குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம் தொடர். Show all posts
Showing posts with label நிலம் தொடர். Show all posts

Saturday, May 12, 2018

நிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது?

பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.

எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது. 

சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.

அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.

பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை. 

அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.

அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.

அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.

இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.

இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன். 

Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.

Friday, July 7, 2017

நிலம் (38) - அன் அப்ரூவ்டு மனைகளை அப்ரூவ்ட் செய்வது எப்படி

தவறுகளுக்குப் பிராயசித்தம் செய்தால் சரியாகி விடும் என்பது இந்து மத வழக்கம். அதை அரசும் செய்கிறது. சட்டத்தினை மீறினால் அரசுக்குப் பணம் கட்டு, சரி செய்து தரலாம் என்கிறது. பெரும்பான்மை மக்களின் நன்மையை உத்தேசித்து இந்த முடிவுக்கு வருவது நல்ல விஷயம் தான். கிராமப்புறங்களில் பஞ்சாயத்தில் ஒரு சில விஷயங்களில் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்படும். அபராதம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகி விடும். என்றாலும் அபராதம் செலுத்தியவர்களுக்கு அது அவமானமாகவே இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு என்ற ஒன்று இல்லாத போது விற்பனை களை கட்டியது. அதை பதிவுத்துறையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது. அரசுக்கு வருமானமும் கொட்டியது. பதிவுத்துறைக்கும் பல வருமானங்கள். பஞ்சாயத்துக்களுக்கு வருமானம் கொட்டியது. ஒரு தவறை அழகாக எந்த வித மனசாட்சியும் இல்லாமல் அனைவரும் சேர்ந்து செய்தார்கள். அது சரியல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. நீதிமன்றம் அதற்கும் ஒரு விதிவிலக்கினை கொடுத்து மனை வரன்முறைப் படுத்த உத்தரவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டது யார் தெரியுமா? பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் விலை குறைவு என்று நினைத்து வாங்கினார்கள் அல்லவா அவர்கள் தான் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விலை குறைவு என்று நினைத்தவர்களுக்கு இப்போது அந்த மனையை வரன்முறைப்படுத்த கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  மனை விற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மனை வாங்கியவர்கள் அப்போதே டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அப்ரூவல் மனைகளை வாங்கி இருந்தால் இந்தச் செலவு இல்லை அல்லவா? பதிவு துறையினருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. மனை விற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை. அரசுக்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை, பஞ்சாயத்தார்களுக்கும் எந்த வித பிரச்சினையும் இல்லை. 

மொத்தப் பிரச்சினையும் மனை வாங்கியவர்களின் தலையில் வந்து விடிந்திருக்கிறது.  படித்துப் படித்துச் சொன்னாலும் எவரும் கேட்கவில்லை. டிடிசிபி மனைகள் விலை அதிகம் என்றால் அந்தளவுக்கு செலவு செய்தால் தான் மனை அப்ரூவல் பெற முடியும் என்பதால் விலை அதிகம். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளுக்கு யாரிடமும் எவரிடமும் அப்ரூவலும் பெற வேண்டியதுமில்லை செலவும் இல்லை. அதனால் தான் விலை குறைத்து விற்கப்பட்டது. படித்தவர்களும் அன் அப்ரூவ்டு மனைகளைத்தான் வாங்கினார்கள். இப்போது அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி அவ்வாறு வாங்கிய அன் அப்ரூவ்டு மனைகளை எப்படி அப்ரூவ்டு செய்வது என்று பார்க்கலாம்.

பத்திரத்தின் நகல்
பட்டா காப்பி
அ பதிவேடு
வில்லங்கச் சான்றிதழ்
மனை வரைபடம் ( சர்வே நம்பர் காட்டப்பட்டிருக்க வேண்டும்)
நிலத்தின் புல வரைபடம்
கிராம புல வரைபடம்
மனைக்குச் செல்லும் பாதை வரைபடம் - சர்வேயரிடம் சான்றிதழ் பெற வேண்டும்
தாசில்தார் என்.ஓ.சி - (விவசாய பூமியாக இருந்தால்)

மேற்கண்ட ஆவணங்களை வைத்து இணையதளத்தில் அப்ளை செய்து கட்டணம் செலுத்தி மேற்கண்ட விண்ணப்பத்தை உள்ளூர் பஞ்சாயத்திலும், உள்ளூர் அல்லது நகர் புற திட்டக்குழுமத்திடமும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் ரெகுலரிஷேசன் மற்றும் அபராத கட்டணங்களை கேட்கும் போது கட்டினால் தனி வீட்டு மனையை சப்டிவிஷன் செய்து அப்ரூவல் வழங்குவார்கள்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் போனில் தொடர்பு கொண்டு நேரில் வந்தால் உதவி செய்யத் தயாராக உள்ளேன். 

Saturday, June 24, 2017

நிலம் (37) - அரசின் புதிய வழிகாட்டி மதிப்பு

நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகள் எனக்குள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி விடுகின்றன. பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் என்று ஒரு விஷயமே இல்லாத போது பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் மனைகள் என்று விற்பனை நடந்த போது எந்த அரசும், அரசு அமைப்பும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு பதிவாளரின் வேலை எந்த ஆவணமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்தல் என்பது சட்டம் என்றாலும் இப்போது பதிவாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றார்கள். ஆவணங்களைக் கேட்கின்றார்கள். அவர்கள் ஏதும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் கேட்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

நில வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு மனைகளை அப்ரூவல் செய்ய தனி அரசு அமைப்புகள் இருக்கின்றன. இருந்த போதிலும் பஞ்சாயத்து அப்ரூவ்ட் என்றுச் சொல்லி வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரசுக்கும் தெரியும், நீதிமன்றங்களுக்கும் தெரியும். எவரும் நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆனால் திடீரென்று பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள் சட்ட விரோதமானவை என்றுச் சொல்லி மனைப்பதிவினை தடுக்கிறது நீதிமன்றம். பதிவகங்களும் பத்திரங்களை பதிவு செய்ய மறுக்கின்றன. இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவைகள் சட்டத்திற்குப் புறம்பானவை தானே? அதை என்ன செய்வது? சட்டத்திற்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் மனைகளை அரசு ஒரு ஆணை பிறப்பித்து அப்ரூவ்ட் மனைகளாக மாற்றலாம் என்கிறது. அதற்கும் பல்வேறு கட்டணங்களை விதித்திருக்கிறது. இந்தக் கட்டணங்களைச் செலுத்துவதை விட அப்ரூவல் செய்திருக்கலாம் என்று இப்போது பலரும் நினைக்கின்றார்கள். அது தண்டனை என்றே கருத வேண்டி இருக்கிறது.

விகடனில் அரசின் அதிரடி அறிவிப்பான வழி காட்டி மதிப்புக் குறைப்பு பற்றிய வெளிவந்திருந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இனி அந்தப் பதிவினைப் படியுங்கள்:
=====================================

தமிழ்நாடு அரசு, வழிகாட்டி மதிப்பினை 33% குறைப்பதாக பிரம்மாண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால்  பொது மக்களுக்கு இமாலயப் பலன் கிடைக்கும் என்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவிப்பின் இறுதியில், இந்த மதிப்புக் குறைவினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஆவணங்களின் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாக உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக ரியல் எஸ்டேட்  துறைக்கு இது மற்றுமொரு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது.

அரசினால் உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும். ஏனென்றால், பொது மக்களுக்கு ஒரு சலுகை வழங்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அதை ஈடுகட்ட அதே துறையில் வரி விதிக்கமாட்டார்கள். வேறு ஆடம்பரப் பொருள்கள், மதுபானங்கள் போன்று சில இனங்கள் மீது கூடுதல் வரி விதித்து அந்த இழப்பை ஈடுகட்டுவார்கள். எனவே, பதிவுக் கட்டணத்தை உடனே குறைத்தாக வேண்டும்.

அடுத்து, கட்டடங்களுக்குப் பொதுப்பணித் துறை மதிப்பில் இருந்து 33% சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள வழிகாட்டி முறை 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது, முதல் மூன்றாண்டுகளுக்கு அல்லது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை, சில சமயத்தில் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். கடந்த 2010-ம் ஆண்டு  வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது  ஓரளவுக்கு நியாயமாக இருந்தது. ஆனால், 2012-ல்  திடீரென்று ஏராளமான இடங்களில் வழிகாட்டி மதிப்பு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த முறை 5 மடங்கு, 10 மடங்கு, 20 மடங்கு ஏன் அதற்கு மேலும் கூட மதிப்பு உயர்த்தப்பட்டது. இதனால் பதிவுத் துறையின் வருமானம் வீழ்ந்தது. நிர்ணயித்த இலக்கில் பாதிகூட தேறவில்லை. 

பல இடங்களில் விற்பனை விலையைவிட, வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டு மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து. நடுத்தர வர்க்கத்தினரின் இல்லக் கனவு தகர்க்கப்பட்டது.

இப்போது மனை வாங்கும் எல்லோருக்கும் சின்ன சாக்லேட் தந்துவிட்டு, வீட்டோடு சொத்து வாங்குபவர்களிடம் பிக் பாக்கெட் அடிக்கப்படு கிறது. பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையின்படி, கட்டடங்களின் மதிப்பு 33% குறைக்கப்படவில்லை. முன்புபோலவே உள்ளது. இந்த அறிவிப்பால், மனை வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்குக் கிடைக்கும் சலுகை ரூ.630 மட்டுமே. இது அகோரப் பசியால் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை.

8.6.17 நிலவரப்படி, முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 1% எனப் பத்திரப் பதிவுச் செலவு மொத்தம் 8 சதவிகிதமாக இருந்தது. இப்போது, முத்திரை கட்டணம் 7% பதிவுக் கட்டணம் 4 சதவிகிதமாக மொத்தம் 11 சதவிகிதமாக அது உயர்ந்துள்ளது.  

இன்றைக்கு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மனையில் கட்டப்பட்ட  ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டோடு சொத்து வாங்குவதாக வைத்துக்கொண்டால், 

சொத்து மதிப்பு -   ரூ.2,00,000

முந்தைய கணக்கீடு :

முத்திரைக் கட்டணம்  -  ரூ. 14,000
பதிவுக் கட்டணம் - ரூ.2,000
மொத்தப் பத்திரப் பதிவுச் செலவு - ரூ.16,000

புதிய கணக்கீடு: 

மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 33% குறைக்கப்பட்டதால், ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட  மனையின் தற்போதைய மதிப்பு ரூ.67,000. அதற்கு 11% பத்திரப் பதிவுச் செலவு ரூ.7,370. ரூ.1 லட்சம் வீட்டுக்கு மொத்தச் செலவு  ரூ.11,000. ஆக மொத்தம்  ரூ.18,370 பத்திரப் பதிவுக்குச் செலவிட வேண்டும். அதாவது, அரசுக்குக் கூடுதல் வருமானம் ரூ.2,370 இதுதான் சலுகை வழங்கும் லட்சணமா? பதிவுத் துறை பற்றிய அறிவிப்பு,  வலது கையால் தந்துவிட்டு இடது கையால் பிடுங்கிக் கொள்வதைப் போலத்தான் உள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கட்டடத்தோடு விற்கப்படும் சொத்துகள்தான் அதிகம். அதுவும் கட்டடங்கள் அனைத்தும் ரூ.1 லட்சம் என மதிப்பிட முடியாது. பல லட்சங்கள், கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கட்டடங்கள்கூட இருக்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பால், சொத்து வாங்குபவர்களின் செலவுதான் அதிகரிக்குமே தவிர குறையாது. 

மேலும், மனையின் மதிப்பு 33% குறைக்கப்படுவ தால், சொத்தின் மதிப்புக் குறையும். இதனால், கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கும். உதாரணமாக,   ஒரு மனையை ஒருவர் சில மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குக் குறைவாக அவர் அந்த மனையை விற்கமாட்டார்.  ஆனால், இப்போது பத்திரத்தில் காட்டப்போவது ரூ.67 லட்சம் மட்டுமே. ஆக, ரூ.1 கோடி கைமாறும் நிலையில் ரூ.33 லட்சம் கறுப்புப் பணமாக மாற வாய்ப்புள்ளது.  

ஆகமொத்தத்தில், இந்த அறிவிப்பினால்,  சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை. யாரை ஏமாற்ற இந்த 33% குறைப்பு அறிவிப்பு என்று தெரியவில்லை. எல்லாம் அந்த ‘சாமி’க்கே வெளிச்சம்!

Posted Date : 06:00 (18/06/2017)
குறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமிழக அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்!
- ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

நன்றி : நாணயம் விகடன்

Wednesday, February 22, 2017

நிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு

சமீபத்தில் எனது நண்பரின் மூலமாக ஒரு நபர் லீகல் ஒப்பீனியனுக்காக அணுகினார். எளியவர். இருக்க ஒரு வீடு வேண்டுமென்பதற்காகப் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்து வைத்து சமீபத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் கட்ட நிலம் வாங்கிட முனைந்திருக்கிறார்.

நில உரிமையாளருக்கு கடன் பிரச்சினை இருப்பதால் மார்கெட் விலையில் இருந்து சல்லிசாக கொடுக்க முன் வந்திருப்பதாக புரோக்கர் மூலம் தெரிய வந்து அந்த நிலத்தை வாங்கிட அட்வான்ஸ் போட்டு விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஆவணங்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தன. இருந்தாலும் மனதுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. என்னவென்று அறியமுடியவில்லை. ஒரு வேலை நிமித்தமாக ஏர்போர்ட் வரையிலும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஏர்போர்ட் பகுதி உப்பிலிபாளையம் கிராமத்தில் வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள். பளிச்சென்று எனக்குள் வெளிச்சமடிக்க வீடு வந்து சேர்ந்து அவசர அவசரமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட சர்வே எண்களைப் பார்த்தேன். அதே தான். அவரை வரச்சொல்லி நிலம் கையகப்படுத்தும் அரசாணையைக் கொடுத்து அட்வான்ஸை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். ஆள் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் கூடுதலாகவே கட்டணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்த ஆர்டர் இந்த வருட ஆரம்பித்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

சமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு உப்பிலிபாளையம் கிராமத்தில் கையகப்படுத்திய சர்வே எண்களின் விபரம் கீழே இருக்கிறது. பயனடைந்து கொள்ளுங்கள்.

கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு வட்டம், உப்பிலிபாளையம் கிராமத்தில் சர்வே எண்கள்: 

321/3, 
322/1பி, 3பி,
333/2பி பார்ட்,
334/2பி பார்ட்,
332/2 பார்ட்,
332/3 பார்ட்,
332/4ஏ பார்ட்,
335/1 பார்ட்,
337/4 பார்ட்

ஆகிய பழைய சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 22 செண்ட் அளவு கொண்ட நிலம். இதன் தற்போதைய டி.எஸ். நம்பர், உரிமையாளர்களின் பெயர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும். 

Sunday, September 11, 2016

நிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது

சென்னை யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் பொது நல வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். இதன் விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் மகாதேவன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது செப்டம்பர் 10ம் தேதி முக்கியமான இடைக்காலத் தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.

மனைப்பிரிவு செய்து அனுமதியளிக்கப்படாத மனைகளை, அம்மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத் துறை இனிமேல் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அது.


(  நீதிபதி எஸ்.கே.கவுல் )

ஒரு பத்திரப்பதிவாளரின் கடமையாக சொல்லப்படுவது என்னவென்றால் தகுந்த மூலப்பத்திரங்களுடன் இருந்தால் ஆவணப்பதிவினை செய்து தர வேண்டும் என்பதுதான். அவர் அரசுக்கு வருமானம் வருவதைத்தான் உறுதி செய்வார். லீகல் பார்ப்பது, பத்திரங்கள் சரியாக எழுதப்பட்டிக்கிறதா என்று பார்ப்பது எல்லாம் அவரின் வேலை அல்ல என்பதை சொத்துக்கள் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்க.

சமீபத்தில் என்னிடம் ஒருவர் ரெஜிஸ்டரே பதிவு செய்து விட்டார் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேட்டார். விபரம் தெரியாத காரணத்தால் இப்படிப்பட்ட கேள்விகளைப் பலரும் கேட்கின்றார்கள். இது அவர்களின் அறியாமை.

இனிமேல் அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகள் விற்பனை செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய முடியாது. பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். பஞ்சாயத்து போர்டு 2000 சதுரடிக்குள் கட்டப்படும் வீட்டு பிளானை அப்ரூவல் செய்யலாம் என்று இருந்தது. அது தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது. ஆனால் அது அப்ரூவ்ட் செய்யப்பட்ட வீட்டுமனை ஆகாது என்பதையும் நினைவில் கொள்க.

ஆகவே நண்பர்களே, அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை இனி நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. கோர்ட் அதற்கு செக் வைத்து விட்டது. இது போன்ற வீட்டு மனைகளை விற்போர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு முன்பு மாதத் தவணையில் பணம் கட்டி இருப்போர் உடனடியாக தாங்கள் கட்டிய பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். 

பணம் கிடைக்காது என்றால் இதற்கு இன்னொரு வழியும் உண்டு. அது பற்றி பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்ல வந்த விஷயம் அவ்வளவுதான்.

செய்தி  ஆதாரம்:

தி ஹிந்து பத்திரிக்கை

The Madras High Court on Friday issued an order banning registration of plots and houses in unapproved housing layouts as well as conversion of agricultural land for non-agricultural use in an unplanned manner in Tamil Nadu.
“We direct that no registering authority in the State shall register any sale deed in respect of any plot in unauthorised layout or any flat/ building constructed on such plots,” said the First Bench of Chief Justice S.K. Kaul and Justice R. Mahadevan.
The Bench said the order was necessary to save the ecology and prevent flooding while simultaneously giving time to the State government to come up with legislative changes.
It then directed the Inspector General of Registration to circulate the order to all registering authorities (Sub-Registrars) in the State.
The interim directions were passed on a public interest litigation petition filed by advocate ‘Elephant’ G. Rajendran seeking a direction to the government to forebear the local administration from giving approval or permission to convert agricultural lands into housing layouts and forebear the Registration Department from registering such property.
The Bench expressed its concern over the absence of any provision for regulating conversion of agricultural lands that were uncultivated for more than three years.

Friday, July 22, 2016

நிலம் (27) - சப்டிவிஷன்கள் செய்யப்படும் போது ஆவணங்கள் மாற்றப்படுகின்றன

அமெரிக்காவில் வசிக்கும் நண்பரொருவரின் நிலத்தின் பட்டாவையும், எஃப்.எம்.பி என்று அழைக்கப்படும் புல வரைபட நகலையும் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்காக பலமுறை அலைந்து நேற்று மாலை பெற்றேன்.

நண்பர் கிரையம் பெற்றபோது பெற்றிருந்த புலவரைபடமும், பட்டாவும்  புதிய சப்டிவிஷன் செய்யும் போது மாற்றப்பட்டிருந்தன. அந்த சப்டிவிஷன்களுக்கான புதிய பட்டாவும் வழங்கப்பட்டிருந்தன. பட்டாவைப் பெற்றுப் பார்க்கும் போது பல்வேறு புதிய சர்வே எண்களுடன் புதிய நபர்களின் பெயரும் இருந்தன. அந்த பட்டாவில் நண்பரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது ஆனால் அளவீடு குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

இனி அந்தப்பட்டா எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பத்திரம் பதிவு செய்யும் போது பட்டாவையும் கேட்கின்றார்கள். பத்திரத்தில் சொத்து இருக்கிறது என்றாலும் பட்டாவில் அளவு சரியில்லை என்றால் கிரையம் செய்யத் தயங்குவார்கள் தானே? வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது அல்லவா?

ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் நிலத்திற்கான பட்டாவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், புல வரைபட நகலை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் சொத்தினைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உங்களுக்கே. புதிய சப்டிவிஷன்கள் என்ற பெயரில் அளவீடுகள், பெயர்கள் எல்லாமும் மாற்றப்படுகின்றன. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Thursday, July 21, 2016

நிலம் (26) - வெளி நாட்டில் வாழ்பவர்கள் பொது அதிகார முகவர் ஆவணம் எழுதுவது எப்படி?

சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொன்னார். வெளி நாட்டில் தொழில் செய்து கொண்டிருக்கும் இந்த நண்பரின் நண்பர் அவரின் நண்பருடன் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமென்று ஆவலினால் நண்பருடன் பேசி  ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்த நிறுவனம் வெளி நாட்டில் வசிப்பவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு முழுவதையும் இவரே போட்டிருக்கிறார். இந்தியாவில் இருந்தவர் வொர்க்கிங்க் பார்ட்னராக இருந்திருக்கிறார். ஆனால் ஆவணத்தில் இந்தியாவில் இருந்தவர் தான் மேனேஜிங் டைரக்டராக இருந்திருக்கிறார் என்பதை வெளி நாட்டில் வசித்தவர் கவனிக்கவில்லை.

தொழிலும் நன்றாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. மேலும் முதலீடு தேவைப்படுவதால் வெளி நாட்டில் வசித்தவர் அதிக கடின உழைப்பினைப் போட்டு பொருள் சேர்த்து இந்தியாவில் இருந்தவருக்கு அனுப்பி இருந்திருக்கிறார். தொழிலை நல்ல முறையில் வளர்த்து வந்திருக்கிறார் இந்தியாவில் இருந்தவர். எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது வெளிநாட்டு நண்பர் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அவருக்கு மூன்று பெண்கள் திருமணமாகாமல் இருக்கின்றனர்.

வெளிநாட்டில் வாழ்ந்தவரின் மனைவி, தொழிலில் பார்ட்னராக இருந்தவரிடம் சென்று என்னை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னவுடன், இங்கே பாரும்மா இந்த தொழில் முழுவதும் என்னால் நடத்தப்படுவது, இதற்கு உன் புருஷன் ஒரு பங்குதாரர் ஆகவே அவரின் பங்கினை மட்டும் கொடுத்து விடுகிறேன் என்றுச் சொல்லி இருக்கிறார். திடுக்கிட்ட அந்த விதவைப் பெண் தெரிந்த வக்கீலைச் சென்று பார்க்க இவர் அவரை திட்டமிட்டு ஆரம்பத்திலேயே ஏமாற்றி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவரின் முதலீட்டை வைத்து அவரை ஏமாற்றி அவர் பெயரில் தொழில் நடப்பதாகச் சொல்லி அந்தத் தொழிலுக்கு தான் தான் முதல்வர் என ஆவணங்கள் தயாரித்து முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார் அவர். இப்போது அக்கவுண்டில் வந்த பணத்தை மட்டும் அந்த விதவைப் பெண்ணிடம் கொடுத்து ஓரங்கட்டி விட்டார். 

சட்டத்திற்கு ஆவணங்களே முக்கியம். மனச்சாட்சி, உண்மை என்பதெல்லாம் தேவையே இல்லை. அந்த விதவைப் பெண்ணால் தனியாக வளர்ந்து நிற்கும் இவரை எதிர்க்க முடியுமா?  கோர்ட்டு மூலமாக தீர்ப்பு கிடைக்குமா? அந்த விதவைப் பெண்ணின் கணவரின் உழைப்பினை வேறொருவர் சுரண்டி விட்டார். அந்தக் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது.

இது போன்ற பல இன்னல்களை பல வெளி நாடு வாழ் மக்கள் அனுபவித்து வருகின்றதை பலரும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். தன் வாழ்க்கையை, தான் வாழ்ந்த பூமியை, தன் கலாச்சாரத்தை, தன் இன்பத்தை எல்லாம் இழந்து வெளிநாட்டில் உழைத்து பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை தன் குடும்பத்துக்கு கொடுத்து மகிழ வேண்டுமென்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் இளமையை இழந்து தன்னலமில்லாமல் தியாக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களைக் கூட இந்த உலகம் ஏமாற்றி விட துடிக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்குப் பாரமாக இருக்கிறது.

உண்மையைச் சொல்லி தொழில் செய்தால் என்ன? குறைந்தா போய் விடும்? இன்னொருவரின் உழைப்பை அடாது பெற ஏன் முயல வேண்டும்? இதே காரியத்தினை வேறொருவர் இவருக்குச் செய்து விட மாட்டாரா? என்பதையெல்லாம் எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

சமீபத்தில் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் தன் முன்னோர் சொத்தில் தனக்கு உரிய பாகத்தை விற்பனை செய்ய விரும்பினார். அதற்காக அவர் இந்தியா வந்து செல்வது என்பதெல்லாம் முடியாது. அவரின் நண்பர் மூலமாக தன் தம்பிக்கு தன் பாகத்தினை விற்க பவர் கொடுப்பதாக முடிவு செய்து பவர் எழுதச் சொல்லி இருக்கிறார். ஆவண எழுத்தரும் ஒரு பவர் டாக்குமெண்ட்டினை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னை முழுவதுமாக தன் தம்பியிடம் அடகு வைத்து விடும் அளவுக்கு அந்த ஆவணம் இருந்திருக்கிறது. அவரின் மனைவிக்கு அந்த ஆவணத்தின் மீது சந்தேகம் ஏற்பட நெட்டில் துழாவி என்னைப் பிடித்தனர்.

வெளி நாடுகளில் வசிப்போர் என்ன காரியத்துக்காக பொது அதிகார முகவர் பத்திரம் எழுத விரும்புகிறார்கள் என்று முதலில் அறிய வேண்டும். அந்தக் காரணத்துக்காக மட்டுமே அந்த ஆவணம் எழுதப்பட வேண்டும்.

தனக்காக நிலம் கிரையம் பெற தனி ஆவணம், தன் பாகத்தினை விற்க தனி ஆவணம், வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற தனி ஆவணம், அதற்கொரு கால நிர்ணயம், தனக்காக கடன் மட்டும் வாங்க தனி ஆவணம் என்று தனித்தனியாக பொது அதிகார முகவர் ஆவணத்தை ஏற்படுத்தல் மிக அவசியம். செலவு ஆகிறது என்று முற்றிலுமாக தன்னை பிறரிடம் அடகு வைத்து விடக்கூடாது.

அந்த நண்பருக்கு அவருக்குத் தேவைப்பட்ட ஆவணத்தை எழுதி அனுப்பி வைத்தேன். 

ஆகவே வெளிநாடுகளில் வசிப்போர் தன்னை பிரதிநிதிப்படுத்தும் பொது அதிகார முகவர் ஆவணங்கள் எழுதிக் கொடுக்கும் போது வெகு கவனத்துடன், ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இது பற்றி வேறேதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை மெயில் மூலம் அணுகவும். என்னால் இயன்ற உதவியைச் செய்து தருகிறேன்.

இந்தியாவில் தன் பெயரில் நிறுவனம் தொடங்க, நிலம் விற்க, நிலம் வாங்க, தன் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்ட, கடன் பெற என்ற அனைத்துக் காரியங்களுக்கும் தனித்தனி ஆவணங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.


Wednesday, July 20, 2016

நிலம் (25) - பட்டா மாறுதல் எளிதாகுமா இனி?

நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?

இந்தப் பிரச்சினைக்காக  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

மீண்டும் மறுபடியும் விண்ணப்பம் கொடுக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தாலும் பத்திரப்பதிவின் போது கொடுக்கப்படும் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பத்தை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. 

பத்திரப்பதிவு முடிந்த உடன் எத்தனை நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இருந்தாலும் இதில் வேறொரு பிரச்சினை இருக்கிறது. மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பத்திரப்பதிவுகளுக்கு, எந்த வித விசாரணையும் இன்றி பட்டா மாறுதல் வழங்கப்பட்டு விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பதிவு செய்யப்பட்ட எத்தனையோ பத்திரங்கள் தகுந்த ஆவணங்கள் இன்றி பதிவாகின்றன. அதிலிருக்கும் பிரச்சினைகளை யார் கண்டுபிடிப்பது? பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் பட்டாவிலும் மாறுதல் நடந்து விட்டால் அதெல்லாம் ஆவணப்படுத்தவை ஆகிவிடுமே அதை எப்படித் தவிர்ப்பது?

இது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. தீர்வு தான் கண்ணில் தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இதோ அந்தத் தீர்ப்பு உங்களுக்காக.

Madras High Court
Consumer Rights Protection ... vs Tamil Nadu Govt. on 6 February, 2015

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 06.02.2015

Coram

THE HONOURABLE Mr.SANJAY KISHAN KAUL, The Chief Justice

and

THE HONOURABLE Dr.JUSTICE S.TAMILVANAN

Writ Petition (MD) No.8250 of 2008


through its Secretary O.Paramasivam,

and M.P.(MD)No.1 of 2018



Consumer Rights Protection Council,
Madurai Ditrict.    
No.6, Thamukkam Shopping Complex,
Tallakulam, Madurai-2,                                      ... Petitioner

  vs.

1.Tamil Nadu Govt., rep.by
2.Inspector General of Registration,
  The Secretary, Revenue Department,
  St.George Forts Building, Chennai.
  The Registration Department,
  120, Santhome High Road,
  Chennai-4.                                        ... Respondents

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying for issuance of a writ of mandamus, directing the respondent No.2 and and patta transfer at the time of registration fo sale deed to 1st respondent his subordinates to forward the application and the fee collected for survey Revenue Offices and respondent No.1 to transfer patta in the name of the Spl.Govt.Pleader. purchaser without obtaining another application and charges.

For Petitioner  : Mr.S.Thamizharasan
For Respondents  : Mr.B.Pugalendhi,


ORDER

(Order of the Court was made by The Hon'ble Chief Justice) The petitioner, claiming to be the Secretary of the Consumer Rights Protection Council, seeks to file the present writ petition, in public interest, on account of the grievance that any transaction for purchase of immovable property of any kind, which are registrable and whereafter patta is required to be issued, the 2nd respondent/Registration Office is collecting charges for patta transfer and even issuing receipts as also for sub- division. It is submitted that thus when the purchaser approaches the revenue authorities, a second set of charges are to be paid.

2.In the counter affidavit, it has been stated that patta transfer application in prescribed form/Registration-II Form No.52, tendered along with documents presented for registration, is forwarded by the Sub- Registrar to the Tahsildar in whose jurisdiction the property is situated and the job of collecting this fee now has been entrusted to the Registration Department as per G.O.Ms.No.916 CT & RE Department, dated 23.08.1984. It is thus submitted that there is no occasion to once again pay the fee to the Revenue Authorities.

3.The aforesaid stand of the respondents thus shows that the requirement is to pay only one set of fee but, the collecting agency for such fee is now the Registration Office. No second set of fee is required to be paid.

4.The petition is accordingly closed. No costs. Connected miscellaneous petition is also closed.


Index:yes/no     (S.K.K.,CJ)     (S.T.,J)
Internet:yes/no.        06.02.2015
gb

Monday, July 18, 2016

நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?

மிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து வருவதாலும், பெரும் நிறுவனத்தின் மேலாளராக இருந்த காரணத்தாலும் அவரால் வாங்கப்பட்ட பூமிகளை சரிவர மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை.

அவரிடமிருந்த ஆவணங்களை எனக்கு அனுப்பி வைத்தார். ராமநாதபுரத்தில் அரை ஏக்கர் நிலம், சேலத்தில் வீட்டு மனை, மதுரையில் வீடு, கோவையில் ஒரு சிறிய மனையிடம், ஒரு கெஸ்ட் ஹவுஸ் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றினையும் படித்துப் பார்த்தேன். மூன்று சொத்துக்கள் அவரின் தந்தையார் பெயரில் இருந்தன. ஒரு சொத்து அவரின் தாயாரின் பெயரில் இருந்தது. ஒரு சொத்து அவர் கிரையம் பெற்றது. அவரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்ல அவருக்கே தெரியாத சொத்துக்கள் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

மேற்கண்ட சொத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி அதை சுத்தப்படுத்தி வேலியிட வேண்டுமென்றுச் சொன்னேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

முதலில் அவர் கிரையம் பெற்ற சொத்தினை பட்டா மாறுதல் செய்வோமென்று ஆரம்பித்தேன். பட்டா விண்ணப்பத்தோடு கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தேன். இது கண்டிஷனல் பட்டா பூமி என்பதால் பட்டாவை மாறுதல் செய்ய முடியாது என்றுச் சொல்லி விட்டார். அதுவரையிலும் அது கண்டிஷனல் பட்டா பூமி என்று எனக்குத் தெரியவில்லை. பஞ்சமி பூமி இல்லை என்பது நன்கு தெரியும். 

அது என்ன கண்டிஷனல் பட்டா பூமி? அரசு தன் நிலத்தினைப் மக்களுக்கு இனாமாக வழங்கும்போது ஒரு சில கண்டிஷன்களுடன் அவர்களுக்கு பட்டாவை வழங்குகிறது. அதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் பட்டா வழங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பட்டா பெற்றவர் எந்த வித வில்லங்கத்துக்கும் அந்தப் பூமியினை உட்படுத்தக்கூடாது. அப்படி உட்படுத்தினால் அந்தப் பட்டா ரத்தாகி பூமி அரசு வசம் சென்று விடும். இது ஒரு கண்டிஷன். பத்து வருடத்திற்கு பின்பு விற்பனை செய்யலாம் என்றாலும் அந்தப் பூமியை அவர் யாருக்கு விற்கலாம் என்றொரு கண்டிஷனும் இருக்கும். அது என்ன என்று தெரிய வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பட்டா பூமியைக் கிரையம் பெற முடியும். அந்தக் கண்டிஷன்கள் வழங்கப்பட்ட அந்தப் பட்டாவில் இருக்கும். ஒரு சிலர் பல கிரையங்களை உருவாக்கி விடுவதால் இது போன்ற விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆகவே நண்பர்களே சொத்தின் மூல ஆவணங்களைஆராயும் போது பத்திரங்களை நன்கு ஆராய வேண்டும். அதன் பிறகு குறைந்தது மூன்று முறையாவது வில்லங்கச்சான்றிதழ்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும் ஆவணங்களை நகல் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். மேனுவலாக எடுக்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில் மனிதனின் தவறால் குறைபாடுகள் ஏற்பட்டு விடும். அதனால் பல அனர்த்தங்கள் வந்து விடும். 

ஆகவே கண்டிஷனல் பட்டா பூமியை அதன் கண்டிஷன் என்னவென்று தெரியாமல் வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.





Wednesday, July 6, 2016

நிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு தினத்தந்தியில் ஒரு செய்தி. அன்னூரைச் சேர்ந்தவர்கள் தமிழக இந்து அறநிலையத்துறைக்கு  பாத்தியமான நிலத்தைப் பட்டா பெற்று அதனை தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு விற்பனை செய்து விட்டார்கள் என்றும், அதை அறிந்தவுடன் தூத்துக்குடிக்காரர் காவல்துறையில் புகார் கொடுத்து, ஏமாற்றியவர்களை கைது செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வினைப் பற்றி இங்கு பதிந்தால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலம் அது. கோவிலின் பெயரில் பட்டா இருந்தது. ஆனால் அந்த நிலம் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்களால் குறிப்பிட்ட கோவிலில் பணிபுரியும் பூசாரிக்கு இனாமாக வழங்கப்பட்டிருந்தது என்றும் ஆகவே அந்தப் பூசாரிதான் அந்த நிலத்துக்கு உரிமையாளர் என்றும், தமிழக அரசு அந்த நிலத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொண்ட போது அந்தப் பூசாரிக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கியது என்றும் சொல்லிக் கொண்டு ஒரு ஆவணத்தை நண்பர் கொண்டு வந்து கொடுத்தார். அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில் செட்டில்மெண்ட் தாசில்தாரால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், கந்தாய ரசீது போன்றவற்றை பூசாரி தன் பெயரில் செலுத்தி வந்திருக்கிறார் என்பதையும், கோவிலின் பெயரில் உரிமையாளராக அந்தப் பூசாரி இருந்து வந்திருக்கிறார் என்பதையும் அறிய நேர்ந்தது. 

இருப்பினும் அதில் மற்றொரு மறைந்து போன தகவலையும் அறிய நேர்ந்தது. செட்டில்மெண்ட் தாசில்தாரால் கொடையாக அளிக்கப்பட்ட அந்த நிலம் அந்தப் பூசாரியின் தகப்பனாரால் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் அறிய நேர்ந்தது. அனுபோகத்தில் இருந்து வந்த பூமியைத்தான், செட்டில்மெண்ட் தாசில்தார் கோவில் இனாமாக வழங்கி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த பூமியானது அவர்களின் அனுபோகத்தில் எத்தனை காலம் என்பதை அறிய முடியவில்லை. அதற்கான ஆவணங்களைத் தேடினால் கிடைத்து விடும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறு அந்த ஆவணங்கள் கிடைத்து விட்டால் செட்டில்மெண்ட் தாசில்தாரின் உத்தரவினை  ரத்து செய்தும், இந்து அற நிலையத்துறையின் கீழ் பதிவாகி இருப்பதையும் நீதிமன்றம் மூலம் நீக்கி விடலாம் என்று முடிவு செய்தேன். 

எல்லாம் செய்து கொடுக்கலாம், ஆனால் அவர்கள் என்னை செலவு செய்து மீட்டெடுத்துத்தாருங்கள் என்றார்கள். என் வேலை என்னவோ அதைத்தான் என்னால் செய்ய முடியும்? என்றும் எனக்குரிய கட்டணத்தை அளித்தால் மீட்டெடுக்க உதவுகிறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து கோடி விலை இருக்கும். அந்தப் பூசாரியின் வாரிசுகள் ஏழ்மையில் உழல்கிறார்கள். இருப்பினும் நான் என்ன செய்ய முடியும்? 

கோர்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை எல்லாம் செய்து கொடுத்து அவர்களிடமிருந்து செலவு தொகையைத் திரும்பப் பெறுவது சாதாரண காரியமா? காரியம் ஆகும் வரை நன்றாக இருக்கும், காரியம் முடிந்த உடன் வேறு மாதிரியாகப் பேசும் உலகமல்லவா இது? அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் ரிஸ்க் எடுக்க முடியுமா? விதியின் வலிமையினைப் பார்த்தீர்களா? கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது ஆனால் என்ன பயன்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கோவிலுக்குப் பாத்தியமான சொத்துக்களை வாங்கினால் அது எந்தக் காலத்திலும் செல்லத்தக்கதல்ல. எப்படி கோவில் நிலங்களை அடையாளம் காண்பது என்று நினைக்கின்றீர்கள்? அதற்கு கிரையம் பெற உள்ள ஆவணங்களைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடியும். இப்படி பல முறைகளில் ஒரு சொத்தின் தன்மையானது என்ன என்று கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து பல தடையின்மைகளை பற்றி அலசி ஆராய்ந்து பார்த்து நிலத்தின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடித்தல் அவசியம்.

அந்த தூத்துக்குடிகாரருக்கு கோவையில் இருக்கும் நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள அவ்வளவு எளிதில் முடியாது. ஒரே ஊர்க்காரராக இருந்தால் ஓரளவு நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெளியூரில் சொத்துக்கள் வாங்க நினைப்போர் லீகல் கருத்துரு பெறுவதற்காக ஒரு தொகையினை தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உழைப்பு வீணாகிப் போகும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன.


Friday, June 17, 2016

நிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு வெகு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. பலரும் இதைக் கவனிப்பதில்லை. ஏனென்றால் இதைப் பற்றிய புரிதலும் விஷயமும் யாருக்கும் தெரிவதில்லை. 

சமீபத்தில் என்னுடைய நண்பர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். விஷயம் என்னவென்று கேட்டேன். கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டேன். பின்னர் விஷயத்தைக் கேட்டேன்.

தன் வாழ் நாள் சம்பாத்தியத்தில் அவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தினை கிரையம் பெற்றிருப்பதாகவும், கிரையம் பெற்று சுவாதீனத்தில் இருந்து வந்த சொத்தின் மீது தற்போது வழக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார். 

“என்ன காரணம்?” என்றேன். 

”என்னவோ பஞ்சமி நிலங்கள் என்கிறார்கள்” என்றார். 

“நான் கிரையம் பெற்ற போது லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் தான் வாங்கினேன் என்றார்”. 

”வக்கீல் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் வேறு எந்த வகுப்பினரும் பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்” என்றார். ”என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரிடம் கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை முழுவதுமாகப் பெற்று விடலாம் எனவும், அதற்கு பல வழிகள் இருக்கின்றன எனவும் சொல்லி சமாதானப்படுத்தினேன். 

”பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன சார்? விளக்கம் தர முடியுமா?” என்றார்.

”கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்?  அது அவர் தவறல்ல, ஏதோ  மாட்டிக் கொண்டார் சரி செய்து கொடுத்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டேன்.

இனி பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1981 ஆம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்ட்ராக இருந்த டெரமென் ஹீர் என்பவர் தலித் தாழ்த்தப்பட்ட மக்களின் வெகு மோசமான வாழ்க்கைத் தரத்தினையும், நிலச் சுவான் தார்களால் அவர்கள் கொத்தடிமையாக வாழும் கொடுமையும், தலித் வகுப்பினரை முன்னேறச் செய்வதற்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். பெரும் நிலக்கிழார்களால் கொத்தடிமையாக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தினையும், சமூகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதற்காகவும் 1892ம் வருடம் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுமார் 12,00,000 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்காக டிப்பரஸ்டு கிளாஸ் லேண்ட் ஆக்ட் 1892 (Depressed Class Land Act 1892) பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலத்தினைத்தான் பஞ்சமி நிலங்கள் என்று  சொல்கிறோம்.

இந்த பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, லீசுக்கு விடவோ, மாற்றம் செய்யவோ கூடாது. பத்து ஆண்டுகள் கழித்து தலித் வகுப்பினருக்கு மட்டுமே மாற்றம் செய்து கொடுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று வகுப்பினருக்கு விற்கவோ, லீசுக்கோ, குத்தகைக்கோ முடியாது. அவ்வாறு செய்தால் அந்த ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி விடும் என்று சில கண்டிஷன்கள் அந்தச் சட்டத்தில் இருந்தன. அவ்வாறு திரும்பப் பெறப்படும் நிலத்திற்கு அரசு எந்த வித இழப்பீடும் கொடுக்காது என்பது மேலும் ஒரு முக்கியமான விஷயம்.

இந்த நிலத்தினை வேறு எவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆனால் என்ன நடக்கிறது? இது பற்றிய விபரங்கள் தெரியாதவர்களைப் பயன்படுத்திப் பத்திரங்களை உருவாக்கி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்தே இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. தெரியாத காரணத்தால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில விஷமிகள் போலிப் பத்திரங்களை உருவாக்கி விடுகின்றார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதவாறு பல்வேறு ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். விளைவு பிரச்சினை வந்து விடுகின்றது.

ஆகவே நண்பர்களே சொத்துக்கள் வாங்கும் முன்பு வெகு கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.


Saturday, May 7, 2016

நிலம் (18) - பவர் மூலம் விற்கிரைய ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை

சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மேல் முறையீட்டுக்கு வந்திருந்தது. 

அந்த வழக்கு என்னவென்றால், சொத்தின் உரிமையாளரிடமிருந்து பொது அதிகார ஆவணம் எழுதி வாங்கியவர் வேறொரு நபருக்கு சொத்தினை விற்பதற்காக விற்கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்து சொத்தின் விலையில் முக்கால் வாசி பெற்று விடுகிறார்.

விற்கிரைய ஒப்பந்தகாலம் ஒரு வருடம். ஆனால் ஒரு வருடம் முடிவில் பொது அதிகார முகவர் சொத்தினை எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் செய்தவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். சொத்தின் உரிமையாளர் பொது அதிகார ஆவணத்தை ரத்துச் செய்கிறார்.

விற்கிரைய ஒப்பந்தத்தின் படி சொத்தினைக் கிரையமும் செய்யமுடியவில்லை. பொது அதிகார முகவர் ஆவணமும் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.

கீழ் நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புரைகள் மாறி மாறி வந்தன. அதைப் பற்றி இங்கே எழுத ஆரம்பித்தால் குழம்பி விடுவீர்கள் என்பதால் சாரத்தை மட்டும் எழுதுகிறேன்.

பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்தாலும் சொத்தின் உண்மையான உரிமையாளராக பவர் பெற்றவர் ஆக மாட்டார். எந்த நேரத்திலும் பவர் ரத்துச் செய்யப்படலாம். ஆனால் பவர் வாங்கியவர் எழுதிக் கொடுத்திருக்கும் ஒப்பந்தத்தை சொத்தின் உண்மையான உரிமையாளர் செயல்படுத்தியே ஆக வேண்டும். எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. 

இருப்பினும் ஒரு சில ஓட்டைகளும் இருக்கின்றன. புத்திசாலி வக்கீல் அதனைப் பயன்படுத்துவார்.

மேற்கண்ட பிரச்சினைக்கு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியது.

விற்கிரைய ஒப்பந்தம் செய்தவர், அந்தச் சொத்தினை குறிப்பிட்ட காலத்துக்குள் கிரையம் செய்திட தயாராக இருந்ததை நிரூபித்த காரணத்தால் அந்தச் சொத்தினை சொத்தின் உரிமையாளர் மீதித் தொகையினைப் பெற்றுக் கொண்டு கிரையம் செய்து கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

விற்கிரைய ஒப்பந்தம் போட்டு விட்டோம் இனி சொத்து எனக்குத்தான் என்று நினைத்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்க என்பதற்காகத்தான் இந்தப் பதிவினை எழுதி இருக்கிறேன்.

இதைப் போன்ற ஏதேனும் வழக்குகள் வந்தால், கோர்ட்டில் வழக்கு நடந்தால், அது இன்னும் முடியாமல் இருந்தால் தொடர்பு கொள்ளவும். விரைவில் வழக்கை முடித்து தீர்வு பெற உதவுகிறேன்.

*  *  *


Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








Sunday, May 1, 2016

நிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்

சமீபத்தில் கொடைக்கானலுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பருக்கு வேண்டிய குடும்பத்தாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்களிடமிருந்து சில ஆவணங்களை என்னிடம் கொடுத்து பார்வையிடச் சொன்னார். அனைத்தும் ஒரிஜினல் சொத்துப் பத்திரங்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தேன். அந்தக் குடும்பத்தின் தாத்தாவால் சுய சம்பாத்தியத்தால் கிரையம் பெற்று, வாங்கப்பட்ட பூமிகள் ஏக்கர் கணக்கில் இருந்தன. பட்டாவும் அவரின் தாத்தா பெயரில் இருந்தன. அந்தப் பூமிகளின் தற்போதைய நிலைமை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எனது லேப்டாப்பை உயிர்ப்பித்தேன். அந்தச் சொத்துக்கள் அனைத்தும் கோடிகள் மதிப்புக் கொண்டவை.

நிறைய பொருட்செலவுகள் செய்து பல மாவட்டங்களின் நில தொடர்புடைய ஆவணங்களை கணிணியில் வைத்திருப்பதால், இருக்குமிடத்திலிருந்தே எளிதில் அந்த பூமிகளின் தற்போதைய நிலையை அறிய நேர்ந்தது.

தற்போதைய சொத்துப் பத்திரம் வேறொரு பெயரில் இருந்தது. பட்டாவோ மற்றொருவர் பெயரில் இருக்கிறது. ஏன் இந்தப் பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்காக அந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

1986ம் வருடம் நில அளவையின் போது புதிய சர்வே எண்கள், பட்டா எண்கள் வழங்கிய போது பல்வேறு முறைகேடுகளும், தவறுகளும் ஏற்பட்டன. உரிமையாளர் பெயர்களும் மாற்றப்பட்டன. அந்த நேரத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளால் நில உரிமையாளர்களின் பல சொத்துக்களின் பட்டாக்கள் மாற்றப்பட்டன. போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பல சொத்துக்களை பலர் பறித்துக் கொண்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு மாத காலம் ஆயிற்று. 1986ம் ஆண்டு கால கட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதை அறிந்தேன். மூலப் பத்திரங்கள் இல்லாமல் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். அனைத்து ஆவணங்களையும் தகுந்த முறையில் சேர்த்து அவர்கள் தான் உரிமையாளர்கள் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து அவர்களிடம் கொடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தேன். 

அந்தக் குடும்பமே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களே தகுந்த இடத்தில் முறையிட்டு சொத்தினைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் இனி கோடீஸ்வரர்கள். 

எனக்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். அன்று மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பாட்டனார் சொத்து ஆனால் எவரோ உரிமை கொண்டாடி வருகின்றார்களா? கவலையே பட வேண்டாம். அனைத்து ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வாருங்கள். சரியான தீர்வினைத் தருகிறேன்.

கோர்ட்டில் தீர்ப்பு பெற்று உங்கள் சொத்தினைப் பறித்துக் கொண்டார்களா? கவலை வேண்டாம். அந்தச் சொத்தினை மீண்டும் பெற்று விடலாம். அனைத்துக்கும் சட்டப்படியான தீர்வுகள் உண்டு.

அது மட்டுமல்ல உங்கள் சொத்தில் எந்த வித பிரச்சினை இருந்தாலும் சரி, ஆவணத்தின் நகல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். சரியான தீர்வினைக் கண்டுபிடித்து சரி செய்து விடலாம்.

உங்கள் சொத்தினை யாரோ ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றாரா? கவலை வேண்டாம். அவரை சட்டப்படி வெளியேற்றி விடலாம். உங்கள் சொத்தினை மீட்டு விடலாம். அதற்குரிய ஆவணங்களின் பிரதிகளுடன் என்னைச் சந்தியுங்கள்.

பிரியங்களுடன் கோவை எம் தங்கவேல்