குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, September 12, 2011

உணவு பற்றிய கேள்விகள்


(பாப்பம்பட்டி பிரிவு தாண்டி கலைஞர் கல்லூரி அருகில், மெயின் சாலையில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் வசதியுடன், லோன் வசதியுடன்,  1000 சதுர அடியில் தனி வீடு விற்பனைக்கு இருக்கிறது. தேவைப்படுவோர் உடனடியாக அணுகவும். புத்தம் புதிய வீடு இது. அழகான ஏரிக்கரையோரம், நல்ல காற்று வசதியுடன் அமைதி தழுவும் இடத்தில் இவ்வீடு இருக்கிறது. ஒரே விலை 20 லட்சம் மட்டுமே. ஃபார்ச்சூன் பிரிக்ஸ் சர்வீஸ் சார்ஜ் தனி )


(திராட்சைக் குலைகள் ரசாயன பூச்சிக்கொல்லி கலவையில் பதினான்கு வாரம் முக்கி எடுக்கப்படுகிறது - நம்மாழ்வார் )



(கொத்தவரங்காய்)

சில சகோதரர்கள் பிளாக்கைப் படித்து விட்டு கடந்த ஒரு மாதமாக உணவுப் பழக்கங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இப்பதிவு.

உணவால்தான் உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்பதை முதலில் உணர வேண்டும். உணவு சரியானால் உடல் சரியாகும். மனம் சரியாக அதற்கென்று பல முறைகள் இருக்கின்றன. அது பற்றித் தெரிந்து கொள்ள “அறிவே தெய்வம்” என்ற பிளாக்கினைப் படித்துப் பார்க்கவும்.

சாப்பிடும் உணவில் எது நன்மை தரும் எது இன்பம் தரும் என்பதை அறிந்து கொண்டால் நோய்த் துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

பால் நமக்குத் தேவையற்ற உணவு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு மாதம் தொடர்ந்து காலையில், மாலையில் ஒரு கப் டீயும், சாப்பிடும் போது தயிரும் சேர்த்து வந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ எடை கூடி இருந்தது. ஒரு மாதம் பால் சேர்க்காமல் சாப்பிட்டேன். இரண்டு கிலோ குறைந்து இருந்தது. பால் வயிற்றுக்குள் சென்று புளித்து, பின் தயிராகி அதன் பிறகு செரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல சாதாரண பாலில் தானே அதிக ”நெய்” உருவாகிறது. உடம்பு சரியில்லாமல் இருப்போருக்கு பால் திரவ உணவு, தேவையான கலோரிகளைக் கொடுக்கவல்ல. ஆரோக்கிய உடம்பிற்கு எதற்குப் பால்?

புதிய தலைமுறை டிவியில் நேற்று நம்மாழ்வார் பேசிக் கொண்டிருந்தார். “திராட்சைப் பழங்கள்” ரசாயன பூச்சிக் கொல்லிகளால் பதினான்கு வாரம் பழக்குலைகள் முக்கி எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனவாம். கேட்ட எனக்கு கிர்ரென்று ஆகி விட்டது. ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியமான உணவு பழங்கள் என்றுச் சொல்வார்கள். இன்றைய காலத்தில் பழங்கள் ரசாயனக் கலவையால் உருவாக்கப்படுகிறது என்று கேட்டவுடன் மனிதன் வேறு என்னதான் சாப்பிடுவது என்று தெரியவில்லை. (புதிய தலைமுறை டிவி செய்தி வடிவாக்கம் எரிச்சலைத் தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்)

சாப்பிடும் உணவு பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்தாலே ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

சிலருக்கு கொத்தவரங்காய் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். கொத்தவரங்காய் கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது. பொறியலாகவோ, கூட்டு, உசிலியாக வாரம் ஒரு முறைச் சாப்பிட்டு வந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்புக் குறையும். 

சில பிளாக்கர்ஸ் மூலிகை, தாவர உணவுகளின் பயன்கள், அடங்கி இருக்கும் சத்துக்கள் பற்றி எழுதி இருக்கின்றார்கள். தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். பல பிளாக்குகளை படித்துப் பார்த்து கடைசியில் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆகா இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறதே என்பதற்காக நம்ப வேண்டியதில்லை. ஒவ்வொரு உடம்பும் வெவ்வேறானவை. எந்த உணவு உங்கள் உடம்புக்குத் தேவை, எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை ஆராய்ந்து உண்ண வேண்டும். 

இந்த பிளாக்கைப் படித்து பாருங்கள். சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். டாக்டர் ஜி.சிவராமன் உடலுக்கு நன்மை தரும் அரிசி பற்றிய எழுதி இருக்கும் பதிவை கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம்.
http://siddhavaithiyan.blogspot.com/2011/06/blog-post_23.html

* * *

Saturday, September 10, 2011

சமையல் செய்வது பெண்களுக்கு அவசியமா?


நானும் நண்பரும் சைட்டுக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, மனைவியை போனில் அழைத்து நண்பரும் சாப்பிட வருகிறார் என்று சொன்னேன். 

சாப்பிட்டுக் கொண்டிருந்த போது “சமையல் எப்படி அண்ணா இருக்கிறது?” என்று நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மனைவி.

“ நன்றாக இருக்கிறதம்மா “ என்றுச் சொன்னவர் தொடர்ந்து சொல்லிய விஷயம் அற்புதம்.

ஒரு கணவனுக்கு மனைவியின் சமையல் நன்றாக இருக்க வேண்டுமே என்று எப்போது கவலை வரும் தெரியுமா? மகள் திருமணமாகிய பிறகு மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வரும் போதுதான் மனைவி நன்றாகச் சமைக்க வேண்டுமே என்று கவலைப்படுவார்களாம். 

மாமியார் வீட்டுக்குச் செல்லும் மருமகன்கள் நன்றாகச் சாப்பிட விரும்புவார்களாம்.மனசுக்குப் பிடித்தச் சாப்பாடு மாமியார் வீட்டுச் சாப்பாடு என்றுச் சொல்லுவார்களாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேறு எங்கும் கிடைக்காத மரியாதை, அன்பு கலந்ந உபசரிப்பு மாமியார் வீட்டில் மட்டுமே கிடைக்குமாம். மருமகனுக்குப் பிடித்தவற்றை வாங்க மாமனார் செல்லுவதும், மச்சான்கள் செல்வதும், பார்த்துப் பார்த்து மாமியார் சமைப்பதும் என்று ஒரு குடும்பமே “மருமகனுக்காக” வேலை செய்யுமாம்.

மருமகனுக்கு பிடித்த உணவை அதிகம் சமைத்து ஸ்பெஷலாக எடுத்து வைத்து விடுவார்களாம். அதுவுமன்றி மருமகன் சாப்பிட்ட பிறகுதான் பிறர் சாப்பிடுவார்களாம்.  மாமியார் வீட்டில் கிடைக்கும் ஸ்பெஷல் மரியாதை, அன்பு கலந்த உணவுகள் என்று தாயாரின் கவனிப்பில் இருந்து வந்தவர்களுக்கு, இன்னொரு தாயாரின் அன்பான உணவினை உண்ணும் பாக்கியத்தினை மருமகன்கள் விரும்புவார்களாம்.

ஒரு மனைவி நன்றாகச் சமைக்கவில்லை என்பது இந்த இடத்தில் தான் பிரச்சினையாகும் என்றுச் சொன்னார் அவர். மருமகனுக்கு மாமியார் வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல் போனால் மாமியார் வீட்டின் மீதான பற்றுதல் குறையுமாம். மனைவி ஏதாவது தவறு செய்தால் கூட, மாமியாரின் வீட்டின் உபசரிப்பை சுட்டிக் காட்டி மனைவியை சீண்டுவார்களாம். இல்லையென்றால் என் அம்மா சமைப்பது போல சமைக்கத் தெரியுதா என்று பேச ஆரம்பித்தால் போச்சு. வினை ஆரம்பித்து விடும்.

ஒரு மனிதனுக்கு கோடி கோடியாய் பணத்தினைக் கொட்டிக் கொடுத்தால் போதாது என்றே சொல்வான். ஆனால் சாப்பாடு விஷயத்தில் அவனால் முடிந்த அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. போதும் என்றே சொல்லுவான். 

சமையல் என்பதில் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன என்பதைப் பாருங்கள். 

வாழ்க்கை வெகு சுவாரசியமானது அதை நேசிப்பவர்களுக்கு அல்லவா?

* * *

Monday, September 5, 2011

குழந்தைகளைக் கொல்லும் உணவுகள்


( இக்குழந்தைகளைப் போல பிறக்கப்போகும் உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் நோயைப் பரிசளிக்க விரும்புவீர்களா? )


இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் மார்க்கெட்டுகளில் விற்றுக் கொண்டிருக்கும் உணவுகள் எந்தளவுக்கு மனிதர்களின் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை உணர முடிந்தது. அதை மூலைக்கு மூலை இருக்கும் மருத்துவமனைகளே சாட்சியம் காட்டுகின்றன. 

அந்தக் கட்டுரையில் தவறான உணவுப் பழக்கங்களால் இந்தியர்களளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் மெட்டபோலிக் சிண்ட்ரோம் என்றுச் சொல்லக்கூடிய இதய நோய்கள், வலி, சர்க்கரை வியாதி மற்றும் ஜெனடிக்ட் பிரச்சினைகளைப் பெறுவதாய் சொல்லி இருக்கின்றார்கள். 

ஒரு லட்சம் பிறந்த குழந்தைகளை ஆராய்ச்சி செய்த போது அதில் 1% குழந்தைகள் மேற்சொன்ன இன்பார்ன் மெட்டபோலிக் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்திய மக்களை மீடியா மூலம் மூளைச் சலவை செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மேலை நாட்டு நாகரீக உணவுப் பொருட்களால், இந்தியாவின் எதிர்கால சந்ததியினர் நோயுள்ளவர்களாய் ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இந்திய மருந்துச் சந்தையில் பெரிய பெரிய மருந்துக் கம்பெனிகளை வெளி நாட்டு பகாசுரக் கம்பெனிகள் விலைக்கு வாங்குகின்றன.

நாகரீகத்தின் பெயரால் இந்திய மக்கள் தங்கள் சந்தோஷத்தை மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் நோயில் தள்ளிக் கொண்டிருக்கும் அவலத்தை என்னவென்றுச் சொல்வது.

பர்கர், பீட்சா, குளிர் பானங்கள், பாக்கெட் உணவுப் பொருட்கள் போன்றவையெல்லாம் இந்திய மக்களுக்கு நோயைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் இந்திய மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

பெரும்பாலும் கணிணித் துறையில் இருப்போரே மேலை நாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணவுகளால் ஜெனடிக்ட் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆரோக்கியமான உணவுகள், பெரும்பாலும் சைவை உணவுப் பொருட்களே உடலுக்கு உகந்தது. இஷ்டத்திற்குச் சாப்பிடுவது, மனதுக்குள் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவது போன்ற தீய பழக்கங்கள் எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடும்.

இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் ஏற்படப் போகும் விளைவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கோயமுத்தூரில் ஒரு தடவை நண்பருடன் காஃபி சாப்பிடச் சென்றிருந்த போது, கேஷியருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

”ஞாயிறுகளில் வீட்டில் யாரும் சமைப்பதே இல்லை போல சார்,  கூட்டம் அள்ளுது, எங்களால் சமாளிக்கவே முடியவில்லை” என்றார்.

சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி ஹியர் ஹோட்டலில் உட்கார இடம் கிடைக்காமல் வரிசையில் நின்று கொண்டிருப்பதை அவ்வப்போது பார்ப்பது உண்டு.

குடும்பங்களின் சந்தோஷங்கள் இப்படியான ஹோட்டல்களில் நிறைவு பெறுவது வருங்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்றுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன எழுத? 

* * *

Tuesday, July 26, 2011

இன்ஸ்டண்ட் லெமன் ஊறுகாய் - பேச்சிலர் ஸ்பெஷல்

கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அவ்வப்போது பொருட்கள் வாங்குவதற்காக செல்வதுண்டு. மனைவியை கொண்டு போய் விட்டு விட்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அங்கே “ஙே” என்று அங்குமிங்குமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். (வேறு வழி!). வாங்குவது என்னவோ குறைவுதான். ஆனால் அதற்கான நேரம் தான் அதிகம். ஒரு பிரட் பாக்கெட் வாங்கி விட்டு கிட்டத்தட்ட 30 நிமிடம் பில்லிங் போட நின்று கொண்டிருந்தார் மனைவி.

அப்படி நின்று கொண்டிருக்கையில் பழக்கமானார் ஒரு ஸ்வீட் மாஸ்டர். ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எதேச்சையாக இன்ஸ்டண்ட் ஊறுகாய் போடுவது எப்படி என்பதைச் சொன்னார். அச்சரம் பிசகாமல் கேட்டுக் கொண்டு, அன்றைக்கே மனைவியிடம் சொல்லி செய்யச் சொன்னேன். படு ரகளையாய் வந்திருந்தது. அதுதான் இங்கே உங்களுக்காக.

  1. இரண்டு எலுமிச்சை பழம்
  2. ஒரு ஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள்
  3. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு ஸ்பூன் உப்பு
  5. இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. ஒரு ஸ்பூன் கடுகு
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை


எலுமிச்சையை நன்கு கழுவி, துடைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய துண்டுகளாய் நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி விடும். நன்றாக வெந்த பிறகு எடுத்து சூடு ஆறிய பிறகு மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கரண்டியால கிளறி வைத்துக் கொண்டு, மீண்டும் அடுப்பில் எண்ணெய்ச் சட்டி வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து அத்துடன் மேற்கண்ட கலவையைக் கொட்டி, கிளறி சூடு ஏறிய பிறகு எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து, மேற்படி கலவையைக் கொட்டி கிளறியவுடனே வரக்கூடிய வாசம் சும்மா ஜிகுஜிகுன்னு ஜொள்ளைக் கிளப்பும்.

இதே போல மாங்காய், மா இஞ்சி போன்றவற்றிலும் செய்யலாம். கை படாமல் எடுத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் தாங்கும். 

கோபமாய் இருக்கும் மனைவியை அசத்த முயல்பவர்கள் மேற்படி ஊறுகாய் சமாச்சாரத்தைப் பயன்படுத்துங்கள். காதலில் இருப்போர் இக்குறிப்பைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்திற்கு உதவும். பெண்களுக்கு இக்குறிப்பு தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்குத்தான் திருமணத்திற்குப் பிறகு ஒரு அடிமை கிடைத்து விடுவானே. பின் என்ன கவலை ?



Monday, July 25, 2011

ஸ்லோ பாஸ்சன் - பிராய்லர் கோழிக்கறி



செட்டி நாடு சிக்கன் 


செட்டிநாடு பெப்பர் சிக்கன்







நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகையினால் நானும் மகளும் சாந்தி கியர் குழந்தைகள் பார்க்கிற்கு சென்றோம். அம்மு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கு எனது நண்பர் வந்தார். கோழிக்கறி பிசினஸ் செய்து வருகிறார். பண்ணையில் இருந்து கோழிகளை வாங்கி, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். 

”வீட்டுக்குப் போகும் போது கோழிக்கறி அரைகிலோ வாங்கனும்” என்றேன்.

”யாருக்கு? அம்முக்கா? “ என்றார்.

“ஆமாம்... !”

“வேண்டாம்.. வேண்டாம் “ என்று அலறினார்.

வாயைக் கிளறினேன். கொட்டினார். இதோ பதிவாய் உங்களுக்காக.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறதாம். விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறதாம். வாக்சின் போடப்படுகிறதாம். நோய் வராமல் தடுக்க மருந்து அடிக்கப்படுகிறதாம். சில கெமிக்கல்ஸ் வேலை செய்யவில்லை என்றால் கோழியின் குடலுக்குள் புழுக்கள் உருவாகி விடுமாம். கிட்டத்தட்ட ஒரு கோழியில் 600 கிராம் கெமிக்கல்ஸ் இருக்குமாம். அதுமட்டுமல்ல பல ஹோட்டல்களில் செத்து போன கோழியைத்தான் வாங்குவார்களாம். பெரிய ஹோட்டலுக்கு மரபணு பிரச்சினை,ஊனமுற்ற கோழிகள் கறியாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறதாம். 

அதுமட்டுமா, முட்டைக்கோழிகளுக்கு முட்டை போட பலவித வளர்ச்சியை ஊக்குவிக்கும் கெமிக்கல்ஸ் கொடுக்கப்படுகிறதாம். நாட்டுக்கோழி என்ற போர்வையில் தற்போது அந்தக் கோழிகளுக்கு கெமிக்கல்ஸ் கலந்த உணவுப் பொருட்கள் கொடுத்து, கடைகளுக்கு கொண்டு வருகின்றார்களாம்.

எனக்கு கிர்ரடித்துப் போய் விட்டது. கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் எவரும் சிக்கனை முகர்ந்துகூட பார்க்கமாட்டார்கள் என்றார். 

ஆட்டுக்கறியில் என்னென்ன கலக்கின்றார்களோ தெரியவில்லை.

பார்க்கிலிருந்து வரும் போது, பாப்கார்ன் ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்தேன். வரும் போது ”அம்மா கோழிக்கறி வாங்கச் சொன்னாங்களே அப்பா” என்று கேட்டுக் கொண்டே வந்தது அம்மு.

பிள்ளைக்கு விஷத்தையா வாங்கிக் கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள். நான் செய்தது சரிதானே ?

* * *



Saturday, June 25, 2011

நோய் ஏன் வருகிறது ?

150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். காற்றைக் கிழித்துக் கொண்டு படு வேகமாய் பைக்கில் பறக்கலாம். ஆகாய விமானத்தில் சாகஜம் செய்யலாம். ஓடலாம், பாடலாம், ஆடலாம் எல்லாம் செய்யலாம். எதுவரையிலும் என்றால் உடல் நலம் கெடும் வரையில்.

பலரும் சொல்லக் கேட்டிருப்போம் ”நல்லாத்தான் இருந்தாரு, திடீரென்று படுத்துட்டாரு”. ஏன் திடீரென்று படுத்து விட்டார்? காரணம் ஏதும் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் இருக்கும். என்ன தான் மருத்துவம் செய்தாலும் சிலருக்கு உடம்பு நோய் தீரவே தீராது. அதற்கொரு காரணத்தை நம் முன்னோர் பாட்டொன்றில் சொல்லி இருக்கின்றார்கள்.

பஞ்சமாபா தகர்க்கும் பழிதனை நினைப்பவர்க்கும்
கெஞ்சியே மருந்துசெய்து கேடுகள் நினைப்வர்க்கும்
அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்கா ரருக்கும்
நஞ்சினும் கொடியவர்க்கும் நாடியபிணி தீராதே

இப்படி ஒரு பாடல் வைத்திய சார சங்கிரகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி ஆட்கள் எல்லாம் கெடுதல் செய்வதையே தொழிலாய் வைத்திருப்பதால், உடம்பைப் பேண மாட்டார்கள். உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும் போது நோய் வாய்ப்பட்டு விடுவார்கள். தீர்க்கவே முடியாத நோய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, செய்த வினையோடு எதிரே நின்று கொண்டிருக்கும்.

வினையைப் பற்றிக் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி ஏன் குறைகிறது? உடம்பிற்கு நோய் ஏன் ஏற்படுகிறது. இரண்டு வழிகளால் தான் நம் உடல் நோயால் பீடிக்கப்படுகிறது. ஒன்று காற்று மற்றொன்று உணவு. நம் உடலுக்குள் செல்பவை இவை மட்டும் தானே ?

செல்லும் காற்றையும், சாப்பிடும் உணவினையும் சரி செய்தால் நோய் விட்டுப் போய் விடும் அல்லவா? ஆனால் அதை இன்றைய காலத்தில் யார் செய்கின்றார்கள்? 

மணமணக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் மசாலா கிரேவி, செட்டி நாடு சிக்கன் வறுவல் என்று சாப்பிடுவோர் என்றாவது ஒரு நாள் மட்டும் தானே சாப்பிடுகிறோம், அதனால் ஒன்றும் தொந்தரவு வராது என்று தனக்குள்ளே நினைத்துக் கொள்வார்கள்.

உண்மை என்ன தெரியுமா? உடம்பிற்கு ஒவ்வாத உணவு உண்ணப்பட்ட பிறகு, அதன் விஷத்தன்மையை உடம்பிலிருந்து வெளியேற்ற உடம்பு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தும். கத்தி, ரத்தம் எல்லாம் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி தான் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தும். இப்படியே நாள் தோறும் போராடிக் கொண்டே வந்தால், உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நோய் வரக்காரணம் காற்றும், உணவும். இதைச் சரி செய்தால் நோய் ஏன் வருகிறது???

நம் உடம்பு ரசாயணத்தினால் ஆன ஒரு கூட்டுக் கலவை. இறைவனின் அற்புதப் படைப்பு. அதை ஒழுங்காகப் பேணி வந்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். கண்டதைத் தின்று திரிந்தால் வரும் விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.

ஒரு கணம் சிந்திப்பீர்.

Wednesday, June 15, 2011

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை



அந்தக் காலத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக சில பழக்க வழக்கங்களை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருவார்கள். உடனடி மருத்துவம் முதல் பல வகையான வழக்கங்கள் வாழையடி வாழையாக வரும். ஆனால் இன்றைய காலத்தில் அதெல்லாம் ஒழிந்து விட்டது. இன்றைக்கு வாழை இலையில் சாப்பாடு பரிமாறுதல் எப்படி என்பதையும், எப்படி உண்பது என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

வாழை இலையில் பரிமாறுதல் எப்படி என்பதினை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

இப்பதிவு எழுத உதவியது : தாவர போஷன சமையல் புத்தகம் - 1978 பதிக்கப்பட்டது.

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.


Sunday, June 12, 2011

கணிப்பொறியாளர்களுக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 3

இன்றைக்கு மூலம் மற்றும் வாய்ப்புண் இவற்றிற்கு என்ன மருந்தினையும் உணவினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலில் வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம். உதடுகளைச் சுற்றி வருவது ஒரு வகை புண். அது வைரஸ்ஸினால் வரும். நோய்தொற்று உடையவர்களிடமிருந்தும், வைரஸ்ஸினாலும் வரும் அத்தொற்றினை நீக்க மருத்துவரைத் தொடர்பு கொள்க. இது உணவினால் உண்டாகும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் பற்றியது.

வாயைத் திறக்க முடியாது, நாக்குகள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். மலம் கழிக்கும் போது எரியும், கடும் நாற்றமெடுக்கும்.மலம் சீதளமாய் வெளியாகும். அடிக்கடி வாயு பிரிந்து அது கொடுமையான நாற்றம் அடிக்கும். இது போன்று இருந்தால் அது உணவினால் உண்டானது என்பதைக் கவனத்தில் கொள்க. கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழம், சில பப்பாளிப் பழங்கள், பாமாயில் எண்ணெய், சில வகை மசாலாக்கள், கெமிக்கல்ஸ் பயன்படுத்திய உணவுகளினால் (பெரும்பாலான ஹோட்டல் உணவுகள்) வரக்கூடிய இந்தப் புண் பெரும் அவஸ்தைகளையும், இப்புண்ணினைக் கவனிக்கா விட்டால் பெரும் பின் விளைவுகளையும் உருவாக்கி விடும்.

இந்தப் புண் வந்தால் அதற்கு ஏகப்பட்ட ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் மருந்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஒட்டுப் போட்ட தார்ச்சாலை போல ஆகி விடும் உடம்பு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது என்று அலட்சியம் செய்தீர்கள் என்றால் உங்களால் அருமையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கூட உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள் இந்தக் காலத்தில். நோயில்லாமல் வாழக் கற்றுக் கொண்டு, பிறருக்கு தொல்லைகள் ஏதும் தரக்கூடாது என்பதை நோக்கமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்படி புண் வந்தால் மாசாக்காய் என்றுச் சொல்லக் கூடிய மாசிக்காயை வாங்கி வந்து உடைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விடுங்கள். ஒரு முழு மாசிக்காய் உங்களின் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் இவற்றை சரி செய்து விடும். இந்தக் காய் கடுமையான துவர்ப்புச் சுவை உடையது. மென்று தின்ன இயலாதவர்கள் காயை அம்மியில் வைத்து தேய்த்து பசை போல எடுத்து அப்படியே விழுங்கி விடுங்கள். தொடர்ந்து காரம், புளி இல்லாத உணவுகளாய் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாய் கோக், பெப்சி, ஹோட்டல் உணவுகள் வேண்டவே வேண்டாம். இந்தக் காய் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்துக் கடை அல்லது மளிகைக் கடைகளில் கிடைக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் போது, லீவுக்கு வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் போது, அம்மா ஒரு மாசாக்காயை வாங்கி வந்து வாயில் வைத்து மிட்டாய் போல சப்பிக் கொண்டே செல் என்பார்கள். கையில் மேலும் இரண்டு உருண்டைகள் வேறினைத் தருவார்கள்.  இரண்டு மாதத்திற்கு சாப்பிட்டுக் கொள்வேன். வாய்ப்புண்ணோ அல்லது வயிற்றுப் புண்ணோ என்னை அண்டவே அண்டாது.  ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டி வந்தால் தயிர் சாதத்தோடு முடித்துக் கொள்வேன். முழுச்சாப்பாடு சாப்பிட்டேன் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் மாசாக்காயில் சிறு துண்டினை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். 

தமிழகம் உணவுப் பழக்கத்தை மாற்றியதால், அரையடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல் எதிர்காலத்தில் வந்து விடும். எதைச் சாப்பிடணும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற அனுப அறிவு இன்றி கண்டதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்ட தமிழக மக்கள் பெரும்பாலானோர் நோயின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களுக்கு இருக்கும் ஆரம்ப கட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினால் விஷ உணவுகள் சாப்பிடும் போது, உடனடி பக்க விளைவுகள் ஏதும் வராது. ஆனால் உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு வரும்.

யாரெல்லாம் கூடிய சீக்கிரம் நோய் வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடலாம். அத்துடன் பெப்சி, கோக், சினாக்ஸ் வகைகளை வெளுத்து வாங்கலாம்.  பின்னர் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாய் அலையலாம். ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது என்றால் கூடிய வரைக்கும் எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

வாய்ப்புண்ணுக்கு ஏற்ற கீரை : மணத்தக்காளிக் கீரை என்றுச் சொல்லும் சுக்கிட்டிக் கீரை. இதனை பொறியல் செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் தீரும்.

விரைவில் மூலம் பற்றியும் அதற்குச் சாப்பிட வேண்டிய உணவினையும் பார்க்கலாம்.

Thursday, June 9, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 2


உடம்பில் சேரும் கொழுப்பு ரத்தத்தில் சென்று சேர்கிறது. தண்ணீர் பைப்பிற்குள் உப்பு நீர் தொடர்ந்து சென்றால் பைப்பைச் சுற்றியும் உப்பு படிந்து பைப்பின் சுற்றளவைச் சுருக்கி விடும். அது போல கொழுப்பு நிறைந்த ரத்தம், நரம்புகளில் உட்புறச்சுவரில் படிந்து ரத்தக்குழாயின் விட்டத்தைப் படிப்படியாக குறைத்து விடும்.ரத்தம் செல்லும் பாதையின் அளவு குறுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், ரத்தக்குழாய் விரிந்து கொடுக்கும் தன்மையானது. இந்தக் கொழுப்பு படிவதால் ரத்தக்குழாய் தடித்து விரைப்பாய் மாறி விடும். உங்கள் கையில் இருக்கும் ஏதாவதொரு நரம்பினை அழுத்தினால் துடிப்பினை நாம் அறியலாம். அந்தத் துடிப்பினை உணர விடமால் ரத்தக் குழாயினை கொழுப்பு அடைத்து விரைப்பாய் மாற்றி விடும். வேறு வழி இன்றி உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த இதயம் படுவேகமாக இயங்கும். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயிலும் கொழுப்பு அடைத்துக் கொண்டால் ரத்தம் வெளியேற முடியாமல் இதயம் மூச்சு வாங்கும் போது நெஞ்சு வலி உண்டாகும். அது தான் ஹார்ட் அட்டாக்.

டாக்டர்கள் பாசையில் சொல்லாமல், அனைவ்ருக்கும் புரியும் படி எழுதி இருக்கிறேன்.இனி கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள் என் இனிய நண்பர்களே !

நாம் கொழுப்பினை மட்டும் தான் சாப்பிடுகிறோம். மட்டன், சிக்கன் மட்டுமல்ல வெள்ளை வெளேர் அரிசியிலும் கொழுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமையலிலும் நாம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் எண்ணெய் போதுமானது என்றாலும் அதற்கு மேல்தான் நாம் சாப்பிடுகிறோம். பால் சாப்பிடுகின்றோம் அல்லவா அதில் இருக்கும் கொழுப்பு மிக அதிகமானது. பால் ஜெரிக்க கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிடிக்கும்.பால் வயிற்றுக்குள் சென்று, திரிந்து பின் தயிராகி அதன் பிறகுதான் சீரணமாகிறது. டீயுடன் வடை சாப்பிடும் போது நம் உடம்பிற்கு தேவைக்கும் மேலான எண்ணெயினை நாம் சாப்பிடுகிறோம். 

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கு, அரிசி வகைகளை சேர்த்துச் சாப்பிடும் போது, மாவு வகைகளான இவைகளிலிருந்து கிடைக்கும் கொழுப்பும் சேர்ந்து விடுகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் “கொழுப்பு” மட்டுமே என்று உங்களுக்குப் புரிய வரும்.

இவ்வாறு சாப்பிடுவதால் தான் உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு மாரடைப்புகள் உண்டாகின்றன என்றுச் சொல்கின்றார்கள்.

கோக் குடிக்கின்றீர்கள் அல்லவா அதில் இருக்கும் சர்க்கரை இருக்கிறதே கொடுமை.இந்தச் சர்க்கரை முற்றிலும் கெமிக்கல்கலால் தயாரிக்கப்படுகிறது.  ஃபாண்டசிக்காக அனைவரும் குளிர்பானங்களை வெளுத்து வாங்குகிறோம். கோக் மற்றும் இதர குளிர் பானங்கள் அனைத்துமே உடலுக்கு மிக அதிக கொடுமை செய்யும் வைரஸ் கிருமிகள். ஆனால் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட குளிர்பானங்களை குடித்துத் தள்ளுகின்றார்கள். அதுமட்டுமின்றி பீட்சா, பர்கர் போன்ற உப்பும், கொழுப்பும் நிறைந்த உணவினை விழுங்கி தன் வாழ் நாளில் ஒரு சில நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ளும் போது, அந்த உணவிற்கு எதிராய் நம் உடம்பு பெரும் போராட்டத்தினை நிகழ்த்தி சரிசம நிலைக்கு வருமாம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உடம்பு போராடும். நம் உடம்பினை நாம் மிகப் பெரிய எதிரியாகக் கருதி தேவையற்ற உணவுகளை நாக்கிற்கு அடிமையாய் மாறி விழுங்கிக் கொண்டே இருக்கிறோம். மனிதன் தன் உடம்பினை மாபெரும் எதிரியாய் நினைத்து, உடம்பினைக் கொல்ல போராடிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? என்ன ஒரு கொடுமையான செயல் இது????

சரி, இனி ரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன உணவினைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

கேரளா பக்கம் சமையலில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். இந்த விஷயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பினை தவிர வேறொன்றும் இருக்காது என்பதையும் தெரிந்து வைத்திருப்பின்றீர்கள். கொழுப்பு நிறைந்த எண்ணெய் கிடைக்கும் இடத்தில், அந்தக் கொழுப்பினைக் குறைக்க இயற்கையே “கொடம்புளி” என்ற புளியை கேரளாக்காரர்களுக்கு வழங்கி இருக்கிறது. இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று. கேரள மக்கள் சமையலில் சேர்க்கும் கொடம்புளி இருக்கிறதே அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினை உறிஞ்சி எடுத்து கொழுப்பினைச் சேர விடாது. 

கொடம்புளியினை ரசமாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிட்டு வர, உடம்பில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ரத்தத்திலிருந்து கொழுப்பு எரிக்கப்பட்டு நீங்கி விடும். இந்தக் கொடம்புளியின் ஆங்கிலப் பெயர் பிரிண்டல் பெரி. இந்தக் கொடம்புளியினைத் தான் வெளி நாட்டுக்காரர்கள் வாங்கி, உடல் குறையும் மாத்திரைகளில் பயன்படுத்துகிறார்கள். கூக்கிளில் தேடிப்பாருங்கள். கொடம்புளியினைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இரண்டே மாதங்களில் உடல் பருமன் குறையும் என்று விளம்பரப்படுத்துகின்றார்களே அந்த மாத்திரைகளில் இந்தக் கொடம்புளிதான் எக்ஸ்ட்ராக்ட் செய்து சேர்க்கப்பட்டிருக்கும்.

உடல் பருமனாய் இருப்பவர்கள். அதிக கொழுப்பு உணவினைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உணவினில் கொடம்புளியினை சேர்த்தால், ரத்தத்தில் கொழுப்புச் சேராது. இதய நோய் வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உடல் உழைப்பு அதிகமில்லாதவர்கள் அனைவரும் இந்தக் கொடம்புளியினைச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள். வாரம் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கொடம்புளி கோவை உக்கடம் புது மீன் மார்க்கெட்டில் இருக்கும் கருவாட்டுக் கடை ஒன்றில் கிடைக்கின்றது. இதன் விலை கிலோ 200 ரூபாய் என்றுச் சொன்னார் அந்தக் கடைக்காரர். அல்லது கொச்சின் பக்கமாய் ஏதும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுங்கள். வாங்கி அனுப்பி வைப்பார்கள். கொடம்புளி ஆரஞ்சு சுளை போல இருக்கும். இந்த சுளையில் இரண்டு கீற்றுக்களை எடுத்து சுடு நீரில் போட்டு வைத்தால் கரையும். ஆனாலும் முழுமையாக கரைந்து விடாது. புளிப்பும், துவர்ப்பும் இருக்கும். ஆரம்பத்தில் தக்காளியை அதிகம் சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறது அதன் சுவை நாக்கிற்கு பழகி விடும். உடம்பிற்கு துவர்ப்பு அதிகம் தேவை என்பதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வழியிலும் வாங்க முடியாதவர்கள், இந்தக் கொடம்புளி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும். கடையிலிருந்து வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கிறேன். தொடர்பு விபரங்கள் தளத்திலேயே இருக்கின்றன.

விரைவில் வாய்ப்புண் ஏற்பட்டால் மாத்திரைகள் ஏதுமின்று சரிசெய்வது எப்படி என்பதையும், மூலம் வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்பதையும் பார்க்கலாம்.


Wednesday, June 8, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 1

கணிணியில் வேலை செய்வோருக்கு உடல் சூடு அதிகம் ஏற்பட்டு விடும். ஏசியில் இருந்தாலும் கூட. குளிர்பானங்கள், நிறைய தண்ணீர் குடித்தாலும் சிலருக்கு அதிக உடல் சூடு உண்டாகி விடும். 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று நினைப்போருக்குத்தான் இந்தப் பதிவு.

வாரம் இரண்டு முறை நற்சீரகத்தைலத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடற் சூடு குறைய ஆரம்பிக்கும். எப்படி இந்த சீரக தைலத்தை தயாரிக்க வேண்டுமென்பதை சொல்கிறேன்.

200 மிலி நல்லெண்ணெயை எடுத்து அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் போது 50 கிராம் சீரகத்தை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து ஆர வைத்து, அதன் பிறகு வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தைலம் தயார்.

வாரம் ஒரு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூல வியாதி வருவதை தடுக்கும் அற்புத உணவு.

உடல் உழைப்பு அதிகமில்லாத காரணத்தால் உடலில் கொழுப்பும் அதிகம் தேங்கி விடும். அவ்வாறு கொழுப்பு அதிகம் உடலில் தேங்க ஆரம்பித்தால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து விடும். உடற்சூடு அதிகமானால் வயிறு கெட்டு, கழுத்து வலி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையெல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உடலில் சேரும் கொழுப்பு எப்படி இருதய நோயினை உண்டாக்கும் என்பதையும், கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையும் நாளைய பதிவில் பார்க்கலாம்.