குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts
Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts

Friday, June 17, 2011

மெட்ரிக் பள்ளிக் கட்டணங்கள் - இணையத்தில் வெளியீடு

அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டிருக்கிறது என்பதையும், மக்களுக்கு நன்மை செய்ய முதலமைச்சர் விரும்புகிறார் என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பெற்றோரையும் நேரடியாகப் பாதிக்கும் இந்த தனியார் கல்வி கட்டணப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக்க வகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க ஏதுவன செய்ய வேண்டும். அம்மா நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பல டிவிக்களில் கல்விக் கட்டணத்தை முன் வைத்து, பல மாதிரியான பிரச்சினைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா என்றால் அதிரடி என்று பெயர். நிச்சயம் அம்மா அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று நம்பலாம்.

இதோ பள்ளிக் கல்விக் கட்டணங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்கள். பெற்றோர்கள் கல்விக் கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





Wednesday, June 15, 2011

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை



அந்தக் காலத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக சில பழக்க வழக்கங்களை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருவார்கள். உடனடி மருத்துவம் முதல் பல வகையான வழக்கங்கள் வாழையடி வாழையாக வரும். ஆனால் இன்றைய காலத்தில் அதெல்லாம் ஒழிந்து விட்டது. இன்றைக்கு வாழை இலையில் சாப்பாடு பரிமாறுதல் எப்படி என்பதையும், எப்படி உண்பது என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

வாழை இலையில் பரிமாறுதல் எப்படி என்பதினை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

இப்பதிவு எழுத உதவியது : தாவர போஷன சமையல் புத்தகம் - 1978 பதிக்கப்பட்டது.

Tuesday, June 14, 2011

மகனின் முதல் பாக்கெட் மணி

மகன் சீருடை அணியும் போது பாக்கெட்டில் காசு சத்தத்தைக் கேட்ட மனைவி அதை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தார். அழுது கதறி விட்டான். என் ஃப்ரண்ட் தான் எடுத்து வரச் சொன்னான் என்று அழுதான். அவ்வாறு கொண்டு வரவில்லை என்றால் டீச்சரிடம் சொல்லி விடுவதாய் மிரட்டினான் என்று சொல்ல எனக்கு கிர்ரென ஆகி விட்டது.  இந்த வயதில் வீட்டிலிருந்து காசு எடுத்து வா என்று யாரோ ஒரு பையன் மிரட்டுகின்றானே என்ற கோபம். மனைவியோ படு மோசமாக வெலவெலத்துப் போய் விட்டார். பையன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை எடுத்து வைத்திருக்கின்றானே என்று அப்செட் ஆகி வெடவெடத்து விட்டாள். இவ்வளவுக்கும் பையன் தான் வகுப்புத் தலைவன், பள்ளியிலேயே நல்ல மாணவன் என்று பெயரெடுத்தவன். எனக்கு எல்லையில்லா கோபம் வந்து விட்டது. காசை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் சாக்லெட், எண்ணெய்ப் பலகாரம், நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொடுப்பது இல்லை. பெரும்பாலும் மகனின் அப்பத்தா செய்து கொடுக்கும் முறுக்குகள், மடக்குப் பணியாரம் மற்றும் வீட்டிலேயே செய்யும் நொறுக்குத் தீனிகளையும், பிஸ்கட்டுகளையும் தான் பள்ளிக்குக் கொடுத்து அனுப்புவோம். பிள்ளைகள் இருவரும் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள். இது நாள் வரையிலும் இவ்வாறு தான் மனைவி குழந்தைகளை கவனித்து வந்தாள்.

என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பி, இருவரும் பள்ளிக்குச் சென்றோம். அங்கு பிரின்ஸிபல் மேடம் எங்களை அன்பாக வரவேற்று விசயத்தைக் கேட்டார்கள். நாங்கள் மேற்படிச் சம்பவத்தைச் சொன்னோம்.

மகனின் வகுப்புத் தோழன் நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்திருக்கிறான். மகனிடம் நாளைக்கு நீ வாங்கி கொடுக்கணும் இல்லையென்றால் மேம்மிடம் சொல்லி விடுவேன் என்றுச் சொல்லி இருக்கிறான். என் பையன் படு சென்ஸ்டிவ்வானவன். அவனை யாரும் குறையோ, குற்றமோ சொல்லக்கூடாது என்று நினைப்பவன். அனைவரும் அவனை நல்லவன் என்றுச் சொல்ல வேண்டுமென்று நினைப்பவன். அதன்படியே நடந்து கொள்ள முனைவான். யாரும் தவறு செய்தால் கோபம் வந்து விடும். எங்களிடம் சொன்னால் திட்டுவோம் என்று நினைத்துக் கொண்டு, முதன் முதலாய் பணத்தை எடுத்து வைத்திருக்கிறான். அசிஸ்டண்ட் பிரின்ஸ்பல் விசாரித்துக் கொண்டு வந்து எங்களிடம் சொன்னார்கள்.

அதன் பிறகு இரண்டாவது படிக்கும் குழந்தைகளின் வயதில் இருப்பவர்களுக்கு, பள்ளிக் கேண்டீன் மற்றும் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கிச் சாப்பிடவும், காசு கொடுத்து சில்லறை பெறவும் ஆசை இருக்குமாம்.இது இந்த வயதில் சகஜமான விஷயமாம்.  அதுவும் இரண்டு வருடத்திற்குதான் அவ்வாறு இருக்கும். அதன்பிறகு கேண்டீன் உணவு சரியில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் அவனுக்கு பாக்கெட் மணி கொடுத்து அனுப்புங்கள். அதுவும் தினமும் கொடுக்காமல் வாரத்திற்கொருமுறையோ அல்லது இரு முறையோ கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் காலையிலிருந்து பதட்டத்தில் இருந்த மனைவி சற்றே ஆசுவாசப்பட்டாள். எனக்கும் மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது. மகன் வரிசையில் முதல் ஆளாய் வந்து கொண்டிருந்தான். மனைவி டீச்சரிடம் செல்ல, மனைவியை கட்டிப் பிடித்த டீச்சர், ஹி ஈஸ் எ காட் கிஃப்ட் சைல்ட் ஃபார் யூ என்று சொல்லி இருக்கிறார்.

மகனை அழைத்த நான், காலையில் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தினைக் கொடுத்து, உன் நண்பனும் நீயும் கேண்டீனில் தேவையானவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி விட்டு, லேசான மனதோடு பள்ளியில் இருந்து திரும்பி வந்தோம்.

என் மகனின் முதல் பாக்கெட் மணி ரூபாய் 16.00


நான் ஒழுக்கத்தையும், நேர்மையையும், பிறரை புண்படுத்தா எண்ணமும் கொண்டவர்களாய் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளவன். அதன்படி குழந்தைகளை வளர்க்க முற்பட்டு வருகிறேன். மேற்படி சம்பவத்தை மகன் விவரித்துச் சொல்லத் தெரியாமல், அதன் காரணமாய் நானும் என் மனைவியும் பதட்டப்பட்டு விட்டோம். இச்சம்பவம் எனது வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். பள்ளியில் பதட்டப்பட்ட மிகச் சரியாக  எங்களை வழி நடத்தி, பிரச்சினை தீர வழி செய்தார்கள். இச்சமயத்தில் பள்ளியின் பிரின்ஸ்பலுக்கும், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசியமான முதலீடு - வீடு





வரும் காலங்களில் இன்றைக்கு இருப்பதை விட விலைவாசி அதிகரிக்குமே ஒழிய குறைவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளமும் ஏறுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதே போல மற்ற பொருட்களின் விலையும் ஏறி விடுவதால் வாங்கும் சம்பளம் சாப்பாடு மற்றும் இன்னபிற அத்திவசியமான் தேவைகளுக்கே சரியாக இருப்பதால் சொத்து, சேமிப்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே சென்று விடுகிறது. 

உலகில் கோடீஸ்வரர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் கோடீஸ்வரர்களாய் நடிப்பவர்களே அதிகம். இருபத்தைந்தாயிரம் கொடுத்தால் புத்தம் புதிய கார் வீட்டு வாசலுக்கே வந்து விடுகிறது. மாதத்தவணை, மெயிண்டனன்ஸ், எரிபொருள் செலவென்று காருக்குச் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே அரை கிரவுண்ட் நிலம் வாங்கி விடலாம்.சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் தேவைக்கல்லாமல் செலவழிப்பவர்கள் எதிர்காலத்தில் பணக்கஷ்டத்தினை அனுபவித்தே ஆக வேண்டும். இன்றைய மனிதர்கள் தேவைக்கு ஏற்ப செலவழிக்காமல், ஈகோவிற்காக செலவழிக்கின்றார்கள். வாரம் ஒரு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் 500 ரூபாய் ஆகிறது என்றால் மாதம் 2000 ரூபாய் செலவாகும். அதைச் சேமித்தால் மூன்று வருடங்களில் உங்களிடம் அரை கிரவுண்ட் நிலம் இருக்கும்.

கோயமுத்தூர் தமிழ் நாட்டில் மக்கள் வாழ மிகச் சிறந்த ஒரு இடம். நல்ல காற்று, தண்ணீர் மற்றும் சீதோஷண நிலை என்று இயற்கையாகவே சிறந்த இடமாய் இருக்கின்றது. இந்த ஊரில் உங்களுக்கு ஒரு வீட்டு மனை இருந்தால் நல்லது தானே.

டிடிசிபி அப்ரூவல் ஆகி இருக்கிறதா, நல்ல சாலை வசதி இருக்கிறதா, தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதெல்லாம் வெகு முக்கியமான விஷயங்கள். மேற்படி விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, மிகச் சிறந்த, நல்ல மதிப்புடைய வீட்டு மனைகள் பலவற்றினை நாங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறோம்.

செண்ட் ஐம்பதாயிரத்திலிருந்து பத்து லட்சம் வரை இருக்கும் வீட்டு மனைகள் வேண்டுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். மாதத் தவனையில் மனை வாங்க இயலுமா என்றெல்லாம் யோசிப்பவர்கள் எங்களை மெயில் மூலம் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். சம்பாதிக்கும் போதே ஏதேனும் கொஞ்சமாய் சேமித்து ஒரு சொத்தினை வாங்கி, அதைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள விரும்புவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்களின் மாதாந்திர சேமிப்பு செலவெல்லாம் போக எவ்வளவு வரும் என்பதை திட்டமிட்டுக் கொண்டு, அந்தச் சேமிப்பினை வைத்து சொத்துகள் வாங்கலாமா என்பதை எங்களிடம் விசாரியுங்கள். நாங்கள் உங்களுக்கு ஏற்ற முதலீட்டினைச் சொல்கிறோம். அதன்படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.  

நான் வெளியூரில் இருக்கிறேன் சொத்து வாங்கிப் போட்டு விட்டு, பின்னர் அதை யார் பாதுகாப்பது என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், உட்கார்ந்த இடத்திலேயே சொத்தினை நிர்வகிக்கலாம்.அதுபற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும். வேண்டும் போது நீங்கள் உங்கள் சொத்தினை, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டரில் இருந்து சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென்று ஃபார்ச்சூன் பிரிக்ஸ் கொஞ்சமே கொஞ்சமான சர்வீஸ் சார்ஜ் பெற்றுக் கொள்ளும்.

மேலே இருக்கும் மேப்பினை ஒரு முறை கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எங்கு முதலீடு செய்யலாம் என்பதையும் முடிவு செய்து கொண்டு, எங்களை அணுகவும். முடிந்தவரை சம்பாதிக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து, ஏதாவது சொத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். உங்கள் முயற்சி வெற்றியடைய உங்களுடன் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் துணையாக வரும், துணையாக இருக்கும் எந்தக் காலத்திலும்.

எங்களது அரசு பதிவு பெற்ற ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் நிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- தங்கவேல் மாணிக்கம் - எக்சிகியூட்டிவ் டைரக்டர்
தொடர்பு எண் : + 91 96005 77755 
இமெயில் : thangavelmanickam@gmail.com

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.


Sunday, June 12, 2011

கணிப்பொறியாளர்களுக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 3

இன்றைக்கு மூலம் மற்றும் வாய்ப்புண் இவற்றிற்கு என்ன மருந்தினையும் உணவினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலில் வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம். உதடுகளைச் சுற்றி வருவது ஒரு வகை புண். அது வைரஸ்ஸினால் வரும். நோய்தொற்று உடையவர்களிடமிருந்தும், வைரஸ்ஸினாலும் வரும் அத்தொற்றினை நீக்க மருத்துவரைத் தொடர்பு கொள்க. இது உணவினால் உண்டாகும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் பற்றியது.

வாயைத் திறக்க முடியாது, நாக்குகள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். மலம் கழிக்கும் போது எரியும், கடும் நாற்றமெடுக்கும்.மலம் சீதளமாய் வெளியாகும். அடிக்கடி வாயு பிரிந்து அது கொடுமையான நாற்றம் அடிக்கும். இது போன்று இருந்தால் அது உணவினால் உண்டானது என்பதைக் கவனத்தில் கொள்க. கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழம், சில பப்பாளிப் பழங்கள், பாமாயில் எண்ணெய், சில வகை மசாலாக்கள், கெமிக்கல்ஸ் பயன்படுத்திய உணவுகளினால் (பெரும்பாலான ஹோட்டல் உணவுகள்) வரக்கூடிய இந்தப் புண் பெரும் அவஸ்தைகளையும், இப்புண்ணினைக் கவனிக்கா விட்டால் பெரும் பின் விளைவுகளையும் உருவாக்கி விடும்.

இந்தப் புண் வந்தால் அதற்கு ஏகப்பட்ட ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் மருந்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஒட்டுப் போட்ட தார்ச்சாலை போல ஆகி விடும் உடம்பு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது என்று அலட்சியம் செய்தீர்கள் என்றால் உங்களால் அருமையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கூட உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள் இந்தக் காலத்தில். நோயில்லாமல் வாழக் கற்றுக் கொண்டு, பிறருக்கு தொல்லைகள் ஏதும் தரக்கூடாது என்பதை நோக்கமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்படி புண் வந்தால் மாசாக்காய் என்றுச் சொல்லக் கூடிய மாசிக்காயை வாங்கி வந்து உடைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விடுங்கள். ஒரு முழு மாசிக்காய் உங்களின் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் இவற்றை சரி செய்து விடும். இந்தக் காய் கடுமையான துவர்ப்புச் சுவை உடையது. மென்று தின்ன இயலாதவர்கள் காயை அம்மியில் வைத்து தேய்த்து பசை போல எடுத்து அப்படியே விழுங்கி விடுங்கள். தொடர்ந்து காரம், புளி இல்லாத உணவுகளாய் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாய் கோக், பெப்சி, ஹோட்டல் உணவுகள் வேண்டவே வேண்டாம். இந்தக் காய் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்துக் கடை அல்லது மளிகைக் கடைகளில் கிடைக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் போது, லீவுக்கு வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் போது, அம்மா ஒரு மாசாக்காயை வாங்கி வந்து வாயில் வைத்து மிட்டாய் போல சப்பிக் கொண்டே செல் என்பார்கள். கையில் மேலும் இரண்டு உருண்டைகள் வேறினைத் தருவார்கள்.  இரண்டு மாதத்திற்கு சாப்பிட்டுக் கொள்வேன். வாய்ப்புண்ணோ அல்லது வயிற்றுப் புண்ணோ என்னை அண்டவே அண்டாது.  ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டி வந்தால் தயிர் சாதத்தோடு முடித்துக் கொள்வேன். முழுச்சாப்பாடு சாப்பிட்டேன் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் மாசாக்காயில் சிறு துண்டினை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். 

தமிழகம் உணவுப் பழக்கத்தை மாற்றியதால், அரையடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல் எதிர்காலத்தில் வந்து விடும். எதைச் சாப்பிடணும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற அனுப அறிவு இன்றி கண்டதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்ட தமிழக மக்கள் பெரும்பாலானோர் நோயின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களுக்கு இருக்கும் ஆரம்ப கட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினால் விஷ உணவுகள் சாப்பிடும் போது, உடனடி பக்க விளைவுகள் ஏதும் வராது. ஆனால் உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு வரும்.

யாரெல்லாம் கூடிய சீக்கிரம் நோய் வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடலாம். அத்துடன் பெப்சி, கோக், சினாக்ஸ் வகைகளை வெளுத்து வாங்கலாம்.  பின்னர் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாய் அலையலாம். ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது என்றால் கூடிய வரைக்கும் எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

வாய்ப்புண்ணுக்கு ஏற்ற கீரை : மணத்தக்காளிக் கீரை என்றுச் சொல்லும் சுக்கிட்டிக் கீரை. இதனை பொறியல் செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் தீரும்.

விரைவில் மூலம் பற்றியும் அதற்குச் சாப்பிட வேண்டிய உணவினையும் பார்க்கலாம்.

Thursday, June 9, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 2


உடம்பில் சேரும் கொழுப்பு ரத்தத்தில் சென்று சேர்கிறது. தண்ணீர் பைப்பிற்குள் உப்பு நீர் தொடர்ந்து சென்றால் பைப்பைச் சுற்றியும் உப்பு படிந்து பைப்பின் சுற்றளவைச் சுருக்கி விடும். அது போல கொழுப்பு நிறைந்த ரத்தம், நரம்புகளில் உட்புறச்சுவரில் படிந்து ரத்தக்குழாயின் விட்டத்தைப் படிப்படியாக குறைத்து விடும்.ரத்தம் செல்லும் பாதையின் அளவு குறுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், ரத்தக்குழாய் விரிந்து கொடுக்கும் தன்மையானது. இந்தக் கொழுப்பு படிவதால் ரத்தக்குழாய் தடித்து விரைப்பாய் மாறி விடும். உங்கள் கையில் இருக்கும் ஏதாவதொரு நரம்பினை அழுத்தினால் துடிப்பினை நாம் அறியலாம். அந்தத் துடிப்பினை உணர விடமால் ரத்தக் குழாயினை கொழுப்பு அடைத்து விரைப்பாய் மாற்றி விடும். வேறு வழி இன்றி உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த இதயம் படுவேகமாக இயங்கும். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயிலும் கொழுப்பு அடைத்துக் கொண்டால் ரத்தம் வெளியேற முடியாமல் இதயம் மூச்சு வாங்கும் போது நெஞ்சு வலி உண்டாகும். அது தான் ஹார்ட் அட்டாக்.

டாக்டர்கள் பாசையில் சொல்லாமல், அனைவ்ருக்கும் புரியும் படி எழுதி இருக்கிறேன்.இனி கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள் என் இனிய நண்பர்களே !

நாம் கொழுப்பினை மட்டும் தான் சாப்பிடுகிறோம். மட்டன், சிக்கன் மட்டுமல்ல வெள்ளை வெளேர் அரிசியிலும் கொழுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமையலிலும் நாம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் எண்ணெய் போதுமானது என்றாலும் அதற்கு மேல்தான் நாம் சாப்பிடுகிறோம். பால் சாப்பிடுகின்றோம் அல்லவா அதில் இருக்கும் கொழுப்பு மிக அதிகமானது. பால் ஜெரிக்க கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிடிக்கும்.பால் வயிற்றுக்குள் சென்று, திரிந்து பின் தயிராகி அதன் பிறகுதான் சீரணமாகிறது. டீயுடன் வடை சாப்பிடும் போது நம் உடம்பிற்கு தேவைக்கும் மேலான எண்ணெயினை நாம் சாப்பிடுகிறோம். 

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கு, அரிசி வகைகளை சேர்த்துச் சாப்பிடும் போது, மாவு வகைகளான இவைகளிலிருந்து கிடைக்கும் கொழுப்பும் சேர்ந்து விடுகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் “கொழுப்பு” மட்டுமே என்று உங்களுக்குப் புரிய வரும்.

இவ்வாறு சாப்பிடுவதால் தான் உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு மாரடைப்புகள் உண்டாகின்றன என்றுச் சொல்கின்றார்கள்.

கோக் குடிக்கின்றீர்கள் அல்லவா அதில் இருக்கும் சர்க்கரை இருக்கிறதே கொடுமை.இந்தச் சர்க்கரை முற்றிலும் கெமிக்கல்கலால் தயாரிக்கப்படுகிறது.  ஃபாண்டசிக்காக அனைவரும் குளிர்பானங்களை வெளுத்து வாங்குகிறோம். கோக் மற்றும் இதர குளிர் பானங்கள் அனைத்துமே உடலுக்கு மிக அதிக கொடுமை செய்யும் வைரஸ் கிருமிகள். ஆனால் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட குளிர்பானங்களை குடித்துத் தள்ளுகின்றார்கள். அதுமட்டுமின்றி பீட்சா, பர்கர் போன்ற உப்பும், கொழுப்பும் நிறைந்த உணவினை விழுங்கி தன் வாழ் நாளில் ஒரு சில நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ளும் போது, அந்த உணவிற்கு எதிராய் நம் உடம்பு பெரும் போராட்டத்தினை நிகழ்த்தி சரிசம நிலைக்கு வருமாம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உடம்பு போராடும். நம் உடம்பினை நாம் மிகப் பெரிய எதிரியாகக் கருதி தேவையற்ற உணவுகளை நாக்கிற்கு அடிமையாய் மாறி விழுங்கிக் கொண்டே இருக்கிறோம். மனிதன் தன் உடம்பினை மாபெரும் எதிரியாய் நினைத்து, உடம்பினைக் கொல்ல போராடிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? என்ன ஒரு கொடுமையான செயல் இது????

சரி, இனி ரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன உணவினைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

கேரளா பக்கம் சமையலில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். இந்த விஷயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பினை தவிர வேறொன்றும் இருக்காது என்பதையும் தெரிந்து வைத்திருப்பின்றீர்கள். கொழுப்பு நிறைந்த எண்ணெய் கிடைக்கும் இடத்தில், அந்தக் கொழுப்பினைக் குறைக்க இயற்கையே “கொடம்புளி” என்ற புளியை கேரளாக்காரர்களுக்கு வழங்கி இருக்கிறது. இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று. கேரள மக்கள் சமையலில் சேர்க்கும் கொடம்புளி இருக்கிறதே அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினை உறிஞ்சி எடுத்து கொழுப்பினைச் சேர விடாது. 

கொடம்புளியினை ரசமாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிட்டு வர, உடம்பில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ரத்தத்திலிருந்து கொழுப்பு எரிக்கப்பட்டு நீங்கி விடும். இந்தக் கொடம்புளியின் ஆங்கிலப் பெயர் பிரிண்டல் பெரி. இந்தக் கொடம்புளியினைத் தான் வெளி நாட்டுக்காரர்கள் வாங்கி, உடல் குறையும் மாத்திரைகளில் பயன்படுத்துகிறார்கள். கூக்கிளில் தேடிப்பாருங்கள். கொடம்புளியினைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இரண்டே மாதங்களில் உடல் பருமன் குறையும் என்று விளம்பரப்படுத்துகின்றார்களே அந்த மாத்திரைகளில் இந்தக் கொடம்புளிதான் எக்ஸ்ட்ராக்ட் செய்து சேர்க்கப்பட்டிருக்கும்.

உடல் பருமனாய் இருப்பவர்கள். அதிக கொழுப்பு உணவினைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உணவினில் கொடம்புளியினை சேர்த்தால், ரத்தத்தில் கொழுப்புச் சேராது. இதய நோய் வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உடல் உழைப்பு அதிகமில்லாதவர்கள் அனைவரும் இந்தக் கொடம்புளியினைச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள். வாரம் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கொடம்புளி கோவை உக்கடம் புது மீன் மார்க்கெட்டில் இருக்கும் கருவாட்டுக் கடை ஒன்றில் கிடைக்கின்றது. இதன் விலை கிலோ 200 ரூபாய் என்றுச் சொன்னார் அந்தக் கடைக்காரர். அல்லது கொச்சின் பக்கமாய் ஏதும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுங்கள். வாங்கி அனுப்பி வைப்பார்கள். கொடம்புளி ஆரஞ்சு சுளை போல இருக்கும். இந்த சுளையில் இரண்டு கீற்றுக்களை எடுத்து சுடு நீரில் போட்டு வைத்தால் கரையும். ஆனாலும் முழுமையாக கரைந்து விடாது. புளிப்பும், துவர்ப்பும் இருக்கும். ஆரம்பத்தில் தக்காளியை அதிகம் சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறது அதன் சுவை நாக்கிற்கு பழகி விடும். உடம்பிற்கு துவர்ப்பு அதிகம் தேவை என்பதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வழியிலும் வாங்க முடியாதவர்கள், இந்தக் கொடம்புளி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும். கடையிலிருந்து வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கிறேன். தொடர்பு விபரங்கள் தளத்திலேயே இருக்கின்றன.

விரைவில் வாய்ப்புண் ஏற்பட்டால் மாத்திரைகள் ஏதுமின்று சரிசெய்வது எப்படி என்பதையும், மூலம் வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்பதையும் பார்க்கலாம்.


Wednesday, June 8, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 1

கணிணியில் வேலை செய்வோருக்கு உடல் சூடு அதிகம் ஏற்பட்டு விடும். ஏசியில் இருந்தாலும் கூட. குளிர்பானங்கள், நிறைய தண்ணீர் குடித்தாலும் சிலருக்கு அதிக உடல் சூடு உண்டாகி விடும். 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று நினைப்போருக்குத்தான் இந்தப் பதிவு.

வாரம் இரண்டு முறை நற்சீரகத்தைலத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடற் சூடு குறைய ஆரம்பிக்கும். எப்படி இந்த சீரக தைலத்தை தயாரிக்க வேண்டுமென்பதை சொல்கிறேன்.

200 மிலி நல்லெண்ணெயை எடுத்து அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் போது 50 கிராம் சீரகத்தை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து ஆர வைத்து, அதன் பிறகு வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தைலம் தயார்.

வாரம் ஒரு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூல வியாதி வருவதை தடுக்கும் அற்புத உணவு.

உடல் உழைப்பு அதிகமில்லாத காரணத்தால் உடலில் கொழுப்பும் அதிகம் தேங்கி விடும். அவ்வாறு கொழுப்பு அதிகம் உடலில் தேங்க ஆரம்பித்தால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து விடும். உடற்சூடு அதிகமானால் வயிறு கெட்டு, கழுத்து வலி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையெல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உடலில் சேரும் கொழுப்பு எப்படி இருதய நோயினை உண்டாக்கும் என்பதையும், கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையும் நாளைய பதிவில் பார்க்கலாம்.

Monday, June 6, 2011

தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பேற்றால்

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எல்கேஜியிலிருந்து மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, லெக்சரர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். மிகப் பெரும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், பேராசிரியர்கள், பெரும் கோடீஸ்வரர்களை அந்தக் கால கட்டத்தில் சந்தித்து இருக்கிறேன். எந்தளவுக்கு நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தேனோ அதை விட பலமடங்கு பொறாமையும், பொய்யும், சூதும், வாதும் நிறைந்த மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன்.அவர்களால் படாதபாடும் பட்டிருக்கிறேன்.

நான் ஜாவா மற்றும் சி பிளஸ், விபி புரோகிராம்களில் நல்ல தேர்ச்சி அடைந்திருந்த போது, கரூர் கல்லூரியில் இருக்கும் கணிப்பொறி துறையில் சிஸ்டம் அட்மின்னாக நிர்வாகத்தின் சார்பில் சேவை செய்து வந்தேன்.இந்தக் கல்லூரியின் ஹெச் ஓடி அந்தக்கால ஃபோர்ட்டான், பாஸ்கல் லாங்குவேஜ்களைப் படித்து விட்டு, விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்த பிறது அதைப் பற்றிய அப்டேட்டட் செய்யாமல் இருந்தார். கல்லூரியின் கணிப்பொறி துறைப் படிப்பில் ஜாவா புரோகிராம் புதிதாக வந்த போது, ஜாவா இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருந்தது.

இன்ஸ்டால் செய்து அதைப் பற்றிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஹெச் ஓடியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்குத் தெரியாது என்பதற்காக பிற லெக்சரரைப் படிக்க அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி பிற லெக்சர்களால் ஒன்றும் செயல்பட முடியவில்லை. 

அதற்கு என்னை பலிகடாவாக்க முயற்சித்து, நான் பெண்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பினார். கணிணி அறையின் ஆரம்பக் கதவில் ஒரு கண்ணாடி சதுரம் இருக்கும். அதில் காகிதத்தை அவரே ஒட்டி விட்டு அதை ஒரு சாட்சியாக்கினார்.

நிர்வாகத்தின் தலைவரும் நானும் பல விஷயங்களை தினம் தோறும் பகிர்ந்து கொள்வோம். அவரிடம் எதேச்சையாக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அந்த ஹெச் ஓடி என்னைப் பற்றிய கதையை அவிழ்க்க, இன்னொரு நொடி இங்கிருந்ந்தால் நடப்பதே வேறு என்றுச் சொல்லி சத்தமிட, அரண்டு ஓடி இருக்கிறார் அந்தப் பெண்மணி.

இதைப் போன்ற எண்ணற்ற கதைகளை அவர் பரப்பியதற்கு காரணம், அவரால் கணிப்பொறித் துறையின் மூலமாய் காசு பார்க்க முடியவில்லை என்பதுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கிலிருந்து, நெட்வொர்க் இன்ஸ்டாலேஷன் வரை அடியேனின் கண்ட்ரோலில் இருந்தது. அந்தக் காலத்தில் பிராண்டட் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒன்றினை விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் இருந்தது. ஆனால் நான் அதே கான்ஃபிக்கில் நான் அசெம்பிள் செய்தது ரூபாய் 40,000 ஆயிரமாக இருந்தது.  பிரைவேட்டாக கொடுத்தால் மேல் வரும்படி கிடைத்திருக்கும். என்னால் அது வரவில்லை என்பதால் என் மீது வன்மம் கொண்டலைந்தார் அந்தப் பெண்மணி. 

தகுதியும், திறமையும் அற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் ஆணுக்குப் பெண்ணும் சளைத்தவரல்ல என்பதையும் அறிந்து கொண்டேன்.

எங்கு பணிபுரிந்தாலும் இவர்களைப் போன்றவர்களை நாம் சந்திக்கலாம். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடியாய் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஆணாக இருந்தால் “ தனியாக பட்டயக் கிளப்பி” விட வேண்டும். பெண்ணாக இருந்தால் கேரக்டர் அசாசினேஷன் செய்து விட வேண்டும். ஏனென்றால் தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்போரை என்ன செய்தாலும் அது குற்றமே ஆகாது.

இப்படிச் சொல்லும் நான் அந்த ஹெச் ஓடியைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன். என் மீது படுபயங்கர கோபத்தில் திரிந்தார். அது அவரின் பிரச்சினை அல்லவா? அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்ய முடியாதவாறு பார்த்துக் கொண்டேன். 


Saturday, June 4, 2011

ஐடியில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய குறிப்பு

கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.

சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.

இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும். 

உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும். 

அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.

Thursday, April 21, 2011

இக்காலக் குழந்தைகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன?

எனது நண்பருடன் பொள்ளாச்சி செல்ல வேண்டிய வேலை இருந்ததால் காரில் கிளம்பி விட்டோம். வேலை முடிந்து வந்து கொண்டிருந்த போது, நண்பரின் பையனிடமிருந்து போன் வந்தது. சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார். பதினொன்றரை மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்றுச் சொன்னார்.  பையன் டான்ஸ் கிளாசுக்குப் போக வேண்டுமாம். அப்பா கொண்டு வந்து விட வேண்டும் என்பது டீல்.

அப்போது தான் நாங்கள் காரமடை தாண்டி வந்து கொண்டிருந்தோம். வெள்ளலூர் தாண்டி வருகையில் மேலும் ஒரு வேலை காரணமாய் அரை மணி நேரம் ஆகி விடும் என்றுச் சொல்ல, பையனிடம் பேசினார். தொடர்ந்து எங்கெங்கோ போன் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் முடித்து விட்டு என் முகத்தினைப் பார்த்தார்.

”சொல்லுங்க” என்றேன்.

”என் பையன் கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்தமாட்டான் சார்” என்றார்.

“ அதான் தெரிஞ்ச கதையாச்சே சார். என்ன நடந்தது? ” என்று கேட்க கதை சொன்னார்.

பதினொன்றரைக்கே வருவேன் என்றுச் சொல்லி விட்டு ஏன் இப்போது மேலும் லேட்டாக வருகிறாய் என்றும், என் டயத்தை வேஸ்ட் செய்கிறாய் என்றும் சத்தம் போட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல், இவர் வருவதற்கு லேட்டாகுமென்பதால், பையனை டான்ஸ் கிளாஸ்ஸிற்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடாக தன் பக்கத்து வீட்டு நண்பர்களை அழைத்திருக்கிறார். அவரின் நண்பர்கள் எல்லோரும் இப்போது தான் பையன் அழைத்தார் என்றும், நாங்கள் தூரத்தில் இருப்பதால் உடனடியாக வர இயலாது என்றும் சொல்லி இருக்கின்றனர். நண்பரின் பையன் அப்பாவிடம் சொல்வதற்கு முன்பே, அவரின் நண்பர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார். இது தெரியாமல் இவர் அவரின் நண்பர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் முடியாது என்றுச் சொல்லியவுடன் அப்பாவுடன் சண்டை போடுகிறான். அதன் பிறகு அவனின் அம்மாவை கொண்டு வந்து விட ஏற்பாடு செய்திருக்கிறான்.

இந்தக் காலக் குழந்தைகள் தன் நலம் சார்ந்தே வாழ்கின்றன என்று சோகத்துடன் சொன்னார். பிறரின் பிரச்சினை என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மறுக்கின்றனர். விளைவு - வயதானவர்கள் விடுதிகள் புற்றீசலாய்க் கிளம்புகின்றன.

ஏன் இந்தச் சூழ் நிலை ஏற்பட்டது என்பதை பெற்றோர்கள் கவனித்து சரி செய்யா விட்டால், வயதான காலத்தில் எங்கோ கிடந்து உழல வேண்டியதுதான்.


Monday, March 28, 2011

தேர்வு சில நினைவுகள்


(இது மனோரா என்றழைக்கப்படும் கடற்கரையோர அந்தக்கால கலங்கரை விளக்கம். வெகு அருமையான சுற்றுலாத் தளம்)

ஆவணம் கிராமத்திலிருந்து பேராவூரணிக்குத் தான் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதச் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். விடிகாலையில் எழுந்து குளித்து, கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு நானும் போஸும்(எங்களின் வயல் வேலை செய்து வந்தவர்) சைக்கிளில் கிளம்புவோம். குறுக்கு வழியாய் காவிரி ஆற்றின் கிளையாற்றினை ஒட்டிய சாலையில் ஆரஸ்பதி மரங்கள் வரிசையாய் நிற்கும் நிழலில் மெதுவாய் சைக்கிளை மிதிப்பார் போஸ்.

கோடை காலம் ஆதலால் ஆற்றில் தண்ணீர் வராது. கதிர் அறுப்பு முடிந்து போய் வயல் வெளிகளில் ஆங்காங்கே வைக்கோல் போருகள் குட்டி குட்டியாய் காட்சியளிக்கும். பொறுக்கு மண் அடிக்கும் வண்டிகள் வயல்களுக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அப்படியே மெதுவாய் ஆற்றோரமாய் வந்து கொண்டிருக்கும் போது ஆறு ஒரு இடத்தில் முடிந்து போய் இருக்கும். அது என்னவென்றால், ஆற்றுத் தண்ணீர் முழுமையும் ஒரு இடத்தில் குழாய் போன்றிருக்கும் பகுதிக்குள் கொட்டும், அத் தண்ணீர் பத்து மீட்டர் பூமிக்குள்ளே பதியப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்று வெகு வேகமாய் மறு முனையில் கொப்பளித்துக் கிளம்பி வேகமாய்ச் செல்லும். தண்ணீரின் வேகம் குறையாமல் இருக்க அப்படி ஒரு சிஸ்டம் வைத்திருந்தார்கள். ஊரில் அதைக் கேணிப்பாலம் என்பார்கள்.

அதைத் தாண்டிச் செல்லுகையில் ஓரிடத்தில் போர் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் அப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியும். அப்படியே சிறிது தூரம் கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும் ஊர் வழியாய் பேராவூரணியில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று சேர்வோம்.

நான் படித்த காலத்தில் அறிவியலில் 40 மதிப்பெண்ணுக்கு ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும் கேள்விகள் இருக்கும். நாற்பது வார்த்தைகள் எழுதி விட்டால் போதும் எளிதில் தேர்வாகி விடலாம். இத்தேர்வின் போது போலீஸ்காரர்கள் பள்ளியில் கேட்டருகில் அதிகம் தென்படுவார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து ”எழுதிக்கோங்கோ எழுதிக்கோங்கோ”  என்று பெரும் சத்தம் கேட்கும். ஒருவன் சைக்கிளை வேகமாக ஓட்டுவான். ஒருவான் பின்னால் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். இவர்களைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் துரத்துவார்கள். ஆனால் விடாமல் 40 விடைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வார்கள். சுமாராக படிக்கும் சில மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் 40 கேள்விகளையும் எழுதி பேனா மூடிக்குள் வைத்து வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அதை எடுத்து பதில் எழுதி சத்தமாய்ச் சொல்வார்கள். அனைவரும் எழுதிக் கொள்வோம். நான் பதில்களைச் சரிபார்ப்பேன்.

வருடம் தோரும், இது ஒரு பெரும் சுவாரசியமான சம்பவமாய் நடக்கும். எத்தனையோ மாணவர்களில் அறிவியலில் தேர்ச்சி அடைய இந்த வழி காரணமாய் இருந்திருக்கிறது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சிரிப்பொன்று பூக்கும்.

தேர்வெல்லாம் முடிந்த கடைசி நாட்களில் பேராவூரணி சக்கரம் தியேட்டரில் மேட்டினி சினிமாவொன்றினைப் பார்த்து விட்டு திரும்ப வருவோம். போரிலிருந்து ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கண்கள் கோவைப்பழமாய் சிவக்கச் சிவக்க ஒரு ஆட்டம் போட்டு விட்டு, வீடு வந்து சேர்வோம். 

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் சுவாரசியமான சம்பவங்கள் சில சமயங்களில் சோர்வுற்ற மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.




Sunday, August 8, 2010

கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Monday, August 2, 2010

மனிதர்களுள் மாணிக்கங்கள் - குமார்





கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.

கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.

ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.

ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்