குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, January 2, 2018

ரஜினிக்கு காலம் தரப்போவது முட்களா? பூக்களா?

குழந்தைகள் இரண்டும் லீவில் இருக்கின்றார்கள். 5 மணிக்கு எழுந்து எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு நேரம் மிகச் சரியாக இருக்கும். பரபரப்பான அந்த நாட்களில் இருந்து இருவருக்கும் கொஞ்சம் விடுதலை. 

இந்த வருடம் கோவையில் குளிர் மிக அதிகம்.  வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தால்  உடல் சில்லிட்டுப் போகிறது. சுற்றிலும் தென்னை மரங்களும், வேப்பமரமும் இருந்தாலும் கதகதப்பு இல்லை. ரூடோஸ் எப்படி குளிரைத் தாங்குகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது ரூடோஸை ஆஸ்ரமத்தில் விட்டுச் சென்றோம். வீட்டுக்கு வந்தவுடன் ரூடோஸ் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்காமல் ஏதோ இழந்தது போல இருந்தது. டென்சனில் உடனே ஆஸ்ரமத்திற்குச் சென்று அழைத்து வந்து விட்டோம். ”ரித்திக்கிட்டே தான்பா பாசமா இருக்கு. அவன் வந்தா அவனுடன் ஈச ஆரம்பித்து விடுகிறாள் ரூடோஸ்” என்று நிவேதிதா குறைபட்டுக் கொள்வாள். ரூடோஸ் பெயரைப் போலவே முரட்டுத்தனமானவள். வாயைத் திறந்தால் பார்ப்பவருக்கு குலை நடுங்கி விடும். குரைக்கும் போது முடிகள் சிலிர்த்து சிங்கம் போல சீறுவாள். என் மீது வந்து மோதினால் நான் அம்பேல். மல்லாக்க விழுந்து விடுவேன். ஆகையால் அருகில் விடுவது இல்லை. காலையில் தலையில் கொஞ்சம் தடவிக் கொடுப்பதோடு சரி. தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடு என்று தலையை அசைத்துக் கொண்டிருப்பாள் ரூடோஸ். 

கடந்த வெள்ளியன்று அம்பாள் சினிபார்க்குக்கு “வேலைக்காரன்” படம் பார்க்க மனைவியுடன் இருவரும் சென்றிருந்தனர். எனக்கு சிவகார்த்திகேயனின் லூசுத்தனமான பேச்சு பிடிக்காது. ஆகவே வர இயலாது என்றுச் சொல்லி மறுத்து விட்டேன். வீட்டுக்குள் நுழையும் போதே, “ஏங்க, நல்ல டிவிடிக்கடை இருக்கான்னு தேடனும்ங்க” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார் மனையாள். பசங்க,”அப்பா, லைட்டைப் போடுங்கடா, வீட்டுக்கு போறோம்னு, தியேட்டரில் கத்துறாங்கப்பா, சரியான மொக்கைப்படம்பா, நல்லவேளைக்கு நீங்க வரவில்லை, அம்மா, நெட்டில் பாத்துக்கலாம்மா இனிமேல், காசு தான் வேஸ்டா போச்சு” என்றார்கள் இருவரும் கோரசாக. நான் ஏற்கனவே ப்ளூசட்டை விமர்சனம் பார்த்து விட்டேன் என்பது மூவருக்கும் தெரியாது. பசங்க இனி சினிமாப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நமக்கு அதுதானே வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி !

ப்ளூசட்டை என்றவுடன் மாமா டிவி புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று தாங்களே தங்களைக் கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொள்ளும் லூசுப்பயல்கள் செய்யும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸில் ப்ளூசட்டை போலவே காமெடி பண்ணினான் ஒருவன். எரிச்சலில் அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றியது. இவனுங்க காமெடியும், நக்கலும் சகிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தங்களைப் பெற்ற அம்மாவையும் பிறரோடு சேர்த்து வைத்துப் பேசி காமெடி பண்ணுவான்கள் கிறுக்கன்கள். 

அடுத்த வாரம் ஐபிஎஃப்பில் கம்ப்ளைண்டு செய்ய வேண்டும். அழிச்சாட்டியத்துக்கு ஆப்பு அடிக்கணும். நாடகத்துக்கு எல்லாம் சென்ஸார் இருப்பது போல டிவி நாடகங்களுக்கு சென்சார் வைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இது பற்றி விபரமாக எழுதிப் போட்டால் அவர் ஏதாவது ஆவண செய்வார் என்று நினைக்கிறேன். 

ஈரோடு மகேஸ் என்றொரு திமிர் பிடித்த ஒருவரை நான் இது நாள் வரை பார்க்கவில்லை. ஆனானப்பட்ட டிடி இப்போது மாமா டிவியில் இல்லை. இவனெல்லாம் சும்மா பச்சா? என்னா பேச்சு பேசுறான் தெரியுமா இவன்? அகங்காரமும், ஆணவமும் நிரம்பிய ஒருவன் இருக்கிறான் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். மகேஷ் பிறரை மதிக்கக் கற்றுக் கொள். இல்லையென்றால் காலம் உன்னை அடக்கி விடும்.

நேற்று குருநாதரிடம் ஆசீர்வாதம் வாங்க வெள்ளிங்கிரி சென்றிருந்தேன். கடந்த வாரம் பசங்க இருவரும் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். லீவு விட்டால் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம். யானையை மிக அருகில் பார்த்ததாகச் சொன்னார்கள். எனக்குத்தான் திக்கென்றது. பூண்டி கோவிலில் கூட்டம் அள்ளியது.  கோவில்கள் தோறும் மக்கள் பெருக்கம். 

ஜோதி ஸ்வாமியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ”சாமி அந்தக் காலத்தில் தினம் தோறும் தர்மம் போடுங்க என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் யாரையும் அப்படிப் பார்க்க முடியவில்லை” என்றேன்.

”வீடுகளில் இருந்து தர்மம் நீங்கிப் போய் விட்டது. தர்மம் இப்போது அதர்மமாக மாறிப் போனது. தர்மத்தை வாங்க இன்று யாருமில்லாது போயினர்” என்றார் ஸ்வாமி.

தர்மம் அதர்மமாக மாறியதன் காரணமாகவோ என்னவோ, இப்போதெல்லாம் மொத்தம் மொத்தமாக மனிதர்கள் இயற்கையால் கொல்லப்படுகின்றார்கள். ஏழை என்று பார்ப்பதும் இல்லை பணக்காரன் என்றும் பார்ப்பதும் இல்லை. கொத்துக் கொத்தாக அழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழர்கள் அதிகம் இயற்கையால் அழிக்கப்படுகின்றனர். இதெல்லாம் அதர்மம் அதிகரிக்கும் போது பாரத்தைக் குறைப்பதற்காக தர்மம் செய்யும் வேலை என்றார் ஸ்வாமி.

ரஜினி காலக்கெடு வைத்த போதே தெரிந்திருக்கும். அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிக்குத் தெரியாத ஒன்று உள்ளது. தன் படத்தையே ஜெயிக்க வைக்க முடியாத ரஜினி, தமிழக அரசியலில் எப்படி ஜெயிப்பார்? என்பது தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் பலரும் பல கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள். மாறிப்போன அரசியல் களத்தில் ரஜினிக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. பிஜேபியின் மிஸ்டுகால் போலத்தான் ரஜினியின் இணையதளமும், ஆப்பும் இருக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. கமல் பாவம். ரஜினி வழக்கம் போல முந்திக் கொண்டார். கமலுக்கு இப்போது டிவிட்டர் பக்கம் வேலை இருக்காது என நினைக்கிறேன்.





அறுபது வயதில் கிட்னி கெட்டுப்போய் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தன் ரசிகனின் கையைக் கூட குலுக்க முடியாத நிலையில் ரஜினிக்கு இந்த வேலை தேவையா என்று தோன்றுகிறது. கிட்னி பத்திரமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அதுதான் பிரச்சினையானது. ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியும், புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியையும் மறக்க முடியாது. அவரின் உண்மையான நடிப்பில் மிளிர்ந்த அந்த வேடங்களுக்கு சமமாக அரசியல் வேடம் எடுபடாது என்றே தோன்றுகிறது.

மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல்  இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.

அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.

இருப்பினும் காலத்தின் கையில் இருக்கும் அவரின் நூல்கண்டு என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழகத்தினை வழி நடத்தும் தர்மத்தின் பாதையில் முட்களும் இருக்கும். பூக்களும் இருக்கும். ரஜினிக்கு முட்களா இல்லை பூக்களா என்று காலம் பதில் சொல்லும்.


Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Tuesday, August 15, 2017

அறத்தின் கோடு - கமலின் தர்மம் - பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர். 

பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன். 

தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.

தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?

கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.

கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.

Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை. 

Saturday, May 13, 2017

பாகுபலி 2 - 360ல் ஓர் அலசல்

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?

ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா? 

திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.

சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின்  மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.

ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார்.  பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும். 

அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.

ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.

இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.

இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.

அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..

கதைக்கு வந்து விடுவோம்.

பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.

உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.

இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.

சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.

பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.

தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?

எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.

ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.

இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.

பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.

பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.

1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.

கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.

இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?

சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.

இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத  உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!

சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.

அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி  இது.



பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.

பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.

நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்

23.01.2017 அன்று தமிழ்நாட்டு உண்மையான தமிழர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் மாணவர்களும், இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவனரோ என்ற பதைபதைப்பும், மனவருத்தமும், சுய பச்சாதாபமும் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடிக்கடி டிவி பார்ப்பதும், வாட்ஸ் சப்பில் மெசேஜ்களைப் படிப்பதும், சென்னைக்கு போன் செய்வதுமாக  இருந்தனர். மாலை வரை மனப்போராட்டம் நீடித்துக் கொண்டே இருந்தது.

நான் முன்பே நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா? என்று. எழுதி இருந்தேன். அதைத்தான் செய்திருக்கின்றார்கள். 22ம் தேதி ஆதி பேசியதிலிருந்து ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. 23.01.2017 அன்று இரவு ’நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளைஞர் அவர்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்று விவரித்தார். 

23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 1



23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 2

களத்தில் இருந்தவர்களை இந்த சினிமாகாரர்கள் உள்ளே நுழைந்து பேசக்கூட விடாமல் தடுத்த நிகழ்வையும் இவர்கள் தான் இந்தக் கலவரத்துக்கு காரணமாக இருந்தனர் என்றும் விவரித்தார். தெரிந்து செய்கின்றார்கள் தெரியாமல் செய்கின்றார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. எந்தக் காலத்திலும் சினிமாக்காரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ததே இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். 

இது சினிமா இல்லை. வாழ்க்கை. நிதர்சனம். எதார்த்த உலகின் போராட்டக்களத்துக்குள் ஆயிரமாயிரம் இளம் குருதிகளின் நாளங்களில் புரண்டோடும் உணர்ச்சி அலைகளை சரியாக வழி நடத்திடாவிடில் இப்படித்தான் கண்டவர்கள் எல்லாம் நுழைந்து சீரழித்து விடுவார்கள். மதியம் போல பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த லாரன்ஸ் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பாதியில் காணாமல் போனார். ஆதி மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் அவர் எப்பேர்பட்ட ஆள் என்று. 

ஒவ்வொரு மீடியாவும் தவறான புரிதல் வரும்படியான செய்திகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த மீடியாவுக்கும் பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. பரபரப்பாக்கிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு அதுதான் தேவை. போராட்டக்களம் சந்தோஷமாகச் சென்று விட்டால் மீடியாக்காரர்களுக்கு என்ன வேலை? அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. அதை வைத்து இன்னும் கொஞ்சம் காலம் பரபரப்பாகவும், விவாதக்களங்களையும் முன்னெடுப்பார்கள். 

களத்தில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஒவ்வொருவரின் தந்தைகள், தாய்கள், உறவினர்கள் என்று அனைவரும் போராட வந்த நிகழ்வு சாதாரணமாக நடந்த நிகழ்வு அல்ல. எதேச்சதிகாரத்துக்கும், அதிகார மையங்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை. போதும் உங்கள் ஆட்டம் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கட்டியம் கூறிய போராட்டம். இதன் காரணமாக பலரின் தூக்கம் போயிருக்கும். இந்தப் போராட்டத்தின் முடிவினை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்கள்.

காவல்துறையினர் கூட்டமாக இருந்தவர்களை இழுத்த போது அவர்கள் ஜனகனமன என தேசிய கீதம் பாடினார்கள். சிலர் வந்தேமாதரம் வந்தே மாதரம் என்று முழங்கினார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சமும் துடித்தன. காவல்துறை செய்த செயல் நெஞ்சத்தைப் பதற வைப்பது போல இருந்தது. காவல்துறையினரில் அம்மா, அப்பாக்களும் இருக்கின்றனர். தன் பையன் அழுதாலே துடிக்கும் மனசு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்திருக்கமுடியாது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆளும் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் மனிதாபிமானத்தோடு இருக்கவே முடியாது. நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசிய முன்னால் காவல்துறை அதிகாரி கருணா நிதி அவர்கள் ’மேலிடத்தின் உத்தரவுப்படிதான் காவல்துறை நடந்து கொள்ளும்’ என்று நிகழ்ச்சியின் முடிவில் போட்டுடைத்தார். 


(மேலே இருக்கும் பட்டியலில் வீடுகளில் வளர்க்கப்பட்ட காளைகளைச் சேர்த்திருக்கவே கூடாது. காடுகளில் இருக்கும் விலங்குகளும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளும் ஒன்றா? பட்டியலில் சேர்த்திருக்கின்றார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஏன்???)

11.07.2011ம் தேதியன்று மத்திய அமைச்சகமான சுற்றுச்சூழல் துறை ஒரு நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது. அதில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காடுகளில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, கருஞ்சிறுத்தை, குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்த்திருக்கின்றார்கள். இந்தியாவெங்கும் இருக்கும் உழவர்கள் வீடுகளில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரமாக இருக்கும் காளைகளை ஏன் அந்த லிஸ்டில் சேர்த்தார்கள். திடீரென காளைகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ், 2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், 2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்தனர். ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் அந்த லிஸ்டில் சேர்க்கபட்டது. ஏன் சேர்த்தார் என்பதற்கு காரணத்தை எவரும் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதா என்றும் தெரியவில்லை. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முக. அழகிரி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஜி.கே வாசன் மற்றும் காரைக்குடி ப.சிதம்பரம் ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்காதா இந்த பட்டியல் விவரம். அவர்கள் ஏதும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதற்கு காரணத்தை அவர்கள் தான் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கருத்துச் சொல்கின்றார்கள். போராட்டம் செய்கின்றார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு பாயிண்டை வைத்து பீட்டா ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறது. சுப்ரீம் கோர்ட் சட்டத்தின் படி தான் தீர்ப்பு வழங்கும் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். நம்புகின்றார்கள். அதைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது.

அரசியல் என்பது இதுதான். பிரச்சினை சரி செய்யப்படவே கூடாது. சரி செய்வது போல காட்டணும் ஆனாலும் சரி செய்யக்கூடாது. இப்படி ஒவ்வொரு மக்கள் பிரச்சினையையும் சரி செய்து விட்டால் அரசியல் செய்ய முடியாது. நீரு பூத்து நெருப்பாகவே ஒவ்வொரு பிரச்சினையும் இருந்தால் தான் அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் வர இந்தப் பிரச்சினைகள் உதவி செய்யும். 

இன்றைக்கு கட்சிக்குத் தலைவர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். உங்கள் கட்சியின் இப்போதைய கொள்கை என்னவென்று. எல்லோரும் திருதிருவென முழிக்க ஆரம்பித்து விடுவார்கள். இனி தமிழ் பேசி பயனில்லை. திராவிடம் பேசிப்பயனில்லை. ஜாதிமதம் பேசிப்பயனில்லை. தன் கட்சியின் கொள்கையாக எதைச் சொல்வார்கள்? கேட்டுப்பாருங்கள் தெரியும் அரசியல் என்றால் என்னவென்று.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்குப் போட்டவர் தமிழர். அன்று விழித்திருக்க வேண்டிய அரசு மவுனம் சாதித்தது. ஏனோ தானோவென ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைக் கையாண்டார்கள். விளைவு இந்தப் போராட்டம்.

தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயன்ற இளைஞர் பட்டாளத்துக்கு முன் அனுபவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கட்டுக்கோப்பாக போராட்டத்தை நடத்தத் தெரிந்தவர்களுக்கு அரசியல் தெரியாது. அதுவும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

காலம் காலமாக நடந்து வரும் போக்குதான் இது. அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பலியாகும் உயிர்களின் மீதுதான் கிடைக்கும். மஹாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மாண்டவர்களின் மீதுதான் இந்தியா தன் சுதந்திரத்தைப் பெற்றது. நேற்று மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி என்ன சட்டம் போடப்பட்டிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை முன்பே கொடுத்திருக்கலாம். கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞர் போராட்டம் இப்படி சுமூகமாக முடிந்து விடக்கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் யாருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாது போய் இருக்கும். இந்த நிகழ்வினால் பலர் ஆளும் கட்சியின் மீது கோபமும், சிலர் எதிர்கட்சிகளின் மீது கோபமும் கொண்டனர். இதைதான் அரசியல் எதிர்பார்க்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பலன் கிடைத்திடுவது தான் அரசியல்.

நான் பிறக்கும் முன்பே நடந்த சுதந்திரப்போராட்டத்தை என்னால் காண முடியவில்லை. மெரினா கடற்கரையில் அந்தப் போராட்டத்தை இளைஞர்கள் கண் முன்னால் கொண்டு வந்து காட்டினர். காவல்துறையினர் அவர்களை முரட்டுத்தனமாக இழுக்கின்றனர். தூக்கி வீசுகின்றனர். போராடிய மாணவர்கள் ”ஜனகனமன” பாடினார்கள். ”வந்தே மாதரம்” என்று முழங்கினார்கள். அஹிம்சையாக உட்கார்ந்து போராடினார்கள். அவர்கள் ஹிம்சிக்கப்பட்டனர். அஹிம்சைக்கு எதிர் ஹிம்சைதானே. ஜனநாயகத்துக்கு எதிர் அரசியல்தானே. இந்தப் போராட்டத்தை வெகு எளிமையாக முடித்திருக்கலாம். ஆனால் அரசியல் அப்படி முடிக்க விடாது. அதைத்தான் இந்த தமிழர் சமுதாயம் நேற்றுக் கண்டது.



குறிப்பு: இன்றைய இளைஞர் பட்டாளம் அவசியம் படிக்க வேண்டிய அரசியல் பகடி நூல் ஒன்று உண்டு. போராட்டக்களத்தில் போராடியவர்கள் சோ எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற அரசியல் நாவலை அவசியம் படியுங்கள். இந்த நூல் எப்படி அரசியல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கும். நிதர்சன அரசியல் என்றால் என்னவென்று உங்களுக்கு பாடமெடுக்கும். மறந்து விடாதீர்கள்.

எனக்கும் அல்லையன்ஸ் பப்ளிகேசனுக்கும் மறைந்த சோவுக்கும் எந்த வித வியாபாரத் தொடர்பும் இல்லை என்று இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.


Thursday, January 19, 2017

நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாணவர்கள் இந்தாண்டு போராட்டத்தை முன்னெடுத்தெடுக்கிறார்கள். மிக்க மகிழ்வைத் தரும் நிகழ்வு இது. ஈழப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது போலவும், மதுவிலக்குப் போராட்டத்தைக் கலகலக்க வைத்தது போலவும் இந்தப் போராட்டம் ஆகி விடக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். 

மீடியாக்களின் கவனம் இப்போது மாணவர்களின் மீது உள்ளது. ஆனால் அந்தக் கவனம் திசை மாறி திசை திரும்பி விடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா நடிகர்கள். நடிகர்கள் சங்கத்தில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சில நூறு நடிகர்கள் சேர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்த ஆரம்பித்தால் மீடியாக்கள் இந்த நடிகர்களின் போராட்டத்தை லைவ் ரிலேவாகவும், செய்திகளாகவும் வெளியிடுவார்கள். மாணவர்களின் போராட்டம் மீடியா மத்தியில் கவனம் இன்றிப் போய்விடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

தார்மீக ரீதியாக மீடியாக்கள் சில நடிகர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளக்கூடாது. மாணவர்கள் போராட ஆரம்பித்த பிறகு தான் நடிகர்கள் தங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தங்களைப் பார்க்க மாணவர்கள் கூடுவார்கள் என்ற கணக்குப் போட்டு இருக்கலாம். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் ஆதாயமெடுக்க நினைத்திருக்கலாம். 

தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் சிறுபான்மையினராக இருக்கும் சினிமாக்காரர்கள், நாங்களும் போராடுகிறோம் என போராட்டத்தின் வீரியத்தை வீழ்ச்சியுறச் செய்வதும், போராட்டக்களத்தின் பலனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பணம் சம்பாதிக்கட்டும் அது அவர்களின் உரிமை.  நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்வார்கள். எங்களுக்கும் போராட உரிமை உள்ளது என்பார்கல். யார் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் உண்மையான போராட்டத்தை தன் பக்கம் திருப்பி விடும்போக்கினைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


(இதோ இந்த ஏறுதழும் வீரனைப் போல ஒரு காளையை தழுவ முடியுமா சினிமா நடிகர்களால்? நடிப்பதில் மட்டுமே வீரம் காட்டும் வீரர்கள் நடிகர்கள்)

சினிமா என்கிற மாயமோகத்தை வைத்து அறுவடை செய்யும் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளின் சுய நலப்பாச்சாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஏமாந்தது போதும். நடிகர்களுக்காக நாட்டை கொடுத்த நிகழ்வுகள் இனி வேண்டாம். நடிகர்கள் நடித்து விட்டு பணம் சம்பாதிக்கட்டும் அதுவல்ல பிரச்சினை. சினிமாவைப் பார்த்து ரசிக்கலாம். விமர்சிக்கலாம். பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். அது ஒரு பொழுது போக்கு மட்டுமே.

இப்போது சினிமா நடிகர்கள் தங்கள் படத்தைப் பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். சினிமா என்ற லேபிள் போராட்டம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று. மாணவர்களின் போராட்டத்தினை பிசுபிசுத்திட வைத்திடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மீடியாக்கள் சினிமாக்காரர்களுக்கு வெளிச்சமிடுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு விடாமல் பாதுகாத்திடல் வேண்டும். ஒவ்வொரு தமிழனாலும் தான் மீடியாக்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

சாலையில் இறங்கிப் போராடும் தங்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்ட மாணவர்களுக்கு உணவும் உதவியும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் குடும்பம் குடும்பமாக ஆதரவினை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி ஆண்டுப் பரிட்சைகள் வரக்கூடும். அதிலும் கவனம் வைத்தல் அவசியம்.

சினிமாவாலும் அரசியலாலும் பீடிக்கப்பட்டு சீரழிந்து தமிழர் சமூகம் கிடக்கிறது. உலகிற்கே உயர்வான நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வந்த தமிழர் சமுதாயம் தலை நிமிரட்டும். சீறிவரும் காளைகளென எக்காளமிட்டு ஜல்லிக்கட்டு நடத்த போராட்டத்தை முன்னெடுங்கள். ஆரம்பம் இதுதான். 

தமிழர் நாடு எனும் தமிழ் நாடு தனது பாரம்பரியத்தை மீட்டெடுத்து தன் சந்ததியினருக்கு வாழையடி வாழையாக கொடுத்து மேன்மையுற வாழ வேண்டும்

Saturday, December 31, 2016

கரையை நோக்கிப் பயணிக்கும் அலைகள்

அலைகள் - இந்த வார்த்தையைப் படித்தவுடனே உங்களுக்குள் தோன்றி இருக்கும். 

உயரமான, தாழ்வான, மிகத்தாழ்வான, மிக மிக உயரமான அலைகள் கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அலைகளும் கரையை அடைந்து ஆக்ரோசமெல்லாம் இல்லாமல், வெறுமென நீராக சலம்பி பின் மீண்டும் கடலுக்குள்ளே சென்று மறைந்து விடுகின்றன. அடுத்த அலை வருகிறது. அதன் பின்னாலே அலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே கரையைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. கரை வந்தவுடன் சிறுத்துப் போய் ’உஷ்’ என்றாகிறது. பின்னர் கடலுக்குள் சென்று வந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.

காற்று விடாமல் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்க்கையும் அலைகளும் ஒன்று தான். 

புகழ், பதவி, அதிகாரம் இருந்தும் தன் உடலை தான் சொன்னபடி கேட்க வைக்க இயலாமல் ஒருவர் கரைந்தே போனார். உலக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவரின் மகளின் வாழ்க்கை இன்று கோர்ட்டில் வந்து நிற்கிறது. அவர் நடத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இதெல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிறது? 

ஓடம் தண்ணீரில் தான் செல்ல முடியும். அந்த தண்ணீர் தான் ஓடத்தை வழி நடத்தும், அந்த ஓடம் தண்ணீருக்குள் மூழ்கி விட வேண்டுமா? இல்லை கரையைத் தொட்டு விட வேண்டுமா என்பதை முடிவு செய்வது காற்றும், தண்ணீரும் தான். அந்த ஓடம் எந்தப் பக்கமாக பயணிக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் முடிவு செய்ய இயலும். ஆனால் பயணம் செய்தே ஆக வேண்டும். தண்ணீருக்குள் இருக்க முடியாது. ஓடம் சென்று சேர வேண்டிய இடம் கரை.

அதிகாரமும், பணமும், புகழும் எந்த மனிதனுக்கு எதையும் தரப்போவதில்லை. வெற்று மாயை! பணமும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும். புகழோ - வெற்றுக்கூச்சலும், வெறும் ஈகோவும் தான் தரும். அதிகாரம் அயோக்கியத்தனம் செய்ய வைக்கும். ஒன்றுமே இல்லாத வாழ்க்கையில் எல்லாமும் இருப்பதாக நினத்துக் கொண்டிருப்பது ஏமாளித்தனமானது.

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். அவனவன் வலி அவனுக்கு மட்டுமே. அதை பிறர் அனுபவிக்க முடியாது. எத்தனை உற்றார் உறவினர்கள் இருந்தாலும் தான் என்ன? வலியை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்களா? அருமை பெருமையாக வளர்த்த அம்மா அப்பா மறைந்தவுடன் அவர்களுடனேவா பிள்ளைகள் இறந்து போகின்றார்கள்? இல்லையே? உறவுகள் நிதர்சனம் என்று நினைப்பது முட்டாள்தனம். உறவுகளின் பயன் பாதுகாப்புக்கு மட்டுமே.

2016 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்றைக்கு. கடந்து வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கைப் பாதைக்கு ஒரு வழி கிடைத்தது. இந்தப் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணத்தை சிரமமில்லாமல் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்த வருடம் இது. கணிணி, ஏற்றுமதி இறக்குமதி, டிரேடிங்க், விளம்பரத்துறை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு இதுதான் உன் பாதை என 2016 காட்டிக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாகப் புரிய வைத்தது 2016. இந்த வயதில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த வரமாகவே நினைக்கிறேன்.

உறவுகள், நட்புகள், வியாபாரங்கள் என்றால் என்ன அதன் முழு அர்த்தம் என்ன? மனிதர்களை படிப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடிந்த வருடம் 2016. எந்த ஒரு உறவும், நட்பும், வியாபாரமும் பலனின்றி இல்லை என்பதினை சம்மட்டியால் அடித்துச் சொல்லியது 2016.

ஆன்மீக வாழ்க்கையில் இதுவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமான பாதையை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. தொட்டும் தொடாமலும், விட்டும் விடாமலும், இருந்தும் இல்லாமலும் இருப்பதைப் பற்றி பாடமே கிடைத்தது இந்த 2016ல். நோக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அட்சர சுத்தமாக அதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது 2016. 

நானும் ஒரு அலைதான். கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு அலைதான். நீங்கள் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் அனைவரும் சென்று சேரும் இடம் கரைதான். கரையில் உங்களின் உயரமும், எனது உயரமும் கலைந்து நாம் நீராகி விடுவோம். கடலுக்குள் கலந்து விடுவோம்.

விடைபெறட்டும் 2016. அது வந்த வேலையை நிறைவாகச் செய்து விட்டு செல்லப்போகின்றது. அதற்கு நாம் விடை கொடுப்போம்.

அடுத்து வரப்போகும் 2017ல் நாம் அன்பாயிருப்போம், அமைதியாக இருப்போம். ஆனந்தமாக இருப்போம். 

2017ஆம் ஆண்டில் எதார்தத்தை உணர்ந்து கொண்ட வாழ்க்கையினை வாழலாம் வாருங்கள்!  கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம், சூது வேண்டாம். எதனாலும் நம் வாழ்க்கை சிறப்படைய போவதில்லை. அன்பாயிருத்தலாலும், அமைதியாக இருத்தலாலும் நாம் அடைவது ஆனந்தமே!

Sunday, November 6, 2016

மாரிமுத்து திரையரங்க நினைவலைகள்

பிறந்து வளர்ந்த ஊர் ஆவணம். ஆனால் என் தகப்பனார் ஊர் நெடுவாசல். உறவினர் பிரச்சினைகளால் அடியேனால் மாமா வீட்டில் தான் பிறந்து வளர முடிந்தது. ஆவணத்தில் முக்கியமான இரண்டு தெருக்கள் இருக்கின்றன. ஒன்று வடக்குத் தெரு, மற்றொன்று தெற்குத் தெரு. இந்த தெருக்கள் பகுதியில் தான் பெரும்பான்மையான தேவர் இன மக்கள் வாழ்கின்றார்கள். மேலத்தெருவில் முஸ்லிம் மக்கள் அதிகம். ஊரின் கிழக்கே வயல்களும் மேற்கே தோட்டங்களும் உள்ளன. ஊரின் மேற்கே கைகாட்டியின் அருகில் உள்ள அரசு முந்திரித் தோப்பு இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஊரின் வடக்கே மாரிமுத்து திரையரங்கம் ஒன்று இருந்தது. எனது பள்ளித் தோழன் மாரிமுத்துவின் உறவினர் அவர்கள் தான் உரிமையாளர். தெற்கு வடக்கு நீளமான கொட்டகை. இடது பக்கம் பஜ்ஜிக்கடை. வலது பக்கம் டிக்கெட் கவுண்டர். இடது பக்கமாய் பெண்களுக்கான டிக்கெட் கவுண்டர் இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டு வெளியில் உள்ள கொட்டகைக்குள் இருக்கும். கைகாட்டியில் ஸ்டார் தியேட்டர் இருந்தது. ஆனால் அதன் சத்தம் சகிக்காது. மாரிமுத்து தியேட்டரில் சவுண்ட் வெகு துல்லியம். கைகாட்டியில் தங்கம் தியேட்டர் என்று நினைக்கிறேன். அது ஒரு நாள் லாரியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற போது கரண்டுக் கம்பியில் உரசி தீப்பற்றியதும், லாரி டிரைவர் நேராக அந்த தங்கம் தியேட்டருக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு ஓடி விட்டான். தங்கம் தியேட்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. நல்லவேளை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்ச நாள் கரியும் கட்டையுமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சிமெண்ட் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் கைகாட்டி ஸ்டார் தியேட்டர்.





( நன்றி படங்கள் உதவி : கடல் பயணங்கள் சுரேஷ்குமார்)

மாரிமுத்து தியேட்டருக்குள் மூன்று இருக்கை பகுதிகள் இருந்தன. திரையின் முன்பு மண் கொட்டியிருக்கும். அடுத்து பெஞ்ச், அதை அடுத்து மரச்சேர்கள் போடப்பட்டிருக்கும். அடியேன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படம் பார்க்க சிறு வயதில் செல்வதுண்டு. சண்டைக்காட்சிகள் என்றால் எதிரில் அமர்ந்திருக்கும் பெண்களின் முதுகில் நானும் எம்.ஜி.ஆராகி குத்துக்கள் விடுவேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். சிவாஜி படம் பார்க்கப் போவார்கள். அழுக்காட்சி என்றால் எனக்கு அலர்ஜி. இதெல்லாம் அம்மா  சொல்லித்தான் தெரியும். நினைவில் இல்லை. அம்மாவுக்கு எந்த நடிகரின் படம் பிடிக்கும் என்று இதுவரையிலும் கேட்டதில்லை. 

வயலில் வேலை செய்பவர்களும், உழைப்பாளிகளும், சம்சாரிகளும் சற்றே ஆசுவாசப்படும் இடமாக மாரிமுத்து திரையரங்கம் இருந்தது. மண்ணில் துண்டை விரித்து தலையணை போலச் செய்து திரையின் முன்பாகப் படுத்துக் கொண்டே பலரும் திரைப்படத்தைப் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். நல்ல படமாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் திரைப்படம் பார்க்க முடியும். தனியாக செல்ல வாய்ப்பே இல்லை. மாரிமுத்து திரையரங்கில் உள்ள டிஃபன் கடையின் முறுக்கு, இட்லி ரொம்பப் பிரபலம். சுவை அள்ளும். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அந்த பாக்கியம் கிட்டும். ஒரு திரைப்படம் சுமாராக ஒரு மாதமாவது ஓடும். இரண்டு காட்சிகளுக்கும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.

தீபாவளி சமயத்தில் மதியம் போல ஜில்மா படம் போடுவார்கள். ஊரில் இருக்கும் உறவினர்கள் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதவாறு ரகசியமாகச் சென்று வருவார்கள். பொங்கல் நாளில் கூட்டம் அள்ளும். தினமும் ஐந்தே முக்கால் மணிக்கு பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். தியேட்டர்காரர்களும் திரையிடப்படும் படங்களின் பாடல்களை ஸ்பீக்கரில் பாட விடுவார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர் நோக்கி விரைவார்கள். மாரிமுத்து திரையரங்கை தொட்டு தூண்டிக்காரன் கோவில், சிவன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், பெரியகுளம் இருக்கும். மழைக்காலங்களில் தவளையின் சத்தமும், குளிரும் வாட்டும். விழா நாட்களில் நான்கு காட்சிகள் நடைபெறும். சுற்றிலும் படுதாவை இழுத்து விட்டுக் கொண்டு படம் பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடத்தில் ஏதாவது சிறுவர் படங்கள் வந்தால் அழைத்துச் செல்வார்கள். அப்போது தான் மேட்னி ஷோ பார்க்க முடியும்.

எனக்குத் திருமணமான புதிதில் தியேட்டர் வேலை செய்து கொண்டிருந்தது. அதை விலைக்கு வாங்கி நடத்தலாம் என்ற முயற்சி கூட செய்தேன். ஆனால் முடியவில்லை. டிஃபன் கடை வைத்திருந்த ஒரு நபர் செய்த உட்சதியால் அது நடைபெறாமல் போயிற்று. திருமணம் முடிந்த கையோடு தியேட்டரை வாங்கி ஊரிலேயே தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் பல்வேறு கட்ட முயற்சிகளைச் செய்தேன். நடக்கவில்லை. ஆளாகி விட்டான் என்றால் சகித்துக் கொள்ளமுடியாது அல்லவா? ஆகவே என்னென்ன சதிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள் அப்போது. நான் திருமணம் செய்து கொண்டதே என்னை அறிந்தப் பலருக்கு இதயத்தில் ஊசியைச் செருகியது போல இருந்தது என்று என் நண்பன் ஒருவன் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அது கயிறு திரிக்கும் இடமாக மாறி விட்டது. ஊருக்குச் சென்றிருந்த போது அந்த தியேட்டரில் படம் பார்த்த நினைவுகள் மேகமாய் கவிழ்ந்து கொண்டன.

மண்ணைக் குவித்து அதன் மீது சிம்மாசனமாய் உட்கார்ந்து திரைப்படம் பார்ப்பது என்பது அன்றைய காலத்தில் எனக்கு எந்தளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்ல முடியவில்லை. அந்தச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இன்றைக்கு எந்த தியேட்டரில் படம் பார்த்தாலும் கிடைக்கவில்லை. காலம் மனிதனின் சந்தோஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. 

இனி மாரிமுத்து திரையரங்கத்தை காண முடியாது. அதன் நினைவுகள் மட்டும் என்னுடன் கூடவே பயணிக்கின்றன. இனி அது உங்களுடன் கூட பயணிக்கும் என நினைக்கிறேன். நீங்களும் ஏதோ ஒரு திரையரங்கத்தில் என்னைப் போலவே படம் பார்த்திருப்பீர்கள். அந்த நினைவுகளை விட சுகமானது இனி நமக்கு வாய்க்கப்போவதில்லை.

குறிப்பு: டெண்ட் கொட்டகை சினிமா பற்றி கடல்பயணங்களில் சுரேஷ் குமார் எழுதி இருக்கிறார். அவரின் பதிவில் இருந்து சில படங்களை இங்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். அவரின் பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் சிறுபிள்ளையாகவே மாறி விடுவீர்கள்.


Friday, November 4, 2016

யாருக்கும் தகுதியில்லை

தம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். வழியில் ஒரு சிற்றூர். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.

யாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான்.

“ஆஹா, என்ன பேரானந்தம்!”

பாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன்.

காருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்.; “சாமி, நீங்களா?” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்? - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி! இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம்!” என்று படுகறாராகச் சொல்லிக் கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான். எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான்.

“அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்கமாட்டாரு ஐயா!” என்றார் டிரைவர்.

“இங்கே சோடாவா பெரிது, அதைக் கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது!” என்று சொல்லிக் கொண்டே பாகவதர் காரை விட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி, ‘மடக், மடக்’ கென்று குடித்தார்.

பரம திருப்தி வண்டிக்காரனுக்கு; ‘ஆஹா, என்ன பேரானந்தம்!” என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான்.

அதற்குள் ‘கூகுக்’ என்று கூவிக் கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம்! பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம்!” என்றார்.

அதைக் கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்து விட்டது. ”நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? என்ன செய்யப்போகிறேன்?” என்று கரம் குவித்தார்.

”ஒன்றும் செய்ய வேண்டாம், நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்!” என்ற ’கார்டு’ பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார்.

விந்தன் எழுதிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை புத்தகத்திலிருந்து ஒரு சிறு துளி மேலே உள்ளது. இப்படியான ஒரு அன்பினை பெற்ற இறவா நடிகர் அல்லவா எம்.கே.டி அவர்கள்?


அசோக்குமார் படத்தில் எம்.கே.டி பாகவதரால் பாடப்பட்ட அருமையான பாடல் இது. இதில் இரண்டு வரியைத் தொடர்ந்தாற் போல இன்றைக்கு சினிமாவில் பாடுபவர்களால் பாடமுடியுமா? இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா? அமைதியாக அமர்ந்து இப்பாடலைக் கேளுங்கள். அது உங்களுக்குள் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

உலகில் நல்லவனாய் வாழ்வதை விட வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு இருக்கப்போகின்றது?

இதோ பாடல் வரிகள்:

பூமியில் மானிட ஜென்மம டைந்துமோர்
புண்ணியம் இன்றிவி லங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளநி ரம்பவீண்
காலமும் செல்லம டிந்திடப்போம்

உத்தம மானிட ராய்பெரும் புண்ணிய
நல்வினை யால்உல கில்பிறந்தோம்
சத்திய ஞானத யாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம்கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும கிம்சையும்
இல்லையெ னில்நர ஜென்மமிதே
மண்மீதி லோர்சுமை யேபொதி தாங்கிய
பாழ்மர மேவெறும் பாமரமே

பாடல் ஆசிரியர்: பாபநாசம் சிவன்
பாடகர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம்: அசோக்குமார்


நவம்பர் ஒன்றாம் தேதி மக்களால் நேசிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.

தமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. குழாயடிச் சண்டை கூட நடந்தது. அதையும் டிவிக்காரர்கள் பரபரப்பாக்கினார்கள். அந்தக் கூத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கூத்து முடிந்து நடிகர்கள் தலைமைப் பொறுப்புக்கும் வந்து விட்டார்கள். ஆனால் வந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

பழைய நடிகர்களைக் கவுரவிக்கிறோம் என்றெல்லாம் அட்ராசிட்டி செய்தவர்கள் தியாகராஜ பாகவதருக்கு நினைவு அஞ்சலியைக் கூட நடத்தவில்லை. தமிழக மக்களின் மனத்தில் தங்க நாற்காலியில் அமர்ந்து தமிழ் சினிமா உலகையே அசைத்து விட்டுச் சென்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் கூட மறந்து விட்டார்கள்.

ஆனால் பாகவதருக்கு அவரின் ரசிகர் செலுத்திய உண்மையான அஞ்சலியை விடவா இவர்கள் செய்து விடப்போகின்றார்கள்? 72 வயதான் பழைய புத்தகக்கடை வைத்து நடத்தி வரும் ஸ்ரீரங்கம் நடராஜன் அவர்கள் தன் ஆதர்ச நாயகனுக்கு திருச்சியில் அமைந்துள்ள சமாதியின் அருகில் அமர்ந்து, தியாகராஜ பாகவதர்  பாடிய பாடல்களைப் பாடியபடியே அஞ்சலி செலுத்தினார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பாகவதரின் உறவினர்கள் நினைவு நாள் கொண்டாடுவது வேறு. ஆனால் ஒரு ரசிகன் தன்னால் ரசிக்கப்பட்ட நாயகனின் நினைவினால் சமாதியின் அருகில் நின்று பாடலைப் பாடியபடி அஞ்சலி செலுத்துவது என்பது சாமானியமானதா?

எத்தனையோ ஹீரோக்கள் வந்து சென்றார்களே இப்படி ஒரு அஞ்சலி நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோமா? இல்லையே ஏனென்றால் வெகு கவனமாக தன் தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட ஹீரோக்களும், உறவுகளால் பீடிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இருப்போர் பாகவதருக்கு அஞ்சலி செலுத்தக்கூட தகுதியில்லாமல் போனார்கள் என்பது தான் நெஞ்சில் அறையும் உண்மை.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எம் தமிழ் மூதாதையர்கள் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்து அவர்களின் மனதில் இன்றைக்கும் இறவாது வாழ்ந்து வரும் எம்.கே.டி அவர்களுக்கு ஏதோ என்னாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி.

Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Saturday, August 16, 2014

பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று

மானிடப் படைப்பில் பெண் என்பவளைப் போன்ற அற்புதம் வேறு இவ்வுலகில் கிடையவே கிடையாது. அவள் வாழும் போதே கடவுள் தன்மையில் வாழ்கிறாள். சகிப்புத் தன்மையின் மறு அவதாரம் பெண்கள்.

ஒரு உதட்டுச் சுழிப்பில் ஆணின் உயிரைப் பறித்து விடும் மகத்துவம் கொண்டவள் அவள். ஒரு அசட்டுச் சிரிப்பில் உலகையே சுடுகாடாக்கி விடுவாள். அவளின்றி  இயங்காது இப்பூவுலகம். 

அப்படிப்பட்ட மகா அற்புதமான பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று. அடியேனும் இப்படிப்பட்ட அவஸ்தையில் சிக்கி இருக்கிறேன். பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த அவஸ்தை நிச்சயம் ஏற்பட்டிருக்கும். 

இளையராஜாவின் அற்புதமான இசைக்கோர்ப்பில் வார்த்தைகள் இசையுடன் சேர்ந்து தாலாட்டும் இந்தப் பாடல், ஏதோ ஒரு இன்பலோகத்துக்குள் அமிழ்த்தும் சக்தி கொண்டது.

தனிமையில் கேட்டுப்பாருங்கள். 




இதில் வரும் லட்சுமி கேரக்டரைப் பற்றி விரிவாக “குறுஞ்செய்தி” இதழில் காதலும் கலவியும் என்றொரு தொடரில் பார்ப்போம்.


Thursday, December 27, 2012

செப்பிடு வித்தைக்காரனின் கும்கி



( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்) 

என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.

கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.

’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !

என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம். 

அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.

ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்). 

அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.

சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.

ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற. 

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Saturday, September 22, 2012

சாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்



நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.

ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000  ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.

”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர். 

”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.

ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.

யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.

சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.

பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும்,  பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.

சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.