குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Monday, March 19, 2018

பெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்

இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த ஒருவர் பிரபலமான ஒரு பள்ளியில் தன் பையனைச் சேர்த்தார். பையன் இரண்டாவது மாதமே ஊருக்கு ஓடி வந்து விட்டான். டெபாசிட் பணம் மற்றும் இதர கட்டணங்கள் எதையும் அந்தப் பள்ளி திரும்பத் தரவே இல்லை. மறுத்து விட்டார்கள். நண்பருக்கு லட்சங்கள் இழப்பானது. நண்பரும் அதை அத்துடன் விட்டு விட்டார். பள்ளிக்கு பல லட்சங்கள் லாபம். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

சமீபத்தில் எனக்கு நெருக்கமான நண்பரின் பையனுக்கு, நானே முயற்சித்து, அதற்கு பெரிய ஆட்களின் இலவச சிபாரிசுகளைப் பிடித்து தமிழகத்தின் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் பெற்றேன். பையன் படு ஷார்ப். இதுவரை அவன் படித்த பள்ளியில், வகுப்பில் எப்போதும் முதல் மாணவன். அட்வான்ஸ் படிப்பு. ஐஐடியில் படிக்க வேண்டுமென்று அவனது விருப்பம். அந்தப் பள்ளியில் படித்தால் அவனது நோக்கத்துக்கு அது உதவும் என்ற நண்பரின் விருப்பமும், எனது விருப்பமும் இருந்தது.

அட்மிஷன் பெற்ற அன்று வெறும் வெள்ளைத்தாளில் பள்ளியின் சீல் வைத்து கையெழுத்து இட்டு, பணம் பெற்றுக் கொண்டதற்காக ஒரு ஒப்புகை சீட்டும், நன்கொடை என ஒரு டிரஸ்டின் ரசீதும் கொடுத்தார்கள். அடியேன் எனது வாகனத்தில் அமர்ந்து அம்மணிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மனையாள் பணத்தைக் கட்டி விட்டு, ரசீதுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டினார். சிரித்து வைத்தேன். ”ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேள்வி கேட்க, ஒன்றும் சொல்லவில்லை. சில விஷயங்களை சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது.”உங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எதற்குச் சிரிக்கின்றீர்கள்? எனப் புரியவேயில்லை” என்றார்.

பையன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் பள்ளியின் ஆசிரியர்களின் தரமும், பாடம் எடுக்கும் விதமும் அவனுக்குப் புரிந்து போனது. இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகி விடும் என நினைத்து பள்ளிக்குச் செல்ல முடியாது எனவும், அதற்கான காரணங்களையும் சொன்னான். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் பள்ளியில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்று தெரிந்ததினால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

பள்ளியில் இருந்து நின்று விட்டான். முன்பு படித்த பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். இனி நாம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமே என நினைத்து நானும் மனையாளும் பள்ளிக்குச் சென்றோம். மனையாள் பேசிப்பார்த்தார். வெளியில் வந்து உதட்டைப் பிதுக்கினார். 

அட்மினை (நினைவுக்கு வருகிறதா?) ”என்னவர் முடியாதவர், சற்று வெளியில் வந்து சந்திக்க முடியுமா? என்று கேட்டு வெளியில் வரச்சொல்லும்படி செய்யும்படி” மனையாளைக் கேட்டுக் கொண்டேன். 

ஒரு நக்கல் சிரிப்புடன் சென்று வரும்போது யாரோ ஒரு செம கிக்காக உடை உடுத்திய பெண்ணுடன் வந்தார். மனையாளின் கண்கள் என் கண்களையே உற்று நோக்கியபடி இருந்ததைக் கவனித்தேன். அது விதி. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எவ்வளவு உத்தமனாக இருந்தாலும், எதிர்பாலின இயல்பு மறைந்து போகாது.

உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். பாம்பின் இயல்பு கொத்துவது, பாலை ஊற்றி வளர்த்தாலும் அதற்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டால் ஒரே போடு, பரலோகம்தான் கதியாகும். புரிந்து விட்டதா?

இப்படித்தான் மச்சினிச்சிகள் வாழ்க என்ற பதிவு எழுத, அதை தினமலர்காரன் தன் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச குஷிக்கும் குழியினைப் பறித்தார்கள்.

அதுதான் அட்மினென்று தெரிந்தாலும், அருகில் வந்தவுடன், “கோதை, அட்மின் என்றுச் சொன்னாயே அவங்க எங்கே? யாரோ ஸ்கூல் பெண்ணுடன் வருகின்றாயே?” என்றேன். மனையாளுக்கு கடுகு உள்ளுக்குள் பொரிய ஆரம்பித்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். போட்ட பிட் வேலை செய்து அட்மின், “சார், நான் தான் அட்மின்” என்று கூவியது. கவனிக்க(!!!) சுத்தம் செய்த பற்கள் பளீரிட ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். பாடலாசிரியர்கள் இதைத்தான் மின்னல் என்றார்களோ???? தெரியவில்லை.

”மேடம், பையன் ஒரு மாதம் கூட படிக்கவில்லையே, அந்த டொனேஷன் பணத்தையாவது திரும்பித் தர முடியாதா?” என்று கேட்டேன்.

“எங்கள் பள்ளியில் அது வழக்கம் அல்ல, கொடுக்கவும் முடியாது” என்றது அது.

“நீங்கள் பணம் தரவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார் பையனின் அப்பா, கோர்ட் வழக்கு என்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும், சமாதானமாகப் போகலாமே? நீங்கள் உங்கள் சேர்மனிடம் பேசக்கூடாதா?” என்றேன்.

“சார், நீங்கள் எந்த கோர்ட்டுக்கும் போனாலும் பிரச்சினையில்லை, ஜட்சுகளின் பையன்களே எங்களது பள்ளியில் தான் படிக்கின்றார்கள், முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது அட்மின்.

அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஒரு இகழ்ச்சியான பார்வையோடு என்னை அட்மின் அகங்காரமாக கடந்து சென்றது. கன்னியரின் கடைக்கண் பார்வை பதிந்து விட்டால் மாமலையும் மடுகாகும் என்றார்கள் முன்னோர்கள். 

அடியேனால் அதை மட்டும் மறக்க முடியவில்லை. 

மனையாள் ”பெரிய இடம், மோத இயலாது, உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள், எதுக்கு வம்பு?” என்றார்.

நானென்ன ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா? டைரக்டருகளை வைத்து வசனமெழுதி வெற்றிடத்தைப் பார்த்து வீர வசனம் பேசி, காற்றில் கையை வீசி மிரட்டுவதற்கு. இது எதார்த்தம். ஒரு அட்மின் குயில் என்னை என் வீட்டுக்கார அம்மணியின் முன்னால் இளக்காரமாகப் பார்த்த அவமதிப்பு என்னைக் குடைந்து கொண்டிருந்தது. 

அட்மின் குயிலுக்கு ”யார்ரா இவன்? எழுந்து ஓடக்கூட முடியாது, இவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா?” என நினைத்திருப்பார் போல.

சி.பி.எஸ்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி அது. அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சில ஆவணங்களை இணையத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முழு நாட்கள் ஆகின. எனக்குத் தேவையான ஆவணங்களும், சாட்சிகளும் கிடைத்தன. எனது வக்கீல் நண்பரிடம் சென்று ஆவணங்களைக் காட்டி, நோட்டீஸ் அனுப்பச் செய்தேன்.

வக்கீல் நண்பர் நோட்டீஸ் தயாரித்து எனுக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டொரு மாறுதல்களைச் செய்து அனுப்பி வைத்தோம். பள்ளியில் இருந்து பதில் வராது என்று நினைத்தேன். அதன்படியே பதிலில்லை. அடுத்ததாக வழக்குப் பதியச் சொன்னேன். கோர்ட்டில் வழக்குப் பதிய ஆவணங்களைத் தயார் செய்து தாக்கல் செய்தோம்.

அடுத்த பதினைந்தாவது நாள் கையெழுத்து சரியில்லை என்றுச் சொல்லி வழக்காவணங்கள் திரும்பின. அத்துடன் பள்ளியில் இருந்து ஒரு டிடியும் வந்தது. இந்த ஆவணம் திரும்புதலில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நான் கேட்டது நன்கொடை மட்டுமே. ஆனால் பள்ளி கட்டிய பணம் அனைத்தையும் செலவு போக திருப்பித் தந்தது. டிடியை வாங்கிப் பார்த்தேன். மீண்டும் சிரிப்பு வந்தது.

“நீங்க எதுக்குத்தான் இப்படி லூசுத்தனமாகச் சிரிக்கின்றீர்களோ தெரியவில்லை” என்று மனையாள் அலுத்துக் கொண்டார்.

நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி, பணத்தை அவரின் அக்கவுண்டில் வரவு வைத்தேன். 

பணம் அக்கவுண்டில் வந்த பிறகு நண்பரை அழைத்தேன்.

”இந்த டிடியை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு வழக்குப் போடலாம். ஒரு கோடி வாங்கட்டுமா? இல்லை பத்துக் கோடி வாங்கட்டுமா?” என்று கேட்டேன்.

அதிர்ந்தார் நண்பர்.

விபரத்தைச் சொன்னேன். நண்பர் நல்லவர். ”நான் செலவு செய்த தொகை வந்து விட்டது. ஆகவே இதை இத்துடன் விட்டு விடுங்கள்” என்றார். அவர் அதை மட்டும் சொல்லாமலிருந்தால் இந்தப் பதிவு எழுதி இருக்க மாட்டேன்.

”பள்ளிக்குச் சென்று இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விபரமாகச் சொல்லி விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார்.

நேரமிருக்கும் போது அட்மின் குயிலைப் பார்த்து கொஞ்சம் பேசி விட்டு வர வேண்டும். அழகான அந்த முகம் அஷ்டகோணலாக மாறுவதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆகவே இன்னும் செல்லவில்லை. 

மனையாள், ”உங்களுக்கு கடவுள் மண்டை முழுவதும் மூளையாக வைத்து விட்டார் போல” என்று பாராட்டினார். மண்டை முழுவதும் மூளை இருந்தால் அது வேற ஆள் மாதிரி. 

பாராட்டினாங்கன்னு மகிழ்ந்து போக நானென்ன ரஜினியா? இல்லை கமலா?

ஆள் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தை கையாளத் தெரிந்து கொண்டால் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடலாம். தேவை கொஞ்சம் நிதானமும், கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும்.

Wednesday, February 21, 2018

அதிகாரம் அழிந்தே போகும்

நீர் நாய்கள் நிறைந்திருக்கும் சற்றே குளிர் பொறுந்திய பொய்கையில் தாமரைகள் மலர்ந்து தழைத்திருக்கின்றன. அந்தத் தாமரைகளின் நிழல் போல இருக்கும் அல்லிப் பூவின் இதழைபோல மாசு மறுவற்ற, மலர்ந்த குற்றமில்லாத உள்ளங்கைகளை உடையவன். சிவந்து கிடக்கும் இளம் பவளத்துண்டுகளை ஒட்டி வைத்தாற் போன்ற இதழ்களை உடையவன். இன்னும் பழகிக் கொள்ளாத நாவினாற் தத்திப் பேசும் கிளியினை ஒத்த, தேனினும் இனிய குரலால் கிள்ளை மொழியினைப் பேசுபவன், அவனைக் காண்பவர் எவரினும் அவன் மீது விருப்பமுற்று அன்பு பொழியும் கவர்ச்சியினை உடையவன், தன் நெஞ்சிலே பொற்கொடியை அணிந்தவன் ஆகிய நம் புதல்வன், சிறுதேர் ஓட்டி தெருவில் விளையாடிக் கொண்டு, தனியனாக நின்றிருந்தான். 

அப்போது அவ்வழியாக வந்த உடலெங்கும் பொன் அணிகளை அணிந்தவளும், கூர்மையான பற்களை உடையவளுமான உமது காதற் பரத்தை நம் மகனைப் பார்த்து, அவன் உம்மைப் போல உருவத்தில் ஒப்புமை கொண்டிருப்பதைக் கண்டு விதிர்த்து, தெருவில் எவரும் காண்பவர் இல்லையாதலால் துணிந்து அவனருகே சென்று,’என் உயிரே! என்னிடம் வருவாயா?” என்று கூறி, செல்லப் பூண்களை அணிந்த அவளின் இளைய மார்புகளிடையே அவனை அணைத்துக் கொண்டாள்.

அதனை நான் கண்டும், காணாதது போல திரும்பவில்லை. விரைந்து போய் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.

”மாசற்ற இளைய மகளே! ஏன் மயங்குகின்றாய்? நீயும் இவனுக்கு ஒரு தாய் தானே?” என்று அவளிடம் கூறினேன். 

தாம் செய்யும் களவினை கண்டுகொண்டவர்கள் முன்பாக களவு செய்தவர்கள் மனம் கலங்கி தலை கவிழ்ந்து நிற்பது போல அவளும் என் முன்பு முகம் கவிழ்ந்து நின்றாள். நிலத்தை தன் கால் பெருவிரலால் கீறி வெட்கியும் நின்றாள்.

வானத்தில் தெய்வமாக விளங்குகின்ற அருந்ததி எனும் கற்புக்கடவுளுக்கு நிகர்த்தவளான அவளும் நம் மகனுக்கு தாயாக இருப்பது சரியானதுதானே. அதைத்தான் நானும் அவளிடம் பகிர்ந்தேன் என்கிறாள் ஒரு தமிழச்சி தன் கணவன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பியதை, அவன் அதை மறுத்த அந்த நிலையில். ( நன்றி சாகலாசனார் - களிற்றினையாணை நிரை)

இந்தப் பாடலுக்கு தெளிவுரை எழுதிய புலியூர் கேசிகன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவனை இடித்துப் பழிப்பதாக எழுதி இருக்கிறார். இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த மனையாளுக்கு கணவன் பரத்தை வைத்திருப்பது மகிழ்வைத் தரும்? 

பெண் என்பவள் தண்ணீரைப் போன்றவள். ஆண் என்பவன் பாறை போன்றவன். பாறை பார்ப்பதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் தண்ணீருக்கே சக்தி அதிகம். தண்ணீரின் சக்தி பாறையை உடைத்து துகள் துகளாக்கி விடும். 

ஆண் அதிகாரம் மிக்கவன். பெண் சரணாகதி தத்துவம் கொண்டவள். ஆண்டாள் பெருமாளின் மீது கொண்ட சரணாகதி காதலில் அமிழ்ந்தே போனார் பெருமாள். அவள் சூடிக் கொடுத்த மாலையைத்தான் நானும் சூடுவேன் என்று தன் அதிகாரத்தை ஆண்டாளின் காதலில் அழித்துக் கொண்டவர். சரணாகதியில் அதிகாரம் அழிந்தே போகும். ( நன்றி : ஓஷோ )


தன் தலைவனின் பரத்தைக் காதலை தன் மாசு மறுவற்ற அன்பால் அந்தத் தலைவி மீட்க நினைக்கிறாள் அல்லவா? இப்பேர்பட்ட பெண்மைப் பண்புகளை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? எங்கே அந்தத் தலைவி என்று மனது தேட ஆரம்பிக்கிறது அல்லவா? தலைவியின் காதல் ஒரு பக்கம் இருக்கட்டும்.

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். ஆணொருவன் தன் மனைவியைப் பார்த்து உருகும் அந்தக் காதலைப் பாருங்கள். தன் உள் விழைவை பாடல் வரிகளில் தோய்த்து, குரலில் வழியவிடும் அன்பினை காதாலும் கண்ணாலும் பாருங்கள். உள்ளம் உருகி விடும்.



காதலில் ஜெயித்தவர் யாருமுண்டோ இவ்வுலகில்? எப்போதும் காதலே ஜெயிக்கிறது. காதலில் ஈடுபட்டவர்கள் கரைந்து போகின்றார்கள் காதலுக்குள்ளே.

குறிப்பு : ஏதோ அரசியல் பதிவாக இருக்கப்போகின்றது என்று நினைத்துப் படிக்க வந்தவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். பெண்கள் இல்லாமல் அரசியலே இல்லை. உலக அரசியலை விட இந்தப் பெண்களின் அரசியல் பெரியது. எவராலும் புரிந்து கொள்ளவே முடியாதது.

Wednesday, February 14, 2018

மஹாசிவராத்திரியும் கடவுளும்

கடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.

இணைப்பினைப் படித்துப் பாருங்கள்.


இந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து வரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர். 

நமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம்.  பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி? எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும். 

முட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான்.  எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன். 


(முத்துவாளியம்மனும், நாகேஸ்வரரும்)

செம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை.  அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி?” என்று விசாரித்தேன்.

”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.

ஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம்.  பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது. 

கொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.

“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.

”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.

”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.

என் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு?????

இரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்....??? என்னத்தைச் சொல்ல....! நல்லா இருக்கட்டும் எல்லோரும்.....!

குறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.

Friday, February 9, 2018

33ம் வருட குருபூஜை அழைப்பு

ஒன்றரை வருட காலம் முட்டம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று சென்று விடுவேன். காலை எட்டரை மணிக்கு கிளம்பினால் பத்தரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் சென்று சேர்ந்து விடுவேன். இடையில் பூளுவபட்டி தாண்டி வரக்கூடிய பாலத்தின் மீது அமர்ந்து பனி மூட்டம் தழுவி நிற்கும் வெள்ளிங்கிரி ஆண்டவன் வசிக்கும் மலையழகை ரசிப்பதுண்டு. பாலத்தின் கீழே பாதம் நனையும்படி தண்ணீர் செல்லும். 

பூளுவப்பட்டியில் ஒரு ஹோட்டலில் வாங்கிய மூன்று சூடான இட்லிகளையும், வாழை இலையின் ஊடே கட்டிய கெட்டிச் சட்னியையும் அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து விள்ளல் விள்ளலாக சுவைத்து அருந்துவேன். கத்தரி, வெண்டை, மஞ்சள் பயிரிட்டு இருப்பார்கள். அந்தப் பயிர்களின் வாசம் உடல் தழுவிச் செல்லும். இதமான காலை வெயில் உரைக்கவே உரைக்காது. அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருப்பேன். பின்னர் கோவிலுக்குச் செல்வேன். 12 மணி வாக்கில் அர்ச்சகர் பூஜை முடித்து விட, அங்கிருக்கும் பிள்ளையார் கோவிலில் உடல் அசதி தீர உருண்டு விட்டு எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் சுமார் இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்வேன்.

இது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்த நேரத்தில் ஒரு நாள், ‘உன் குரு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிறார், முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்’ என்றுச் சொன்னார் நண்பர். 

ஒரு மதிய நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தேன். அமைதி தழுவும் இடம். பறவைகளின் ஒலியும், காற்றசைத்தலால் உண்டாகும் மரக்கிளைகளின் சத்தமும் எழும்பின. அமைதி தழுவும் அற்புதமான இடத்தில் ஜீவசமாதியில் நிஷ்டையில் இருக்கும் குருவினைத் தரிசித்து, என் குருவினையும் தரிசித்து, அன்னம் புசித்து அவரிடமிருந்து விடை பெற்றேன். 

காலம் செல்லச் செல்ல எதிர்கால வாழ்க்கைப் பாதையின் அடைபட்டிருந்த வழிகள் ஒவ்வொன்றும் திறக்க ஆரம்பித்தன. ஆன்மீகம் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து வரும் அனேக ஆன்மீகப்போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உண்மை சொரூபங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்றும், உள்ளொளி அது இதுவென்றும் பிதற்றும் பித்தர்களின் மனப்போக்கினை புரிந்து கொள்ள முடிந்தது. யார் எதற்கு எப்படி ஏன் என்றெல்லாம் நானே புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைத்தது. குழம்பிய ஆற்று நீர் போன்ற மனது தெள்ளத்தெளிவான ஊற்றோடை போல ஆனது. இருப்பினும் பாசம் என்ற மாயவலைக்குள் இருந்து இன்றும் என்னால் விடுபட முடியவில்லை. ’அதுதான் உங்கள் கடமை’ என்று குரு சொன்னதால் அதற்குள்ளேயே இருக்கிறேன். மனைவி,பிள்ளைகள் அருகில் இருந்தால் தான் மனது ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறது. ’சன்னியாச வாழ்க்கையை விட சம்சார வாழ்க்கையே சிறந்தது’ என்பார் குரு. 

இப்படியான வாழ்க்கையில் வருடம் தோறும் குருவிற்காக ஆசிரமம் வரும் அன்பர்களால் நடத்தப்படும் குருபூஜை அன்று மலர்களால் அலங்கரித்து, குருவின் பீடம் ஒளிரும் அந்த நாள், மனதுக்கு ஆன்ம அமைதியை அள்ளித் தரும். 

கட்டுப்பாடுகள் இல்லை, கணக்குகள் இல்லை, வரவு செலவுகள் இல்லை. ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே அங்குண்டு. “அமைதி”. அமைதி காக்க வேண்டுமென்ற அன்புக் கட்டுப்பாடு மட்டுமே உண்டு. அப்படிச் செல், இப்படிச் செல், பேசாதே, இவ்வளவு கட்டு, இதற்கு இவ்வளவு என்றெல்லாம் விதிகளும் இல்லை. விற்பனையும் இல்லை.

வாழ்வியல் சிக்கல்களில் சிக்கும் மனதுக்கு அமைதி கிடைக்கிறதா? அதுதான் வேண்டும் நமக்கெல்லாம். ஆர்ப்பரித்து, அழுது, புரண்டு கதறும் மனது தெளிவாக அமைதியுறுவதே உண்மையான ஆன்மீகம். அது இங்கு கிடைக்கிறதா என்று அறிவதே ஆன்மீகப் பயிற்சி.

எங்கிருந்தோவெல்லாம் வரும் அன்பர்கள் தங்களின் குருவின் பூஜையன்று, ஒன்று கூடி உணவு சமைத்து தங்கள் குருநாதரைத் தரிசிக்க வருபவர்களின் பசி போக்கிடும் அந்த அற்புதமான ஒன்று கூடல் நிகழ இருக்கிறது. 

வாருங்கள் என் குரு நாதரின் இல்லம் நோக்கி. ஆன்ம அமைதி பெற்று மகிழ அன்புடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இடம் : முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஜீவசமாதி
நாள் : 26.02.2018 - திங்கள் கிழமை

மேலதிக விபரம் தெரிந்து கொள்ள எனது குருவின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஜோதி ஸ்வாமி, 9894815954

முள்ளங்காட்டில் இறங்கி, தென்புறம் செல்லும் தார்ச்சாலையில் 200 மீட்டர் தூரம் நடந்தால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பினால் குருவின் ஜீவசமாதி இருக்கும் இடம் கண்களில் துலங்கும்.

காலை, மதியமும் தீராத நோயான வயிற்றுப் பசி தீர அன்னம் அளிப்பார் குரு. 





Sunday, February 4, 2018

நன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா?

பிளாக்கினைப் படிக்கும் பெண்களிடம் நான் முதலில் சரணடைந்து விடுகிறேன். பெண்களை பூமித்தாய் என்கிறோம் நாங்கள். எத்தனையோ மனிதர்கள் பூமியினை எத்தனையோ அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாலும் அவர்களை வாழ அனுமதித்திருப்பது போல என்னையும். புரியவில்லை என்றால் மணல் மாஃபியா, மலை மாஃபியா, கடற்கரை மாஃபியாக்களை எல்லாம் வெகு சொகுசாக வாழ வைத்திருக்கும் பூமியைப் போல என்னையும் கொஞ்சம் மன்னித்து அருளி வாழ வாழ்த்தி விடுங்கள்.

இந்தியாவைப் பொறுத்து குடும்பத்தின் தலைவியிலிருந்து தேசம் வரை எல்லாமிடமும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கும் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. 

கண்ணை மூடி இந்த உலகத்தின் இயக்கத்தையும், உலகில் மனிதப் பயன்பாடுகளுக்கு இருக்கும் பொருட்களையும் நினைத்துப் பாருங்கள். உலகில் இருக்கும் கண்ணாடிகள் எல்லாம் யாருக்காத் தயாரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமா?

பாரதி முதல் இன்றைய கால கவிஞனிலிருந்து, எழுத்தாளர்கள் வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது எல்லாம் யாரை? தியாகராஜபாகவதர் காலத்திலிருந்து திரை இசையில் யாரைப் பற்றி பாடல்களை எழுதி இசையமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

உலகத்தில் காணும் பொருளை எல்லாம் பெண்ணோடு தொடர்பு படுத்தி பேசுவதும், பாடுவதும், பாடிப்பாடியே செத்துப் போவதும் யார்?

கல்லறையிலும் கூட காதலிக்காகத் காத்துக் கொண்டிருக்கிறேன், என் விழிகளை மூடி புதைத்து விடாதீர்கள் என்று கவிஞன் ஒருவன் கண்ணீர் உகுத்தானே யாருக்காக?

இதோ கீழே இருக்கும் பாடலைப் படியுங்கள். எனக்குப் பெயர் தெரியாத கவிஞன் ஒருவனின் வரிகள் இவை.

நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
பாடலைப் படித்து விட்டீர்கள் தானே? இதற்கும் மேலே வேறு என்ன எழுத வேண்டும்? உங்களைப் பற்றி எழுத என்ன இருக்கிறது இனிமேல்?

ஆனால் எந்தப் பெண்ணாவது ஆண்களைப் பற்றி இப்படி எழுதி இருக்கின்றீர்களா? பாடி இருக்கின்றீர்களா? ஆண்களுக்கா ஒரு இலக்கியமாவது படைத்திருக்கின்றீர்களா?

இறைவனின் உடம்பில் கூட பாதியைப் பெற்றுக் கொண்டீர்கள். போதாது என்று நெஞ்சுக்குள்ளும் உட்கார்ந்து கொண்டீர்கள். இவ்வளவு செய்தும் ஆண்களைப் பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.

ஏன் ஆண்களின் மீது இப்படி கோபம் கொண்டிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை மனைவியை விட்டுப் பிரிந்த புத்தர் நினைவுக்கு வந்திருப்பாரோ? அந்த பட்டினத்தாரின் பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அவர்கள் எல்லாம் கோடானுகோடியில் புள்ளி சதவீதம் கூட இல்லை. சித்தர்கள் பாடிய பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் காட்டுக்குச் சென்றதால் ஏதோ சப்பக்கட்டு கட்டுவதற்காக பெண்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இதையெல்லாம் காரணம் வைத்துக் கொண்டு ஆண்களைப் புறக்கணித்து விடாதீர்கள். பிறந்ததிலிருந்து அம்மாவுக்காக வாழ்கிறான், பின்னர் மனைவிக்காக வாழ்கிறான். பின்னர் மகளுக்காக வாழ்கிறான். பிள்ளைகள் வளர்ந்து எங்கோ சென்று விடுகின்றார்கள். அவன் இறப்பதற்காக காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கு என்று அவன் வாழ்ந்ததே இல்லை. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் பெண்களே.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.

தினை தெரியும் அல்லவா? அத்தனை சிறிய உதவியைச் செய்தாலும் அதை பனைமரத்தளவு உயர்ந்த உதவியாக கருத வேண்டும் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார்.  தினை அளவு கூட வேண்டாம். புல்லின் நுனி அளவாவது ஆண்களைப் பற்றி கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி லட்சோப லட்ச கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்களே ஆண்கள் அவர்களுக்காவது ஒரே ஒரு கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா?

இந்தப் பதிவும் வருங்கால உலகம் உங்களைப் பற்றி ஏதும் பேசி விடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன். ஆகவே பெண்கள் உலகமே உங்களுக்காகவே வாழ்ந்து மறையும் ஆண்களைப் பற்றி இரண்டு வரிகளாவது எழுதி வையுங்கள். வைப்பீர்களா?

Friday, February 2, 2018

கலவரப்படுத்திய கடிதமும் பதிலும்

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மெயில் வந்திருந்தது. கவனிக்க ஒரு மெயில் என்று தான் எழுதி இருக்கிறேன். பிறரைப் போல தினம் தோறும் லட்சக்கணக்கான மெயில் என்று எழுதவில்லை. முற்றிலும் ஆங்கிலம். எனக்கோ மெட்ராஸ்காரர்கள் தமிழ் பேசுவது போல ஆங்கிலத்தில் உரையாடுவேன். எழுதுவேன். அரை மணி நேரம் ஆனது. பலமுறை படித்து பார்த்து, மொழியாக்கம் செய்து ஒரு வழியாகப் புரிந்து கொண்டு பதில் எழுதினேன்.

அந்தக் கடிதத்தையும்,எனது பதிலையும் கீழே படியுங்கள். இதுவாவது பரவாயில்லை ஒருவர்  லட்ச ரூபாய் தருகிறேன், வசிய மருந்து தாருங்கள் என்று முகவரி ஏதும் இல்லாமல் மெயில் அனுப்பி இருந்தார். கருப்பு மை டப்பா ஒன்றினை அனுப்பி வைத்து லட்ச ரூபாய் வாங்கி விடு என்றது எனக்குள் இருக்கும் இன்னொரு ஆள். இதையெல்லாமா வெளியில் சொல்லப்போகின்றார்கள் என்று சப்பைக்கட்டு வேறு செய்தது. ஓங்கி ஒரே போடு. அடக்கி விட்டேன். அடங்கிப் போனான் அந்த இன்னொரு மனமயக்கிப் பயல். இதுவே வேற ஆளாக இருந்தால் ராகுல் ப்ரீத்தையே மடக்கி விடலாம், அமலாபால் கல்கண்டு பாலைக் கொண்டு வந்துதருவார் என்றெல்லாம் மெயில் அனுப்பி கறந்து விடுவார்கள். நமக்கு கறப்பதில் அனுபவமுமில்லை. அவசியமுமில்லை.

உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஒரு விஷயத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் அவர் எந்த அழகியானாலும் சரி, ஐஸ்வரியாக இருந்தாலும் சரி, எளிதில் தள்ளிக் கொண்டு வந்து விடலாம். அந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரிடம் சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவே... ! அது வேண்டாம்.

எனக்கு வந்த கடிதம் கீழே
========================

Hi,
I came across an item in your blog (Dec 18, 2017 dated entry) that intrigued me. I came across your blog randomly as I clicked on (Next blog) in blogger. You were describing about meeting a couple and about the wife who had not slept for the last 10 years. I just wanted to ask you, if I may, a number of questions that arose in my mind as I was reading: 
  1. Did this (not sleeping) happen all of a sudden from a young age, or did it happen, developing over a period of time? 
  2. Did it happen after she got married? 
  3. Is it continuous for 10 years or is it the total time of 10 years, perhaps accumulated over a period of over 15 or 20 years? 
  4. Was it intentional on the part of the individual or did it just happen that way unintentionally, without consciously willing it? 
  5. Is the individual aware of this phenomenon, or just happened to be noticed by the husband? 
  6. Is the individual in question lying down in bed fully awake unable to sleep, or was she engaged in some activities, rather than ‘not just lying down’? 
  7. Was there a change in the intake of food since this behaviour of ‘not sleeping’?

As you say, there are many things that we are not aware of and there is no point in trying to prove or disprove any particular point of view. Although I have not had a personal experience of meeting anyone who has intrigued me, this has blown me away and that is why I am asking you these questions. I do remember buying the book, “Autobiography of a Yogi” some 40 years back but never even bothered reading it and probably threw it away. 

Finally, I am writing this in English as I find it convenient and faster to write in English. Tamil is my mother tongue and I can speak, read (obviously) and write in Tamil but only with pen and paper. If you have time I would like to hear from you and your experiences with your guru.

- XXXXX

எனது பதில் கீழே
===================

வணக்கம்.

உங்களின் கடிதம் படித்தேன். உங்கள் கேள்விகள் அனைத்தையும் படித்தேன்.பதில் எழுத எனக்கும் ஆவல் தான்.ஆனால் உங்களைப் போல கேள்விகளை அவர்களிடம் கேட்டேன் என்றால் என் நிலைமை என்ன ஆகும் என்று நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் தான்.

அந்தப் பெண்மணி வெகு ஆரோக்கியமாக, நல்ல திடகாத்திரத்துடன், தெளிவான முகத்துடன் இருக்கின்றார்கள். 

இந்தப் பதில்களால் நீங்கள் என்ன பலனடையப்போகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வரிசை கேள்விகள் என்னை கொஞ்சம் கலவரப் படுத்தி விட்டன. 

ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தைப் படிக்கவில்லை, வீசி விட்டேன் என்கிறீர்கள். பின்னர் எனது குருவைப் பற்றி கேட்கின்றீர்கள். எனக்கும் குருவிற்குமான உறவு என்பது வேறு வகையானது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அறிவுக்கு ஏற்ப அவர் உரையாடுவதும் ஆலோசனைகள் சொல்வதும், வழி காட்டுவதும் இருக்கும். ஆகவே என் அனுபவங்கள் எந்த வகையிலும் உங்களுக்குப் பயன் தராது. நான் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை உள்ளவன். என் சிந்தனைகள் வேறு வகையானவை. இந்த நொடியில் வாழ் என்பது எனது வாழ்க்கை. நாளையைப் பற்றிய சிந்தனைகள் என்னிடம் இருப்பதில்லை. ஆனால் செய்யும் தொழிலானாலும் சரி, எந்த வேலையானாலும் சரி - எது சரியோ அதைச் செய்வேன். அதிலும் பிறருக்குப் பங்கம் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமான ஒன்று.

இயற்கை தனக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு மர்மத்தையும் அறிந்து கொள்ள மனிதனால் முடியாது என்பது எனது நம்பிக்கை.

உங்களது படிப்பறிவு, பட்டறிவுக்கு புலனாகாத விஷயங்களை கேள்வி கேட்பது என்பது சரிதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும்  திறமை கேள்வி கேட்பவர்களிடம் இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் விஷயங்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ளும் பக்குவத்தில் தன்னை தயார் படுத்தி இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். கேள்விக்கான பதிலைப் புரிந்து கொள்ள இயலாமலிருந்தால் அதனால் பலனில்லை அல்லவா?

ஆகவே எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொள்ளுங்கள். உடனடி முடிவுக்கு வராதீர்கள். உங்கள் சூழலுக்கு ஏற்ப எது சரி எது தவறு என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாழ்க்கை சுவாரசியமானது. அன்பு ஒன்றே நிரந்தரமானது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அள்ளிக் கொடுங்கள்.

காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இல்லாத புகழா? பதவியா? இப்போதைய அவரின் நிலைமை ? ஆகவே காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.


அவரின் இன்னொரு பதில் கடிதம் கீழே
====================================

HI,

Thank you for such a quick response to my mail. I took more than a month, almost 5-6 weeks to compose and was debating all the time about writing to you.

I am personally very satisfied and have no immediate worries or concerns of any kind, except perhaps for one. I have had a very nagging question for several years now, and that is: why are we even born? All of us are born, live a few years and die. But the question I have is, why bother to be born, what greater purpose is being served by being born. I have no satisfactory answer that makes any sense. Perpetuating the race is not the answer, as many individuals, either by choice or design, do not produce any progeny. To provide some kind of a service to humanity is a circuitous response: A born to scratch B’s back, B to C’s back and C to A’s back and so on.

As I read your blog entry, I thought perhaps it would give me some kind of a lead to explore and that was the main reason to write to you in the first place. As you rightly say each individual has different and varying requirements and what suits one may not be of any use to the other. Well, any way, thank you for your quick reply and I wish you all the best in your endeavours. 

- XXXX


இந்தக் கடிதத்தை இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன். 

Tuesday, January 30, 2018

டிசைன் அப்படி

யாரோ ஒருவர் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் சினிமாவில் இருக்கிறார். பி.ஆர்.ஓவாக பணி. அதுமட்டும் வேலையல்ல. ஃபைனான்ஸ், வெளியீடு, கடன் வாங்கிக் கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏதோ ஒரு தேவைக்காக நண்பரை அணுகினால் முடிந்தது காரியம் என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்கள் இருக்கும்.

ஆனால் நண்பர் அவரை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு வசூலிக்க ஆரம்பித்து விடுவார். அது அவருக்குத் தெரியாது. தினமும் குறைந்தது 500 ரூபாய் அவரின் குறிக்கோள். அத்துடன் சாப்பாடு. சிக்கியிருப்பவரின் தகுதிக்கு ஏற்ப சில பல கதைகளை அவிழ்த்து விடுவார். சினிமா பிரபலங்களை கனெக்ட் செய்வார். போனில் பேச வைப்பார். பிரபலங்களிடம் பெரிய பைனான்சியர் என்றுச் சொல்லி வைப்பார். இது சிக்கி இருப்பவருக்குத் தெரியாது. இவ்வளவு பெரிய ஆளா என்று சிக்கி இருப்பவர் மலைத்தே போய் விடுவார். ஜொள்ளு விடுபவர் என்றுத் தெரிந்தால் பல்வேறு நடிகைகளை போனில் பேச வைத்து கிறுகிறுக்க வைத்து விடுவார். அவ்வளவு திறமைசாலி.

என்னிடம் பல முறை சிக்கிக் கொள்வார். ”அதெயெல்லாம் கேக்காதீங்கண்ணே” என்று நழுவி விடுவார். ”ஏதோ பிழைச்சுப் போறேன், விட்டுடுங்களேன்” என்பார். சென்னை சென்றால் பொழுது போக்க அவரை வரவழைத்து விடுவேன். செமையா ரீல்களை விடுவார். இயக்குனர்கள் எல்லாம் தோற்றுப் போய் விடுவார்கள். பிரியாணியும், கைச்செலவுக்கு 500 கொடுத்து விடுவதுண்டு.  சிக்கன் பிரியாணி என்றால் உயிர் அவருக்கு. இடையில் என்னைப் பார்க்க எவராவது வந்து விட்டால் அவர் பாடு திண்டாட்டம் தான். நம்ம நண்பர் தானே என்ற வகையில் என்னைப் பார்க்க வருபவரிடம் எப்படியெல்லாம் சொன்னால் ஆள் பயப்படுவாரோ அப்படிச் சொல்லி, சகஜமாக வந்தவரை அட்டென்சனில் நிற்க வைத்து விடுவார்.

“ஏம்பா, நீ இவ்ளோ பெரிய ஆளா? ஒன்னுமே சொல்ல மாட்டேன் என்கிறாயே?” என்று கோபித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு என்னை உயரத்தில் ஏற்றி விடுவார். வாங்கிக் கொடுக்கும் பிரியாணிக்கும், 500 ரூபாய்க்கும் மேலே, அதுக்கும் மேலே காரியத்தை கன கச்சிதமாகச் செய்து விடுவார். அந்த நண்பரை இவர் எங்காவது பார்த்தார் என்றால், என் பிள்ளைக்கு காய்ச்சல் என்று கதை சொல்லி 500 ரூபாயை ஆட்டயப் போட்டு விடுவார்.

அவரிடம் சிக்கினார்கள் என்றால் மெதுவாக வறுபடும் கிரில் சிக்கனாகி விடுவார்கள். இவரைப் பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிந்து விடும். பெருமூச்சோடு கடந்து போய் விடுவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவரின் ரீல்கள் பலம் வாய்ந்தவை.

இப்படியான ஆட்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். இன்றைக்கு என்ன கிடைக்கும் என நினைக்கும் ஆட்களே நம்மைச் சுற்றி அதிகமிருக்கின்றார்கள். அவர்களின் செயல்கள் இப்படித்தானிருக்கும்.

அப்படி இவரிடம் சிக்கிய ஒருவர் என்னிடம் பேசினார். மனசு வெறுத்துப் போய் பேசினார். ஒரு லட்சமாவது செலவழித்திருப்பார் என நினைத்தேன். புலம்பிக் கொண்டிருந்தார் அரை மணி நேரமாக. பொறுமையாகக் கேட்டு விட்டு அவரிடம் சொன்னேன் இப்படி.

”அது அவரின் டிசைன், அதாவது அவர் அப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறார். புரிகிறதா?” என்றேன். எதிர்முனையில் சத்தமே இல்லை.

ஐந்து லட்ச ரூபாய் காரின் டிசைனும், ஒரு கோடி ரூபாய் காரின் டிசைனும் வெவ்வேறு அல்லவா? டிசைனுக்குத் தகுந்தவாறு தான் கார்களின் செயல்பாடுகளும் இருக்கும். அதே தான் மனிதனுக்கும். உண்மையை மட்டும் பேசும் டிசைன், பொய் மட்டுமே பேசும் டிசைன், சுயநல டிசைன், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் டிசைன், ஏதும் அறியாது எல்லாம் அறிந்த டிசைன் இப்படி ஒவ்வொரு மனிதனும் டிசைன் செய்யப்பட்டிருப்பான். தொழில்களில் இருப்போரின் டிசைன்கள் வேறு வகையானவை. அரசியல் டிசைனும் வேறு வகையானது.

யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும்,அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் அலசுங்கள். ஒவ்வொருவரின் டிசைன் உங்களுக்குள் தெள்ளத் தெளிவாக விரியும். அவர்கள் பேசுவதை உற்றுக் கவனியுங்கள். அவர்களின் மொத்த டிசைனும் புரிந்து விடும். பின்னே என்ன? நமக்கேற்ற டிசைனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த டிசைன் அருகில் இருக்க வேண்டும், எந்த டிசைன் தூரத்தில் இருக்க வேண்டும், எந்த டிசைனுக்கு எப்படி பேசினால் புரியும், எந்த டிசைனை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என்பதெல்லாம் பட்டவர்த்தமாக தெரிந்து விடும். கோபம் வராது. டென்சனாகாது. வாழ்க்கை சுவாரசியமிக்கதாக மாறி விடும்.

முயற்சித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!



Thursday, January 18, 2018

அறத்தின் மீது அடி விழுகிறதா?

”மனிதன் எப்போதுமே மனிதன் தான். எத்தனை கடவுள்கள் வந்தாலும் மனிதனால் மாறவே முடியாது” என அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வகையில் பிறருக்குப் பிரச்சினை கொடுப்பவனாகவே இருக்கிறான். சூழ்நிலைக் கைதியான மனிதனிடம் மனிதம் அவ்வப்போது எட்டிப் பார்க்குமே ஒழிய எப்போதுமே தன் வயிற்றுப் பசிக்கும், இடுப்புப் பசிக்கும் தான் அவன் வேலை செய்வான்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியைக் கண்டவுடன் இந்தியாவின் இறையான்மாவின் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது புரிந்தது. யார் எதை நம்புகின்றார்களோ அந்த நம்பிக்கைக்கும் மேலே உலகினை இயக்கி வரும் “அறம்” (தர்மம்) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. 

இந்திய ஜனநாயகத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளும் மனிதர்கள் என்கிற வகையில் எல்லை மீறிய அதிகாரம், எப்பேர்பட்ட மனிதனையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைத்து விடும். நல்ல நீதிபதியாகவே இருந்தாலும் எல்லையற்ற அதிகாரம் தவறு செய்யத் தூண்டி விட்டு விடும். குடும்பம் இருந்தாலே அவர்களும் ஒரு சில சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நிதர்சனமானது.

இதற்கு யார் என்ன செய்ய முடியும்? என்பது தான் இந்திய மக்களின் மனதில் இப்போதைக்கு எழுந்திருக்கும் விடை தெரியா கேள்வி. அந்தக் கேள்விக்கு ஒரே பதிலாக என் முன்னே இருப்பது, இந்தியாவின் இறையான்மா மட்டுமே.

இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. எத்தனையோ ஆதிக்கஜாதிகளைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? 

ஒரு காலத்தில் உலகிற்கே மறை சொன்ன தமிழ்சாதி(சாதிதான்) மக்களின் இன்றைய நிலைமை - அய்யோ பாவமாக இருக்கிறது அல்லவா? அதே போலத்தான். தமிழ்சாதி மக்களைச் சுற்றிச் சுற்றி அடி விழுகிறது. தமிழ்சாதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. போனவன் வந்தவன் எல்லாம் அடிக்கிறான். அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் ஆடும் இடுப்பாட்டக்காரிகளின் தொடைகளில் அல்லவா தமிழ் சாதியின் உயிர் இருக்கிறது. ஆடும் அந்தச் சதைகளின் மீது அல்லவா தமிழ்சாதி தினமும் துயில் கொண்டு துயிலெழுகிறது. அந்தச் சதைகளைத் தடவி உசுப்பேத்தும் ஹீரோக்களை அல்லவா தலைவர்கள் என்று நம்புகிறது. தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தமிழ்சாதிக்கு நிகரேது இந்த உலகில்.

காலையில் உதித்தெழுந்து மாலையில் மறையும் படி சூரியனைச் சுற்றி இயங்கி வரும் பூமியை எது அந்தரத்தில் நிற்க வைத்ததோ அது என்னைப் பொறுத்த வரை “அறம்” 

உலகில் இந்தியா மட்டுமே மனிதன் வாழக்கூடிய தர்ம பூமியாக இருக்கிறது. அதர்மம் ஓங்குகிற போதெல்லாம் தன்னைத் தானே சிலிர்த்து எழுந்து சுத்தப்படுத்திக் கொள்ளும் இந்த பூமியைப் பாதுகாக்கும் அந்த அறம் நீதி என்கிற பெயராலே அழைக்கப்படுகிறது. அந்த நீதி அரசியலின் பேரால் தாக்கப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார்கள் அந்த நீதிபதிகள். அந்தத் தாக்குதலுக்குக் காரணமான யாரானாலும் சரி. அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள். அது கொடூரத்தை மிஞ்சிய கொடூரத்தின் தாக்குதலாகவே இருக்கும். ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கிய கதைகள் வரலாற்றிலே நிறைந்திருக்கிறது. ஆடட்டும். அடக்கப்படுவார்கள் என்று கடந்த காலம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

கீழே ஒரு சில நீதிபதிகளின் வரலாறு இருக்கிறது. படித்துப் பயனடையுங்கள்.



ஆண்டாள் பாவம். தன்னால் தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை உண்டாகும் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார். மொத்தத்தில் இங்கு யாரும் அவரவர் வேலையைப் பார்ப்பது கிடையாது என்பது மட்டும் புரிகிறது. கட உள்ளே என்பதை கடவுள் என மாற்றி வியாபாரம் செய்யும் உலகமல்லவா இது.

Tuesday, January 2, 2018

ரஜினிக்கு காலம் தரப்போவது முட்களா? பூக்களா?

குழந்தைகள் இரண்டும் லீவில் இருக்கின்றார்கள். 5 மணிக்கு எழுந்து எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு நேரம் மிகச் சரியாக இருக்கும். பரபரப்பான அந்த நாட்களில் இருந்து இருவருக்கும் கொஞ்சம் விடுதலை. 

இந்த வருடம் கோவையில் குளிர் மிக அதிகம்.  வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தால்  உடல் சில்லிட்டுப் போகிறது. சுற்றிலும் தென்னை மரங்களும், வேப்பமரமும் இருந்தாலும் கதகதப்பு இல்லை. ரூடோஸ் எப்படி குளிரைத் தாங்குகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது ரூடோஸை ஆஸ்ரமத்தில் விட்டுச் சென்றோம். வீட்டுக்கு வந்தவுடன் ரூடோஸ் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்காமல் ஏதோ இழந்தது போல இருந்தது. டென்சனில் உடனே ஆஸ்ரமத்திற்குச் சென்று அழைத்து வந்து விட்டோம். ”ரித்திக்கிட்டே தான்பா பாசமா இருக்கு. அவன் வந்தா அவனுடன் ஈச ஆரம்பித்து விடுகிறாள் ரூடோஸ்” என்று நிவேதிதா குறைபட்டுக் கொள்வாள். ரூடோஸ் பெயரைப் போலவே முரட்டுத்தனமானவள். வாயைத் திறந்தால் பார்ப்பவருக்கு குலை நடுங்கி விடும். குரைக்கும் போது முடிகள் சிலிர்த்து சிங்கம் போல சீறுவாள். என் மீது வந்து மோதினால் நான் அம்பேல். மல்லாக்க விழுந்து விடுவேன். ஆகையால் அருகில் விடுவது இல்லை. காலையில் தலையில் கொஞ்சம் தடவிக் கொடுப்பதோடு சரி. தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடு என்று தலையை அசைத்துக் கொண்டிருப்பாள் ரூடோஸ். 

கடந்த வெள்ளியன்று அம்பாள் சினிபார்க்குக்கு “வேலைக்காரன்” படம் பார்க்க மனைவியுடன் இருவரும் சென்றிருந்தனர். எனக்கு சிவகார்த்திகேயனின் லூசுத்தனமான பேச்சு பிடிக்காது. ஆகவே வர இயலாது என்றுச் சொல்லி மறுத்து விட்டேன். வீட்டுக்குள் நுழையும் போதே, “ஏங்க, நல்ல டிவிடிக்கடை இருக்கான்னு தேடனும்ங்க” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார் மனையாள். பசங்க,”அப்பா, லைட்டைப் போடுங்கடா, வீட்டுக்கு போறோம்னு, தியேட்டரில் கத்துறாங்கப்பா, சரியான மொக்கைப்படம்பா, நல்லவேளைக்கு நீங்க வரவில்லை, அம்மா, நெட்டில் பாத்துக்கலாம்மா இனிமேல், காசு தான் வேஸ்டா போச்சு” என்றார்கள் இருவரும் கோரசாக. நான் ஏற்கனவே ப்ளூசட்டை விமர்சனம் பார்த்து விட்டேன் என்பது மூவருக்கும் தெரியாது. பசங்க இனி சினிமாப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நமக்கு அதுதானே வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி !

ப்ளூசட்டை என்றவுடன் மாமா டிவி புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று தாங்களே தங்களைக் கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொள்ளும் லூசுப்பயல்கள் செய்யும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸில் ப்ளூசட்டை போலவே காமெடி பண்ணினான் ஒருவன். எரிச்சலில் அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றியது. இவனுங்க காமெடியும், நக்கலும் சகிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தங்களைப் பெற்ற அம்மாவையும் பிறரோடு சேர்த்து வைத்துப் பேசி காமெடி பண்ணுவான்கள் கிறுக்கன்கள். 

அடுத்த வாரம் ஐபிஎஃப்பில் கம்ப்ளைண்டு செய்ய வேண்டும். அழிச்சாட்டியத்துக்கு ஆப்பு அடிக்கணும். நாடகத்துக்கு எல்லாம் சென்ஸார் இருப்பது போல டிவி நாடகங்களுக்கு சென்சார் வைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இது பற்றி விபரமாக எழுதிப் போட்டால் அவர் ஏதாவது ஆவண செய்வார் என்று நினைக்கிறேன். 

ஈரோடு மகேஸ் என்றொரு திமிர் பிடித்த ஒருவரை நான் இது நாள் வரை பார்க்கவில்லை. ஆனானப்பட்ட டிடி இப்போது மாமா டிவியில் இல்லை. இவனெல்லாம் சும்மா பச்சா? என்னா பேச்சு பேசுறான் தெரியுமா இவன்? அகங்காரமும், ஆணவமும் நிரம்பிய ஒருவன் இருக்கிறான் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். மகேஷ் பிறரை மதிக்கக் கற்றுக் கொள். இல்லையென்றால் காலம் உன்னை அடக்கி விடும்.

நேற்று குருநாதரிடம் ஆசீர்வாதம் வாங்க வெள்ளிங்கிரி சென்றிருந்தேன். கடந்த வாரம் பசங்க இருவரும் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். லீவு விட்டால் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம். யானையை மிக அருகில் பார்த்ததாகச் சொன்னார்கள். எனக்குத்தான் திக்கென்றது. பூண்டி கோவிலில் கூட்டம் அள்ளியது.  கோவில்கள் தோறும் மக்கள் பெருக்கம். 

ஜோதி ஸ்வாமியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ”சாமி அந்தக் காலத்தில் தினம் தோறும் தர்மம் போடுங்க என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் யாரையும் அப்படிப் பார்க்க முடியவில்லை” என்றேன்.

”வீடுகளில் இருந்து தர்மம் நீங்கிப் போய் விட்டது. தர்மம் இப்போது அதர்மமாக மாறிப் போனது. தர்மத்தை வாங்க இன்று யாருமில்லாது போயினர்” என்றார் ஸ்வாமி.

தர்மம் அதர்மமாக மாறியதன் காரணமாகவோ என்னவோ, இப்போதெல்லாம் மொத்தம் மொத்தமாக மனிதர்கள் இயற்கையால் கொல்லப்படுகின்றார்கள். ஏழை என்று பார்ப்பதும் இல்லை பணக்காரன் என்றும் பார்ப்பதும் இல்லை. கொத்துக் கொத்தாக அழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழர்கள் அதிகம் இயற்கையால் அழிக்கப்படுகின்றனர். இதெல்லாம் அதர்மம் அதிகரிக்கும் போது பாரத்தைக் குறைப்பதற்காக தர்மம் செய்யும் வேலை என்றார் ஸ்வாமி.

ரஜினி காலக்கெடு வைத்த போதே தெரிந்திருக்கும். அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிக்குத் தெரியாத ஒன்று உள்ளது. தன் படத்தையே ஜெயிக்க வைக்க முடியாத ரஜினி, தமிழக அரசியலில் எப்படி ஜெயிப்பார்? என்பது தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் பலரும் பல கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள். மாறிப்போன அரசியல் களத்தில் ரஜினிக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. பிஜேபியின் மிஸ்டுகால் போலத்தான் ரஜினியின் இணையதளமும், ஆப்பும் இருக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. கமல் பாவம். ரஜினி வழக்கம் போல முந்திக் கொண்டார். கமலுக்கு இப்போது டிவிட்டர் பக்கம் வேலை இருக்காது என நினைக்கிறேன்.





அறுபது வயதில் கிட்னி கெட்டுப்போய் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தன் ரசிகனின் கையைக் கூட குலுக்க முடியாத நிலையில் ரஜினிக்கு இந்த வேலை தேவையா என்று தோன்றுகிறது. கிட்னி பத்திரமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அதுதான் பிரச்சினையானது. ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியும், புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியையும் மறக்க முடியாது. அவரின் உண்மையான நடிப்பில் மிளிர்ந்த அந்த வேடங்களுக்கு சமமாக அரசியல் வேடம் எடுபடாது என்றே தோன்றுகிறது.

மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல்  இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.

அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.

இருப்பினும் காலத்தின் கையில் இருக்கும் அவரின் நூல்கண்டு என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழகத்தினை வழி நடத்தும் தர்மத்தின் பாதையில் முட்களும் இருக்கும். பூக்களும் இருக்கும். ரஜினிக்கு முட்களா இல்லை பூக்களா என்று காலம் பதில் சொல்லும்.


Saturday, December 30, 2017

நஷ்டமே இல்லாத வியாபாரம்

அடிக்கடி மனைவியிடம் ”ஒன்னும் முடியவில்லை என்றால் வசியமருந்து விற்பனைக்கு கிளம்பி விடுவேன். ஒரே ஆண்டில் கோடி கோடியாய் குவித்து விடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆசைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் ஆசைகளை அப்படியே அறுவடை செய்து விடலாம். ஆனால் மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதே? அறம் என்ற ஒன்று இருக்கிறதே? ஆகையால் என்னால் இனி பேசக்கூட இயலாது. அப்படிச் சம்பாதித்து என்ன கிழிக்கப் போகின்றோம்?  பணம் வைத்திருந்தால் நல்ல ஆடை உடுத்தலாம். விலை உயர்ந்த காரில் செல்லலாம். உயர்ந்த உணவகங்களில் உணவருந்தலாம். இருந்தும் இந்த உடலை பாதுகாத்து 1000 ஆண்டுகள் வாழ்ந்திட இயலுமா? எந்த நொடியிலும் மகிழ்ச்சியாக வாழ இயலுமா? இது எதுவுமே இயலாது ஆனாலும் சாதித்திட முயல்கிறோம். காசைத் தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

100 சதவீத வாழ்க்கையில் 1 சதவீதம் தான் பணம். மிச்ச 99 சதவீதம் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் கலிகாலத்தில் 1 சதவீதம் தான் வாழ்க்கையாகவும் 99 சதவீதம் பணமாகவும் மாறிப் போய் விட்டது.

கனடாவில் வசிக்கும் லூசுப்பயலுக்கு என் சகோதரியின் பெண்ணைப் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்தார்கள். என் மருமகளும் அவனும் நேரில் சந்தித்தித்த போது, ”நீ ஏன் காஃபிக் கடையில் உட்கார்ந்திருக்கிறாய், மாலில் இருந்தால் செலவிருக்காது அல்லவா?” என்றானாம் அந்த கே.பயல். பின்னர், “உன் பெற்றோர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை தான் கனடா வரலாம், அதுவும் அவர்கள் செலவில்” என்றானாம். “சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதம் என்னிடம் கொடுத்து விட வேண்டும், மீதி குடும்பச் செலவுக்கு” என்றானாம். விசா வாங்கும் போது தனியாக பெற வேண்டுமாம், பியான்சி என்றால் கூடுதல் செலவாகும் என்றானாம். அவனை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இன்னேரம் ஜெயிலில் இருந்திருப்பேன். எந்தப் பெண் மாட்டிக் கொண்டு சாவப்போகின்றாளோ தெரியவில்லை. இந்த வாழ்க்கையைத்தான் உலகம் மிகச் சிறந்த வாழ்க்கை என்கிறார்கள். இந்த லூசுப்பயல் கடைசியில் ஜக்கி மாதிரி கார்ப்பொரேட் சாமியார்களுக்கு செருப்பு துடைத்துக் கொண்டிருப்பார்கள்.

நேற்று நானும் ஒரு செட்டியாரும் ஒரு சிறிய வேலை தொடர்பாக வெளியில் சென்றிருந்தோம். செட்டியாரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ”ஜக்கி வாசுதேவ் எவ்வளவு பெரிய ஆள்” என்றார் அவர். “ஜெயலலிதாவை விடவா பெரிய ஆள் ஜக்கி பெரியவர்? இப்போது ஜெயலலிதா எங்கே?” என்று எதிர்கேள்வி கேட்டேன். ”சார், ஜக்கி பிரதமர் மோடியிடம் தொடர்பு வைத்திருக்கிறார்” என்றார். “வாஜ்பாய் எங்கே, அத்வானி எங்கே, நரசிம்மராவ் எங்கே?” என்றேன் தொடர்ந்து. ஆள் ஒன்றும் பேசவில்லை.

அறம் என்ற ஒன்று இந்த உலகினை இயக்கி வருகிறது. ஹிட்லரும், முசோலினியும், அசோக சக்கரவர்த்தியும், ராஜ ராஜசோழனும் இப்போது எங்கே என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்டீர்கள் என்றால் வாழ்க்கையின் நிலையாமை பற்றிப் புரியும். 

”இந்த உலகின் மாபெரும் அவதாரமும் உண்மையை மட்டுமே பேசிச் சென்ற ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்றால் அவர் ஓஷோ” என்று என் குருநாதர் ஜோதி ஸ்வாமி அடிக்கடிச் சொல்வார். ஓஷோவின் புத்தகங்கள் எனக்கு பல்வேறு உண்மைகளை உரித்துக் காட்டி இருக்கின்றன. தெளிவற்ற மனம் தெளிந்த நீரோடை போல மாறியதற்குக் காரணம் ஓஷோவின் நூல்கள். என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று நான் மட்டுமே முடிவு செய்வேன் என்கிற தன்னம்பிக்கையை எனக்குத் தந்தது. அவர் சொல்லிய ஒரே ஒரு உண்மையை மட்டும் கீழே பகிர்கிறேன். படித்துப் பாருங்கள். இது நீங்கள் எப்போதாவது யாரிடமிருந்தாவது ஏதோ ஒரு காரணத்துக்காவது கேட்டிருக்கலாம். ஆனாலும் ஓஷோ சொல்ல வந்தது இதுதான். அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

இந்த உலகில் ஒன்றே ஒன்று மட்டுமே உயிர்ப்புடன் உள்ளது. அது உங்களின் மனதுக்குள் உறைந்து போய் கிடக்கும் “தயை”. அதை வெளிக்கொணருங்கள். வாழ்க்கை அற்புதமானதாக இருக்கும். எதையும் கடந்து சென்றால் எல்லாமும் உங்கள் பின்னால் வரிசை கட்டி உங்களைச் சேர நின்று கொண்டிருக்கும். நீங்கள் தேடியது உங்களைத் தேடி வரும். 

இனி ஓஷோவின் கதை கீழே...!

உலகில் இருக்க நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர்.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது.

ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம்  இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான்.

இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான்.

இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான்.

அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான்.

அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான்.

அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான்.

மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம்.

இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது.

மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது.

இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான்.

அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான்.

ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர்.

அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர்.

இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர்.

அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….”

அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான்.

முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது.

அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான்.

இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான்.

மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர்.

பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான்.

அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது.

அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார்.

ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே.

பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம்.

கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல.

அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள்.

அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை.

மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை.

அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது.

Monday, December 18, 2017

பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலுமா?

அதிசயம் என்று நினைக்கவோ, நீங்கள் ஆச்சரியப்படவோ இதை எழுதவில்லை. இப்படி நாமும் இருக்கலாம் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.  பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பலில் “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்று புலம்பி இருப்பார். அதென்ன தூங்காமல் தூங்கி சுகம் காண்பது என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருப்பேன். 

உடலுக்குத் தூக்கம் அவசியம் என்பார்கள். அதை விட மெய்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்து தூங்காமல் தூங்குவதற்கும் பயிற்சியும், முறையான வழியும் உண்டு என்கிறார்கள் சித்தர்கள். இதையெல்லாம் பாடல்களாய் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சாட்சி? உண்மையா என்று உணர்வதற்கு ஏதேனும் நிகழ்கால நடப்புகள் இருக்கின்றனவா என்று தெளியாத மனசு கேள்வி கேட்கும். அப்படித்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு யோகியின் கதை என்கிற புத்தகத்தில் யோகேஸ்வரானந்தரின் அனுபவங்களைப் படித்த பிறகு கொஞ்சம் தெளிவு பிறந்தது. என் அறிவு உணர்ந்து கொள்ளாத, அல்லது அறிந்திடாத விஷயங்களை நான் இனி மறுப்பது கூடாது என்ற கொள்கைக்கு வந்தேன். அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்று இனி ஆராயத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். மானிடர்கள் தனக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக உடனடியாக மறுதலித்து கிண்டல் செய்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அது அவர்களின் அறியாமை. அது அவர்களின் பிரச்சினை. தாம் அறிந்து கொண்டிருப்பது பிறரின் கூற்று என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறிவிலிகள். நாம் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை ஒவ்வொன்றும் பிறரால் நமக்கு வழிகாட்டப்பட்டவை அல்லவா? இதில் நம் புத்தி எங்கே போனது? அது இருந்தாலல்லவா நாமெல்லாம் உண்மையான மனிதர்களாக இருப்போம். நாம் பிறரின் பதிப்பு அவ்வளவே. நம் சிந்தனை கூட பிறரால் வழி காட்டப்பட்ட வழியில் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. தனக்கான சிந்தனை என்று எவரும் சிந்திப்பது இல்லை.நேற்று காலையில் எனக்கு நிரம்பவும் பிடித்த தம்பதிகளுடன் உரையாடிட காலம் கிடைத்தது. இருவரும் ஆன்மீக வழி நின்று சேவைகள் செய்து வருபவர்கள். அந்தத் தம்பதியினரைச் சந்தித்த போது, அப்பெண்மணியின் முகம் தேஜஸ்சில் ஜொலித்தது. அப்படி ஒரு தெளிவு. இதுவரை நான் அந்த முகப் பொலிவை எந்தப் பெண்ணிடமும் பார்த்தது இல்லை. அல்ல, அல்ல பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவரின் கணவர் என்னிடம் வருத்தப்பட்டார், ”இவர் தூங்கி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது” என்று.  அது சாத்தியமா? என்று எனக்குப் புரியவில்லை. அடியேனோ எட்டரை மணிக்கு மேல் தலையாட்டிட ஆரம்பித்து விடுவேன். விடிகாலை நான்குக்கு மேல் படுக்கை முள்ளாகி விடும். விடிகாலையில் துயில் எழுவதும், சீக்கிரமே தூங்கச் செல்வதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த முகத்தில் ஒரு சிறு கரு வளையமோ அல்லது அயர்ச்சியோ அல்லது சோர்வோ இல்லை. துடைத்து வைத்தக் குத்து விளக்காக இருந்தார் அவர். அதெப்படி பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலும்? என்றொரு கேள்வி எழ, அவர்களை அழைத்துக் கொண்டு குருநாதரைத் தேடிப் புறப்பட்டோம்.

ஆழ்ந்த தெய்வபக்தி கொண்ட தம்பதிகளின் சரியான நேரச் சேர்க்கையினால் பூமிக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி என்று விரித்துரைத்தார் ஜோதி சாமி என்னிடம் தனியாக.

காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில் விழுவது போன்று இல்லறத்தில் ஈடுபடுவதினால் தான் வாரிசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போய் விடுகின்றன ஆண்டவனே என்றார். அவர் தூங்க வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறு அவர் தூங்க ஆரம்பித்தால் பின்னர் எழவே மாட்டார் என்று அவரின் கணவரிடம் சொன்னார். ஆகவே வருத்தமோ அல்லது கோபமோ பட வேண்டாம் என்று கனிவுடன் அறிவுறுத்தினார். இருவருக்கும் நிரம்பவும் மகிழ்ச்சி. பத்து வருடங்களாக மனதுக்குள் பாரத்தோடு இருந்தவர்களுக்கு அது ஒரு நோய் அல்ல என்பது புரிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 

அலோபதி மருத்துவர்கள் இதற்கு பல பெயர்களைச் சூட்டுவார்கள். ஒரு யோகியின் கதை புத்தகத்தில் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தவரின் புகைப்படம் இருக்கிறது. அது சாத்தியமா என்று அறிவியலால் நிரூபிக்க முடியாது.

தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபடவும் நேரம் காலங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் பின்பற்றுவதில்லை என்று சொன்னார் சாமி. உடனே ஜோசியக்காரர்களிடம் சென்று முதலிரவுக்கு நேரம் குறித்தால் போதுமா என்று உங்கள் மனசு கேட்க ஆரம்பிக்கும். அந்த நேரம் அல்ல இது. சாமி என்னிடம் கூறியது வேறு. இனி அது எனக்குப் பயன்படாது என்பதாலும் குழந்தைகளுக்கு ஆதர்ஷ மனிதனாய் இருக்க வேண்டும் என்கிறதாலும் அதிகம் கேட்கவில்லை.

போன வாரம் என்று நினைக்கிறேன். சாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ”700 வருடங்களுக்கும் மேல் வாழ வழி இருக்கிறது ஆண்டவனே” என்றார்.  அதற்குரிய எளிய வழி முறைகளையும் என்னிடம் எடுத்துரைத்தார். எனக்கு அதுவும் தேவைப்படாது. இந்த உடலை வைத்துக் கொண்டு 1000 வருடங்கள் வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறோம், போதுமடா சாமி, என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றைக்கு மகிழ்வாய் உடலை உகுத்திட வேண்டுமென்று எண்ணமுள்ளதால் (உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் அல்லவா?) அவர் சொன்ன எளிய வழிமுறையை இங்கு எழுதிடவில்லை.

ஒரு ஹிட்லர் 60 வருடம் வாழ்ந்ததிற்கே இத்தனை கொலைகள் செய்தார். இன்னும் 1000 வருடங்கள் வாழ்ந்தால் என்ன ஆகும்? என்று நினைத்தாலே நடுக்கமெடுக்கிறது. ஆகவே கலிகாலத்தில் விதிக்கப்பட்டது எதுவோ அது  அப்படியே நடக்கட்டும்.

வாழ்க வளமுடன் !

Saturday, December 16, 2017

மக்களை முட்டாளாக்கும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்

பல்வேறு செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வருபவை செய்திதாள்களும், டிவி மற்றும் இணையதளங்கள். ஆனால் இவைகளில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன? என்பது பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு மீடியாவும் தங்களுக்கு ஏற்றவாறு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்று பேசுவோம். ஆனால் அதை மறந்து விட்டு, அந்தச் செய்திகள் உண்மை என நினைத்து விடுகிறோம். இந்த இடத்தில் தான் நாம் நம்பிக்கை என்று மன ஏற்பால் ஏமாற்றப்படுகிறோம்.

ஆடு தன் முன்னாள் செல்லும் ஆட்டின் வாலைப் பார்த்துக் கொண்டே செல்லும் என்பார்கள். அதே போல தினசரிகளில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டு இன்றைக்கும் டீக்கடைகளிலும், பலர் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு, கமெண்ட், லைக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு டீக்கடை, இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர். ஆனால் ஏமாறுவது நாம் என்று அறியாமலே ஏமாந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் என்றைக்கு கட்சி சார்பானதாக மாறியதோ அன்றைக்கே மீடியா தன் தர்மத்தை இழந்து விட்டது. பேனாவின் நிப் உடைந்து போய் அரசியல் சாக்கடையில் விழுந்து விட்டது. பத்திரிக்கைகளில் பேனா நிப்பினைப் போட்டு நான்காவது தூண் என்றெல்லாம் எழுதுவார்கள். அதை உண்மை என்று நம்பி பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்கள் எதார்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு, பிழைக்கும் வழிக்கு மாறி விட்டார்கள். பிழைக்கும் வழி - “உண்மையை சார்ந்திருப்பதுக்கு ஏற்ப பேசுவது இல்லை மறைப்பது” 

உங்களுக்கு சாட்சிகள் இல்லையென்றால் நம்பமாட்டீர்களென்பதால் சாட்சியுடன் வந்திருக்கிறேன். இனி பேப்பர் படித்து அந்தச் செய்தி உண்மை என்று நம்புவதை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன். 

தினமலரில் இன்றைக்கும் 16/12/2017 அன்று வந்த செய்தியின் படம் கீழே
.

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி தினகரனில் வெளிவந்த செய்தி கீழே. உடனே அது பிஜேபி பத்திரிக்கை, இது திமுக பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடாதீர்கள். செய்தி ஒன்று. ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முயலுங்கள். மீடியாக்காரர்களை நாம் என்னவென்று அழைக்கலாமென்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.



அதுமட்டுமின்றி தினத்தந்தியின் செய்தியின் இணைப்பு கீழே இருக்கிறது. அதையும் படித்து விடுங்கள்.

சொல்ல வந்தது அவ்வளவுதான். 

மார்கழி பிறந்து விட்டது. கோவையில் குளிர் அதிகம் வாட்டுகிறது. விடிகாலை கோலம், சாணி, கோவில் குளங்களுக்குச் சென்று வருவது எல்லாம் கிராமப் புறங்களில் நடக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆன்மீகம் நல் வழிப்படுத்தும் பாதை. ஆனால் கடவுள் தான் இன்றைக்கும் இந்த பூமிபந்தின் மிக உயர்ந்த வியாபாரப் பொருளாக மாறிப் போனார் என்பது வருத்தம் அளிக்கிறது.


Saturday, November 11, 2017

கடவுளின் கவலை

கமல்ஹாசனுக்குத் திடீரென வீரம் வர, சினிமா ஹீரோ போலவே அரசியலும் இருக்குமென நினைப்பில் அல்லுப்படுத்திக் கொண்டிருக்கிறார். கமல் வந்தாலே எனக்கு பூநூலும் நினைவுக்கு வந்து விடுகிறது. சிறிய வயதுப் பழக்கம். வாழ்ந்தாலும் செத்தாலும் அய்யர் சொல் கேளாமல் ஆகாது எங்களூர் பக்கம். அய்யர் வந்து சொன்னால் தான் எல்லாமுமாக இருந்து வந்த ஊர் எமது பிறந்த ஊர். இன்றைக்கும் என்னால் விடவே முடியவில்லை. குலதெய்வத்திலிருந்து எல்லா தெய்வங்களையும் தரிசிப்பது என்பது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகிப் போனது. அய்யர் வந்து சொன்னால் தான் நல்ல நாள் தெரியும். வீடுகட்ட, கலப்பை ஏர் உழ, விதை விதைக்க இப்படி எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் நாள் குறிப்பார்கள். நாள் குறித்தால் தவறாது வேலை. கோவில் குளங்களுக்குச் செல்வதென்றாலும் அவர்கள் சொன்னால் தான் உண்டு. இந்தப் பழக்கம் இன்றைக்கும் என்னிடமிருந்து விலகி விடமாட்டேன் என்கிறது. பூநூல் போட்டவர் என்றால் சாமி என்ற சொல்லைத்தவிர வேறு சொல் வருவதில்லை.

அதுபோல கோவில் பக்கம் சென்றால் கைகள் தானாகவே உயர்ந்து கொள்கின்றன. நவீன யுகத்து யுவனாகையால், சினிமா ஹீரோயினிக்கள் போல உதடுகளில் கையால் தட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

இந்த நாத்திகர்கள் இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை என்றே புரியவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று எவரும் வாளா இருப்பதில்லை. எதையாவது எழுதி வைத்துப் போய் விடுகின்றார்கள். அப்படியும் இருக்குமோ இப்படியும் இருக்குமோ என மனசைக் கிளறி விட்டு விடுகின்றார்கள். அண்ணாதுரையின் கடவுளின் கவலை பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு குழம்பித்தான் போய் விட்டேன். அதுமட்டுமல்ல எனது குருநாதரின் “அது உங்களின் அறியாமை” என்ற வார்த்தைகளும் என்னைச் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கின்றன. குழம்பினால் தான் தெளிவாகும். நான் குழம்பி விட்டேன். நீங்கள்?????

இதோ அந்தக் கட்டுரை கீழே....!



நன்றி : அறிஞர் அண்ணாத்துரை மற்றும் இதைப் பதிப்பித்தவர்களுக்கும். இந்த நூல் நாட்டுடைமை யாக்கப்பட்டிருப்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. ஆகவே எவருக்கும் உரிமை உண்டு இந்த நூல் மீது. அது மட்டுமின்றி அடியேன் பக்கா ஆத்தீகன். எத்தனை அண்ணாத்துரை வந்தாலும் எனக்கு நெற்றியில் திருநீறு வைக்காமல் பொழுது விடிவதில்லை. அவ்வப்போது தர்ஹாவின் பாங்கு அழைப்பும் கேட்க வேண்டும் எனக்கு.