது? என்பார்கள். சொல்வேன். விலை என்ன என்று கேட்பார்கள்? சொல்வேன். அந்த விலையா அந்த இடத்தில் என்பார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருப்பேன். சரி என வைத்து விடுவார்கள். இப்படித்தான் ஒரு லேடி போனில் அழைத்தது. எந்த ஊரில் இருந்து பேசுகின்றீர்கள் என்று கேட்டேன். கோவையிலிருந்துதான் என்றார். பொய் பேசுறவங்களிடம் நான் தொடர்ந்து பேசுவதில்லை என அழைப்பை நிறுத்தினேன். அது துபாய் அழைப்பு. அடுத்த நொடியில் இன்னொரு அழைப்பு. என் மனைவி பேசிக் கொண்டிருக்கிற போது எப்படி நீங்கள் அழைப்பை நிறுத்தலாம் என்றார் ஒருவர். நானென்ன அவர் வீட்டு வேலைக்காரனா? செம டென்சனாகி விட்டது. நான் கொடுத்த சவுண்ட் எஃபெக்டில் ஆள் குரலை இறக்க தொடர்பை துண்டித்தேன். இப்படியான தொல்லைகளும் இருக்கின்றன.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். போனில் அழைத்து எனக்கு இன்ன தேவை என்பார்கள், இடம் சொல்வார்கள், அவர்களின் முதலீட்டுத் தொகையைச் சொல்வார்கள். நான் அவருக்காகச் செய்யப் போகும் வேலைகளையும்,  எனது கட்டணத்தையும் விவரிப்பேன். அடுத்த இரண்டொரு நாட்களில் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்து விடும். அவரின் தேவை அவரின் முழு அளவில் எந்த வித சிக்கலும் இன்றி நிறைவேறும். இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதையெல்லாம் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் எழுதுவேன் படித்து மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி பெரிசுவின் பிரச்சினைக்கு வரலாம்.

வினோபாவா ஆச்சாரிய யக்ஞம் மூலமாக தமிழக மெங்கும் எடுக்கட்ட நிலங்கள் தற்போது ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன என்று எனக்குத் தெரியும். அதே போல நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசு தற்போது பட்டாவில் அரசு நிலம் என குறிப்பிட்டு வருகிறது என்பதும் எனக்குத் தெரியும். பெரும் தனக்காரர்களின் அனேக சொத்துக்கள் சத்தமில்லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அப்போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. உட்கார்ந்த இடத்தில் சரசரவென வேலை நடக்கிறது.

பெரிசு ஃபாக்டரி கட்டுவதற்காக வாங்கிய பதினைந்து ஏக்கர் நிலமும் அரசு நிலம் என மாறிப் போனது. விற்பனை நடந்து பத்து வருடம் ஆகி விட்டது. இனி எங்கே பணம் கிடைக்கும்? எல்லா ஆவணங்களையும் எடுத்தால் 1958ல் அந்த பதினைந்து ஏக்கர் நிலத்தின் அப்போதையை உரிமையாளர் யக்ஞத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டது தெரிந்து டென்சனாகி எங்கெங்கோ சென்று முட்டி மோதி ஓடிக் களைத்துப் போய் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் எனது பிளாக்கைப் படித்துப் பார்த்து விட்டு கல் வீசலாம் வந்தால் பழம், போனால் கல்லு என வந்து விட்டார்.

அவரின் அனைத்து ஆவணங்களையும் மேலோட்டமாகப் பார்த்தேன். 15 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பெற்று விட அற்புதமான வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தேன். அவரிடம் சொன்னேன், மீட்டு விடலாம் என.

ஆகவே அன்பு நண்பர்களே ஆன்லைனில் உங்களின் நிலம் உங்களிடம் தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.