குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Saturday, November 24, 2018

2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்

கோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை தூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன. 

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம். 

வழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.

பக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் விளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.

கீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்

















வாழ்க வளமுடன் !

Saturday, November 17, 2018

2018 திருக்கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்


அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 

திருக்கார்த்திகை தீப விழா அன்று வெள்ளிங்கிரி மலை மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசித்து, இறை அருள் பெறவும், மன அமைதி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ குருவருளின் ஆசி அருளை அடைந்து மகிழ வருகை தரும்படி அனைவரையும் மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்.

ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி : செம்மேடு தாண்டி பூண்டி வெள்ளிங்கிரி கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகில் இடது புறமாகச் செல்லும் வழியில் உள்ளது ஆசிரமம். அனைவரும் தியானம் செய்து குருவருள் பெற்று, அன்னம் அருந்தி ஆசிகள் பெறலாம். 

தொடர்புக்கு 
ஜோதி ஸ்வாமி - 98948 15954

Wednesday, November 14, 2018

ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி


(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம். 

தீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தார். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது.  உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். 

எனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன்? ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார். 

தொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.

அந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே? எனது தனி மனிதச் சிந்தனை எங்கே? உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது. 

ஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

கர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்தில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு  வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.

உள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.

இந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு? ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.

சரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே
காரிகை யார்கடம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படு மாகாதே
மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே
பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே
பண்டிநன் னாடுடை யான்படை
யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாயிடிலே

இந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.

மேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.

கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்
என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திரும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு பாடலோடு
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆயிடிலே


இதன் அர்த்தம் கீழே !

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ?

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மாறிய எண்ணம் மாற்றிய குரு

ஆற்றங்கரையில் துண்டினை விரித்துப் படுத்து இருந்தேன். அருகில் கருவை மரம். கருவைக்கு இலைகள் சிறிது. நிழல் தரா மரம். அதன் மலர்கள் மஞ்சள் நிறத்தவை. பொசு பொசுவென குமிழாக இருக்கும். அந்த மலர்களில் வாசம் வருமா என்று தெரியவில்லை. தரையில் சிதறிக் கிடந்தன. இடதுபுறம் மலை அருவியிலிருந்து கொட்டிய நீர் செடி கொடிகளுக்குள் புகுந்து செல்லும் சலசல சத்தம். சுற்றி இருந்த மரங்களின் ஊடே உலாவிக் கொண்டிருந்த பறப்பனவைகளின் கூட்டு ஒலிகள். ஆற்றங்கரையோரமாய் இருந்து ஒலித்த மலை மக்களின் குழந்தைகள் தண்ணீரில் விளையாடிய சத்தமும் அதனூடே ஒலித்த ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன.


(சிப்பிப்பாறை ஸேக்கியுடன்)

ஆழ்ந்த அமைதியில் மனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மனமும் புத்தியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். சிந்திக்கச் சொல்லும் புத்தி ஓய்வெடுக்க மனம் வெறும் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ புல்லாங்குழலும் சாரங்கியும் இணைந்த ஓசை வந்தது. அந்த இசை ஈனக்குரலில் இசைப்பது போல இருந்தது.

ஆற்றில் குளித்து முடித்த மலை மக்களின் குழந்தைகள் காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகே மரத்தின் கிளை மீது அமர்ந்து கொண்டு அரும்பு மீசை அரும்பிய இளைஞனொருவன் அரை அடி நீளமிருக்கும் அந்த இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த அமைதியான இடத்தில் ஈனக்குரலோசையில் மனதை தாலாட்டி ஒரு நிலைப் படுத்தும் அற்புதமான அந்த கானத்திற்குள் நான் புகுந்தது. தன்னை மறந்தது. இசை எங்கும் பரவியது.

பேரானந்தம்...!

சாமி ஆசிரமத்திலிருந்து சோறும் குழம்பும் கொண்டு வந்தார்.  ஈரம் மண்டிய சில்லிட்ட தரையில் அமர்ந்து கொண்டு குரு பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிடவும் ஒரு வரம் வேண்டும். அது என்னவோ தெரிவதில்லை. வீட்டில் அறுசுவையாக உணவிருந்தாலும் பத்து கவளம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுகிறது. குரு நாதர் உணவிடும் போது அதிகமாக ஆகி விடுகிறது.

அப்போது அங்கு ஒருவர் வந்தார். சாமியுடன் ஒருமையில் பேசி விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குள் அவர் மீது கொஞ்சம் எரிச்சல் கிளம்பியது. அவர் கிளம்பிச் சென்று விட்டார்.

”சாமி, அவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என்றேன்.

”எதுக்கு ஆண்டவனே வரணும்? அது ஒரு உயிர். அதன் உடம்பும் எண்ணமும் செயலும் பேச்சும் எப்படியோ இருக்கட்டும். ஆனால் அதற்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் உடம்புக்கு அப்படித்தான் பேச முடியும். அதுதான் அதற்குத் தெரியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எப்போதும் கோபமும் எரிச்சலும் வரவே வராது” என்றார்.

ஒரு தடவை ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாயிலில் வங்கு பிடித்த ஒரு நாய் வந்தது. அதன் உடம்பிலிருந்து வேப்பெண்ணெய் வாடை வீசியது. முகத்தைச் சுளித்தேன். சாமி தான் அதன் உடம்பில் இருக்கும் புண்கள் ஆறுவதற்காக அந்த நாயைப் பிடித்து அதன் உடம்பு முழுவதும் வேப்பெண்ணையைத் தடவி விட்டார் என்று சொன்னார் அங்கிருந்த ஒருவர். சாமி எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லையே என்று  அப்போது நினைத்துக்கொண்டேன்.

விடை இன்று கிடைத்து விட்டது.

எனக்குள் இது காறும் அடாது செய்யும் மனிதர்களின் மீதும், அவர்கள் செய்யும் செயல்களினாலும் கோபம் வரும். ஆத்திரம் வரும். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடியில் கோட்டையாக இருந்த அகங்காரம் நொறுங்கியது. மனசு லேசானது.

அன்றிலிருந்து மனிதர்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் பேசும் பேச்சிலிருந்து அவரவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது சர்க்கார் படப்பிரச்சினை நடந்து முடிந்து விட்டது அல்லவா? விஜயும், அரசையும் பகடையாக்கி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட புத்திசாலித்தனத்தை என்னால் உணர முடிந்தது. ஆர்.பி.ஐக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கொரு தீர்வினை எடுக்கும் மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் எனது குரு அவர்களே காரணம். சொல்லிப் புரிவதை விட அனுபவப் புரிதல் மேல். அவ்வப்போது புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மம் நிறைந்த விஷயங்களை எனக்கு புரிய வைத்து அவரின் அன்பு அருளில் நனைய வைக்கும் அந்த மகா சக்தி நிறைந்த அன்பு உள்ளத்துக்கு நானெப்போது செய் நன்றிக் கடனாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.

அவரிடம் நானொரு உதவி கேட்டிருக்கிறேன். செய்கிறேன் என்றிருக்கிறார். செய்வார். அவளைப் பார்க்கப் போகும் அந்த நாள், அந்தப் பேரழகி உடன் உரையாடப்போகும் அந்த நாளே எனது பொன்னாள்.

எனது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

Monday, August 13, 2018

தமிழகம் ஒரு தர்மபூமி

திருவள்ளுவர் !  இதைத்தவிர வேறொன்றினையும் தமிழகம் ஒரு தர்ம பூமி என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதை எவரும் நம்புவதும் இல்லை. ஆனால் இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் காலத்தில் தர்மமாம், அதர்மமாம் என்று கேலி பேசுபவர்கள் அதிகமிருக்கின்றார்கள். புத்தகங்களில் இருப்பவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் அடுக்கடுக்காக காரணங்களை அடுக்குவார்கள். 

இப்படித்தான் கண்ணதாசன் ஆரம்பத்தில் கடவுளே இல்லை என்று கடுமையான நாஸ்திக உணர்வில் கடவுள் மறுப்பு கட்டுரைகளைத் தீட்டி வந்தார். பேசியும் வந்தார். அவரின் கடைசிக் காலத்தில் கண்ணனின் கீதைக்கு உரை எழுதினார். ”கண்ணா ! கண்ணா !!” என்று உருகினார். 

இதை இப்போது எழுதக்காரணம் இருக்கிறது. எழுதத்தான் வேண்டுமா? என்று கூட யோசித்தேன். 

பதினோறு வயசுக் குழந்தையைக் கூட கற்பழிக்கும் காமாந்தகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இன்றைக்கு என்ன? என்பது பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதிகளுக்கு, நின்று கொல்லும் தர்மம் பற்றிய ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

குறுக்கே நூல் போட்டவெனெல்லாம் கடவுள்கள் என்று பேசும் அறிவிலிகள் இங்கு அதிகமிருக்கின்றார்கள். கடவுளையும் காசு பண்ணும் அதிபுத்திசாலி மடையர்களும் இருக்கின்றார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஒன்றுமறியா எதார்த்த மனிதர்களின் சொத்துக்களை உறிஞ்சிக் கொழுத்து காமத்தில் திளைத்து, உலகியல் இன்பங்களை நுகர்ந்து தெரியும் சாமியார்ப்பயல்களும் இங்கு இருக்கின்றார்கள். மதத்தின் பெயரால், வேதப் புத்தகங்களின் பெயரால் கொலை செய்யும் கொடூர மதிபடைந்த மாந்தர்களும் இங்கு இருக்கின்றார்கள். அரசியலின் பெயரால், அதிகாரத்துக்கு வந்து அடாத கொலைகளையும், துடிக்கதுடிக்க பறித்துத் தின்னும் கொள்ளையர்களும் இங்கு இருக்கின்றார்கள். நீதியின் பெயரால் அதிகாரத்திற்கு வரும் நீதிமான்களும் பதவிக்காக தர்மத்தை விற்றுக் காசாக்கும் அற்ப மனம் படைத்த அயோக்கியர்களும் இங்கு இருக்கின்றார்கள். தானொன்றே நிதர்சனம் என்று பேசித் திரிபவர்களும் இங்கு இருக்கின்றார்கள். பேனாவிற்குள் ரத்தத்தையும், நீதியைக்கொன்ற பாதகத்தையும், அரசியல்வாதிக்கும் அடிபணிந்து நக்கி விடும் எச்சிலையும் போட்டு எழுதும் பத்திரிக்காவாதிகளும் இங்கு இருக்கின்றார்கள். எது உண்மை? எது பொய்? என்று உணரா வண்ணம் தீது பேசி, புறம் கூறி வாழ்க்கை நடத்தும் இழிபிறந்தார்களும் இங்கு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அதிகாரமும், அகங்காரமும் அனைத்தையும் மறைத்து விடுவதால் அடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்படியானவர்களின் கடைசி என்ன என்று எவருக்கும் தெரிந்திருக்கப்போவதில்லை. அதைப் பற்றித்தான் இப்போது படிக்கப்போகின்றோம். 

ஆட்டோ ஷங்கர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நமக்கு இப்படி ஒரு முடிவு இருக்குமா? என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஹிட்லர் தன் முடிவு இப்படித்தான் இருக்கும்? என நினைத்தாவது பார்த்திருப்பாரா? உலகையே ஆள நினைத்த நெப்போலியனுக்கும், அலெக்‌ஷாண்டருக்கும் அவர்களின் இறுதிக்காலம் இப்படி ஆகி விடும் என்று தெரிந்திருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரிந்து இருந்தால் எவரும் ஒருவரையாவது நாட்டினைப் பிடிக்கும் ஆசையில் கொலை செய்திருப்பார்களா? 

ஒரு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நான்கு கைகளாலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களைக் குவித்தார். தனது இரண்டு மகன்களும் அவரின் கண் முன்னே காரில் நசுங்கிச் செத்ததைப் பார்த்து பைத்தியமாகிப் போனார். கல்விக்கு காசு வாங்குவது தலைமுறைக்குற்றம். கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அதற்காக காசு வாங்கிக் குவித்த ஒருவர் தன் ஒரே மகனைப் பரிகொடுத்து இன்றைக்குப் படுக்கையில் இருக்கிறார். ஓடி ஓடி, அடித்துப் பிடித்து, அடுத்தவனைக் கெடுத்துப் பிடுங்கிச் சம்பாதிக்கின்றவர்களின் இறுதிகாலம் கொடுமையானதாக இருக்கிறது. வயதானவர்களிடம் பேசிப்பாருங்கள். பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகின்றார்கள். பின்னே எதற்கு ஓடி ஓடி சம்பாதித்தார்கள் என்றால் அப்போது தெரியவில்லை, இப்போதல்லவா தெரிகிறது என்று தத்துவம் பேசுவார்கள். நோயில் வீழ்ந்து நொடிக்கு நொடி அவஸ்தைப் பட்டு அனாதையாகச் செத்துப் போவார்கள்.

பூமி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் அதை ஆளும் ஆட்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டங்களும், அவர்களின் கடைசிக்கட்ட வாழ்க்கை முடிவுகளும் கண் முன்னே சாட்சியாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இத்தனையும் தெரிந்தும் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் அறிவிலித்தனமாகத்தானே இருக்க முடியும்?

அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் காவிரியில் பொங்கி வரும் தண்ணீரை திருப்பி விட முடியுமா? அவர் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக்கூடாது என்று பேசினாரே இப்போது பேசச் சொல்லிப் பாருங்களேன்.

அணையில் இத்தனை அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கக்கூடாது என்று கோர்ட்டில் அடாது செய்தார்களே இப்போது தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அந்த மழையிடம் சென்று அதிகாரத்தைக் காட்ட முடியுமா? கோர்ட்டில் வழக்குப் போட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மழையைத் தடுக்க முடியுமா? குறைந்த பட்ச மனிதாபிமானமும் இன்றி பேசியவர்களுக்கு இப்போது பிறரின் மனிதாபிமானம் தேவைப்படுகிறது அல்லவா? இதுதான் தர்மத்தின் கணக்குத் தீர்க்கும் வழி!

தண்ணீர் - உயிர் நீர். இயற்கையின் அற்புதப் படைப்பு. இயற்கையின் முன்னே மனிதர்கள் எல்லாம் அற்பத்திலும் அற்பமானவர்கள். எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது”

அதைத் தரமாட்டோம் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்போது என்ன பேசுவார்கள்? இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் ஒரு மாநிலமே கடலுக்குள் சென்று விடும். இன்னொரு மாநிலமோ கதிகலங்கிப் போகும். அண்டை மாநிலங்களை நோக்கி நீளும் அவலக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அன்றைக்கு ஆணவக்குரல்கள் ஒலித்தன. இன்றைக்கு அவலக்குரல்கள் எழும்புகின்றன. ஒவ்வொரு  மாநில மக்கள்களையும் தன் சுய நலத்துக்காக பிரித்தாண்ட அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்சியினரை வைத்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்ய முடியவில்லை? உதவுங்கள் என்று அலறுகின்றார்களே ஏன்?

தர்மம் நின்று கொல்லாது. சுத்தமாகத் துடைத்துப் போட்டு விடும். சென்னையில் அட்டூழியங்கள் அதிகரிக்கையில் சுனாமியும் வந்தது. மழையும் வந்தது. சுத்தமாகத் துடைத்து போட்டு விட்டுப் போனது.

இந்தியா தர்ம பூமி. அதில் தமிழகமோ ஆன்மீக பூமி. ஆடும் வரை ஆட விட்டு, பின் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு விடும் தர்மத்தின் கடவுள்கள் உறையும் அற்புதமான பூமி. தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழ மிகத் தகுதி வாய்ந்த அற்புதமான பூமி. வேறு எங்கிலும் தமிழகத்தைப் போன்ற வாழ்விடம் இல்லை.  தமிழகத்துக்கு அடாது செய்தால் படாதபாடுபடுவார்கள் என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழராய் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தமிழனும் வாழ்வான். வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தர்ம பூமியில் பிறந்தவன். அவனின் பாதை தர்மத்தின் பாதை. 

(இக்கட்டுரை யாரையும் எவரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். தர்மத்தின் பாதையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம். நிந்தனை செய்து வாழ்பவர்கள் நித்தமும் சித்ரவதைப்பட்டு சீரழிந்து போவார்கள் என்கிறது தர்மம்)

Friday, August 10, 2018

கண்ணீர்

ஒரு கதை உங்களுக்காக !

சாத்தானை நோக்கி ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். சாத்தான் அவரை ஏறிட்டு என்னவென்பது போலப் பார்த்தான்.

“சாத்தானே! போச்சு! போச்சு!! எல்லாம் போச்சு. யாரோ ஒருவன் உண்மையைக் கண்டுபிடித்து விட்டானாம். அவன் அதை பிறருக்குச் சொல்லி விட்டால் நம் கதி அதோ கதிதான்” என்று கதறினான்.

சாத்தான் அவனைப் பார்த்துச் சிரித்தான்.

”அவ்வாறு கவலைப்பட ஏதும் இல்லை. அந்த உண்மையைக் கண்டுபிடித்தவன் கூட நம் ஆட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அந்த உண்மையை வெளியிட விடாமல் பாதுகாப்பார்கள்” என்றான் சாத்தான்.

“அவ்வாறு நம் ஆட்கள் ஒருவரையும் அங்கு பார்க்கவில்லையே?” என்றான் ஓடி வந்தவன்.

“அவர்களை உனக்குத் தெரியாது. அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் அருகில் அறியவியலாளர்கள். தர்க்கவாதிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பூசாரிகள் போர்வையில் நம் ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவன் உண்மையை உலகுக்குச் சொல்லும் முன்பு, அதைப் பற்றி விவாதிப்பார்கள், ஆராய்ச்சி செய்வார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைத் திணிப்பார்கள். ஆக அங்கே உண்மை காணாமல் போய் இவர்களின் பேச்சுக்களும், ஆராய்ச்சிகளும் தான் வெளியில் வரும். இவர்களைச் சமாளித்து அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் எங்கே வெளியில் சொல்லப்போகின்றான்? இவர்களைச் சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாது. ஆகவே உண்மை வெளியில் போகாது. கவலைப்படாதே. என்றும் நம் ஆட்சி தான் இங்கே” என்றான் சாத்தான்.

ஓஷோ தனது “தாவோ - ஒரு தங்கக்கதவு” நூலில் சொன்ன கதைதான் இது.

அது என்ன தாவோ என்று கேட்கத்தோன்றும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ”அது ஏற்கனவே உள்ளது”. இதைப் பற்றி சீன தேசத்தைச் சேர்ந்த லாஓ-ட்ஸே என்பத்தோரு குறிப்புகளை எழுதி இருக்கிறார். இருப்பினும் தாவோ பற்றிய வார்த்தைகள் அதில் முழுமையற்றவையாக இருக்கின்றன.

Tao - Te Ching - நூலில் இருந்து ஒரு பகுதி
=====================================

Chapter Eighty-one
====================
Words of truth are not pleasing.
Pleasing words are not truthful.
The wise one does not argue.
He who argues is not wise.
A wise man of Tao knows the subtle truth,
And may not be learned.
A learned person is knowledgeable but may not know the subtle truth of Tao.
A saint does not possess and accumulate surplus for personal desire.
The more he helps others, the richer his life becomes.
The more he gives to others, the more he gets in return.
The Tao of Nature benefits and does not harm.
The Way of a saint is to act naturally without contention.

(உங்களுக்கு என் நன்றி லாஓ-ட்சே)

இயற்கையோடு இயற்கையாக கரைந்து போக, வந்த சுவடு கூடத் தெரியாமல், இருந்த இடம் தெரியாமல், வந்தது எப்படியோ அப்படியே சென்று விட வேண்டுமென்று சீனத்திலிருந்து புறப்பட்டு இமயமலைக்கு வந்த லாஓ-ட்சேவை நாட்டின் எல்லைப்பகுதி வீரன் தடுத்தான். அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டுமாயின் அவரின் அனுபவங்களை எழுதிக் கொடுத்த பிறகு அனுமதிக்கும்படி சீன மன்னன் உத்தரவிட்டிருந்ததைச் சொன்னான். லாஓ-ட்சே என்னனென்னவோ சொல்லிப் பார்த்தார். அந்த வீரன் விடுவதாயில்லை. வேறு வழி இன்றி அவனின் கூடாரத்தில் தங்கி மேற்கண்ட புத்தகத்தை அல்ல அல்ல குறிப்புகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார் என்று சொல்கின்றார்கள்.

இப்படித்தான் தாவோவுக்கு புத்தகம் எழுதப்பட்டதாம். தாவோ என்பது இயற்கை. என்றும் இருப்பது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் ஓஷோ.

இயற்கையின் நியதி பிறப்பு - இறப்பு.

கலைஞர் - ஒரு வரலாற்றுப் புதினம். அவரின் வாழ்க்கையே வரலாறு. இவ்வுலகம் சர்வாதிகாரிகளையும், ஜனநாயகவாதிகளையும், கொடுங்கோலர்களையும் வரலாற்றாகப் பதிய வைத்திருக்கிறது. மக்களின் மூளைக்குள்ளே சர்வாதிகாரம், ஜனநாயகம் இரண்டும் எதிர் எதிர் துருவங்களாகப் பதிக்கப்பட்டு வருவதற்கு வரலாறு தான் காரணம். இவற்றை முன்னெடுத்தவர்களுக்கு வரலாற்றின் ஏடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றிய ஒரு தலைவர் மறைந்து போகிறார் என்றால் அது மனிதர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றுதான். இயல்புதான். ஆச்சரியமில்லை. ஆனால் வயதானவர் தன் கடைசி நாட்களை எளிமையாக, எளிதாக, இயல்பாக கடக்க முடியாமல் மருத்துவச் சாதனங்களால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுதான் அறிவியலின் கோரத்தைக் காட்டியது.

அறிவியல் இயற்கைக்கு முரணானது. அறிவியல் மனிதகுலத்துக்கே விரோதமானது. (அறிவியல் இல்லையென்றால் தங்கம் பதிவெழுத முடியுமா? என்று ஆரம்பித்து விடாதீர்கள். இது வேறு, நான் சொல்லி இருப்பது வேறு)

எல்லோரும் கலைஞராக முடியாது. ஒவ்வொருவரும் தனியானவரே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதைச் செய்து அவன் தன் காலத்தை கடப்பான். அதைப் போலவே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது எதுவோ அதைச் செய்து அவர்கள் காலத்தைக் கடப்பார்கள். மனிதன் காலத்தைக் கடந்து செல்வதுதான் முழு வாழ்க்கை. இடையில் இருப்பது அவனின் நாட்கள். அதை இன்பமாகவோ, துன்பமாகவோ அவனின் அறிவுகேற்ப மாற்றிக் கொள்கிறான். அறிவு என்று வந்து விட்டால் துன்பம் தானாக வந்து விடும் என்கிறார் ஓஷோ.

கலைஞர் மறைவைத் தொடர்ந்து காவேரியில் பொங்கிய தண்ணீரை விட அவரின் தொண்டர்களின் கண்ணீரே அதிகமானது. இப்படியும் பிறரின் மனத்துக்குள் ஊடுறுவ முடியுமா? என்று ஆச்சரியம்தான். கலைஞரின் தொண்டர்கள் சிந்திய கண்ணீர் கண்டு உள்ளம் கனத்தது. ஸ்டாலின் அழுதது அவரின் அப்பாவுக்காக. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு தொண்டன் (காவேரி நியூஸ்) அடித்துக் கொண்டு அழுதானே அதைக் காண்கையில் நெஞ்சுக்குள் வலித்தது. அவன் தன் தலைவன் மீது கொண்ட பக்தியை, பாசத்தை நினைக்கையில் பாசம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான மாயவலை என்று அறிய நேர்ந்தது. 

கதையும், அதைத் தொடர்ந்த தாவோவின் பதிவும் இப்போது உங்களுக்குள் ஏதோ குழப்பத்தைனை உருவாக்கி இருக்கும். கலைஞருக்கும், இந்தக் கதைக்கும், தாவோவிற்கும் உள்ள தொடர்புகளையும், கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடந்து வருபவைகளை ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிய வரும்.

இன்னொரு கண்ணீர் கதையை தொடருங்கள்.

ஒரு முறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. மதிய நேரமாகையால் ஒரு ஹோட்டலில் உணவு உண்பதற்காக காரை நிறுத்தினார் நண்பர். நான் காரில் வழக்கம் போல அமர்ந்து கொண்டேன். நண்பரிடம் ’நான்கு கவழம் சோறும், இரண்டு கப் காய்கறிகளும் போதும்’ எனச் சர்வரிடம் சொல்லுங்கள் என்றுச் சொல்லி இருந்தேன். சாப்பாடு கொண்டு வந்தது ஒரு பெண். நான் ஒரு வாரம் சாப்பிடும் சாப்பாட்டினைத் தட்டில் வைத்து குழம்பு, கூட்டு வகையறாக்களை இன்னொரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மலைத்தே போனேன். கையில் கொடுத்து விட்டு விடு விடுவென்று சென்று விட்டார்.

தட்டினை எடுக்க வரும் போது மீதமிருந்த சோற்றினைப் பார்த்து விட்டு, ”இன்னும் சாப்பிடல்லயா?” என்றார். 

 “சாப்டேம்மா, நீதானம்மா உண்மையான அன்னபூரணி” என்றேன்.

“என்ன சொன்னீங்க?”

“அன்னபூரணி”

ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது. அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

“என்னை யாரும் இப்படிச் சொன்னதேயில்லைங்க” என்றுச் சொல்லியபடி தட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றது.

”நீங்க சுத்த மோசம் தங்கம், எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுகின்றீர்கள்” என்று நண்பர் கோபித்துக் கொண்டார்.

கண்ணீர் மனதை லேசாக்கும் காற்றைப் போல. 

காய்த்துப் போன கைகள், கலைந்த கேசம், கருத்துப் போன முகம். ஆனால் அந்தப் பெண்ணின் கைகளோ கர்ணன். பசிக்குச் சோறிடுவது அன்னபூரணிதானே?

உண்மையைச் சொன்னால் உடனே தர்க்கவாதிகளும், வேதாந்த சித்தாந்தவாதிகளும் குறை சொல்ல வந்து விடுகின்றார்கள். நண்பரின் பேச்சை நிராகரித்தேன்.


Tuesday, June 5, 2018

விக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்

எனது நண்பரும் உறவினருமான பெரியசாமி கவுண்டரின் தோட்டத்திற்கு கவுண்டர் அம்மணி ருசியாக சமைக்கும் அரிசி பருப்புச் சாதத்துக்காகவும், கவுண்டர் எனக்காக காரமும் புளிப்பும் சரி சமமாகக் கலந்து வைக்கும் எண்ணை மின்னும் கருவேப்பிலை ரசத்தினை ருசிக்கவும் அடிக்கடிச் செல்வதுண்டு. கவுண்டர் ஒரு பொமேரேனியன் வளர்த்து வந்தார். கூண்டுக்குள் இருக்கும் அது. முகத்தில் கருப்பும், வெள்ளையுமாய் என்னை முதன் முதலாகப் பார்த்த போது கர்ண கடூரமாக ’நீ! யார்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த முறை சென்ற போது விக்கிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொண்டு போனேன். முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். வீட்டுக்கு கிளம்பிய போது மீண்டும் கர்ண கடூரமாக போகக்கூடாது என்று கத்த ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். அந்தப் பக்கம் செல்லும் போது பிஸ்கெட்டோடு தான் செல்வேன். அவனுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு விரலை கம்பிக்குள் நீட்டினால் கழுத்தை கம்பியோடு வைத்து நிற்பான். ஒற்றை விரலால் அவனை தடவிக் கொடுப்பேன். 

என் நண்பர் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல எனது மனையாளையும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிஸ்கெட் போடுவார்கள், என்னென்னவோ சமாதானம் செய்வார்கள். அருகில் சென்றால் கடிக்க உறுமுவான். நண்பர் மட்டுமே என்னை சரிப்படுத்துவார், மனையாள் அடிக்கடி காரத்தை அதிகப்படுத்துவார் அதற்காகவோ என்னவோ அவர்கள் இருவரையும் விக்கிக்கு பிடிக்காது போல.

ஒரு நாள் என்னுடன் கூடவே ஓடி வந்து விட்டான். எனக்குத் தெரியாது. நீண்ட நேரமாக நான் சென்ற வழியில் நின்று கொண்டிருந்தானாம். கவுண்டர் போனில் சொன்னார். கேட்ட எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

(விக்கி)

என் உணர்வோடு உணர்வாக மாறினான் விக்கி. சாப்பிடும் போது அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிட மனது தடை போடும். அவனின் கண்கள் என்னைப் பார்ப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவன் சாப்பிட்டால்தான் மனது நிம்மதியாகும். அது ஒரு உயிர். ஐந்தறிவு கொண்ட அவனின் அளவற்ற அன்பினை எதனால் அளவிட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?

நேற்று பெரியசாமிக்கவுண்டர் வந்திருந்தார் என்னைப் பார்க்க. 

”எப்படி இருக்கான்?” எனக் கேட்டேன். 

”விக்கிச் செத்துப் போயிட்டானுங்க சார்!” என்றார். தெரு நாய்கள் சேர்ந்து கழுத்தில் கடித்துக் குதறி விட்டனவாம். காயங்களோடு கூண்டுக்குள் வந்து படுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தானாம். மயங்கிப் போனானாம். டாக்டரிடம் கொண்டு சென்றாராம். இறந்து விட்டானாம்.

இரண்டு நாட்களாக மனம் பாரமாய் கிடக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. என்ன செய்வது எனப் புரியவும் இல்லை. 

‘அடேய் விக்கிப்பயலே! எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம் மேல் உலகத்தில் தான் இருக்கான். அவனும் நானும் சேர்ந்து மகிழ்வோடு புகைக்க சிகரெட்டோடு பூமியில் என் காலம் முடிந்த பிறகு வருவேன். அத்துடன் உனக்குப் பிடித்த பிஸ்கெட்டோடு அங்கே உன்னைப் பார்க்கிறேன். உனது அழகான கழுத்தில் உனக்குப் பிடித்தமாதிரி என் விரல்களால் அலைந்து விடுகிறேன். உன் அன்பான வெது வெதுப்பான கழுத்தின் சூடு என் விரலில் பரவட்டும். எனக்காக காத்துக் கொண்டிரு’

நிற்க.

(என் இனிய ரூடோஸ்)

கடந்த வாரத்தில் ஒரு நாள் விடிகாலையில் ரூடோஸ் கத்திக் கொண்டிருந்தாள். காருக்கு அடியில் ஒரு குட்டி படுத்திருந்தது. அது அவளின் ராஜ்ஜியம். நாங்கள் அவளின் அன்பிற்கு அடிமைகள். அவளின் ராஜ்ஜியத்துக்குள் எவருக்கும் அனுமதி இல்லை. அந்தக் குட்டியினை ரித்திக்கும், நிவேதிதாவும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ரூடோஸ் கடுப்பில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் குரைத்ததன் எச்சில்கள். கண்கள் அகல குரைத்தாள். என்னால் அவள் படும் வேதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் குட்டியை எங்கோ கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ரித்திக். வந்தவன் சும்மா இருக்காமல், ‘அப்பா! அதை விட்டு விட்டு வந்ததும் ஓடி வந்து காலடியில் நின்று கத்தியதுப்பா?’ என்றான். 

அன்று முழுவதும் ரூடோஸ் சாப்பிடவில்லை. மாலையில் அவளை அருகில் வர வைத்து தடவிக் கொடுத்து சமாதானம் சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். அவளின் முகம் வாடிக் கிடந்தால் உள்ளத்தில் சோகம் படர்கிறது. அவளின் வாழ்வு பதினைந்து வருடம் இருக்கலாம். தொழில் ரீதியான பயணங்களும், எனக்கான ஓய்வும் அவளோடு நான் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது..இனி வரும் இந்த நேரக்குறைவு காலகட்டம் என் முன்னால் வந்து நின்று என்னை அடிக்கடி சோகத்தின் பிடியில் தள்ளுகிறது. அவளின் மீது எல்லையில்லா அன்பு கொப்பளிக்கிறது. 

நிற்க

சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பசங்களோடு பார்ப்பதுண்டு. மனையாளுக்கு ராஜியை ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அவரின் குரல் பிடிக்காது. செந்திலின் குரல் கவனிக்க வைக்கும் அளவுக்கு காந்தமுள்ளது. அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டேன். திடீரென ஒரு சனி அன்று ”ஏங்க, இந்த நிகழ்ச்சியில் யார் பாடுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?” என்று கேட்டார் மனையாள். அன்று சனிக்கிழமை என்பதை மறந்து போனேன். விதி வலியது என்பார்களே அது அடிக்கடி என் வாயில் வந்து விழும்.

வழக்கம் போல, “ஸ்வேதா மோகன்” என்றேன். 


”அதானே, என்ன அதிசயமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  அதான் காரணமா?” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் சென்றார். அன்றைக்கு சட்டினியில் காரம் அதிகமாயிருந்தது. 

சனி தன் வேலையைக் காட்டி விட்டான். சனிக்கிழமை அதுவுமாக சூனியம் வைத்துக் கொண்டேனே ?????????? 

Monday, June 4, 2018

நிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது

நில உச்சவரம்புச் சட்டத்தினைக் கையில் எடுத்து வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது தமிழக அரசு. செய்தி வெளி வந்து விட்டது. இனி எவரும் ஏக்கர் கணக்கில் சொத்துக்களைக் குவிக்க இயலாது. டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு உண்டு எனினும் அதற்கான அப்ரூவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே அப்ரூவல் பெற்றாலும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாகத்தான் கருதப்படுமே தவிர தனியார் நிலமாக இருக்காது. 

அதுமட்டுமல்ல இது போன்ற கம்பெனியின் கீழ் இருக்கக் கூடிய நிலங்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்குதல் அவசியம். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியும், இது பற்றிய விவரங்கள் தெரிந்த நல்ல ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே அது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி டிரஸ்ட் கீழ் வரக்கூடிய பூமிகளை வாங்குவதற்கும் ஏகப்பட்ட சட்ட விலக்குகள் தேவை என்பதையும் கவனத்தில் கொள்க. யாருக்கு எங்கே எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்கவும் வழிகள் உண்டு. நன்கு ஆலோசித்த பிறகே இது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதினை மறந்து விட வேண்டாம்.


இதோ கீழே தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி உங்களுக்காக.

நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 


குறிப்பு : ஒரு குடும்பத்திற்கு 60 ஏக்கர் என்பதன் கணக்கு வேறு. அரசு வைத்திருப்பது தர ஏக்கர் கணக்கு என்பது வேறு. 60 ஏக்கர் எனக் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் கணக்கு. ஊருக்கு ஊர் இந்த ஏக்கர் வித்தியாசப்படும் என்பதினைக் கவனத்தில் கொள்க.

Saturday, June 2, 2018

சம்பளமில்லா வேலைக்காரர்கள்

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. முன் காலத்தில் உள்ள எதார்த்தமான மனிதர்களை இனிக் காண இயலாது. எங்கும் பணம், எதிலும் பணம், பகட்டு இருந்தால் தான் சக மனிதனை மதிக்கின்றார்கள். திருடனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் சமூகத்தில் மரியாதை. அவன் திருடன் என்பது அல்ல பிரச்சினை. பணம் யாரிடம் இருக்கிறது? அவனை மதி, அவன் உயர்ந்தவன் என்கிறது சமூகம். அதை மதிக்கும்படியான மூளைச் சலைவகளை வீட்டுக்குள் இருக்கும் டிவி சைத்தானும், தினசரி சைத்தான்களும் செய்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் தர்மம், நியாயங்கள் இருக்கின்றன. நீ வாழ பிறரைக் கெடு என்கிறது அரசியல். பதவியில் அமர என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது அரசாங்கம். இங்கு மக்கள், அவர்களுக்கான துன்பங்கள், துயரங்கள் பிரச்சினையே இல்லை. பணம் தான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையாக, மூலமாக, ஆணி வேராக இருக்கிறது. பணமிருந்தால் போதும் கொலை செய்து விட்டு சட்டத்தின் எந்த பிடிக்குள்ளும் சிக்காது சிங்காரமாக வாழலாம். மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்தால் வளையாத எதுவும் வளைந்து நின்று சல்யூட் அடிக்கும். அது சட்டமானாலும் சரி, அரசானாலும் சரி, மக்களானாலும் சரி. ஓட்டுப் போட வைக்கவும் பணம் தான் தேவை. பணம் கொடுக்கின்றார்களா அவன் திருடனே ஆனாலும் சரி, வெற்றி பெற வைக்கும் மக்களின் மனோபாவம் மாறி விட்டது. 5 ரூபாயில் ஆரம்பித்த ஓட்டுக்குப் பணம் இப்போது பத்தாயிரமாக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு லட்சம் கொடுப்பார்கள். 

தரமற்ற காண்ட்ராக்ட் வேலைகள், மக்கள் பணத்தை உறிஞ்சும் கார்ப்பொரேட் நிறுவனங்கள், லஞ்சம் பெறுவதே லட்சியம் என வாழும் அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் என மொத்த இந்தியாவும் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. 

வளர்ந்து வரும் அறிவியல் துணைகொண்டு மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிப் பேச வேண்டும், எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களை குழுக்களாக, ஜாதிகளாக, அமைப்புகளாக, பிரச்சினைகளோடு போராடுபவர்களாக அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கின்றன. தேர்தல் வரும் போது அவர்கள் ஒன்று கூடி பதவிக்கு வந்து விடுவார்கள். 

மனித வளத்தை எப்படி காசாக்குவது என்பதைப் பற்றிய சிந்தனைகளும், மனித மனத்தை தன் நோக்கி எப்படித் திருப்பிப் பயன் அடைவது என்பதற்காக முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. யாரை ஜெயிக்க வைக்க வேண்டுமென கார்பொரேட் மூளைகள் சிந்தித்து கோடிகள் பெற்றுக் கொண்டு மக்களின் மனத்தில் ஊடுறுவுகின்றார்கள். மக்களும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்கும் திறனன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சாமியார்களும், அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய பலாபலன்களைக் காரணம் காட்டி அடிமை வம்சங்களை உருவாக்கி சம்பளம் தராத பணியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருக்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் அமைதி என்கிற தத்துவத்திற்காக சாமியாருக்காக உழைக்கின்றார்கள் ஒரு கூட்டம். 

கோவில் என்கிற பெயரில், பக்தி என்கிற தத்துவத்தில் உழைக்கும் பணத்தை சுரண்டுகிறது இன்னொரு கூட்டம். 

பதவி என்கிற மயக்கத்தில் மாமா வேலை கூடச் செய்ய அரசியல் எனும் பொதுத்தத்துவதிற்காக காசில்லா வேலைக்காரக் கும்பல்களை உருவாக்கி உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம். 

பதவியும், அதிகாரமும், கொழுத்த பணமும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கு மட்டுமே. வேலை செய்யவும், கோஷம் போடவும், வீசும் காசினைக் கவ்விக் கொள்ளும் நாயாகவும் இருக்க மட்டுமே உனக்கு தகுதி எனச் சொல்லி கும்மாளம்மடித்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.

சட்டங்கள் இருக்கின்றன என்று மக்களை நம்ப வைக்க அவ்வப்போது ஊழல் எனப் பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து விட்டது என காட்டுவார்கள். கொழுத்த ஊழல்வாதிகள் சட்டத்தாலும் எவராலும் கண்டு கொள்ளாமலே ஓய்வு பெறுவார்கள். 

தர்மம், நியாயம், நீதி எனப் பேசுபவர்கள் இவை எதையும் கடை பிடிப்பது இல்லை. தனி மனிதனுக்கு ஒரு நியாயம், நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்று பத்திரிக்கைகள் சொல்லும். அது தான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும். அதைப் பற்றி ஒரு கூட்டம் பேசும், எழுதும், கத்தும், திட்டும்.  நீதி பிறழ்வதும், கொள்கை மாறுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பார்கள். தனி மனிதனுக்கு எனில் கடவுள் தண்டிப்பார் என்பார்கள். இப்படியெல்லாம் எதைப் பற்றியும் நேர் வழி சிந்திக்க விடமாட்டார்கள். இப்படியெல்லாம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது இப்போது மட்டும் நடப்பது அல்ல. மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர்கள் இவைகள்.

காலம் போன நேரத்தில் உடம்பு ஒத்துழைக்காக நேரத்தில் எல்லாவற்றையும் அசை போட்டு அழுது கொண்டிருக்கும் கூட்டத்தார் பெருகி இருக்கின்றார்கள். அறுபது வயதா ஓடிப்போ என மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் மருத்துவத்துறையினரும், அரசும்.

யாரைப் பற்றிப் பேச வேண்டும், எவரைப் பற்றி எழுத வேண்டுமென ஃபேஸ்புக், டிவிட்டர்கள் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். எந்த வித பணமும் இன்றி, செலவும் இன்றி நாமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம் யாருக்காகவோ. நமக்காக நாம் எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமைகள் நாம்.

சம்பளமே இல்லாமல் பிறர் உயரவும், வாழவும் இணையத்தில் காசைக் கரியாக்கி உழைப்பினைக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

சிந்திக்க வேண்டுகிறேன். நமக்கான வாழ்க்கையை நாம் வாழ இப்படியான வேலைகளை, அலப்பறைகளை ஒதுக்கி விட்டு வாழ்வோம் வாருங்கள் !!







Monday, April 16, 2018

குருசாமிகவுண்டருக்காக கருப்பசாமியின் கண்ணீர்

கடந்த வாரம் கோவையில் வெயில் உயிரினங்களை வறுத்தெடுத்தது. சூடு தாங்க முடியவில்லை. உடலெல்லாம் புசுக் புசுக்கென கட்டிகள் தோன்றின. லிட்டர் லிட்டராய் தண்ணீரைக் குடிக்க வேண்டியதாகி விட்டது. முன்பெல்லாம் இப்படி கோவை இருந்தது கிடையாது. வெயில் அடிக்கும், ஆனால் சுடாது. வர வர கோவை கொதிக்கிறது. காவிரியாலா அல்லது வெப்பச்சூடாலா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்குத் தீர்க்கவே முடியாத இடியாப்பச் சிக்கல்களை உருவாக்குவது உறவினர்கள் தான். வாழ்ந்தாலும் ஏசுவார்கள், தாழ்ந்தாலும் ஏசுவார்கள். ஆக அவர்களுக்கு குறை சொல்லித்தான் வழக்கம். தங்கத்தட்டில் வைத்து சாப்பாடு பரிமாறினாலும் தட்டு நெளிந்திருக்கிறதே என்றும் குறை சொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் வெம்மையில் வெம்பிக் கிடப்பதால் வாயில் வரும் வார்த்தைகள் வன்மத்துடன் வெளிவரும். இப்படியானவர்களால் தான் பல குடும்பங்களுக்குள் குத்து வெட்டு என்று கூட நடக்கிறது. பைசாவுக்கும் பிரயோஜனமல்லாத பிரச்சினைகள் கோர்ட்டு வரை வந்து நின்று கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரவர்களுக்கு மறந்து போன விஷயம் அவர்களின் மரணம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்று தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வது போல செம கெத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

விளாங்குறிச்சியில் எனக்குத் தெரிந்த, பழக்கமான ஒரு கவுண்டர் இருந்தார். அவர் ஒரு விவசாயி. எதார்த்தவாதி. தன் அப்பாவுடன் பிறந்த பெண்களுக்கு சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்தவர். அந்தளவுக்கு தன்மையானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சத்தம் போட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். பெரும்பாலும் தென்னைத் தோப்பில் களைகளுக்கு மருந்து அடித்துக் கொண்டும், தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டும், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும் இருப்பார். அவர் வீட்டுக்குச் சென்றால் வரவேற்று எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மீது எனக்கு கொஞ்சம் பிரியம் சாஸ்தி. இறந்து போன எனது சித்தப்பா குருசாமி போலவே இருப்பார் அவர். அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சிரித்து நலம் விசாரிப்பார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக செய்தி கிடைத்திட அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அருகில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு அமர்ந்து கொண்டு,”டாக்டர் இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் வேலை செய்வேன்” என்றுச் சொல்லிச் சிரித்தார்.  அவரின் முகம் களையிழந்து கிடந்தது. மருத்துவமனையின் வாசமும், மருந்துகளின் தாக்கமும் அவரின் பொலிவைக் குறைந்திருந்தன. முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒளிந்து கொண்டது. அதற்குள் உறவினர்கள் வரிசைக் கட்டி நிற்க, அவரிடமிருந்து விடை பெற்றேன். நோயுடன் போராடுவது ஒரு பிரச்சினை என்றால், உறவினர்களுக்குப் பதில் சொல்வது மற்றொரு பிரச்சினை.

மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மனது இருப்புக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றேன். உறவுகளின் கூட்டமும், அக்கம் பக்கத்தார், பழக்க வழக்கங்கள் உள்ளோர், நண்பர்கள், வேலைக்காரர்கள் என கூட்டம் வர ஆரம்பித்தன. உறவுகள் அழுது கொண்டிருந்தனர். ஒரு சிலர் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். அவரின் மீது போட்டு, கும்பிட்டு விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தாற்போல அங்கு வந்திருந்த அனைவரின் முகங்களும் வீங்கி இருப்பதைப் போல தெரிந்தது. எனக்குள் வருத்தம் மண்டிக் கிடந்தது. அயர்ச்சி அடைந்தது உள்ளம். அழுகுரல்களின் ஒலி அவ்வப்போது மனதைக் கனக்கச் செய்து கொண்டிருந்தன. 

இந்த பூமி எத்தனையோ உயிர்களைத் தாங்கி இருக்கிறது. இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் காற்றுப் போனவுடன் அழுகி விட ஆரம்பிக்கிறது. உடல் நாற்றம் வீசுவதற்குள் பூமிக்குள்ளோ அல்லது நெருப்பிலோ எரிக்கப்படுகிறது. அத்தனை ஆசைகளும், கோப தாபங்களும் காற்றுப் போன அடுத்த நொடியில் காணாமல் போய் விடுகின்றன. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். படுக்கையில் உயிரோடும் உடம்போடும் போராடிக் கொண்டிருப்பார்கள். எழுந்து நடமாட முடியாது. கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள். ஆனாலும் உயிரை இழுத்துக் கொண்டு கிடப்பார்கள். உயிரின் மகிமை அது. உடம்பின் சுகம் அது. அவ்வளவு எளிதில் உயிர் உடம்பை விட்டு விட்டுப் போகாது. ஒரு சிலருக்கு மரணம் என்பது நொடியில் வலியின்றி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வந்து விடும். இப்படியான மரணங்களை நல்ல சாவு என்பார்கள். கவுண்டருக்கும் நல்ல சாவுதான் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது வயதான ஒருவர் வாயில் துண்டைப் பொத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய என்னருகில் வந்து நின்று கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அவரின் கண்ணீர் என்னைப் படுத்தியது. அவரின் தோளைத்தொட்டு அருகில் அழைத்தேன். 

“என்னைத் தொடாதீர்கள்” என்றார் அவர்.

“ஏனய்யா?” என்றேன்.

”அரிஜன்!” என்றார்.

எனக்குள் எரிச்சல் மண்டியது. அவரின் வயது அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டியது. அந்தக் காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். அது அவரின் குற்றமல்ல, அவரின் பழக்கம். 

அவரை அருகில் அழைத்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஏன் இப்படி அழுகின்றீர்கள்? கவுண்டரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“பதினைந்து வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவர் வீட்டின் வேலைக்காரன் நான். வயதாகியதால் தான் என்னால் வர முடியவில்லை. அவர் எனக்குக் கொடுக்கும் மரியாதையும், அவரால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் நினைத்தேன் அழாமல் இருக்க முடியவில்லை” என்றுச் சொல்லி மீண்டும் அழுதார்.

அவரை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து, “இதோ என் வீடு இருக்கிறது. கவுண்டர் இல்லைன்னா என்னா? நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆற்றுதல் படுத்தினேன். கொஞ்சம் சரியானார். 

இறந்து போன குருசாமிக் கவுண்டருக்காக அவரின் வேலைக்காரர் விட்ட அந்தக் கண்ணீர்த்துளிகளில் மறைந்து கிடக்கிறது அவர் வாழ்ந்து சென்ற வாழ்க்கை.

* * *
16/04/2018

Saturday, March 31, 2018

ராமசாமி அய்யா - ஒண்டிப்புதூர்

ஒண்டிப்புதூரில் வசித்து வந்த போது விடிகாலையில் குளித்து விட்டு வாசலில் அமர்ந்திருப்பேன். நெடு நெடுவென உயரம். வலது தோளில் வெண்மையான துண்டு, வேஷ்டி அணிந்து, இடது கையில் ஒரு தூக்கு வாளியுடன் வெண் தாடியுடன் ஒருவர் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக நடந்து செல்வார்.  தினமும் பார்ப்பதுண்டு. ஒரு சில நாட்களில் வண்டியில் வரும் போது எதிரில் வருவார். யாரோ ஓய்வு பெற்ற வாத்தியார் போல என நினைத்துக் கொள்வேன். 
(குஸ்தி வாத்தியார் தண்டபாணி மற்றும் ராமசாமி அய்யா)

நான்கு வருடங்களுக்கு முன்பு ஜோதி ஸ்வாமி ’குருநாதரின் நினைவு தினம் ஒண்டிப்புதூரில் நடக்கிறது’ எனச் சொன்னார். நான் மட்டும் விசாரித்துக் கொண்டு சென்றால் அங்கே வெண்தாடிப் பெரியவரின் புகைப்படம் இருந்தது. சாமியிடம் கேட்டால் ”அவர் தான் எனக்கு பயிற்சி அருளிய குருநாதர்” என்றார். எனக்குள் பச்சாதாபம் மண்டிக்கொண்டது. கண் எதிரில் நடமாடியவருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற ஏக்கமும் எனக்குள் நிறைந்தது. வருடம் தோறும் குருபூஜை நடக்கும், நானும் செல்வதுண்டு. அங்கு பலரும் வருவார்கள். அது பற்றி நான் ஏதும் விசாரித்துக் கொள்வதில்லை. நான் எதற்குச் சென்றோனோ அந்தக் காரியத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுவேன்.

இந்த வருடம் வெள்ளிங்கிரி சுவாமியின் ஜீவசமாதியில் ராமசாமி அய்யாவின் குருபூஜை நடந்தேறியது. நானும் மனையாளும் காலையில் ஆறு மணிக்கே கிளம்பி விட்டோம். கூட்டு தியானம் முடிந்து, அன்னதானம் நடந்து. உணவு அருந்திய பிறகு அங்கு வந்த அன்பர்களுக்கு ஒருவர் தன் பிள்ளையுடன் ஓடியாடி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். 

வீட்டுக்குத் திரும்பினேன். அந்த உணவு பரிமாறியவர் பற்றியும் ராமசாமி அய்யா பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து ஜோதி சுவாமிக்கு அழைத்தேன்.

முதலில் உணவு பரிமாறியவர் பற்றிச் சொல்லி விடுகிறேன். அவரின் பெயர் மூர்த்தி, ஒண்டிப்புதூரில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வெள்ளியன்றும் கடையை மூடி விடுவாராம். கோவையில் இருக்கும் ஒவ்வொரு அனாதை ஆசிரமத்திற்கும் சென்று இலவசமாக அங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு முடி திருத்தி விடுவாராம். திருவண்ணாமலை வரைக்கும் அன்னதானம், உப்பு, உணவு பொருட்கள் என கொண்டு போய் கொடுத்து வருவாராம். ராமசாமி அய்யாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். ஒவ்வொரு குருபூஜை அன்றும் அவரை நான் சந்திப்பேன். வணக்கம் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். ஆர்ப்பாட்டமில்லாத மனசு. நானெல்லாம் அவரின் முன்னே தூசுக்கும் சமமானவன் இல்லை. 

இனி ராமசாமி அய்யாவின் வாழ்க்கையைப் பற்றிச் சுருங்கப் பார்க்கலாம். ராமசாமி அய்யாவின் தந்தையாருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவியின் மூத்த குமாரன் ராமசாமி அய்யா. இவருடன் சேர்ந்து மொத்தம் 16 பேர் வாரிசுகள். பதினைந்து பேருக்கும் உணவிட்டு, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்த பிறகு பார்த்தால் உலகில் இருக்கும் நோயெல்லாம் இவரிடம் வந்து விட்டது. மருத்துவர்கள் இன்னும் ஒரு மாதமே உன் ஆயுள் என்றுச் சொல்லி விட, சொத்து பத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு திருச்சி பக்கம் சென்று விட்டார். அங்கு யாரோ ஒரு பெரியவர் இவருக்கு வாசியோகப்பயிற்சியை பயிற்றுவித்து தொடர்ந்து பயிற்சியைச் செய்து வரும்படி சொல்லி இருக்கிறார்.

ராமசாமி அய்யாவும் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வர நோயின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. விடாமல் பயிற்சியினைத் தொடர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடம்பிலிருந்த நோய்கள் விடுபடத்தொடங்கின. பயிற்சியின் போது அவருக்குள் பல்வேறு விடயங்கள் தெளிவாகத் தொடங்கின. அதுவரையில் பல இடங்களுக்குச் சென்று வருவதும், தியானம் மேற்கொள்வதுமாக இருந்தவர், மறைபொருள் மூடியிருந்த திரை விலக விலக தன்னை ஒண்டிப்புதூரில் ஒரே இடத்தில் இருத்திக் கொண்டார்.

தன்னைத் தேடி வருபவருக்குப் பயிற்சியினைக் கொடுத்து வழி நடத்தி வந்திருக்கிறார். காலையில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அருகில் சென்று பசும்பால் வாங்கிக் கொண்டு வருவாராம். உடைத்த கோதுமை ரவையை வேக வைத்து, அதனுடன் பாலைச் சேர்த்து கொதிக்க வைத்து கஞ்சியாக்கி, உப்பின்றி, இனிப்பின்றி உணவு எடுத்துக் கொள்வாராம். அவரிடம் வரும் சீடர்களுக்கும் இதே உணவுதான். விரும்பினால் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளச் சொல்வாராம்.

பதினாறு பேரில் முதல்வராகப் பிறந்து குடும்பப்பாரத்தைச் சுமந்த அனுபவத்தால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருக்கு என இருந்த ஒரே ஒரு சொத்தையும் அவர் ஜீவனை உடம்பிலிருந்து உகுத்த அன்றே விலை பேசி விற்று விட்டார்களாம் அவரின் உறவினர்கள்.

29.03.2018ம் தேதியன்று நடந்த குருபூஜை அன்று அவரின் உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் தான் உறவினர்கள்.

எனக்குத் தெரிந்த வகையில் உறவுகள் கொண்டாட்டத்திற்கும், கடைசிக் காலத்தில் வந்து செல்லவும் மட்டுமே பயன்படுவார்கள். இடையில் வரும் நண்பர்களில் நல்ல நண்பர்கள் வேண்டுமெனில் அவர்கள் காலம் முடியும் வரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

வாழ்க்கையே ஒரு மாயை என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். பதினைந்து குடும்பங்களை உருவாக்கியவரின் நினைவு நாள் அன்று கூட, அவரால் வாழ்க்கை பெற்றவர்களால், அவரை நினைத்துப் பார்க்காத தன்மை விந்தையானது இல்லை.  அவ்வாறு நடந்திருந்தால் அது மெச்சத்தக்க வேண்டிய நிகழ்வாகி விடும். மனிதர்கள் என்றுமே மனிதர்கள் தான். எப்போதும் அவர்கள் மாறப்போவதும் இல்லை, துன்பங்களில் இருந்து விடுபடப்போவதும் இல்லை.



Thursday, March 22, 2018

புண்ணியம் நல்லதா? கெட்டதா?

அடியேன் ஓஷோவைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. இங்கிருப்பதை அவர் மொழியில் சொல்லி இருக்கிறார். அதையே அப்படியே தன்மை மாறாமல் வெள்ளிங்கிரி மலையைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஒருவரும் தன் பிளாக்கில் எழுதி வைத்திருக்கிறார் இப்படி.

பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்? 

அவரின் பதில்: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.

யார் அந்த மற்றவர்கள் என்று விளக்கம் கொடுக்கவில்லை இவர். என்னுடன் மஹாசிவராத்திரி அன்று அமர்ந்திருந்தால் ஈஷனையே அடையலாம் என்றுச் சொன்னவர் அதற்கான சாட்சியைக் காட்டி இருக்க வேண்டும். 

சிவராத்திரி அன்று தான் என்னை அடையலாம் என்று என்றைக்கு ஈஷன் வந்து யாரிடம் சொன்னான் என்று எனக்குக் கொஞ்சம் சாட்சியாய் காட்டுங்களேன் என்று கேட்டால் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எவரிடத்திலும் பதில் இருக்காது. அந்தப் பாடலில் சொல்லி இருக்கிறது, இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, வேத(னை)த்தில் சொல்லி இருக்கிறது என்றெல்லாம் குப்பைகளை அவிழ்த்து விடுவார்கள்.

பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை என்றால் உலகம் ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவர் சொல்வாரா? 

விருப்பத்துடனே உறவு வைத்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்கிறார் ஒரு சாமியார். நான் பிரமச்சாரி என்று அடிக்கொரு தடவை முழங்கிக் கொண்டிருந்தவர் இப்போது உறவு கொள்கிறேன் என்கிறார். இவர்கள் தான் ஆன்மீகத்தை வளர்க்கின்றார்கள். இவர்களைப் பின்பற்றிச் செல்லும் உபதேசம் பெறுபவர்களின் புத்தி என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால் அவர்களின் முட்டாள் தனம் தான் வெளிப்படுகிறது.

எது சரியான வழி என்று கண்டுபிடிப்பதற்குள் மனிதனுக்கு ஆயுள் முடிந்து விடுகிறது. கடைசிக் காலத்தில் கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது. காடு வா, வா என்று அழைத்துக் கொண்டிருக்கும். 

இந்த அக்கப்போரெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

புண்ணியம் சேர்த்து வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தர்மம் செய்தால் புண்ணியம் சேரும் என்பார்கள். தெருவுக்குத் தெரு, கோவிலுக்குக் கோவில் அன்னதானம், உதவி என்றெல்லாம் மக்கள் தர்மம் செய்து, அவரவர் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் திருப்பதி வெங்கடாஜலபதி, பழனி முருகன் ஆகியோர்களுக்கு உண்டியல் போட்டு புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து (ஒரு நாள் விரதம்) ஐயப்பனை தினமும் நெய்யில் குளிக்க வைத்து அவரின் கொலெஸ்ட்ரால் லெவலை அதிகமாக்கி, தங்கள் புண்ணியக்கணக்கில் வரவுகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார் வகையறாக்களுக்கு மாதம் தோறும் பணம் செலுத்தி பாவங்களைக் கரைத்து புண்ணியாத் மாக்களாகி வருகின்றார்கள்.

ஒரு சிலர் பிறரிடம் டொனேஷன் வாங்கி பிறரைப் படிக்க வைத்து தங்கள் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் சாமியார்களாகி பல சிஷ்யைகளுடன் உறவு கொண்டு, சிஷ்யைகளின் புண்ணியக்கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்து சிஷ்யைகளுக்கு உதவுகின்றார்கள். 

ஒரு சிலர், ஒரு சிலருடன் கூட அமர்ந்து கொள்ள பணம் கொடுத்து அந்த கடவுளையே தரிசித்து பெரும் புண்ணியங்களைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி மதம், இனம், மொழி வேறுபாடில்லாமல் பணத்தின் மூலமாக பலரும், தங்கள் புண்ணியக்கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆன்மீகம் புண்ணியம் செய்ய வேண்டுமென்றுதான் சொல்லிக் கொடுக்கிறது. புண்ணியம் சேர்க்க பொருள் கொடுக்கச் சொல்கிறது. அல்லது உழைப்பைக் கொடுக்கச் சொல்கிறது. எல்லாமும் கொடுத்தும், இருப்பதையும் கொடுத்தும், போதாமல் ஒரு சிலர் தன் பொண்டாட்டி மற்றும் மகள், மகன்களையும் கொடுத்தும் புண்ணியங்களை தங்கள் வரவில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகமே தங்களின் புண்ணியக்கணக்கின் வரவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

நிற்க....!

நேற்று காலையில் நானும் என் குருவும் பேசிக் கொண்டிருந்தோம். ”பலனை எதிர்பார்த்துச் செய்யும் தர்மம் புண்ணியங்களைத் தராது” ஆண்டவனே என்றார்.

”சாமி கம்பரின் மகாபாரதத்தில் வருகின்றானே ஒருவன்” 

இடைமறித்து, “ஆண்டவனே கம்பனின் மகாபாரதமா? “ என்றார்.

ஒரு நிமிடம் திடுக்கிட்டு

“சாமி, சேக்கிழார் தோஷம் என்னையும் பிடித்துக் கொண்டது போல, தலை எப்படியோ அதுபோலத்தானே?”

“ஓ.... “ என்றார்.

”மகாபாரதத்தில் கர்ணனிடம் தர்மம் கேட்டு ஒருவர் வரும் போது, அவன் குளிப்பதற்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருப்பான், தர்மம் கேட்ட அடுத்த நொடியில் இடது கை அருகில் இருந்த தங்கக் கிண்ணத்தைத் தூக்கிக் கொடுத்தான் என்பார்கள். அதன் அர்த்தம் இப்போது புரிகிறது சாமி” என்றேன்.

உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் அது உங்களின் பாடு.


அடுத்து புண்ணியத்துக்கு வருவோமா?

கர்ணன் திரைப்படத்தினைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கர்ணன் அர்ஜூனன் விட்ட அம்புகள் நெஞ்சில் ஊடுருவி இதயத்தைத் துளைக்க , குருதி கொப்பளித்து வழிந்தோட, உயிரை விட்டு விட இயலாமல் துன்புற்றுக் கொண்டிருப்பான். அப்போது நம்ம கிருஷ்ணர் வயதானவர் வேடம் போட்டு கர்ணனிடம் தானம் கேட்டு வருவார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில் அவனிடம் தர்மம் செய்ய ஒன்றுமே இருக்காது. ஆகவே கண்ணன் கர்ணனிடம் அவன் இதுவரை செய்த தான தர்மங்களின் புண்ணியங்களை (பலனை) தமக்குத் தானம் செய்து தரும்படி கேட்பார். அவனும் நெஞ்சில் பதிந்து கிடக்கும் ஒரு அம்பை உருவி, வழிந்தோடும் குருதியினை கையில் பிடித்து கண்ணனுக்கு தானம் செய்வான். தானம் பெற்ற கண்ணன், அர்ஜுனனிடம் செல்வான். வந்த வேலை முடிந்து விட்டது அல்லவா?

அர்ஜுனனைப் பார்த்து ”செத்த பாம்பு கர்ணன், விடு அம்பை, முடி அவன் கணக்கை” என்பார் கண்ணன்.

அர்ஜுனனும் விடுவான் அம்பை. கண்ணனும் விடுவான் உயிரை. 

இது படத்தில் வரும் வசனமும் காட்சியும்.

இனி என்ன எழுதப் போகிறேன் என்று புரியாதவர்கள் கீழே தொடருங்கள்...!

கர்ணனின் தர்மம் அவன் தலைகாத்து அவன் சாவின் பிடியில் கிடக்கும் போதும் உயிரை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அவனை வேதனைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அல்லவா? புண்ணியம் நல்ல சாவை அல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் அவனைச் சாக விடாமல் நோகடித்துக் கொண்டிருந்தது?

ஆகவே புண்ணியங்கள் நல்லதா? கெட்டதா? என நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்...

Monday, March 19, 2018

பெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்

இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த ஒருவர் பிரபலமான ஒரு பள்ளியில் தன் பையனைச் சேர்த்தார். பையன் இரண்டாவது மாதமே ஊருக்கு ஓடி வந்து விட்டான். டெபாசிட் பணம் மற்றும் இதர கட்டணங்கள் எதையும் அந்தப் பள்ளி திரும்பத் தரவே இல்லை. மறுத்து விட்டார்கள். நண்பருக்கு லட்சங்கள் இழப்பானது. நண்பரும் அதை அத்துடன் விட்டு விட்டார். பள்ளிக்கு பல லட்சங்கள் லாபம். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

சமீபத்தில் எனக்கு நெருக்கமான நண்பரின் பையனுக்கு, நானே முயற்சித்து, அதற்கு பெரிய ஆட்களின் இலவச சிபாரிசுகளைப் பிடித்து தமிழகத்தின் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் பெற்றேன். பையன் படு ஷார்ப். இதுவரை அவன் படித்த பள்ளியில், வகுப்பில் எப்போதும் முதல் மாணவன். அட்வான்ஸ் படிப்பு. ஐஐடியில் படிக்க வேண்டுமென்று அவனது விருப்பம். அந்தப் பள்ளியில் படித்தால் அவனது நோக்கத்துக்கு அது உதவும் என்ற நண்பரின் விருப்பமும், எனது விருப்பமும் இருந்தது.

அட்மிஷன் பெற்ற அன்று வெறும் வெள்ளைத்தாளில் பள்ளியின் சீல் வைத்து கையெழுத்து இட்டு, பணம் பெற்றுக் கொண்டதற்காக ஒரு ஒப்புகை சீட்டும், நன்கொடை என ஒரு டிரஸ்டின் ரசீதும் கொடுத்தார்கள். அடியேன் எனது வாகனத்தில் அமர்ந்து அம்மணிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மனையாள் பணத்தைக் கட்டி விட்டு, ரசீதுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டினார். சிரித்து வைத்தேன். ”ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேள்வி கேட்க, ஒன்றும் சொல்லவில்லை. சில விஷயங்களை சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது.”உங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எதற்குச் சிரிக்கின்றீர்கள்? எனப் புரியவேயில்லை” என்றார்.

பையன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் பள்ளியின் ஆசிரியர்களின் தரமும், பாடம் எடுக்கும் விதமும் அவனுக்குப் புரிந்து போனது. இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகி விடும் என நினைத்து பள்ளிக்குச் செல்ல முடியாது எனவும், அதற்கான காரணங்களையும் சொன்னான். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் பள்ளியில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்று தெரிந்ததினால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

பள்ளியில் இருந்து நின்று விட்டான். முன்பு படித்த பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். இனி நாம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமே என நினைத்து நானும் மனையாளும் பள்ளிக்குச் சென்றோம். மனையாள் பேசிப்பார்த்தார். வெளியில் வந்து உதட்டைப் பிதுக்கினார். 

அட்மினை (நினைவுக்கு வருகிறதா?) ”என்னவர் முடியாதவர், சற்று வெளியில் வந்து சந்திக்க முடியுமா? என்று கேட்டு வெளியில் வரச்சொல்லும்படி செய்யும்படி” மனையாளைக் கேட்டுக் கொண்டேன். 

ஒரு நக்கல் சிரிப்புடன் சென்று வரும்போது யாரோ ஒரு செம கிக்காக உடை உடுத்திய பெண்ணுடன் வந்தார். மனையாளின் கண்கள் என் கண்களையே உற்று நோக்கியபடி இருந்ததைக் கவனித்தேன். அது விதி. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எவ்வளவு உத்தமனாக இருந்தாலும், எதிர்பாலின இயல்பு மறைந்து போகாது.

உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். பாம்பின் இயல்பு கொத்துவது, பாலை ஊற்றி வளர்த்தாலும் அதற்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டால் ஒரே போடு, பரலோகம்தான் கதியாகும். புரிந்து விட்டதா?

இப்படித்தான் மச்சினிச்சிகள் வாழ்க என்ற பதிவு எழுத, அதை தினமலர்காரன் தன் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச குஷிக்கும் குழியினைப் பறித்தார்கள்.

அதுதான் அட்மினென்று தெரிந்தாலும், அருகில் வந்தவுடன், “கோதை, அட்மின் என்றுச் சொன்னாயே அவங்க எங்கே? யாரோ ஸ்கூல் பெண்ணுடன் வருகின்றாயே?” என்றேன். மனையாளுக்கு கடுகு உள்ளுக்குள் பொரிய ஆரம்பித்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். போட்ட பிட் வேலை செய்து அட்மின், “சார், நான் தான் அட்மின்” என்று கூவியது. கவனிக்க(!!!) சுத்தம் செய்த பற்கள் பளீரிட ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். பாடலாசிரியர்கள் இதைத்தான் மின்னல் என்றார்களோ???? தெரியவில்லை.

”மேடம், பையன் ஒரு மாதம் கூட படிக்கவில்லையே, அந்த டொனேஷன் பணத்தையாவது திரும்பித் தர முடியாதா?” என்று கேட்டேன்.

“எங்கள் பள்ளியில் அது வழக்கம் அல்ல, கொடுக்கவும் முடியாது” என்றது அது.

“நீங்கள் பணம் தரவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார் பையனின் அப்பா, கோர்ட் வழக்கு என்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும், சமாதானமாகப் போகலாமே? நீங்கள் உங்கள் சேர்மனிடம் பேசக்கூடாதா?” என்றேன்.

“சார், நீங்கள் எந்த கோர்ட்டுக்கும் போனாலும் பிரச்சினையில்லை, ஜட்சுகளின் பையன்களே எங்களது பள்ளியில் தான் படிக்கின்றார்கள், முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது அட்மின்.

அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஒரு இகழ்ச்சியான பார்வையோடு என்னை அட்மின் அகங்காரமாக கடந்து சென்றது. கன்னியரின் கடைக்கண் பார்வை பதிந்து விட்டால் மாமலையும் மடுகாகும் என்றார்கள் முன்னோர்கள். 

அடியேனால் அதை மட்டும் மறக்க முடியவில்லை. 

மனையாள் ”பெரிய இடம், மோத இயலாது, உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள், எதுக்கு வம்பு?” என்றார்.

நானென்ன ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா? டைரக்டருகளை வைத்து வசனமெழுதி வெற்றிடத்தைப் பார்த்து வீர வசனம் பேசி, காற்றில் கையை வீசி மிரட்டுவதற்கு. இது எதார்த்தம். ஒரு அட்மின் குயில் என்னை என் வீட்டுக்கார அம்மணியின் முன்னால் இளக்காரமாகப் பார்த்த அவமதிப்பு என்னைக் குடைந்து கொண்டிருந்தது. 

அட்மின் குயிலுக்கு ”யார்ரா இவன்? எழுந்து ஓடக்கூட முடியாது, இவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா?” என நினைத்திருப்பார் போல.

சி.பி.எஸ்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி அது. அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சில ஆவணங்களை இணையத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முழு நாட்கள் ஆகின. எனக்குத் தேவையான ஆவணங்களும், சாட்சிகளும் கிடைத்தன. எனது வக்கீல் நண்பரிடம் சென்று ஆவணங்களைக் காட்டி, நோட்டீஸ் அனுப்பச் செய்தேன்.

வக்கீல் நண்பர் நோட்டீஸ் தயாரித்து எனுக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டொரு மாறுதல்களைச் செய்து அனுப்பி வைத்தோம். பள்ளியில் இருந்து பதில் வராது என்று நினைத்தேன். அதன்படியே பதிலில்லை. அடுத்ததாக வழக்குப் பதியச் சொன்னேன். கோர்ட்டில் வழக்குப் பதிய ஆவணங்களைத் தயார் செய்து தாக்கல் செய்தோம்.

அடுத்த பதினைந்தாவது நாள் கையெழுத்து சரியில்லை என்றுச் சொல்லி வழக்காவணங்கள் திரும்பின. அத்துடன் பள்ளியில் இருந்து ஒரு டிடியும் வந்தது. இந்த ஆவணம் திரும்புதலில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நான் கேட்டது நன்கொடை மட்டுமே. ஆனால் பள்ளி கட்டிய பணம் அனைத்தையும் செலவு போக திருப்பித் தந்தது. டிடியை வாங்கிப் பார்த்தேன். மீண்டும் சிரிப்பு வந்தது.

“நீங்க எதுக்குத்தான் இப்படி லூசுத்தனமாகச் சிரிக்கின்றீர்களோ தெரியவில்லை” என்று மனையாள் அலுத்துக் கொண்டார்.

நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி, பணத்தை அவரின் அக்கவுண்டில் வரவு வைத்தேன். 

பணம் அக்கவுண்டில் வந்த பிறகு நண்பரை அழைத்தேன்.

”இந்த டிடியை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு வழக்குப் போடலாம். ஒரு கோடி வாங்கட்டுமா? இல்லை பத்துக் கோடி வாங்கட்டுமா?” என்று கேட்டேன்.

அதிர்ந்தார் நண்பர்.

விபரத்தைச் சொன்னேன். நண்பர் நல்லவர். ”நான் செலவு செய்த தொகை வந்து விட்டது. ஆகவே இதை இத்துடன் விட்டு விடுங்கள்” என்றார். அவர் அதை மட்டும் சொல்லாமலிருந்தால் இந்தப் பதிவு எழுதி இருக்க மாட்டேன்.

”பள்ளிக்குச் சென்று இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விபரமாகச் சொல்லி விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார்.

நேரமிருக்கும் போது அட்மின் குயிலைப் பார்த்து கொஞ்சம் பேசி விட்டு வர வேண்டும். அழகான அந்த முகம் அஷ்டகோணலாக மாறுவதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆகவே இன்னும் செல்லவில்லை. 

மனையாள், ”உங்களுக்கு கடவுள் மண்டை முழுவதும் மூளையாக வைத்து விட்டார் போல” என்று பாராட்டினார். மண்டை முழுவதும் மூளை இருந்தால் அது வேற ஆள் மாதிரி. 

பாராட்டினாங்கன்னு மகிழ்ந்து போக நானென்ன ரஜினியா? இல்லை கமலா?

ஆள் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தை கையாளத் தெரிந்து கொண்டால் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடலாம். தேவை கொஞ்சம் நிதானமும், கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும்.