குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Tuesday, July 9, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (+18) - பகுதி 2

பூ மலர்வது அதன் இயல்பு. தன்னைச் சுற்றிலும் பூவின் வாசம் விரவி மணம் பரப்பி சூழலை இன்பமயமாக மாற்றுவது, பூக்களுக்கு இயற்கை வழங்கிய டிசைன். அது யாருக்காவும், எதற்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. விடிகாலையில் இன்னிசைக் குரல் எழுப்பி மனிதர்களின் துயிலை மென்மையாக கலைத்து, புத்துணர்ச்சியைத் தரும் பறப்பனவைகளின் இயல்பினை மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்ளுமா?  

அது போல ஒரு சில மனிதர்கள் இந்த உலகில் உண்டு. அக்கிரமம் எங்கு நிகழ்ந்தாலும் வெகுண்டு எழும் பல மனிதர்கள் இங்குண்டு. அவர்களால் தான் தர்மம் வாழ்கிறது. அதர்மக்காரர்கள் அய்யோவென அழிகிறார்கள். அதர்மம் செய்பவர்களின் வாழ்க்கையை தமிழக வரலாறு சொல்லும். காற்றில் பறந்தவர்களின் கதி இன்றைக்கு என்னவென நமக்கெல்லாம் தெரியும்.

ரயிலடியில் முகிலனை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் போது, அவர் கோஷம் போடுகிறார். அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். எவரும் சென்று விசாரிக்கவில்லை. அவரின் கோஷம் அணுக்கழிவு சேகரிப்பு மையம் வேண்டாமென்று இருந்தது. அந்தச் சம்பவம் யாருக்காகவோ, எங்கோ, எதுக்கோ, யாருக்கோ நடக்கிறது என்பதாய், அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

பைத்தியக்காரர்களாய், வெந்ததைத் தின்று விட்டு, விதி வந்து செத்துப் போவோம் என்றலையும் கூட்டம் தான் இந்த உலகில் நிறைந்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்த போது மனதெல்லாம் வெம்மை பரவி, கண்கள் சிவந்தன. முகிலன் அரக்கர்களிடம் மோதிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போனார். அரக்கர்களின் பாஷை வேறு. அப்பாஷையில் பேசினால் தான் அரக்கர்களுக்கு புரியும். ராமன் அப்படித்தான் பேசினான். கிருஷ்ணன் அப்படித்தான் பேசினான். அவை புராணங்களாகின. முகிலன் சின்னாபின்னப் படுத்தப்படுகிறார். இங்கு நல்லவனுக்கு மதிப்பில்லை. அயோக்கியனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் மதிப்பு.

ஒரு போராட்டம் செய்யவில்லை, ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை.  ஒரு நடிகன் பத்து லட்சத்துக்கும் மேல் ஓட்டு வாங்குகிறான். பத்துக் கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுக் கொண்டு டிவியில் தோன்றி மக்களை மடையர்களாக்கி, கட்சி நடத்துகிறான். அவனைப் பார்த்து புளகாங்கிதமடைகிறது தமிழ் நாடு. இந்தக் கொடுமையெல்லாம் இங்கு தான் நடக்கும். 

எம்.ஜி.ஆர் மட்டும் முதலமைச்சராக வராது இருந்தால் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்குமா? கேடு கெட்டவர்களால் ஆளப்பட்டிருக்குமா? சரோஜா தேவியின் இடுப்பாட்டத்தைப் பார்க்கத் தியேட்டர், தியேட்டராக அலைந்த அன்றைய விடலைகள் செய்த அக்கிரமம் தான், தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணம். முகிலன் ஒரு பறவையைப் போன்றவர். பூவைப் போன்றவர். பாவம் அவர் வாழ்வது அரக்கர்களின் உலகத்தில் என்பது அவருக்குப் புரியவில்லை. 

அரக்கர்களை அழிக்கும் வழி வேறு. புத்திசாலித்தனம் வேண்டும் அவர்களை ஜெயிப்பதற்கு. அதற்கு அர்த்தசாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். பகவத் கீதையைப் படிக்க வேண்டும். என்ன செய்யனும், எப்படிச் செய்யனும் என்பதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்ப செயல்படுத்தினால், அரக்கர்களின் கூட்டம் அல்லுச்சில்லு சிதற அழிந்து போவார்கள். அவர்கள் வழியில் சென்றால் தான் அவர்களை அழிக்க முடியும். கண்ணன் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஆனால் இங்கிருப்பவர்கள் அந்தளவுக்குச் சிந்தனையாளர்களா எனக் கேட்டால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். வாரிசுகளை தலைவர்களாக்கும் சுய நலவாதிகள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். 

நிற்க...! 

சமீபத்தில் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கினை மல்டிவெலல் மார்க்கெட்டிங்க் முறையில் விற்பதாகச் சொன்னார். என்ன விசேடம் அதில் எனக்கேட்டேன். தற்போது பெண்களுக்கு உண்டாகும் அத்தனை நோய்களுக்கு காரணமாக இருப்பது நாப்கின்கள் தான் என்றார் அவர். 

மூத்திரத்தின் மூலம் எளிதாக நோய் பிறப்புறுப்பைப் பாதித்து விடும் என்பதற்காக, மலத்தின் மீது மூத்திரம் பெய்யக்கூடாது என கிராமங்களில் சொல்வார்கள். 

நண்பர் சொல்லியவுடன் ஆராய்ச்சியில் இறங்கினேன். கிராமப்புறங்களில் அந்தக்காலப் பெண்கள் (வயதானவர்கள்) பலருடன் உரையாடினேன். இக்காலத்தில் இருக்கும் பல்வேறு பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் எதுவும் அவர்களைத் தீண்டியதில்லை என அறிந்தேன்.

காண்டமும், அதன் மீது தடவப்படும் பிளேவர் (என்ன எழவுக்கு அதில் பிளேவர் வேண்டுமோ தெரியவில்லை) ஆகியவை முற்றிலும் ரசாயனங்களின் கலவை. அது மட்டுமல்ல காப்பர் டி எனச் சொல்லும் கருத்தடை சாதனமும் பிளாஷ்டிக். நாப்கின்கள் உறிஞ்சுகின்றன எனச் சொல்கிறார்கள். திப்பி திப்பியாய் வரும் வஸ்துவை அவை எப்படி உள்ளுக்குள் கிரகித்துக் கொள்கின்றன எனத் தெரியவில்லை. ரத்தம் வெளியில் வந்தால் அது உடனடியாக காற்றில் இருக்கும் கிருமிகளுடன் சேர்ந்து படு அசுத்தமாய் மாறி, பெண்களின் பிறப்புறுப்பின் வழியே பல்வேறு நோய்க் கிருமிகளை உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன.

நாப்கின்கள் பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல உபாதைகள் ஏற்படுகின்றன எனச் சொல்வார் மனையாள். ஆக இந்த பொருட்களினால் பெண்களின் ஜனன உறுப்பின் வழியாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று கர்ப்பப் பை புற்று நோய், நீர்க்கட்டிகள், உடலுக்குள் பல்வேறு உபாதைகளை உருவாக்கி வருகின்றன என கிராமத்துப் பாட்டிகளுடன் பேசிய பிறகு அறிந்து கொண்டேன்.

காண்டம் பிளாஸ்டிக். அதில் தடவப்படும் பிளேவர்கள் முற்றிலும் ரசாயனம். ஆக இந்த வகைப் பொருட்களினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கர்ப்பமின்மையும் உருவாகாது என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தற்போது பெண்களுக்கு உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் போது, வேதிப் பொருட்கள் ஜனன உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என எவராது சொன்னால் நம்பக்கூடிய நிலை இல்லை.

உடம்பில் பயன்படுத்தும் சோப்பிலிருந்து, ஒவ்வொரு பொருளிலும் ரசாயனப் பொருட்கள் இல்லாது வருவதில்லை. சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களும் ரசாயன உரமின்றி வருவதில்லை. 

’புருஷன் தேவையில்லை, பிள்ளை பெற்றுக் கொள்ள எங்களிடம் வாருங்கள்’ என மருத்துவமனைகள் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை திம்மம் பகுதியில், நண்பரின் ஹெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த போது, அங்கிருக்கும் மலைவாழ் பெண்களின் கருமுட்டையை உறிஞ்சிக் கொண்டு, காசு கொடுத்துச் செல்லும் பிசினஸ் ஆட்களைப் பார்த்தேன். அம்முட்டைகள் மருத்துவமனைக்குச் சென்று எவரோ ஒரு ஆணின் விந்தணுவில் சேர்க்கப்பட்டு குழந்தைகளை உருவாக்கி கருப்பைக்குள் வைத்து, இன்றைய நவீன மருத்துவம் தொழில் செய்கின்றார்கள்.

உலகம் போற போக்குத் தெரியாமல், ஜாதிக் கட்சித் தலைவர்கள், ஜாதி, மதம் என மீட்டிங்க் போட்டுப் பேசிக் கொண்டலைகின்றார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, சில விடலைகள் தங்கள் உயிரை இழக்கின்றார்கள். இங்கு எவரின் விந்து, எவரோ ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு, யாரோ ஒருவரின் கருப்பைக்குள் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவரின் குழந்தையை தங்கள் குழந்தை என கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது உலகம். குழந்தைகள் இன்று இயற்கையாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா? 

இங்கு மனிதனின் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது. அதுதான் உயர்ந்த வாழ்க்கை என மூளைக்குள் நிமிடத்துக்கு நிமிடம் புகுத்தப்படுகிறது. இயற்கை நமக்கு விரோதி என்பது போல மாற்றப்படுகிறது. கொசுக்களை அழித்த தட்டான்கள் இன்று எங்கும் காணப்படவில்லை. எனது 19 வயது வரை கொசு என்றால் என்னவென்றே தெரியாது. நாகரீகக் கோமான்கள் வசிக்கும் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

என்னால் இதற்கு மேல் எழுத இயலாது. எழுததினால் எல்லோருக்கும் திகில் தான் பிடிக்கும். ஆகவே நண்பர்களே, இயற்கைக்கு மாறுங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்களையாவது, நோய் நொடிகள் இன்று சுகமாய் வாழுங்கள்.

சொல்ல வந்தது இன்னும் இருக்கிறது. சந்திப்போம் விரைவில்....!

Saturday, July 6, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (18+) - பகுதி 1

அன்பு நண்பர்களே,

உங்களை அன்போடு இப்பதிவினைப் படிக்க அழைக்கிறேன். விஷயம் கொஞ்சம் கடுமையானதுதான். இப்பதிவு திருமணமனமானவர்களுக்கு மட்டும் என்றுச் சொல்லி இருப்பதால் வயதுப் பெண்கள், குழந்தைகள் இவ்விடத்திலிருந்து விலகி விடும்படி வேண்டிக் கொள்கிறேன். 

தாய் தந்தை இச்சையினாலே தாரணியிலே நான் பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!

தண்ணீரைக் கூட தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!

அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!

மாட்டின்மேல் உண்ணியைப் போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம் நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!

தோழன் என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!

கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டு நான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!

ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான் செய்த தவறேதுவோ பரம்பொருளே!

தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்காரனாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!

ஒரு வேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனுக்கு மயங்குவதே பரம்பொருளே!

செய்யாத குற்றமெல்லாம் செய்தே எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!

எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்து துணையிருப்பாய் பரம்பொருளே!

பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய் நீ நானறந்தேன் பரம்பொருளே!

உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகிறேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!

கண்ணாடித் துண்டுகளென் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!

எங்கும் நிறைந்தாயே எவரையும் நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!

கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!

ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணையில்ல என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!

ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக்குருடனுக்கு நலமேது பரம்பொருளே!

பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!

ஆற்றில் ஒரு காலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!

எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லை எனத் துணிந்தேன் பரம்பொருளே!

உன்காலை வாங்கி உலாவ மறந்த பின்னர்
என் காலைக் கொண்டு பாப் எது செய்வேன் பரம்பொருளே!

தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்தது போல்
நான் போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!

சூதாடித் தோற்றவர்க்கு துணையிருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ

அரக்க குலமெல்லாம் அன்றோட ழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதய்யா!

பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய் நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!

எத்தனையோ கேள்விகளை எழுப்பி விட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான் ஒருவன் எப்படித்தான் பதில் சொல்வேன்!

துன்பத்தைத் தானே தொடர்தெனுக்கு வைத்தாய்
இன்பத்தை எப்போது எனக்கு வைப்பாய் பரம்பொருளே!

ஐயா நின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினை தீர்ப்பாய் பரம்பொருளே!

காவல் ஒரு வில்லாகக் கருணை ஒரு வேலாக
கோவில் உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ?

தூங்குகிற வேளை நீ தோன்றுவாய் கனவில் என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!

மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பது போல
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!

பழுதறியாப் பிள்ளை இது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!

நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என் சாட்சி!

மாற்றார் உரிமையை நான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுதான் அகக்கடமை என்றிருப்பேன்!

இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!

நற்கோவில் சிலையதனைக் நான் உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!

அடுத்தார் மனைவியை நான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய் விரித்துக் கிடந்திருப்பேன்!

நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பது உன் கருணை என நினைத்திருப்பேன்!

தாயை மகனைத் தனித்தனியே பிரிந்திருந்தால்
நாயையே என்னை விட நற்பிறவி என்றிருப்பேன்!

கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!

பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித் திரிந்திருப்பேன்!

நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய் திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!

சக்தியுள மட்டில் தவறாமல் நாள் தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!

மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என் நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!

தாயும் நீ தந்தை நீ சார்ந்திருக்கும் சுற்றமும் நீ
வாயும் நீ வயிறும் நீ வரமளிக்கும் தேவனும் நீ!

நோயும் நீ மருந்தும் நீ நோவுடன் சுகமும் நீ
ஆயும் குணமளிக்கும் ஆறாவதறிவும் நீ!

இறப்பும் பிறப்பும் நீ இருட்டும் வெளிச்சமும் நீ
மறப்பும் நினைப்பும் நீ மனக்கோவில் தேவதை நீ!

எல்லாமும் நீயே எனைப் பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!

இன்பவரம் தாராமல் இதுதான் உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!

கண்ணதாசனின் புலம்பலைப் படித்தீர்கள் அல்லவா? இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே? நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது மறந்து போனீர்களா?

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!

விதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே!

இந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா? குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம்? உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்?

இல்லை...! இல்லை!! நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா? தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா? நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம்? ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம்? ஓடுகிறோம்? இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

என் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ முடியாது. என்னைப் போல எவரும் போராட முடியாது. என்னைப் போல ஒருவரும் சகித்துக் கொள்ள முடியாது. என்னைப் போல துரோகத்தால், சூழ்ச்சியால் பாதிப்பட்டு இருக்க முடியாது. என்னைப் போல இன்னொருவர் சாதாரண விஷயங்களைக் கூட இழந்திருக்க முடியாது. நாமெல்லாம் அடிக்கடிச் சொல்வோமே, ‘அந்த அவன்’  என் மீது கொள்ளை கொலைவெறியில் இருப்பான் போல. பிறந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அடித்துக் கொண்டே இருக்கிறான். வீழ்கிறேன். அடிக்கிறான் அடியோடு அழிய. மீண்டும் திமிறி எழுகிறேன். அடிக்கிறான். வீழ்கிறேன். உள்ளத்துக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்து ஆர்ப்பரிக்கும் தன்னம்பிக்கையோடு உடல் துடிக்க மீண்டும் மீண்டும் எழுகிறேன். அடித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும், மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டே இருக்கிறேன். ஒரு நாளும் உள்ளம் சோர்ந்து, உடல் விதிர்த்து உட்கார்ந்திருந்தது இல்லை. நான் அழிந்து போகக்கூடியவன் அல்ல. சாம்பலானாலும் மீண்டும் முளைப்பேன் வேறொரு செடியாக, மரமாக, உயிராக. இயற்கையின் சிந்தாந்தம் அது. 

அடுத்த நொடியில் என்ன நடக்கும்? என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன்? வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும்? வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!!

சோம்பேறியா சோகத்தில் மூழ்க?

முட்டாளா புலம்பித் திரிய?

எழுந்திருங்கள்!!!

உங்களின் எண்ணத்தை, மனதை எழுப்புங்கள். உடல் கூடவே எழும்....!

முண்டாசுக் கவி பாரதியைப் பாருங்கள். அவன் வடித்த கவிதையைப் படியுங்கள்.

சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

அதுமட்டுமல்ல, எனது ப்ரியத்துக்கு உரிய வீரத்துறவி விவேகானந்தர் வார்த்தைகளைப் படியுங்கள்.

கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான் என்றார் விவேகானந்தர். 

உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் வரும் துன்பங்களை உதைத்து, உதைத்து உற்சாகமாய் கோல் போடுவோம். துன்பத்தையே வெற்றிப் பந்தாக்குவோம். வாழ்க்கையே இதுதான்....!

நிற்க...!

பதிவு பெரிதாகிப் போனதால், அடுத்தப் பதிவில் உங்களை அதிர வைக்குமொரு உண்மையை அனுபவ உண்மையை எழுதப் போகிறேன்....!

நன்றி : கண்ணதாசனுக்கும், அவரது பதிப்பகத்தாருக்கும்....!

மேலும் கொஞ்சமே கொஞ்சம்...!

ஒரு கடிதம் கீழே !

வணக்கம் ஐயா,

உங்களது நிலம் சம்பந்தப்பட்ட கட்டுரை படித்தேன். அதுவும் சரியான நேரத்தில் அந்த திருசெந்தில் ஆண்டவரே எனக்கு தங்கவேலை காட்டியுள்ளதாக நினைக்கின்றேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனது காதில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ஒலித்துக் கொண்டுள்ளது. எல்லாம் அவனின் செயலென்று நினைக்கின்றேன். ஐயா நான் XXXX. நேரில் தங்களை சந்தித்து எனது பிரச்சினைகள் தீர்க்க பேசவேண்டும். அனுமதி வேண்டும். எனது பெயர் XXXXXXXXX, மொபைல் & வாட்சப் எண் XXXXXXXXXX. உங்களின் பதிலுக்காக .....

நண்பரே! நாமெல்லாம் வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள். ஊருக்குச் சென்று பத்திரமாகத் திரும்புங்கள். அதுவரை காத்திருக்கிறேன் உங்களுக்காக. சந்திப்போம். பிரச்சினையை உடைப்போம். தூள் துளாக்குவோம்.

வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!

விரைவில் சந்திப்போம்.....! 

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

Friday, March 29, 2019

பசியின் கண்ணீர்

பாரதிக்கு மட்டும் அந்தக் கோபம் சொந்தமானதில்லை. பேச்சாளர்களும், ஆன்மீகக் குப்பைகளைக் கொட்டும் செப்டிக் ஆட்களும் அடிக்கடிச் சொல்வார்கள், ”தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” எனப் பாரதி கூறினார் என.

அந்தக் கோபம் பாரதிக்கு மட்டும் சொந்தமானதில்லை. பசித்திருப்போருக்கு உணவிடும்  ஒவ்வொருவருக்கும் அது உள்ளே உறங்கிக் கிடக்கும் தனியா நெருப்பு. சாலைகளில் பஞ்சைப் பறாரியாய் கிடப்போருக்கு சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒருவருக்குள்ளும் அந்த கோபம் இருக்கும். அவரால்  முடிந்தது அந்தப் பொட்டலம்.

கோடியாய்க் குவித்து மாதம் ஒரு முறை விண்ணில் பறக்கும் சேவகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இருக்க  வேண்டிய கோபம், சாதாரணன் ஒருவனிடம் இருக்கிறது. நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் தோற்று விடும் நடிப்பை நடிக்கும் நயவஞ்சக நரிகளாய், வேடமிட்டு வரும் வெண் தாடிகளும், வெள்ளுடைகளும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை தட்டிப் பறித்து தன் அடிப்பொடிகளுக்கும், தான் அடிமையாய்க் கிடக்கும் எஜமானர்களுக்கு கொடுக்கிறார்கள். பசியால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தியர்கள்.

வங்கி கணக்கு என்றார்கள், மானியம் என்றார்கள். வங்கியில் கிடக்கும் பணத்தை உறிஞ்சி கயவாளிகளுக்கு கொடுத்து வெளி நாட்டுக்கு ஓட வைத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள்.

ஒரு வேளைச் சோற்றுக்கும் உணவின்றி தவிப்போர் இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றனர். சாலைகள் தோறும் கவனிப்பார் இன்றி பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போகின்றார்கள். அரசு பிணக்கிடங்குகளில் கிடக்கும் அனாதைப் பிணங்களின் கணக்குகள் அரை சதவீதம் கூட இருக்காது. ஆதரவின்றி, கவனிப்பாரின்றி செத்துப் போகும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே தேவை உணவு. அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னும் வெள்ளுடைய நயவஞ்சகர்கள் நரிகளாய் ஊருக்குள் ஊளையிட்டுக் கொண்டு, சிவப்பு விளக்குப் பொருத்தி சிங்காரமாய் பவனி வருகின்றார்கள். சிவப்பு விளக்கு சிங்காரன்கள் நாட்டைப் பிறருக்கு விற்கும் கயவாளிகள். 

நான்கரை லட்சம் டன் உணவு வீணாய் போனது இந்தியாவில். பசியால் செத்துப் போவோர் கணக்கு எனக்குத் தெரியவில்லை. செத்துப் போகும் விவசாயிகள் கணக்கு மட்டும் தெரிகிறது. விவசாயி கடனால் செத்துப் போகின்றார். ஆனால் பசியால் சாவோர் எண்ணிக்கையோ பல மடங்கு என்கிறார்கள். 7 ரூபாய் தருகின்றாராம் நாளொன்றுக்கு விவசாயிக்கு. என்ன ஒரு கொடூரம்?

போகட்டும் அறக்கோபம். கோபம் தெரிந்து விழும் வார்த்தைகள் மனதுக்குள் சற்றே ஆற்றுதலைத் தருகின்றன.

”அப்பா, இன்றைக்கு ஐ,ஐ.டி ரிசல்ட்” என்றார் நிவேதிதா.

“ போன தடவை, 98 மார்க் அல்லவா? இந்த தடவை 100 எடுத்தால் மாலையில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவு வாங்கித் தருவேன்” எனச் சொன்னேன்.

சிறிய புன்னகையுடன், “அப்பா, எனக்கும் திக் திக்குன்னுதான் இருக்கு?” என்றார்.

மாலைச் சரியாக நான்கு மணி பத்து நிமிடம்.

“அப்பா, 100ப்பா, என்னாலே நம்பவே முடியவில்லை” என்றார் போனில்

இரவு எட்டு மணி போல கணபதியில் இருக்கும் அன்னபூர்ணாவிற்குச் சென்றோம்.

திக்கித் திணறிச் சாப்பிட்டாலே 300 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது. சிறிய எளிய உணவு, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம். அங்கு ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியில் வருவோரிடமெல்லாம் சென்று பலூன் வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எவரும் வாங்கவில்லை. களைத்துப் போன முகம். வியர்வையில் நனைந்து உப்புக் காய்ந்து போன சுவடுகள் கொண்ட சட்டை. ஒருவர் குழந்தையுடன் வெளியில் வர அவரிடம் சென்றார். அவர் தலையாட்டி மறுத்து விட்டு நகர, அவர் தடுமாறி விழப்போனார். 

பசி.....!

எனக்குள் சுருக்கென்றது.

அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து ’சாப்பிட்டு வரும்படி’ கேட்டுக் கொண்டேன். காசை வாங்க முடியாது என்று மறுத்தார். இரண்டு பலூன்களைப் பெற்றுக் கொண்டு காசைக் கொடுத்தேன். அவர் கண்களில் கண்ணீர் பொசுக்கென்று அருவியாய் வழிந்தோடியது. முதுகில் தட்டிக் கொடுத்து, ”போய் சாப்பிட்டு விட்டு, வியாபாரத்தை தொடருங்கள்” என்று சொன்னேன்.

வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

“ஏம்பா, அவர் அழுகிறார்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிவேதிதா. உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. நிவேதிதாவுக்கு புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

ஹோட்டலுக்குள் செல்லும் முன்பு இவரைப் பார்த்திருந்தால் கூடவே அழைத்துச் சென்றிருப்பேன். அவர் சாப்பிடுவதைக் கண்டு என் மனது நிறைந்திருக்கும். அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

ஹோட்டலுக்குள் சென்று வயிறாரச் சாப்பிட்டு வருபவர்கள் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் சக மனிதனைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்? என்ன மாதிரியான உலகம் இது எனக்குள் ஆயிரம் கேள்விகள். மனிதர்களிடம் இருந்த மனிதாபிமானம் மறத்துப் போனதா? திண்ணை கட்டி சோறு போட்ட தமிழர்களா இவர்கள்? என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்தன.

”தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழி!” என்ற குரல் இரவு முழுவதும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பாரதியின் குரலா என எனக்குத் தெரியவில்லை. அது உங்களின் குரலாகக் கூட இருக்கலாம் அல்லவா?

* * * * *
29/03/2019 - 12.29 PM

Monday, March 4, 2019

நரலீலைகள் - சிவராத்திரி - (2)

அனைவருக்கும் வணக்கம். அடியேன் நரலீலைகள் நாவலின் ஆசிரியன். இன்றைக்கு சிவராத்திரியாம். மஹா சிவராத்திரியாம். எனக்கு அதன் அர்த்தமெல்லாம் தெரியாது.

சின்ன வயதில் அம்மா, “தம்பி, இன்னைக்கு சிவராத்திரிப்பா, ராத்திரி முழுக்க தூங்காம இருந்தா நல்லா படிப்பு வருமாம், உன்னைக் கொண்டு போய் கோயில்ல விட்டுட்டு வர்ரேன். விடிகாலம்மா வந்து கூட்டிட்டு வர்ரேன், போறியா” என்பார்.

”சரிம்மா” என தலையாட்டுவேன்.

பெயிண்ட் அடிக்காத, சிதிலமடைந்த சிவன் கோவில். கிழக்கு வாசலில் பழைய துருப்பிடித்த கம்பிகள் வேய்ந்த மரக்கதவிடுக்கின் வழியே சிவலிங்கனார் இருப்பார். அந்த சிவலிங்கத்தை தாத்தா மாணிக்கதேவர் தான் மன்னார்குடிப் பக்கம் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் ஏற்றிக் கொண்டு  வந்து, பிரதிஸ்டை செய்தார்கள் என்று சொல்வார்கள். வடகிழக்கு மூலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வைத்திருந்த வள்ளலார் புகைப்படம் இருக்கும். அதை ஒட்டினாற் போல தெற்குப் பார்த்தா மாதிரி யாரோ ஒரு பெண் சாமி இருக்கும். எனக்கு நினைவில் இல்லை. சிவபெருமான் சன்னதிக்கு எதிரில் பாழடைந்த ஒரு நந்தி மண்டபம் இருக்கும்.

எல் சேப்பில் இருக்கும் கோவிலில் வாசலை அடைத்தாற் போல பந்தலிட்டு அங்கே ஒரு மேடையிட்டு, அதன் மீது அமர்ந்து மழையூர் சதாசிவம் ஏதேதோ பாடிக் கொண்டிருப்பார். வாண்டுகளும், கொஞ்சம் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். நான் அந்த மண்ணுக்குள் தவழ்ந்து கொண்டிருப்பேன். விடிய விடிய அவரும் விடாமல் பாடிக் கொண்டிருப்பார். நானும் கண் அசராமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வப்போது அங்கே கிடக்கும் கல்லுக்கால்களில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். விடிகாலையில் யாரோ ஒருவர் சுக்கு மல்லிக்காப்பி கொடுப்பார். வாங்கிக் குடித்து விட்டு அங்கேயே சிவபெருமான் சன்னதி முன்னால் உருண்டு கொண்டிருப்பேன். தூக்கம் கண்ணைச் சுழட்டும். நல்லாப் படிப்பு வருமேன்னு தூங்க மாட்டேன்.

விடிகாலையில் அம்மா வந்து வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இவ்வளவுதான் எனக்கு சிவராத்திரி பற்றித் தெரியும். சிவராத்திரிக்கு கண் முழிச்சா நல்லா படிப்பு வரும்னு அம்மா சொன்னாங்கல்ல, அதே மாதிரி நல்லாத்தான் படிச்சேன்.

”ஏய் நீர் யாரப்பா? இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கிறாய்?”

”எம் பேரு மாயன்”

“ஆ..... சிவபெருமானா????”

“அதே, அதே...! கொஞ்சம் கண்ணை மூடி என்னைத் தியானி!”

“அப்படியே செய்கிறேன் சிவபெருமானே!”

* * * * *



லூசுப்பய. இவென்லாம் நாவல் எழுத வந்துட்டான் பாருங்க. வாசகர்களே! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே. மீண்டும் நானே உங்களுடன்.

”தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த ஆசிரியன் சிவராத்திரி அன்னைக்கு கண் விழித்திருந்தால் நன்றாகப் படித்ததாகச் சொல்கிறானே, அமெரிக்காரனும், பிரிட்டிஷ்காரனும், ஐரோப்பியனும் எந்த சிவபெருமான் கோவிலில் உட்கார்ந்திருந்தார்கள் என்று சொல்கின்றானா? பாருங்கள்?”

”அடேய்! அடேய்!! நீ யாரடா இடையில்? நில்லு நில்லு !!!!”

”அண்ணா, அடியேன் பேரு சந்துசிந்து. இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம். இந்த நாவலாசிரியன் எப்போது என்னைப் பற்றி எழுத ஆரம்பிப்பானோ தெரியாது. ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரம். ஆத்திரம். அதான் வந்துட்டேன்”

”வாப்பா, வா! நாவலின் முதல் பாத்திரம். என்னைப்போல ஒருவனா நீ!  ஆசிரியன் சொல் கேட்காத ஒரு கதாபாத்திரம். பரவாயில்லை. அதென்ன பேரு சந்துசிந்து?”

”சிரிக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

“சிரிக்க மாட்டேன் சொல்லு, அப்படி என்ன தான் சொல்லப்போறேன்னு பார்க்கிறேன். நான் பார்க்காத கதாபாத்திரங்களா?”

”இங்கே தான் கோயம்புத்தூர்ல ஈஷா ஈஷான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே ஒரு சிவராத்திரிக்கு அம்மாவும், அப்பாவும் போனார்களா? அடுத்த மாதம் நான் அம்மா வயித்துல கர்ப்பமாயிட்டேன்னாம். ஆனா ஏன் சந்துசிந்துன்னு பேர் வச்சாங்கன்னு கேட்டா, அம்மா சிரிக்கிறாங்க. ஒன்னும் புரியல”

“ஏன், உங்கப்பா கிட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அப்பா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லையே”

“என்ன????”

“அவரை நான் பாக்கவே இல்லை?”

என்ன இழவுடா இது? இந்த சந்துசிந்து மொத்தமா குழப்புகின்றானே. பார்த்தால் லூசுப் பய மாதிரி இருக்கான். இவனிடம் என்ன கேட்டு என்ன புரியப்போகிறது?

என் முகத்தைப் பார்த்த சந்துசிந்து,”எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”ன்னான்.

அவனே தொடர்ந்தான், “சநி”

மயக்கமே வந்தது எனக்கு...!

* * * * *

வெள்ளைக்காரனாவும் தெரியலை, நம்ம ஊர்க்காரனாவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கின்றானே யாராக இருப்பான் இவன்? இருக்கட்டும். என் பேரைக் கேட்டதும் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டான். அவன் போகட்டும். நான் வந்த விஷயத்தை சொன்னாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இந்த நன்னாளில்.

சவுக்கு சங்கர் அண்ணே, இருக்காப்லே அல்லவா? அவரு ஒரு படத்தைப் பேஸ் புக்குல போட்டிருக்காரு. அந்தப் படத்தை உத்துப் பார்த்தால் சிவன் சக்தி மேலே ஏத்தி மன்னிக்கவும், அருள் புரிந்த மகத்துவத்தைப் பார்க்கலாம். அந்தப் படம் கீழே. நான் ஏன் இதை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் புரியாதவர்கள் நரலீலைகள் நாவலைத் தொடர்ந்து படிக்காதீர்கள். உடனே விலகி விடுங்கள்.

* * * * *

அன்பு நண்பர்களே! நரலீலைகள் நாவலின் கதாபாத்திரங்கள் என்னைக் கேட்காமலே உருப் பெற்று உங்களுடன் உரையாடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள், நான் அறிமுகப்படுத்தும் முன்பே, உங்களுடன் பேசுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என எனக்கு இன்னும் புரியவில்லை. நான் எழுத நினைத்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அது அதுபாட்டுக்கு வருவதால் ஒழுங்கின்றி நாவல் கலைந்து போகும் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நாவல் ஒரு சிலர் சைவத்துடன் அசைவ உணவையும் உண்பார்களே அதைப் போல வரும் என நம்புகிறேன். என் கதாபாத்திரங்களை கட்டி ஆள, சிவனை நோக்கி தியானம் செய்யப் போகிறேன். மனம் ஒழுங்கானால் எல்லாம் ஒழுங்காகும் அல்லவா?

”மாயனே! எனக்கு அருள்வாய்! என் நாவலின் கதாபாத்திரங்கள் என் சொல் கேட்கட்டும்..

மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர்: இறைவன் 
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே - திருமூலர்

மாயனின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலிக்கிறது. அது உங்களுக்கும் கேட்கிறதா?

* * * * *
(04-03-2019)



Saturday, January 26, 2019

நிலம் (49) - சத்தமின்றி அமலாகும் நில உச்சரவரம்புச் சட்டம்

பொங்கல் அலுப்புகள், இனிப்புகள், கசப்புகள், அசதிகள் எல்லாம் உள்ளத்தை விட்டு அகன்றிருக்கும். காலம் தான் எல்லாவற்றுக்குமான விடையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ’இன்றைய நிலை, நாளை இல்லை. நாளையோ நம் கையில் இல்லை’ என்கிறார்கள் முதியோர்கள். ஆம் வாழ்க்கை எவரிடமும் கேட்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. (உண்மையில் அது நகரவும் இல்லை, நகர்த்தவும் இல்லை. நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)

வாழ்வியல் சூழல்கள் கற்பிதங்களுக்கான கற்பனைகளோடு இயைந்து மனிதனை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாய வலையிலிருந்து எந்தக் காலத்திலும் வெளி வர  முடியாது. கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்க வேண்டும் என உலகம் கேனத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் நலனுக்காக உருவான கட்டுப்பாடுகள், இப்போது மனிதன் கட்டுப்பாடுகளுக்காக வாழ வேண்டும் என மாறிப்போனது. 

அரசியல் செம கேவலமாக இருக்கிறது. கொலை கொள்ளை வரைச் சென்றிருக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள். என்ன மாதிரியான அரசியல் இது என்றே தெரியவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து நாற்றமடிக்கிறது. மக்கள் அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து சுகம் சுகம் என்று பாடிக் கொண்டலைகின்றார்கள்.

இதற்கிடையில் கோவையில் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தின் இயக்குனர் எனது பிளாக்கைப் படித்து விட்டு என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். பெரிசு ஏன் சிறிசுவைச் சந்திக்கணும்? தீர்க்க இயலா ஏதோ பெரும் பிரச்சினை போலும், வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு வரச்சொன்னேன்.

பெரிசுகள் எப்போதும் சூதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். நாம் தான் சூட்டின் மீது உட்கார்ந்திருப்பது போல கவனமாக இருக்க வேண்டும். மனசில ஓரமாக் வச்சுக்கங்க.

என்னைப் பற்றி விசாரித்து விட்டு, மெதுவாக ஆரம்பித்தார் அவர் கம்பெனியின் வேலைகள், தொழில்கள், அதன் வளர்ச்சிகள், பிரச்சினைகள் எனத் தொடர்ந்தது அவரின் பேச்சு. இதையெல்லாம் ஏதோ நம் மீது கொண்ட பிரியத்தின் மீதான காரணத்தால் சொல்கிறார் என்று நினைக்க நானென்ன சசிகலாவா? சிரித்துக் கொண்டேன். நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றாராம் அவர். ஆகையால் இந்தச் சின்ன வேலையை என்னைப் போல ஆட்களிடம் கொடுத்து ஃபாலோ செய்யச் சொல்லி முடிப்பது அவரின் வாடிக்கையாம். இப்படித்தான் தொடர்ந்தது பேச்சு. 

பெரிய பிரச்சினையுடன் ஆள் வந்திருக்கிறார் என்று நன்கு புலப்பட்டது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என என்னை நம்ப வைக்கவும், எனக்கு நேரமில்லாத காரணத்தால் தான் இதை உன்னிடம் தர உள்ளேன், அந்தளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மை எனவும் நான் அறிய வேண்டுமென விளக்கிக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமெனில் பத்து மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள். ஆள் அந்த வகையானவர். 

இன்னொரு கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. யூடியூப்பில் என்னிடம் விற்பனைக்கு வந்த ஒரு தென்னந்தோப்பைப் பற்றி விபரம் வெளியிட்டிருந்தேன். வெளி நாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் போன்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல இடம் எங்கே இருக்கிறது? என்பார்கள். சொல்வேன். விலை என்ன என்று கேட்பார்கள்? சொல்வேன். அந்த விலையா அந்த இடத்தில் என்பார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருப்பேன். சரி என வைத்து விடுவார்கள். இப்படித்தான் ஒரு லேடி போனில் அழைத்தது. எந்த ஊரில் இருந்து பேசுகின்றீர்கள் என்று கேட்டேன். கோவையிலிருந்துதான் என்றார். பொய் பேசுறவங்களிடம் நான் தொடர்ந்து பேசுவதில்லை என அழைப்பை நிறுத்தினேன். அது துபாய் அழைப்பு. அடுத்த நொடியில் இன்னொரு அழைப்பு. என் மனைவி பேசிக் கொண்டிருக்கிற போது எப்படி நீங்கள் அழைப்பை நிறுத்தலாம் என்றார் ஒருவர். நானென்ன அவர் வீட்டு வேலைக்காரனா? செம டென்சனாகி விட்டது. நான் கொடுத்த சவுண்ட் எஃபெக்டில் ஆள் குரலை இறக்க தொடர்பை துண்டித்தேன். இப்படியான தொல்லைகளும் இருக்கின்றன.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். போனில் அழைத்து எனக்கு இன்ன தேவை என்பார்கள், இடம் சொல்வார்கள், அவர்களின் முதலீட்டுத் தொகையைச் சொல்வார்கள். நான் அவருக்காகச் செய்யப் போகும் வேலைகளையும்,  எனது கட்டணத்தையும் விவரிப்பேன். அடுத்த இரண்டொரு நாட்களில் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்து விடும். அவரின் தேவை அவரின் முழு அளவில் எந்த வித சிக்கலும் இன்றி நிறைவேறும். இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதையெல்லாம் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் எழுதுவேன் படித்து மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி பெரிசுவின் பிரச்சினைக்கு வரலாம்.

வினோபாவா ஆச்சாரிய யக்ஞம் மூலமாக தமிழக மெங்கும் எடுக்கட்ட நிலங்கள் தற்போது ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன என்று எனக்குத் தெரியும். அதே போல நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசு தற்போது பட்டாவில் அரசு நிலம் என குறிப்பிட்டு வருகிறது என்பதும் எனக்குத் தெரியும். பெரும் தனக்காரர்களின் அனேக சொத்துக்கள் சத்தமில்லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அப்போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. உட்கார்ந்த இடத்தில் சரசரவென வேலை நடக்கிறது.

பெரிசு ஃபாக்டரி கட்டுவதற்காக வாங்கிய பதினைந்து ஏக்கர் நிலமும் அரசு நிலம் என மாறிப் போனது. விற்பனை நடந்து பத்து வருடம் ஆகி விட்டது. இனி எங்கே பணம் கிடைக்கும்? எல்லா ஆவணங்களையும் எடுத்தால் 1958ல் அந்த பதினைந்து ஏக்கர் நிலத்தின் அப்போதையை உரிமையாளர் யக்ஞத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டது தெரிந்து டென்சனாகி எங்கெங்கோ சென்று முட்டி மோதி ஓடிக் களைத்துப் போய் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் எனது பிளாக்கைப் படித்துப் பார்த்து விட்டு கல் வீசலாம் வந்தால் பழம், போனால் கல்லு என வந்து விட்டார்.

அவரின் அனைத்து ஆவணங்களையும் மேலோட்டமாகப் பார்த்தேன். 15 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பெற்று விட அற்புதமான வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தேன். அவரிடம் சொன்னேன், மீட்டு விடலாம் என.

ஆகவே அன்பு நண்பர்களே ஆன்லைனில் உங்களின் நிலம் உங்களிடம் தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, January 9, 2019

நிலம் (48) - டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாமா?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தினைப் பிறருக்குச் சொல்லும் போதெல்லாம் திருப்பூர் குமரன் மண்டை உடைந்து செத்துப் போன செய்தியும், கோவையில் செக்கிழுந்த வ.உ.சிதம்பரனாரும் நினைவில் வந்து விடுகின்றார்கள். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆங்கில ஆண்டு. அடிமையின் சின்னமாய் இருந்தாலும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாத வகையில் வரலாற்று சின்னமாகிப் போன அவலம் நினைவிலாடும். வரும் கால தலைமுறையினருக்கு இந்த எண்ணங்கள் வரச் சாத்தியங்கள் குறைவு.

ஆட்சிப் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள் வரும் போது, அவரவர் புத்திக்குத் தக்கவாறு வரலாற்றை மாற்றி சிறார்களுக்கு பாடப்புத்தகங்களை உருவாக்கும் அவலத்தை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் ஜாதிக்கு ஒரு வரலாறு எனவும், ஜாதிக்கு ஒரு பள்ளி எனவும் மாறினாலும் மாறலாம். பெண்கள் தனிப்பள்ளி இருப்பது போல இந்த ஜாதிப் பெண்களுக்குத் தனிப்பள்ளி, ஆண்களுக்கு தனிப்பள்ளி என்று கூட வரலாம். குறுகிய மனம் படைத்தோர் பதவிக்கு வரும் போது இத்தகைய அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பூனைக்கு எவரும் மணி கட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் மொழி, தன் இனம், தன் சிந்தனை பற்றிய கவலைகள் தான். 

உடம்பு என்று இருந்தால் நோய் இருக்கும். அதே போல சொத்துக்கள் என்று இருந்தால் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் என்னிடம் கொண்டு வந்த சொத்துப் பிரச்சினை நான் எதிர்பார்க்காத ஒன்று.

கோவையில் சேரன் மாநகர் என்றொரு பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி விளாங்குறிச்சி என்ற ரெவின்யூ கிராமத்தில் அடங்கியது. இந்தப் பகுதியில் தமிழ் நாடு வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்ட நிலங்கள் அதிகம். கிட்டத்தட்ட 1200 ஏக்கருக்கும் மேல் என்று நினைவு. அது பற்றிய விபரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த நிலங்கள் அரசின் வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்டவை. இதில் தகுந்த இடத்தில் தடையின்மைச் சான்று பெற்றால் ஒழிய வீடோ அல்லது விற்பனையோ செய்ய இயலாது. 

என்னிடம் வந்த பிரச்சினை விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள நான்கு டிடிசிபி அப்ரூவ்ட் சைட்கள். அவை டிடிசிபி அப்ரூவல் செய்யப்பட்டு மனை வரைபடம் வழங்கப்பட்டிருக்கின்றன. மனை வரைபடம் வழங்கப்பட்ட ஆண்டு 1992. ஹவுசிங் போர்ட் நிலம் எடுக்க உத்தரவிட்டு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 1983. ஆனால் 1992ம் வருடம் மனை அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மனையை வாங்கியவர் தற்போது விற்க முனையும் போது அது ஹவுசிங் போர்டில் வருகிறது என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தனர் தற்போதைய நில உரிமையாளர்கள்.

இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் நினைக்கலாம். நான் முன்பே சேரன் மாநகர் பகுதியில் பதினைந்து வருடங்களாக பட்டா வாங்க இயலாத வீட்டு மனைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். கிட்டத்தட்ட 70 வீட்டு மனைகள் டிடிசிபியால் அப்ரூவல் செய்யப்பட்டவை. தற்போது வரைக்கும் பட்டா பெற முடியவில்லை. காரணம் அந்த நிலங்கள் நில உச்ச வரம்புச் சட்டத்தில் அரசின் நிலமாக மாற்றப்பட்டவை. அந்த விஷயத்தை மறைத்து மனை அப்ரூவல் பெற்று விற்பனை செய்திருக்கின்றார்கள்.

டிடிசிபி அப்ரூவல் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். சொத்தின் உரிமையில் வில்லங்கம் ஏற்பட்டால் தகுந்த நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என. வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கும் போது இது முழுமையான ஆவணம் அல்ல என்று கொடுத்திருப்பார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

ஆகவே டிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் என்றுச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிட வேண்டாம். தகுந்த ஆட்களைக் கொண்டு அந்தச் சொத்தின் வரலாறு போன்றவற்றை ஆராய்ந்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவஸ்தைப் பட நேரிடலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Monday, November 19, 2018

நிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவகாசம்

20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப்  படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல. 

அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Saturday, November 17, 2018

நிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்கிறது?

அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அரசு முழு மூச்சாக வீட்டு மனைகள் அப்ரூவல் திட்டத்திற்கான அமைப்புகள் மூலம் வரன் முறை செய்ய இரண்டு முறை கட்டணக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியும் இன்றும் அன் அப்ரூவ்டு மனைகளில் பாதி கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருவது கொடுமையான விஷயம்.

இனி அரசு அதிரடி முடிவுகள் எடுக்கலாமென்று பேசிக் கொள்கின்றார்கள். வரன்முறை செய்யாத வீட்டு மனைகளை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் உரிய அலுவலகத்திற்கு விபரங்கள் அனுப்பி, அந்த மனைகள் பற்றிய வரைபடங்களைத் தயாரித்து மீண்டும் உள்ளாட்சிக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். முன்பு போல பல ஆவணங்கள் தேவையில்லை என்றும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இருப்பினும் மீண்டும் பாதி மனைகள் அப்ரூவல் செய்ய வரவில்லை என அரசு சொல்கிறது.

இனி அரசு ஏதாவது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்குமா? என்று தெரியவில்லை. மக்கள் வரன்முறைக்கட்டணம் அதிகம் என்றுச் சொல்கிறார்கள். இன்னும் கட்டணத்தைக் குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை.

மீண்டும் அரசு கால நிர்ணயம் செய்தால் உடனுக்குடன் அன் அப்ரூவ்டு மனைகளை வாங்கியவர்கள் விண்ணப்பம் செய்து வரன்முறை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.

Wednesday, November 14, 2018

ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி


(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம். 

தீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தார். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது.  உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். 

எனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன்? ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார். 

தொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.

அந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே? எனது தனி மனிதச் சிந்தனை எங்கே? உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது. 

ஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

கர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்தில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு  வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.

உள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.

இந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு? ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.

சரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே
காரிகை யார்கடம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படு மாகாதே
மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே
பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே
பண்டிநன் னாடுடை யான்படை
யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாயிடிலே

இந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.

மேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.

கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்
என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திரும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு பாடலோடு
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆயிடிலே


இதன் அர்த்தம் கீழே !

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ?

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மாறிய எண்ணம் மாற்றிய குரு

ஆற்றங்கரையில் துண்டினை விரித்துப் படுத்து இருந்தேன். அருகில் கருவை மரம். கருவைக்கு இலைகள் சிறிது. நிழல் தரா மரம். அதன் மலர்கள் மஞ்சள் நிறத்தவை. பொசு பொசுவென குமிழாக இருக்கும். அந்த மலர்களில் வாசம் வருமா என்று தெரியவில்லை. தரையில் சிதறிக் கிடந்தன. இடதுபுறம் மலை அருவியிலிருந்து கொட்டிய நீர் செடி கொடிகளுக்குள் புகுந்து செல்லும் சலசல சத்தம். சுற்றி இருந்த மரங்களின் ஊடே உலாவிக் கொண்டிருந்த பறப்பனவைகளின் கூட்டு ஒலிகள். ஆற்றங்கரையோரமாய் இருந்து ஒலித்த மலை மக்களின் குழந்தைகள் தண்ணீரில் விளையாடிய சத்தமும் அதனூடே ஒலித்த ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன.


(சிப்பிப்பாறை ஸேக்கியுடன்)

ஆழ்ந்த அமைதியில் மனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மனமும் புத்தியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். சிந்திக்கச் சொல்லும் புத்தி ஓய்வெடுக்க மனம் வெறும் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ புல்லாங்குழலும் சாரங்கியும் இணைந்த ஓசை வந்தது. அந்த இசை ஈனக்குரலில் இசைப்பது போல இருந்தது.

ஆற்றில் குளித்து முடித்த மலை மக்களின் குழந்தைகள் காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகே மரத்தின் கிளை மீது அமர்ந்து கொண்டு அரும்பு மீசை அரும்பிய இளைஞனொருவன் அரை அடி நீளமிருக்கும் அந்த இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த அமைதியான இடத்தில் ஈனக்குரலோசையில் மனதை தாலாட்டி ஒரு நிலைப் படுத்தும் அற்புதமான அந்த கானத்திற்குள் நான் புகுந்தது. தன்னை மறந்தது. இசை எங்கும் பரவியது.

பேரானந்தம்...!

சாமி ஆசிரமத்திலிருந்து சோறும் குழம்பும் கொண்டு வந்தார்.  ஈரம் மண்டிய சில்லிட்ட தரையில் அமர்ந்து கொண்டு குரு பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிடவும் ஒரு வரம் வேண்டும். அது என்னவோ தெரிவதில்லை. வீட்டில் அறுசுவையாக உணவிருந்தாலும் பத்து கவளம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுகிறது. குரு நாதர் உணவிடும் போது அதிகமாக ஆகி விடுகிறது.

அப்போது அங்கு ஒருவர் வந்தார். சாமியுடன் ஒருமையில் பேசி விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குள் அவர் மீது கொஞ்சம் எரிச்சல் கிளம்பியது. அவர் கிளம்பிச் சென்று விட்டார்.

”சாமி, அவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என்றேன்.

”எதுக்கு ஆண்டவனே வரணும்? அது ஒரு உயிர். அதன் உடம்பும் எண்ணமும் செயலும் பேச்சும் எப்படியோ இருக்கட்டும். ஆனால் அதற்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் உடம்புக்கு அப்படித்தான் பேச முடியும். அதுதான் அதற்குத் தெரியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எப்போதும் கோபமும் எரிச்சலும் வரவே வராது” என்றார்.

ஒரு தடவை ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாயிலில் வங்கு பிடித்த ஒரு நாய் வந்தது. அதன் உடம்பிலிருந்து வேப்பெண்ணெய் வாடை வீசியது. முகத்தைச் சுளித்தேன். சாமி தான் அதன் உடம்பில் இருக்கும் புண்கள் ஆறுவதற்காக அந்த நாயைப் பிடித்து அதன் உடம்பு முழுவதும் வேப்பெண்ணையைத் தடவி விட்டார் என்று சொன்னார் அங்கிருந்த ஒருவர். சாமி எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லையே என்று  அப்போது நினைத்துக்கொண்டேன்.

விடை இன்று கிடைத்து விட்டது.

எனக்குள் இது காறும் அடாது செய்யும் மனிதர்களின் மீதும், அவர்கள் செய்யும் செயல்களினாலும் கோபம் வரும். ஆத்திரம் வரும். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடியில் கோட்டையாக இருந்த அகங்காரம் நொறுங்கியது. மனசு லேசானது.

அன்றிலிருந்து மனிதர்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் பேசும் பேச்சிலிருந்து அவரவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது சர்க்கார் படப்பிரச்சினை நடந்து முடிந்து விட்டது அல்லவா? விஜயும், அரசையும் பகடையாக்கி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட புத்திசாலித்தனத்தை என்னால் உணர முடிந்தது. ஆர்.பி.ஐக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கொரு தீர்வினை எடுக்கும் மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் எனது குரு அவர்களே காரணம். சொல்லிப் புரிவதை விட அனுபவப் புரிதல் மேல். அவ்வப்போது புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மம் நிறைந்த விஷயங்களை எனக்கு புரிய வைத்து அவரின் அன்பு அருளில் நனைய வைக்கும் அந்த மகா சக்தி நிறைந்த அன்பு உள்ளத்துக்கு நானெப்போது செய் நன்றிக் கடனாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.

அவரிடம் நானொரு உதவி கேட்டிருக்கிறேன். செய்கிறேன் என்றிருக்கிறார். செய்வார். அவளைப் பார்க்கப் போகும் அந்த நாள், அந்தப் பேரழகி உடன் உரையாடப்போகும் அந்த நாளே எனது பொன்னாள்.

எனது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

Monday, October 8, 2018

நிலம் (45) - பீமா பட்டா நிலங்கள் ஜாக்கிரதை

நண்பர் இந்தியாவெங்கும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர். நண்பரின் வேண்டுகோளுக்காக சென்னையில் இருக்கும் சொத்து ஒன்றின் வில்லங்கம் பார்க்க நேரிட்டது. 

மூதாதையர் சொத்து என்று கிரையப்பத்திரங்கள் சொல்லியது. வில்லங்கச் சான்றிதழ்களும் அதையே உறுதிப்படுத்தின. எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. பட்டாவைக் காணவில்லை. அதற்குப்பதிலாக ஆர்டியோவின் பட்டா வழங்கலாம் என்ற பரிந்துரை மட்டும் இருந்தது. துலாவ ஆரம்பித்தேன். நான் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வரும்படி நண்பரிடம் சொன்னேன். அவர் தொடர்புடைய ஆளை அனுப்பி வைத்தார்.

என் முன்னால் நான் கேட்டிருந்த ஆவணங்களுடன் அமர்ந்திருந்தார் அவர். எனது பாட்டியின் சொத்து, பரம்பரையாக எனது அனுபோகத்தில் வந்தது என்றும், அதற்காகத்தான் ஆர்.டி.ஓவின் பரிந்துரைக் கடிதம் பெற்றேன் என்றும் விளக்கம் சொன்னார். சொத்து இருப்பது சென்னை அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில். ஆன்லைன் பட்டாவும் கிடைத்தது. எல்லாம் சரி. ஆனால் எங்கோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தது. வந்த ஆளின் நடவடிக்கை திமிர் தனமாக வேறு இருந்தது.

அரை மணி நேரம், அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சென்னையில் இருக்கும் நிலங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க என்னிடமிருக்கும் ஒரு சில ஆவணங்களை எடுத்தால், எதிரில் உட்கார்ந்து இருந்தவர் கொண்டு வந்து கொடுத்த நிலங்கள் பீமா பட்டா பெற்றவை எனத் தெரிந்தது. உள்ளுக்குள் கடுப்பு ஏற, ”பீமா(பி மெமோ) பட்டான்னு ஒன்னு இருக்கே அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

ஆளுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல இவரின் நிலத்தின் அருகில் ஒரு அரசியல் தொடர்புடைய ஒருவரின் டிரஸ்ட் பெயரில் ஏகப்பட்ட புறம்போக்கு இடங்கள் டிரஸ்ட்டின் பெயரில் பதிவாகி இருந்ததையும் கண்டேன். விட்டு வெளுத்து வாங்கினேன். ”நீங்க கோயமுத்தூரில் அமர்ந்து கொண்டு சென்னையில் இருக்கும் சொத்துக்களைப் பற்றிக் கண்டுபிடிப்பீர்கள் என கனவா கண்டேன், தெரியாமல் வந்து விட்டேன், ஆளை விட்டு விடுங்கள்” என்றுச் சொல்லி கிளம்பி விட்டார். எந்த வங்கி மேனேஜர் மாட்டிக் கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை. அந்தச் சொத்தினை வைத்து லோன் வாங்கி விடலாமல்லவா என பேச்சு வாக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

அரசு பட்டா நிலங்களை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் வரி விதித்து பட்டாக்களை வழங்கும். அந்தப் பட்டாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்கள் அரசுக்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்டவருக்குச் சொந்தமாகாது. உடனே மூன்று வருடங்களுக்கு மேல் அனுபோகப்பாத்தியம் இருந்தால் பட்டா பெறலாமே என கோர்ட்டு உத்தரவு இருக்கிறதே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது வேறு, இது வேறு.

சென்னை ஆள் என் நண்பரிடம் சென்று, ”எங்கேய்யா, பிடித்தாய் அவரை?” என்று விசாரித்திருக்கிறார். நண்பரிடம் ”அது புறம்போக்கு நிலம்” என்று சொன்னேன். ”அடப்பாவி ஏற்கனவே ஐந்து லட்சத்தை விழுங்கி விட்டானே, இனி எப்போ எப்படி அந்தக்காசைப் பெறப்போகின்றேனோ தெரியவில்லையே” என கதறிக் கொண்டிருந்தார். அரசு நிலத்துக்கு ஐந்து லட்சம் கொடுத்த பரோபகாரியானார் எனது நண்பர். ஒரு வார்த்தை இந்தச் சொத்தினை வாங்கப் போகின்றேன், பார்த்துச் சொல் என்று கேட்டிருந்தால் ஐந்து லட்சம் தப்பித்திருக்கும். எனக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்காக அவர் இழந்தது ஐந்து லட்சம். 

பில் அனுப்பி வைத்திருக்கிறேன். என்ன செய்கிறார்? எனப் பார்க்க வேண்டும்.

இதே போல கவுண்டம்பாளையத்தில் ஒரு பிரபல சினிமா நடிகர் ஒருவர் பண்ணை வீடு ஒன்றினை வாங்கி வைத்திருந்தார். பாதி பட்டா பூமி, மீதி பீமா பட்டா பூமி. மொத்தமாக முடித்து காசைக் கறந்து விட்டனர். அதை விற்க என்னை அணுகியவுடன் தான் இந்த விஷயம் தெரிந்தது. நடிகருக்கு உள் மன வேதனை ஏற்பட்டு அந்தப் பண்ணையை விற்கவும் இல்லாமல், பராமரிக்கவும் இல்லாமல் சும்மா போட்டு விட்டார். சும்மா கிடக்கிறது அது பராமரிப்பு இன்றி. சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதை  என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.