குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Wednesday, October 12, 2016

நீலகண்டன்

கோடை லீவு விட்டு விட்டார்கள். கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் அடியேன் கணிணி ஆசிரியராக பணி புரிந்து வந்தேன். ஆத்மானந்தா சாமியுடன் பேசிக் கொண்டிருந்த போது ”லீவில் ஏதாவது படிக்கின்றாயாப்பா?” என்று கேட்டார்.

எனக்கு விசுவல் சி++ மீது ஆர்வம் இருந்தது. கரூரில் படிக்க விருப்பமில்லை. அந்த நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் அப்போதுதான் புதிதாக கட்டி இருந்தார்கள். அதன் அருகில் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்திற்கு யாரோ ஒருவர் நன்கொடையாக நிலம் கொடுத்திருந்தார். அங்கு ஒரு பள்ளியும், ஆசிரமும் கட்டி விட சுவாமி ஆத்மானந்தா அவர்கள் ஏற்பாடுகள் செய்து வந்தார். சென்னையில் அந்த இடத்தில் தங்கி இருக்கவும், பள்ளி கட்டவும் ஒரு பிரதரை நியமித்திருந்தார்கள். இங்கு கரூர் ஆசிரமத்தில் உள்ளுரை சன்னியாசிகள் தங்களுக்குள் பயங்கர அரசியல் செய்வார்கள். ஒவ்வொரு சாமியும் செய்யும் அரசியல் இருக்கிறதே அய்யோ அய்யோ ரகம் தான். 

நான் ஆத்மானந்தா சுவாமியிடம் இவர்களின் அரசியல் பற்றிப் பேசுவேன். அதற்கு அவர்,”இவர்களை சமூகத்தில் உலவ விட்டால் என்னென்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாரப்பா, ஆசிரமத்தில் இருந்துகொண்டு இங்குள்ளவர்களுடன் தானே அரசியல் செய்கின்றார்கள் என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்” என்பார். உண்மைதான். இவர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தால் அப்பெண் படும் துயரம் கொஞ்சமாக இருக்காது. ஏதோ ஒரு வகையில் இந்த வகைச் சாமியார்களால் பல பெண்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு புதிதாக கரூர் ஆசிரமத்திற்கு வந்த சாமியார் நாராயணனந்தாவை சென்னைக்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தார் ஆத்மானந்தா. அவருடன் நானும் செல்வதாக ஏற்பாடு. சென்னையில் SSIயில் விசுவல் சி++ படிக்கவும் ஏற்பாடு செய்தேன். எனக்கு உதவி செய்ய கரூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பல அனாதைச் சிறுவர்களில் பத்துப் பேரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாளில் பத்து அனாதைச் சிறுவர்களுடனும், நானும் எங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடனும், பண்டம் பாத்திரங்களுடனும் சென்னையை நோக்கிப் பயணித்தோம். சிறுவர்கள் லாரியின் பின்புறமுள்ள பகுதியில் மூடப்பட்ட படுதாவுக்குள் இருந்தனர். நான் லாரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு ஆசிரமம் சென்று சேர்ந்தோம்.

20க்கு 60 அடியில் இரண்டு ஓலை வேய்ந்த கொட்டகைகள். தியான அறை, உணவறை, மாணவர்கள் தங்கி இருக்க படுக்கை அறை, சாமிக்கு ஒரு அறை, அலுவலக அறை என தடுக்கப்பட்டு வேலிக்கருவை மண்டிக் கிடந்த இடத்துக்குள் அந்த ஆஸ்ரமம் அமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற அன்றைக்குதான் போர் போட்டிருந்தார்கள். மின் மோட்டார் இன்னும் இணைக்கப்படவில்லை. ஆசிரமத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது. அதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்ரமத்தின் மற்றொரு இடத்தில் பள்ளி கட்டுவதற்காக அடித்தளம் போடப்பட்ட போது ஏதோ பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவ்விடத்தில் போர் போடப்பட்டிருந்தது. அந்த தண்ணீர் உப்புத்தன்மை அதிகம் கொண்டது. 

சைக்கிளில் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். பாத்திரங்கள் கழுவ, குளிக்க, பாத்ரூம் இவைகளுக்கு அந்த தண்ணீரைப் பயன்படுத்தினோம். பின்னர் கொஞ்ச நாளில் புதிதாகப் போட்டிருந்த போரில் அடிபம்பு ஒன்றினை மாட்டினார்கள். கரேர் என்று தான் தண்ணீர் வரும். படுபயங்கர நாற்றம் வேறு. நாராயணந்தா அந்த தண்ணீரில் தான் குளிப்பார். ஆனால் எனக்கு சிறுவர்கள் அருகிலிருந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள். 

அந்த அனாதைச் சிறுவர்களில் லோக நாதன் மற்றும் நீலகண்டன் என்ற இரு மாணவர்கள் இருந்தனர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் அனைவரும் என்னுடனே சுற்றிக் கொண்டிருப்பர். அவ்வப்போது எனக்கு திண்பண்டங்கள் கொடுப்பார்கள். நான் அதிகம் விரும்பமாட்டேன். எல்லாவற்றையும் அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவேன். வெளியில் சென்று வந்தால் பஜ்ஜிகள் வாங்கி வந்து கொடுப்பேன். கம்யூட்டர் சார் என்றுதான் அழைப்பார்கள். கொசுக்கடி தான் அதிகம். அனைவருக்கும் கொசு வலை இருந்தது. நான் கட்டிலில் படுத்திருப்பேன். என்னைச் சுற்றிலும் சிறுவர்களில் தரையில் பாய் விரித்து கொசுவலைக்குள் படுத்திருப்பர்.

தினமும் வடபழனியில் இருக்கும் SSIஇல் விசுவல் சி++ படிக்க காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை நான்கு மணிக்குத் திரும்புவேன். நாராயணந்தாதான் என்னைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவார். மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு மீண்டும் மாலையில் என்னை அழைக்க வருவார். அந்த பிரதருக்கும் நாராயணந்தாவுக்கும் சண்டை உச்சகட்டத்தில் இருக்கும். நான் தான் தீர்த்து வைப்பேன். ஒரு வழியாக அந்த பிரதரை கரூருக்கு திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஆசிரமம் நாராயணந்தாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இதற்கிடையில் சாரதா நிகேதன் கல்லூரிக்கும், அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா கல்லூரிக்கும் கணிணிகள், பிரிண்டர்கள் வாங்க அவ்வப்போது ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு பள்ளி ஆசிரியப்பணியோடு இந்த இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கணிணிகளை உருவாக்குவது, சர்வீஸ் போன்ற வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கிடையில் நான் ஆத்மானந்தா சுவாமியிடம் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். என்னை நான் விரும்பும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று விட்டு வாருங்கள் என்று நாராயணந்தாவிடம் சொன்னார். நான் என்னுடன் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு ரோகினி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்.

ஒரு மாதம் படிப்பு முடிந்தது. அன்று இரவு நான் கரூர் திரும்ப வேண்டும். என்னுடன் வந்த மாணவர்களில் இரண்டு பேர் மட்டும் என்னுடன் கரூர் ஆசிரமத்திற்கு திரும்பினர். மற்றவர்கள் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து ஆசிரமத்திலேயே தங்கி விட முடிவு செய்தனர். 

என் துணிகளைத் துவைத்து போட்டு காய வைத்து அயர்ன் செய்து தருவார்கள். எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். மாலையில் தியான அறைக்குள் பஜனை செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து பாட்டுப்பாடி மகிழ்வது என இருந்து விட்டு பிரிவது என்பது தீரா வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

அங்கிருந்த மணலில் நான் அமர்ந்திருந்தேன். அருகில் சிறுவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். நீலகண்டன் எனக்கு தான் கற்றுக் கொண்ட ஒரு பொறியலைச் செய்து தரட்டுமா? சாப்பிடுகின்றீர்களா சார்? என்று கேட்டான். சிரித்தபடி தலையசைத்தேன். 

நீலகண்டன் நீள கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி அதனை சட்டியில் இட்டு எண்ணெய் சேர்த்து உப்புச் சேர்த்து வேக வைத்து அதனுடன் மிளகாய் பொடி தூவி கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் மைசூர் ரசமும், சூடான சாதமும் தந்தான். மண் திட்டில் அமர்ந்து கொண்டே சாப்பிட்டேன். எனக்குள் எதுவோ உடைவது போல இருந்தது. மனதின் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல அழுந்தியது. ஒரு சக உயிர் கொள்ளும் அன்பின் வெளிப்பாடு நிகழ்த்தும் மாயாஜால வேதனையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

”லேட்டாயிடுச்சு சார், போலாமா?” என்றார் நாராயணந்தா.

“எங்களையெல்லாம் மறந்திடாதீங்க சார்” என்றார்கள் சிறுவர்கள்.

கரூர் வந்து சேர்ந்து விட்டேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே வந்த பிறகு ஏதோ ஒரு நாளில் சென்னை ஆசிரமத்திற்கு போன் செய்த போது நாராயணனந்தா ”நீலகண்டன் பாம்பு கடித்துச் செத்துப் போய்விட்டான்” என்று சொன்னார். 

மனைவி சமைத்து தரும் கத்தரிக்காய் வதக்கலை வாயில் எடுத்து வைக்கும் போதெல்லாம் அவனின் நினைவு வந்து விடும். 

”ஏங்க? என்னாச்சு?” என்று பதறிப்போய் கேட்பதும் அதற்கு நான் சிரித்து மழுப்புவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நீலகண்டன் மறைந்து விட்டான். அவன் எப்போதும் எனக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். இனி உங்களுக்குள்ளும் வாழ்வான்.

இந்த எழுத்துக்கள் இருக்கும் வரை அவனுக்கு மறைவேது?

Saturday, October 8, 2016

ஒரு மட மாது

’பட்டால்தான் புத்தி வரும்’ பழமொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருந்து கொண்டே இருக்கிறது. அனுபவம் சொல்லித் தந்த பாடத்தை அன்றைக்கே பலரும் சொல்லி வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ’யார் கேட்பது?’. அனைத்துச் சுகங்களையும் அள்ளிப் பருகிய கண்ணதாசனே முடிவில் கண்ணனைத் தஞ்சமடைந்தார். வேறு வழி? ஆடிய ஆட்டம் அப்படி? 

நண்பரின் மனைவியுடன் மதுரை சென்று வந்த மனைவி வரும் போதே டெங்குவைக் கூட அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கணபதி சாலையில் இருக்கும் சிவா மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தோம். நான்கு நாட்களாக வாந்தி, காய்ச்சல் குறையவே இல்லை. பாரசெட்டமல் மருந்தினை மட்டுமே கொடுத்துக் கொண்டு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் தாமதித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது. மனைவி ரொம்பவும் மெலிந்து விட்டார். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பிளேட்லெஸ் 80,000 ஆயிரம் வரை குறைந்து விட்டது.

உடனடியாக கே.எம்.சி.எச் அழைத்துச் சென்று ஐ.சி.யூவில் அட்மிட் செய்தேன். வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த போது கண்களில் இருந்து தானாகவே தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் ஜீவன் சந்திரா அவர்கள் மனைவியைப் பரிசோதித்து விட்டு என்னிடம் சொன்னார், “டோண்ட் வொரி மேன், ஐ வில் கிவ் யூ ஹெர் வித் வெரி சேஃப். நந்திங்க் டு வொரி மேன்” என்றுச் சொல்லி ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மனைவியின் வாந்தி நின்று விட்டது. சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

குளுக்கோசுடன் பாரசெட்டமல் மருந்து மற்றும் தண்ணீர் உணவு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தார்கள். பிளேட்லெஸ் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக டெங்குப் பாதிப்பில் இருந்து வெளி வந்தார். 

பணம் இருந்து என்ன பயன்? வேறு என்ன இருந்தும் என்ன பிரயோஜனம்? எதுவும் கை கொடுக்காது. உடலெல்லாம் ஊசி குத்திக் குத்தி புண்ணாகும். மருந்தின் வீரியத்தில் உடல் படாத அவஸ்தைப் படுத்தும். சாப்பிட முடியாது. தூங்க முடியாது. வேதனை, வேதனை, வேதனை இதைத்தவிர வேறெதையும் அனுபவிக்க முடியாது.

இதையெல்லாம் பார்த்து பார்த்து உடம்பின் மீதான பற்றே எனக்குப் போய் விட்டது. தலைக்கு ஷாம்பூ, வாசனை எண்ணெய், டை, முகத்துக்கு க்ரீம், ஷேவ் லோசன், ஷேவிங் மெசின், ஃபோம், செண்ட், சோப், டியோடரண்ட், விலை உயர்ந்த ஆடைகள், கார்கள், சொகுசாக அமர ஷோபாக்கள், ஏசி என்று உடம்புக்குத் தேவையான அத்தனையும் செய்தும் உடல் நோயால் பீடித்து விடுகிறது. ஒரு நாள் உடலைக் கழுவ வில்லை என்றால் நாற்றமடித்து விடும். மனைவி கூட அருகில் வரமாட்டாள். பெற்ற பிள்ளை தூரப்போய் விடுவர். இத்தனையும் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்கின்றார்கள்? 

சமீபத்தில் என் நண்பர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோ வெகு அருமையாக இருந்தது. யூடியூப்பில் ஏற்றி இதோ உங்களுக்காக. பொறுமையாக பாருங்கள். தானாகவே சகமனிதனின் மீது பற்று ஏற்பட்டு விடும். வீடியோவைப் பாருங்கள். தொடர்ந்து கீழே இருக்கும் பாடலையும் படித்து விடுங்கள். சும்மா கிர்ருன்னு இருக்கும்.


 நன்றி : படவிளக்கம் உருவாக்கிய ஜெ.பிரதீபன்

இனி பாடல் வரிகள்

ஒரு மடமாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர்வு கலங்க வொழுகிய விந்து
வூறுசுரோணித மீதுகலந்து

பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற

உருவமுமாகி யுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை
மண்படவுந்தியு தைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகிவளர்ந்து

 ஒளிநகையூற லிதழ்மடவாரு
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடி யிலிருந்து மழலை பொழிந்து
வாவிருபோவென நாமம் விளம்ப

உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப

வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி மறுபதநீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகளணிந்து

மாகதர் போகதர் கூடிவணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து

மாமயில் போலவர் போவதுகண்டு
மனது பொறாம லவர்பிறகோடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு

தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்த தனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த வித்னமிதென்று

வாலிப கோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து

 வாதவிரோத குரோதமடைந்து
செங்கை யினிலோர் தடியுமாகியே
வருவதுபோவ தொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து

மதியுமிழந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையு நெஞ்சமு முலர்ந்து வறண்டு

துகிலுமிழந்து சுணையுமிழந்து
தோகையர் பாலர்கள் கோரணிகண்டு
கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச

கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தயு நெஞ்சமு முலைந்துமருண்டு
  
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதென நொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்று தெளிந்து

இனியெனக் கண்ட மினியெதொந்த
மேதினவாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரை நாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி யொழுகிடவந்து
பூதமு நாலுசு வாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே
வளர்பிறைபோல வெயிறுமுரோம

முஞ்சடையுஞ் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர் கொடுபோக
  
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் காலமறிந்து
பழையவர் காணு மெனுமயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர்பந்த
ரிடுமெனவந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர் தாமி

ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறுமுடம்பை
வரிசை கெடாம லெடுமெனவோடி

வந்திள் மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி யழல்கொடு போட

 வெந்து விழுந்துமு றிந்து நிணங்க
ளுருகி யெலும்பு கருகி யடங்கி
யோர்பிடி நீறுமிலாத வுடம்பை

நம்புமடி யேனை யினியாளுமே
- பட்டினத்தார் 

Thursday, October 6, 2016

கற்பு ஒழுக்க விழுமியங்களின் முகமூடி

ராகுல் சாங்கிருத்தியாயனின் ’வோல்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படித்த போது மனித சமூகத்தின் வரலாற்றினை முன்னெடுத்துச் செல்ல காரணியாக இருந்தவர்கள் பெண்கள் என்ற விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வரலாற்று புதினமாக எழுதி இருந்தாலும் அதனுடைய விஷயங்களை மறுத்து விட நம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் அதாவது கிமு ஆறாயிரம் ஆண்டுகளில் பெண் தான் குடும்பத்தின் தலைவியாக இருந்து வந்திருக்கிறார். அப்பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் அது ஒழுக்க விதியாக இருந்தது.

இப்போதும் இமயமலைகளில் வாழும் ஒரு சில சமூகங்களில் ஒரே பெண்ணுக்குப் பல கணவர்கள் இருக்கின்றார்கள் என்று பல்வேறு ஆவணப்படங்கள் விவரிக்கின்றன.

காலங்கள் மாற மாற மனித சமூகம் மேம்பாடடைய பல்வேறு ஒழுக்க நியதிகள் வரையறை செய்யப்பட்டு சுய கட்டுப்பாடாகவே செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற விஷயம் கற்பு எனச் சொல்லப்படுகிறது. ஆணொருவன் பெண்ணொருத்தியுடன் திருமண பந்தத்தில் இணையும் போது அவனுடைய சொத்தாகப் பெண் ஆக்கப்படுகிறாள். அதன் காரணமாக பாலியல் விஷயங்களையும் அவன் அவளிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேறு பெண்களை மனதால் கூட நினைத்துப் பார்க்க கூடாது அப்படி நினைத்தாலே கற்பு நெறி கெட்டு விட்டது என்பதும் நடைமுறை வாழ்வியல் நெறிகள். இளங்கோவின் சிலப்பதிகாரம் அதற்கொரு சான்று என தமிழ் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறது. பிறன்மனை நோக்காது பற்றி திருவள்ளுவர் பாட்டெல்லாம் பாடி வைத்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கற்பு ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். அது ஒரு வித சுய ஒழுங்கினையும், நேர்மைத்தன்மையையும், மனதுக்குள் நான் நேர்மையானவன் என்ற கர்வத்தையும் தருகிறது. 

சமீப காலமாக தொழில் நிமித்தமாக பல்வேறு நபர்களைச் சந்திக்கும் போது நான் அவர்கள் வாயிலாக அறிய நேரிடும் விஷயங்கள் எதுவும் கற்பு விழுமியங்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. எனக்கு ஆச்சரியமும் மனிதனின் மீதான அவ நம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

மேட்டுக்குடித்தனக்காரர்களுக்கு டைவோர்ஸ் மீண்டும் மறுமணம் என்பது வெகு சாதாரணம். பொருளாதார வசதி கொண்ட சினிமாக்காரர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணமாக இருக்கிறது. அதே போல வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போரின் வாழ்க்கையிலும் அறுத்துக்கட்டுவது என்பது வெகு சாதாரணமாக மாறிப்போய் உள்ளது. ஆதாரம் ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். 

இந்த மிடில் கிளாஸ் வகுப்பினைச் சேர்ந்த மக்களிடையே மட்டும் இந்த வகையான ஒழுக்கங்கள் பேணி வரப்படுகின்றன என்ற மாயை சூழல், தேவை, அவசியம், தர்மம், வாழ்க்கை, சுகம் இவற்றை முன் வைத்து ஒழுக்க விழுமியங்களின் எல்லைகள் வெகு எளிதாக தாண்டப்படுகின்றன. சமீபகாலங்களில் இந்தப் போக்கினை மிடில் கிளாஸ் வகுப்பு மக்கள் வெகு எளிதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.

அவரவர் தேவைக்கு ஏற்ப கற்பு ஒழுக்கங்கள் மாற்றப்படுகின்றன. அதன் உப விளைவாக பல்வேறு மனச் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். உறவுகளுக்கிடையில் நம்பிக்கை சிதைந்து போகின்றது. 

சிதைந்த நம்பிக்கை வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. அதன் காரணமாக சமூகத்தில் பெரும் துயரங்கள் மேகம் போல கவிழ்ந்து வருகின்றது.

சாலை விதிகளை சரியாக கையாண்டு ஒருவன் சாலையில் பயணித்தாலும் எதிரில் வருபவன் சரியாக கையாளவில்லை எனில் விபத்து ஏற்படுகிறது. ஒருவன் தவறு செய்தாலும் அது அடுத்தவனுக்குப் பிரச்சினையாகி விடுகிறது. விதிகளைச் சரியாகக் கடைபிடித்தாலும் பாதிக்கப்படுகின்றேன் ஆகையால் நானும் விதிகளைக் கடைபிடிக்கப்போவதில்லை என்ற சூழலுக்கு அவன் தள்ளப்படுகின்றான். 

இந்த நிகழ்வுதான் தற்போது சமூகத்தில் மெள்ளென ஆரம்பித்து முழு வீச்சில் பாய ஆரம்பித்திருக்கிறது. விளைவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

மனித வாழ்க்கையின் ஆதார சுருதி பாதிக்கையில் சுருதி பேதம் ஏற்பட்டு அதன் காரணமாக தாளகதியும் அபஸ்வரங்களும் மாறிப்போய் கர்ண கடூரமான சங்கீதம் வெளிப்படுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு விட்டது. காலம் தான் இதற்கொரு நல்ல பதிலை தர வேண்டும். 

Friday, September 30, 2016

அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு அலுவலக வேலையாக மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, எனது வக்கீல் நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது கிட்டத்தட்ட 7 மணிக்கு மேல் ஆகி விட்டது. கணபதி ட்ராபிக் தாண்டி வீடு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதால் காந்திபுரம் பேரூந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரே ஒரு தோசை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு செல்ல முடிவு செய்து பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தேன்.



பார்சல் வந்ததும் கணபதி ட்ராபிக்கில் சிக்கி டீசல் பெட்ரோல் புகையினை சுவாசித்து வீடு வந்து சேர கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது. கோயமுத்தூர் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும். ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அன்னபூர்ணா தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை. வேறு ஹோட்டலில் சாப்பிட்டால் வாய்ப்புண் வந்து விடும். பின்னர் வாயுத்தொல்லை வேறு வந்து அவஸ்தைப்படுத்தி விடும்.

நண்பர்கள் வந்தாலும் அன்னபூர்ணாவினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. காசைக் கொடுத்து விட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்.

மனையாள் தட்டில் தோசையை எடுத்து வந்து கொடுத்தார். சாம்பாரை ஊற்றினார். தோசையைக் கொஞ்சமாய் கிள்ளி, சாம்பாரில் துவைத்து வாயில் வைத்தால் இனிப்பு. தேங்காய்ச் சட்னியோ அது ஒரு விதமான இனிப்பு. எரிச்சல் தான் வந்தது. சாம்பாரில் சர்க்கரையை ஏன் தான் கொட்டுகின்றார்களோ எனத் தெரியவில்லை? முன்பெல்லாம் அன்னபூர்ணா டிஃபன் என்றால் எச்சில் ஊறும். மிக நல்ல நிறுவனம், பசித்து வருவோருக்கு அன்னமிட்ட வளர்ந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட உணவகம் என்பதால் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒரு மெயில் தட்டி விடலாம் என நினைத்து எழுதினேன்.

அடுத்த நாள் அன்னபூர்ணாவிலிருந்து முப்பது வருடமாக வேலை செய்து வரும் திரு.கலைமணி அவர்கள் போனில் அழைத்தார்கள். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். எனது ஆதங்கத்தைக் கொட்டினேன்.

சாப்பாடு சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மீன் குழம்பில் மீன் கவுச்சி வாடை வரக்கூடாது; கறிக்குழம்பில் ரத்த வாசம் வரக்கூடாது; சாம்பார் சாப்பிட்டவுடனும் கை மணக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்புகள் உண்டு. மனையாளுக்கும் எனக்கு இந்த ஒரு விஷயத்தில் தான் அடிக்கடி முட்டிக் கொள்ளும், ஒரு சில சமயங்களில் அருமையாக சாம்பார் வைப்பார். பல தடவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு இது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக புரியவே புரியாத மர்மமாகவே இருந்து வந்தது. கவனமில்லாமல் சமைக்கின்றாரோ என்ற சந்தேகம் வேறு ஏற்படும். இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை கலைமணி அவர்கள் புரிய வைத்தார்கள். அந்தக் காலத்தில் விவசாயம் செய்து வந்த உணவுப் பொருட்களின் தரமும் இந்தக் காலத்தில் விவசாயம் செய்து வரும் உணவுப் பொருட்களின் தரமும் வேறு வேறு. அந்தக் காலத்தில் இருந்த சுவையை இந்தக் காலத்தில் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு உணவு சமைக்கப் பயன்படும் பொருட்கள் தன் வயத்தை இழந்து விட்டது என்றும் சொன்னார். ஆமாம் அது உண்மைதான்.

ஊருக்குச் சென்று வரும் போது ஆவணம் கைகாட்டி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வருவதுண்டு. மதுரைப் பக்கம் சென்றாலும் மாலை நேரச் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி வருவேன். உண்மையில் அந்தக் காய்கறிகள் வெகு மணமாக சுவையாக இருக்கும். முருங்கைக் கீரை வாசம் தூக்கும். முருங்கைக்காய் வாசமோ அள்ளும். பீட்ரூட் அடுப்பில் வேகும் போதே மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோவையிலிருக்கும் காய்கறிகள் உப்புச்சப்பின்றி ஒரு விதமான அவிஞ்ச வாசம் அடிக்கின்றன. இத்தனைக்கும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவேன்.

சந்தையில் இருக்கும் கருவேப்பிலைக்கும், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேப்பிலைக்கும் வட தென் துருவ வித்தியாசம்.

சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள த்ரீ சிக்ஸ்டியில் தான் வேலை நிமித்தம் சென்றால் தங்குவதுண்டு. சரவணபவன் சாப்பாடுதான் கொண்டு வந்து தருவார்கள். வாயில் வைக்கமுடியாது. அரிசி வெந்து இருக்காது. பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு படு கேவலமான பார்சல் செய்து அனுப்புவார்கள். கொடுமை. விலை ரூபாய் 180 என்று நினைக்கின்றேன். வேகாத ப்ரைடு ரைஸ் என்றொரு அயிட்டத்தை எப்படித்தான் சாப்பிடுகின்றார்களோ தெரியவில்லை? அரை குறை வேக்காடு அரிசியில் ஒரு உணவு பதார்த்தம்.

நவீன அறிவியல் உலகம் பணம் கிடைப்பதற்காக உண்ணும் உணவின் தரத்தை குறைத்து விட்டது. உணவுப் பொருட்கள் அனைத்தும் தன் இயல்பு மாறி வியாபார உத்திக்காக மாறிப்போய் விட்டது.

இனி அந்தக் கால பாரம்பரிய உணவு வகைகளை நாம் என்றைக்குமே சாப்பிட முடியாது என்று நினைக்கையில் வேதனை தான் மண்டுகிறது.

அன்னபூர்ணா கெளரிசங்கர் நிறுவனத்திற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கிறேன்.

”எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சுவைகளையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்குரிய ஏற்பாடுகளை தனிமனிதனால் உருவாக்கிட முடியாது. அது உங்களைப் போன்ற பெரும் நிறுவனங்களால் தான் இயலும். தமிழர்களின் பாரம்பரியத்தை உங்களைப் போன்ற நிறுவனங்கள்தான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கின்றாரோ அதைப் போல தாங்களும் இந்த தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.”

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


Tuesday, September 27, 2016

சித்தர்கள் சாபம் பலிக்குமா? உண்மைச் சம்பவம்

ஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.

அருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை. 

கண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்?

எழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.

சுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.

ஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார். 

“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.

ரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.

சுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். 

தபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.

விளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்? ஆடிய ஆட்டம் முடிந்தது. 

”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா?” என்றேன்.

“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே!” என்றார்.

சித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.

சித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது? செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும், 

இன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை. 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.

இரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன? பேரழிவு நடந்தது அல்லவா? 

இப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது! 

சித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.

Friday, September 23, 2016

ஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையாடல்

காதலன் தன்னுடைய காதலியின்
வீட்டுக் கதவைத் தட்டுகிறான்
உள்ளிருந்து குரல் வருகிறது
“யாரது?”
காதலன் கூறுகிறான்

”நான் உன் காதலன்
என்னைத் தெரியவில்லையா?
என்னுடைய காலடி
ஓசையை மறந்து விட்டாயா?
என்னுடைய குரலும்
உன் நினைவை விட்டு
நீங்கி விட்டதா?”

உள்ளிருந்து குரல் வருகிறது

“கதவு உனக்காகத் திறக்கப்படுவதற்கு
இன்னும் நீ தகுதி பெறவில்லை
இன்னும் உனக்கு
அந்த அதிகாரம் வரவில்லை”

அந்தக் காதலன் திரும்பிச்
சென்று விட்டான்.
பல வருடங்கள் திரிந்தலைந்தான்.
காதலைத் தேடுவதில்
அவன் முழு மூச்சுடன்
ஈடுபட்டான்
காதலைத் தெரிந்து கொள்ள
முயன்று
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் காதலைத் தெரிந்து கொண்டான்.

அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
” நீயே தான்!”
உடனே கதவு திறக்கிறது.

ஜாலாலுத்தீன் ரூமியின் கவிதை இது. ஓஷோ இந்தக் கவிதை முடிவடையவில்லை என்கிறார். இன்னும் நான்கு வரிகள் சேர்ந்திருந்தால் நலமாயிருக்கும் என்கிறார். நீ என்றால் கதவு திறந்திருக்கக் கூடாது என்கிறார் ஓஷோ.

( ஜலாலுதீன் முகமது ரூமி - 1207 - 1273ல் வாழ்ந்த மிகச் சிறந்த கவிதையாளர்)

நீயும் நானும் எதிரெதிர் பதங்களே, ‘நீ’ என்பதன் முழு அர்த்தமும் ‘நான்’ என்பதிலேயே அடங்கியுள்ளது. எதுவரை ‘நான்’ உள்ளதோ அதுவரை ‘நீ’ யிலும் அர்த்தமுண்டு. ‘நான்’ என்பதே இல்லை என்றாகும் போது ‘நீ” என்பது யார்? என்கிறார் ஓஷோ. காதலனும் இருக்கக்கூடாது காதலியும் இருக்ககூடாது என்று முடித்து விடுகிறார் ஓஷோ. 


(ஓஷோ - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மிகச் சரியான மனிதர்)

ஜலாலுத்தீன்  ரூமியை நீங்கள் சந்தித்தீர்களோ இல்லையோ ஓஷோ, இந்தக் கவிதைக்கு ஒரே ஒரு வார்த்தையில் முடிவுரை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வந்தது இதுவாகக் கூட இருக்கலாம் அல்லவா ஓஷோ?

மீண்டும் அந்தக் கவிதை...............!


அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
”காதல்”
உடனே கதவு திறக்கிறது.

சரிதானே ஓஷோ?

நன்றி : ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் மற்றும் ரூமி

Thursday, September 22, 2016

இப்படியும் ஒரு தாய்

”தலைவரே எனக்கு பெண் பிறந்திருக்கிறாள்” என்றார் நண்பர். ”இதோ வந்து விடுகிறேன்” என்றுச் சொன்னேன். ஆனால் மாலையில் ஓஷோவின் “நாரதரின் பக்தி சூத்திரத்தில்” மூழ்கியதால் அந்த நினைப்பே வரவில்லை. மணி ஏழாயிற்று. இனி விசிட்டர்ஸ் அனுமதி இல்லையென்றுச் சொல்லி விடுவார்கள் என்பதால் மறு நாள் செல்வதற்கு முடிவு செய்து கொண்டேன்.

மறு நாள் மாலை. வெயிலொன்றும் அதிகமில்லை. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. கே.எம்.சி.ஹெச்சிற்குச் சென்றேன். கையில் நண்பரின் அம்மா தூங்கிக் கொண்டிருந்த அந்த அற்புதத்தை என்னிடம் தந்தார். அது அழகாக கண் மூடி துயிலிருந்தது. மலர்ந்த ரோஜாவைப் போல. சின்னஞ்சிறு கைகள் மூடி இருந்தன. கமலக் கண்கள் திரையிட்டிருந்தன. வெதுவெதுப்பான துணியில் ஒளி வீசும் மரகதமாய் துயில் கொண்டிருந்தது அந்த உயிர். அங்கு இவருக்கு மட்டும் தான் மதிப்பு. பெற்றவர்களுக்கு அவர் தான் சந்தோஷம். புதிய உயிரை உலகிற்கு தந்த பெரும் மகிழ்வில் அந்தத் தாயும் தகப்பனும் முகம் மலர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சுகப் பிரசவம் ஆகி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.

என் மகளை என்னிடம் கொண்டு வந்த கொடுத்த போது அருகிலிருந்த அம்மாவிடம், ”என்னம்மா இவ்ளோ வெள்ளையா இருக்குது?” எனக் கேட்டேன். ”தண்ணிக்குள்ளே கிடந்துச்சுல்ல, அது அப்படித்தான் இருக்கும். காது மடலைப் பார் அந்தக் கலர் தான்” என்றார்.

என் மகன் பிறந்த போது கண்களை திறந்து கொண்டே தான் இருந்தான். பிறக்கும் குழந்தையின் கண்கள் நன்றாகத் தெரியும் என்றுச் சொல்லி செம்போத்து என்கிற செண்பகக் குருவியைக். கிராமத்திலிருந்து என் நண்பன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தான். உடனே கிளம்பி விடாதீர்கள். அது கிராமப்புற நம்பிக்கை. அவ்வளவுதான்.


(செண்பகம் என்று அழைக்கும் செம்போத்துக் குருவி)

குழந்தைப் பிறந்ததும் ஒரு வருடத்திற்கு கண்ணை இமை காப்பது  போலக் காப்பாற்ற வேண்டும். அசந்து தூங்க முடியாது அந்தத் தாயால். தவழ ஆரம்பித்தவுடன் மேலும் கவனம் வேண்டும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். ஐந்து வருடம் வரை குழந்தையை நோய்களிலிருந்தும், பிற பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்ற ஒரு தாய் படும்பாடு சொல்லிக் கொள்ள முடியாது. இப்படித்தான் காவிரி நீருக்காக தீக்குளித்த விக்னேசையும், எவராலோ கொல்லப்பட்ட இந்தியாவின் இருபது ராணுவ வீரர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பெற்று வளர்த்திருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்வதை எளிதாகச் செய்து விடுகின்றார்கள். அந்தளவுக்கு மிருக குணம் கொண்டு கொலை செய்து விட்டு என்ன சாதிக்கப்போகின்றார்கள் என்பது தான் விளங்கவில்லை. ஏன் சக மனிதனிடம் இத்தனை வன்மம்? 

டிவி சானல்களில் யாருக்காகவோ அனைவரும் அடித்துக் கொள்கின்றார்கள். விட்டால் லைவ்வாக கொலை கூட செய்து கொள்வார்கள். ஏன் இப்படிப்பட்ட வாக்குவாதங்களைச் செய்கிறோம் அதனால் சமூகப் பெறப்போவது என்ன என்று கூடவா சிந்திக்க மறந்து போனார்கள் இவர்கள்? பெயர்களின் கீழே பார்த்தீர்கள் என்றால் ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுவார்கள். கொடுமை!

மருத்துவமனையில் நண்பரின் அம்மா என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் கிட்னியை தன் மகளுக்கு தானம் கொடுத்திருக்கிறார். அருகில் அவரின் பெண் இருந்தார். 

“உங்களுக்கு என்ன காரணத்தினால் கிட்னியில் பிரச்சினை வந்தது?” எனக் கேட்டேன்.

குழந்தைப் பிறப்பதற்கு தாமதமானதால் ஒரு பிரபலமான சோப்பு, ஷாம்பு, வாசிங் மற்றும் உணவூட்டப் பொருட்களை விற்கும் கம்பெனியின் மாத்திரையைச் சாப்பிட்டால் கரு தரிக்கும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இந்தப் பெண் குழந்தை பெறும் ஆசையில் மாத்திரையை வாங்கி விழுங்கி இருக்கிறார். கிட்னி போச்சு. இனி வாழ் நாள் முழுவதும் அந்தப் பெண்ணின் நிலைமை. அந்தக் கம்பெனிக்கு காசு கிடைத்து விட்டது. உலகப் பெரும் கோடீஸ்வரக் கம்பெனிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

கிட்னி டோனரிடம் பலவிதமாய் பேசுவார்களாம். பயமுறுத்துவார்களாம். கிட்னி தானத்தில் உறுதியாக இருக்கின்றார்களா என்று பல சோதனைகளைச் செய்வார்களாம். அதன் பிறகு தான் கிட்னி தானம் நடக்குமாம். 

”நான் மருத்துவரிடம் சொல்லி விட்டேனுங்க. என் இரண்டு கிட்னிகளையும் எடுத்து அவளுக்கு வைத்து விடுங்கள். நான் என் குழந்தைகளுக்காகத்தான் வாழ்கிறேன், அவர்களுக்காக இறப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்றுச் சொன்னேன் என்றார் அந்தத் தாய்.

(இந்தத் தாய் சொல்லும் மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் ரஜினி காந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு)

Tuesday, September 20, 2016

பூம் பூம் மாட்டுக்காரன்

பெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.

35 வருடங்களுக்கு முன்பு  பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள். 

தினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.

(பூம் பூம் மாட்டுக்காரர்)

பூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.

சாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா!” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்சமாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.

ஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள். 

காலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள். 

”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.

தர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.


Saturday, September 10, 2016

காவிரிக்கு குட்பை சொல்லி விடலாம்

தஞ்சாவூர் கடைமடைப் பாசனத்தில் எனக்கும் கொஞ்சம் வயல்கள் உண்டு. அந்த வயலில் இருந்து வரும் அரிசியில் தான் உண்கிறேன். குருவை, சம்பா சாகுபடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றது. விவரம் தெரிந்த நாளில் இருந்து குருவைச் சாகுபடி செய்வதில்லை. ஒரே ஒரு சாகுபடி தான். குருவையில் சீக்கிரமே விளையும் நெல் விதைப்பு நடக்கும். இரண்டு வருமானங்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ஒரே ஒரு சாகுபடி. சாப்பாட்டுக்குப் போக உபரியை விற்று வரும் பணத்தில் தான் பிள்ளைகள் படிப்பு, மருத்துவம், உடை, உறவுச் செலவுகள், விவசாயச் செலவுகள் அத்தனையும் அந்த வருமானத்தில் தான் சமாளிக்க வேண்டும். முடியுமா?

புட் சட்னி இணையதளத்தில் ராஜ்மோகன் அவர்களின் வீடியோவைப் பார்த்தேன். பிரமாதம். மணல் மாஃபியா தான் காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்கிறது என்று பேசி இருக்கிறார். பொய் பேச வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆகவே அவர் மணல் மாஃபியா பற்றிப் பேசியது எந்த ஆதாரத்தை வைத்து என்று கூட ஆயுத எழுத்தில் கேட்க மாட்டேன் என்கிறார் ஹரிஹரன். பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படிப் பாதுகாக்கிறார் ஹரிஹரன் என்று நினைக்கையில். யாரோ ஒருவர் தான் பிழைப்பதற்காக தமிழகத்தின் ஆதாரத்தையே அசைக்கிறார் என்றால்? என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ இணைப்பு, நீங்களும் பாருங்கள்.


ராஜ்மோகனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய தூண்டுதலை அவர் உருவாக்கி இருக்கிறார். ஆனால் யாரும் எதுவும் செய்யப்போவதும் இல்லை, செய்ய விடவும் மாட்டார்கள்.

ஆனால் ராஜ்மோகன் உங்களுக்கு ஒன்றினை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களின் பிள்ளைகள், அவர்களின் உறவினர்கள் என்று பலரும் கர்நாடகாவில் வேலை செய்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் வருகிறது. ஆகவே காவிரியாவது ஒன்றாவது என்று தான் பேசுவார்கள். எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

காவிரி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப்போகிறது ராஜ்மோகன். அதை அனைவரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை, செய்யவும் விட மாட்டார்கள். ஆகவே  நாம் விரைவில் காவிரிக்கு குட்பை சொல்லி விடுவோம். தமிழர்களின் வாழ்வாதாரம் அழிய அழிய அவன் அகதியாய் வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடையத்தான் போகின்றான். இது நடக்கத்தான் போகிறது.

விரைவில் நாமும் வேறு ஏதாவதொரு நாட்டினை தேர்வு செய்து வேலை விசாக்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டியதுதான்.

வாய்ச் சொல்லில் வீரர்கள் நாம். அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இனம் இந்த உலகில் உண்டென்றால் அது நாம் தான். சினிமாக்காரர்களுக்கு ஆட்சியையே தூக்கிக் கொடுத்தவர்கள் நாம். கர்நாடகாவிற்கு காவிரியை தாரை வார்த்து விடுவோம். விடவும் வைப்பார்கள். முல்லைப் பெரியார் அணையில் நீரைத் தேக்கி வைக்கக் கூட முடியவில்லை. அதற்கும் எதிர்ப்பு வருகிறது. தண்ணீர் இல்லா மாநிலமாக மாற்றி விட்டால் தமிழகமும் தமிழர்களும் வேறு வழி இன்றி அகதிகளாக மாறி விடுவார்கள்.

நாமெல்லாம் அகதிகளாக மாறி விடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. பிழைத்துக் கிடந்தால் எங்காவது ஒரு நாட்டில் நம் சந்திதிகள் சந்திப்பார்கள்.

இதுவரை நமக்கு உணவிட்டு வந்த காவிரிக்கு அனைவரும் சேர்ந்து குட்பை சொல்லி விடுவோம்.

காவிரியே உனக்கு குட்பை !

Thursday, September 8, 2016

தாய் மொழி என்று அழைக்காதீர்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்காக ஆன்லைனில் செய்தால் ரிஜெக்டட் என்றே வருகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிரச்சினை. ஆகையால் கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் வளாகத்தில் இருக்கும் ஏஜென்சியை அணுகினேன். ஐம்பது ரூபாய் கட்டணம் பெறுகின்றார்கள். பெட்ரோல் செலவு வேறு. மதியம் உணவுச் செலவு வேறு. எப்படியும் இருநூறைத்தாண்டி விடுகிறது. இதுவே தின வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஒரு நாள் சம்பளம் போய் விடும். 

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டுமாம். சித்ராவில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் நார்மலாக பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்களுக்கானதாம். இரண்டு அலைச்சல்.

எனக்கு பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஆன்லைனில் புக்கிங்க் செய்தேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் நேரில் சென்றேன். கைரேகை, போட்டோ எடுத்தார்கள். கட்டணத்தை அங்கேயே செலுத்தி விட்டேன். பதினைந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு வந்து சேர்ந்து விட்டது. 

இந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏஜென்சியில் ஆன் லைன் அப்ளை செய்வதற்கும், இன்ன பிற வேலைகளுக்கும் 2500 ரூபாய் ஆகும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படியா என வாயில் ஈ போவது கூட தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கசங்காத சட்டை போட்டு விரைப்பாக நின்றவர். 

அப்போது ஒரு காரிலிருந்து காச் மூச்சென்று சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி என்னைப் பார்ப்பதும் பின்னர் ஆங்கிலத்தில் அந்தக் குழந்தைகளை திட்டுவதுமாக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடுகின்றாராம். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனாம். இது தெரியாத அந்தக் குழந்தைகள் இருவரும் தமிழில் அம்மா, அம்மா எனப் பேச ஆரம்பிக்க அதற்கும் திட்டு விழுகிறது. என்ன சொல்லித் திட்டுகிறார் தெரியுமா? ”லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைக்கின்றேன், தமிழிலா பேசுகின்றீர்கள்?”.

அதன் பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். அந்தப் பெண்மணியின் புருஷன் என்னிடம் வந்து பேசினார். ”நீங்கள் தமிழரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ”நான் பச்சைத் தமிழன்” என்று பெருமையாகச் சொன்னார். 

நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறோம், நாட்டையே தாய் நாடு என்கிறோம். மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்றால் பெரும்பான்மையான பெண்களுக்கு கசக்கிறது. மம்மி என்று தான் அழைக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். கிராமத்திலிருக்கும் பெண்களை விடுங்கள். நகரத்தில் இருக்கும் பெண்கள் என்ன செய்கின்றார்கள் என்று யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழில் பேசினால் என்ன? ஏன் அதைக் கூடச் செய்ய தயங்குகின்றார்கள் இந்தப் பெண்கள்? வெற்று ஈகோவினால் என்ன கிடைக்கப்போகின்றது? இந்த தற்பெருமையினால் கிடைக்கப்போகும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை. வெற்றுப்பெருமை.

தாய் மொழி என்று இனிச் சொல்லவே கூடாது என நினைத்தேன். இந்த எரிச்சலில் இருந்த போது குஜராத் சிங் ஒருவர் வெகு அழகாக போனில் யாரோ ஒருவருடன் தமிழில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில்லென்று இருந்தது.

தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். தமிழால் தான் பலரும் பிழைக்கின்றார்கள் என்ற சிந்தனை மேலோட வீட்டுக்குத் திரும்பினேன்.

தமிழ்ப் பெண்களே, வீட்டிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளைத் தமிழில் பேச வையுங்கள். தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஆங்கிலம் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு என தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை அம்மா என்று தான் அழைத்தீர்கள் என்பதினை மறந்து விடாதீர்கள். எங்கெங்கும் ஆங்கிலத்தில் பேசுவது அடிமைத்தனம். வேலையின் போது, படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் போதுமே. 

கணபதி, பாரதி நகரில் இருக்கும் கிராமத்துக்கடையில் ராகிக்களியும், காரப்புளிக்குழம்பும், மிளகாய் வற்றலும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.  ”சார், கருவாட்டுக்குழம்பு இருக்கிறது, அதையும் பார்சல் செய்து தரவா?” என கேட்டார்கள். 35 வயது வரை சாப்பிட்ட கருவாட்டுக்குழம்பின் வாசம் திடீரெனெ நினைவுக்கு வர பெருமூச்சு தான் வெளிப்பட்டது. சென்று வா கருவாட்டுக்குழம்பே என மனம் அதற்கு விடை கொடுத்து நீண்ட நாட்களாகி இருந்தன.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ததில் மீண்டும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. இன்றைக்கும் மறுபடியும் செல்ல வேண்டும்.

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

Thursday, August 25, 2016

அழகன்

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை. 

வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.


உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது?  காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.

ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.

கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.

இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.





ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.

- கோவை எம் தங்கவேல்.



Monday, August 22, 2016

சட்டசபை சொல்லும் கதை

தேர்தல் முடிந்து 2016ம் ஆண்டின் முதல் சட்டசபைக்கூட்டம் நடந்து வருகிறது. சபையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. விவாதங்களும், செய்திகளும் என மீடியாக்கள் வெகு பரபரப்பு. ஒவ்வொருவருக்கும் தகுந்தவாறு கணிப்புகள், வேதனைகள், கண்டிப்புகள், போராட்டங்கள் என்று தர்க்க நியாயங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது ஒரு கதை சொல்லப்போகின்றேன்.

ஒரு ஜென் குரு தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

தினமும் பள்ளிக்கு வருவார். சீடர்கள் பெஞ்சுகளில் அமர்ந்திருப்பர். அனைவரையும் பார்ப்பார். ’அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துப் படியுங்கள். யாரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது’ என்பார். சீடர்கள் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பர். 

ஜென் குரு மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார். குருவிடமிருந்து மெலிதான குறட்டைச்சத்தம் வந்ததும் சீடர்கள் அனைவரும் சத்தமின்றி தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். சத்தம் அதிகமானதும் ஜென் குருவின் கைகள் அருகிலிருக்கும் பிரம்பை எடுத்து டேபிளில் ஒரு அடி அடிப்பார். சீடர்கள் அமைதியாக இருப்பார்கள். மீண்டும் மெலிதான குறட்டைச் சத்தம் வரும். சத்தம் அதிகமாகும். மீண்டும் பிரம்படி. 

சீடர்களுக்கு இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஜென்னை அல்லவா கற்றுக் கொள்ள வந்தோம். ஆனால் இங்கு நடப்பதோ வேறாக அல்லவா இருக்கிறது என்று நினைத்தார்கள். அதை குருவிடமும் கேட்டார்கள்.

’நீங்கள் ஜென்னைத் தான் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்றார் குரு.

சீடர்களுக்குப் புரியவில்லை.

‘மனம் பலவாறாகச் சிதறிக் கொண்டிருக்கும். அதைத் தட்டித் தட்டி ஒழுங்குப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என்றார்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்னவென்று புரியவில்லை என்றால் தொடருங்கள்.

அரசியல்வாதிகளை மக்கள் மறக்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, மக்கள் மனதில் தங்களை இருப்பு வைத்துக் கொண்டே இருப்பதற்காக சம்பவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகள் நடந்தால் மக்கள் நாட்டுப்பிரச்சினைகளை பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது மக்கள் எழுச்சியாக வந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் யோசித்து விடவே கூடாது. டீக்கடையிலும், தினசரிகளிலும், டிவிக்களிலும் ஒவ்வொரு நாளும் இது போன்ற பிரச்சினைகள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எழுதப்பட வேண்டும். 

அரசு நலத்திட்டங்கள் எல்லாம் செய்கிறதே என்று கேட்கத் தோன்றும். அமைச்சர் வீட்டிற்கு வரும் சாலைகள் போடப்படும் போது அருகிலிருக்கும் சாலைகளும் செப்பனிடப்படுவது தான் நலத்திட்டங்கள்.

அரசியல் என்பது சாதரண விஷயமில்லை. அதற்கென அரிச்சுவடிகள் தனியானவை. அவை புத்திசாலிகளுக்கு மட்டுமே புரிந்தவை. அந்தப் புத்திசாலிகள் தலைவராகின்றார்கள். கொஞ்சம் புத்திசாலிகள் அமைச்சராகின்றார்கள். பிறர் தொண்டராகவே இருக்கின்றார்கள்.

ஒரு ஜென் குரு தட்டுவதால் சீடருக்கு ஜென்னை போதிப்பது போலவே அரசியல்வாதிகள் கிளப்பும் பிரச்சினைகளால் அரசியல் செய்கின்றார்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.


2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?



தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

Saturday, August 13, 2016

துறவு என்பது என்ன? காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா?

மனதை அழுத்தும் துன்பங்களில் இருந்து விடுபட கோவில்களை நாடுகிறேன். சில சமயம் சாமியார்களை நாடுகிறேன். சில சமயம் அவர்கள் சொல்லித்தரும் பயிற்சிகளைச் செய்கிறேன். எல்லாவற்றையும் துற என்கின்றன நூல்கள். ஒரு சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். என்னதான் செய்வது? புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்குப் புரியும் படி ஏதாவது சொல்ல முடியுமா? - மாலதி(யூயெஸ்ஸே)

உங்களுக்கான பதிலை ஒரு புத்தகத்திலிருந்து தருகிறேன். அது பலருக்கும் நிச்சயம் உதவும். பலரும் பல மாதிரிச் சொல்லியதுதான். புரியும் படிச் சொல்ல இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் மதம், அமைப்புகள் பற்றிய குறிப்பு:-

அன்பே,
மனிதன் அடிமையாகிப் போனான்
ஏனெனில், தனிமைக்குப் பயந்து.

அந்தப் பயத்தால் ஒரு கூட்டம், சமூகம், சங்கம்
அவனுக்குத் தேவைப்பட்டதால்

பயமே அத்தனை அமைப்புகளுக்கும் அடிப்படை
எப்படி இந்த பயந்த மனதால்
சத்தியத்தை அறிய முடியும்?

சத்தியத்தை அறிய துணிவு வேண்டும்
துணிவு தவத்தினால் வருகிறது
எந்தக் கூட்டத்திலிருந்தும் அல்ல.

ஆகவே தான்

எல்லா மதங்களும்
சங்கங்களும் அமைப்புகளும்
சத்தியத்தைத் தேடும் பாதையை
மறைக்கின்றன
மூடுகின்றன
தடை செய்கின்றன. 

(குறிப்பு : சத்தியம் என்பதை உண்மை என்று கருதவும்)

* * *

அடுத்து துறவு பற்றியது.

துறவு பொருள்கள் சம்பந்தப்பட்டதல்ல
எண்ணங்கள் சம்பந்தப்பட்டது
துறவு வெளியே சம்பந்தப்பட்டதல்ல
உள்ளே சம்பந்தப்பட்டது
துறவு உலகம் சம்பந்தப்பட்டதல்ல
ஒருவன் சம்பந்தப்பட்டது

உலகத்தில் இருப்பது பற்று இல்லை
உன் மனதில் உலகம் இருப்பது தான் பற்று
உன் மனதிலிருந்து உலகம் மறைந்து விட்டால் - அது தான் துறவு.

* * *

மனிதன் யதார்த்தத்தில் வாழ்வதில்லை
கனவுகளிலேயே வாழ்கிறான்
ஒவ்வொரு மனமும் தனக்கென ஒரு உலகத்தை
எங்கும் காணக்கிடைக்காத உலகத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது

இரவும் பகலும் மனம் கனவுகளிலேயே இருக்கிறது
இந்தக் கனவுகள் கணக்கில்லாமல்
கட்டுக்கடங்காமல் போகும் போது
மனிதன் பைத்தியமாகிப் போகிறான்

ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருத்தல் என்பது
கனவுகளற்று இருப்பதே.

* * * 

ஓஷோவின் இந்தக் கவிதை சொல்லும் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். அப்துல்கலாம் கனவு காணச் சொன்னாரே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது உலக வாழ்க்கை. உலக வாழ்க்கை என்பது வேறு ஒரு மனிதன் துறவு கொள்வது என்பது வேறு. 

இது உங்களுக்கான கனவு. நீங்கள் தெளிவாயிருத்தலே துறவு என்கிறது இந்தக் கவிதை.

அந்தக் காலத்தில் துறவு பூண்டவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். நபிகள் திருமணம் செய்து கொண்டவர். கண்ணன் பல திருமணங்களைச் செய்து கொண்டவன். திருக்குரான், கீதைகள் எல்லாம் அருளப்பட்டது திருமணம் ஆனவர்களாலே. திருமணம் ஆகாமல் பிரம்மச்சரியம் ஏற்பதை துறவு என்றுச் சொல்வது அபத்தம். அமைப்பினைப் பாதுகாக்க அல்லது உருவாக்கப் பயன்படுபவை இது போன்ற வேஷங்கள். ஆனால் துறவு என்பது உடலுக்கு அல்ல உள்ளத்துக்கு.

எண்ணங்களில் நான் இல்லாமல் நிகழ்வில் வாழ்வதுதான் உண்மையான துறவு. நிகழ்வில் வாழ ஆரம்பித்தால் உலக வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்து கொள்ள முடியும். பிறகென்ன துக்கமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. எல்லாம் ஒன்று தான்.

மனிதன் ஒரு ஆற்றினைப் போல வாழ வேண்டும். குளத்தைப் போல அல்ல.

குறிப்பு : மேற்கண்ட எழுத்து அனைத்தும் ஓஷோவின் ஒரு கோப்பைத் தே நீரில் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி ஓஷோ மற்றும் கம்யூன்.

Wednesday, August 10, 2016

கோச்சிங் சரியில்லை

பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு நின்று கொண்டிருக்கையில் அருகில் நின்று கொண்டிருந்த மாணவியின் அம்மா ’பத்தாவது வரை தான் இந்த ஸ்கூலில் கோச்சிங் நல்லா இருக்காம். பனிரெண்டாம் வகுப்பிற்கு கோச்சிங்க் சரியில்லையாம்’ என்றுச் சொன்னதாக மனைவி சொன்னார். மனைவியின் உறவினர் ஒருவர் தன் குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கோச்சிங் சரியில்லையாம்.

’தேர்வு எழுதுவது வாத்தியாரா? ஸ்டூடண்டா?’ என்று கேட்டேன். கோதை என் முகத்தையே பார்த்தார். ’அரசுப் பள்ளியில் படிக்கிறவர்கள் கூட இன்றைக்கு அதிக மார்க் எடுக்கின்றார்கள் கோதை அங்கெல்லாம் கோச்சிங் எப்படி இருக்கும் என்று யோசித்தாயா?’ என்று கேட்ட போது பேசாமல் இருந்தார்.

1992ல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வருவதற்கு முன்பே கணிணியில் பேசிக், ஃபோர்ட்டான், பாஸ்கல், கோபால், சி லாங்குவேஜ்களைப் படிக்க முயன்று பல்வேறு மனப்பிறழ்வுகளுக்கு உட்பட்டவன் அடியேன். ஒரு சாதாரண கூட்டலைக்கூட பேசிக் மொழியில் எழுத வராது. அதன் வரிசை என்று ரெம் என்றால் என்ன என்ற கேள்வி இப்படி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் பேசிக் லாங்குவேஜின் புரோகிராமிங் டெக்னிக்கே புரிபட்டது. அடுத்து போர்ட்டான், பாஸ்கல், கோபால் மொழிகள் எல்லாம் என்னை படாத பாடு படுத்தின. விண்டோஸ் 3.1 என்று நினைக்கின்றேன். ஒரே ஒரு கணிணியில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தார்கள். கலர் மானிட்டரெல்லாம் காஸ்ட்லி. அதில் வரும் சில படங்களைப் பார்க்கையில் சுவாரசியமாக இருக்கும். பூண்டி கல்லூரியில் படிக்கும் போது முதல் செமஸ்டரில் தமிழில் மட்டும் அதிக மார்க். 92 மார்க் என்று நினைக்கிறேன். மற்ற சப்ஜெக்டில் ஆவரேஜ். எல்லாம் ஆங்கிலம். யாருக்குப் புரியும்? ஆனால் எனது சிறு வயதில் ஜோசப் வாத்தியாரால் அறிமுகம் செய்யப்பட்டு தினமும் ஹோம் வொர்க்காக எழுதிச் சென்ற பனிரெண்டு வகை வாக்கியங்களால் எனக்கு மனதில் தைரியம் வர ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். சுஜாதாவெல்லாம் கல்லூரிக்கு வந்திருந்தார். என்னவோ மீட் நடத்தினார்கள் சீனியர்கள். அவரிடம் பேச மாணவர்கள் அலைமோதினர். நானெங்கே பேசுவது? ஒரு சீனியர் மாணவர் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் எனக்கு நண்பர், அவர் மூலமாக ஒரே ஒரு பேக் கிடைத்தது. கொடுத்த காசுக்கு வசூல் செய்து விட்டேன். இதர மாணவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

காலம் மாறியதில் பேசிக் எல்லாம் ஓடிப்போய் விட்டன. இப்போது என்னென்னவோ புதுப்புது மொழிகள் வந்து விட்டன. சாஃப்ட்வேர் படித்தவரெல்லாம் அமெரிக்கா சென்று லட்ச லட்சமாய் சம்பாதித்தார்கள். பி.எஸ்.சி முடித்ததும் எனக்கும் ஆசை வர நானும் மைக்ரோசாஃப்ட் எம்.சி.எஸ்.சி படித்து ஆன்லைனில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். ஊனமுற்றவன் என்பதால் எனக்கு அமெரிக்க கதவு மூடப்பட்டு என் கனவுக்கும் குழி வெட்டப்பட்டது. ஒரு சாதாரணவன் எளிதில் கற்று விடும் கல்வி எனக்கு படுபயங்கர வலிகளைக் கொடுத்தது. இருப்பினும் அதையெல்லாம் நானொரு ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் முட்டிபோட்டு வெறுங்காலில் சூடு கொப்பளிக்கும் கப்பிக்கல் சாலையில் தவழ்ந்து சென்ற போது எனக்கு கால் மட்டும் தான் வலிக்கும். மனது அது பாட்டுக்கு இருக்கும். அமெரிக்க கதவினை எம்பசியில் மூடியபோதுதான் அம்மா மீது கோபம் கொப்பளித்தது. அன்றே கொன்று விட்டிருந்தால் இன்றைக்கு இந்த அவமானம் எனக்கு ஏற்பட்டிருக்குமா என்று மனது கொந்தளித்தது. நான் வெகு சிரமப்பட்டு படித்த எம்.சி.எஸ்.சிக்கு இப்போது மதிப்பில்லை.  

பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் மார்க். எனக்கும் என் மச்சான் பிரான்ஸிஸ்காசனுக்கும் போட்டியோ போட்டி. பத்தாவது வரை அப்படித்தான். என் கூடப்படித்த மாணவி உமாவின் அப்பா டீக்கடையும், ஹோட்டலும் வைத்திருந்தார். அவர் ஜோசியம் கூட பார்ப்பாராம். அம்மா அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டினாராம். அவர் சொன்னாராம் உன் பையன் பட்டனைத் தட்டித்தான் சம்பாதிப்பான் என்று. அம்மாவுக்கு அப்போது டெலிபோன் பட்டன் தான் தெரியும். எனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஓவிய வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கு சென்று பார்ப்பேன். இங்கு தான் எதிர்காலத்தில் வேலை செய்யப்போகின்றேனோ என்று கேள்வி இருந்தாலும் ஐயர் சொல்லிட்டாரு அது சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் டெலிபோனை ஆர்வத்துடன் பார்த்து வருவேன்.

என்னென்னவோ தொழில் செய்து தற்போது ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறேன். என் மச்சானோ தோல் பாக்டரியில் வேலை செய்து ஊரில் பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கின்றான். இந்த ரியல் எஸ்டேட் தொழிலிருக்கிறதே முகம் தெரியாத வில்லன்களுடன் மோதுவது போன்றது. மனிதனைப் எளிதில் படித்து விடும் அற்புத அறிவினை எனக்கு இந்தத் தொழில் கற்றுக் கொடுத்துள்ளது. அரசியல் தானாகவே எனக்குள் முளை விட ஆரம்பித்துள்ளது. 

ஆரம்ப காலத்திலிருந்து பத்தாவது வரை முதல் மதிப்பெண் பெற்ற எனக்கு அந்த மதிப்பெண்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது முகத்தில் படீரென்று அறையும் உண்மை. வருடா வருடம் ஸ்டேட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எல்லோரின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் கொடுமையாக இருக்கும். எதார்த்தம் என்னவென்றே தெரியாத நிலையில் தங்கள் பிள்ளைகளைப் படாத பாடு படுத்தி படிக்கச் சொல்லி துன்பப்படுத்தும் பெற்றோர்களில் நூற்றில் 99 சதவீதமானோர் கானல் நீரைத்தான் பார்க்கப் போகின்றார்கள்.

வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்று புரிய வரும் போது எல்லாம் கையை மீறிப் போய் இருக்கும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போரின் மொத்தப் பணமும் கார்ப்பொரேட் சாமியார்கள் வசம் சென்று சேர்ந்து விடும்.

நிலையில்லா ஒவ்வொரு பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பி.ஈ படித்த ஒரு பெண் என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் தர முடியுமா? என்று கேட்டார்.  இன்றைக்கும் 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலையின்றித் தவிக்கின்றார்கள். கொட்டிக் கொடுத்த பணம் கையில் இருந்தால் அவனொரு தொழிலைச் செய்து கொண்டிருப்பான். அதுவும் போச்சு இதுவும் போச்சு. 

குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். நான்கைந்து மொழிகளைக் கற்றுக் கொடுங்கள். வேறு ஏதேனும் தொழில் சார்ந்த இணைப்படிப்புகளைக் கற்றுக் கொடுங்கள். அது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக உதவியாய் இருக்கும்.

அதை விடுத்து கோச்சிங் சரியில்லை என்று ஆரம்பித்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.