குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Tuesday, July 9, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (+18) - பகுதி 2

பூ மலர்வது அதன் இயல்பு. தன்னைச் சுற்றிலும் பூவின் வாசம் விரவி மணம் பரப்பி சூழலை இன்பமயமாக மாற்றுவது, பூக்களுக்கு இயற்கை வழங்கிய டிசைன். அது யாருக்காவும், எதற்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. விடிகாலையில் இன்னிசைக் குரல் எழுப்பி மனிதர்களின் துயிலை மென்மையாக கலைத்து, புத்துணர்ச்சியைத் தரும் பறப்பனவைகளின் இயல்பினை மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்ளுமா?  

அது போல ஒரு சில மனிதர்கள் இந்த உலகில் உண்டு. அக்கிரமம் எங்கு நிகழ்ந்தாலும் வெகுண்டு எழும் பல மனிதர்கள் இங்குண்டு. அவர்களால் தான் தர்மம் வாழ்கிறது. அதர்மக்காரர்கள் அய்யோவென அழிகிறார்கள். அதர்மம் செய்பவர்களின் வாழ்க்கையை தமிழக வரலாறு சொல்லும். காற்றில் பறந்தவர்களின் கதி இன்றைக்கு என்னவென நமக்கெல்லாம் தெரியும்.

ரயிலடியில் முகிலனை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் போது, அவர் கோஷம் போடுகிறார். அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். எவரும் சென்று விசாரிக்கவில்லை. அவரின் கோஷம் அணுக்கழிவு சேகரிப்பு மையம் வேண்டாமென்று இருந்தது. அந்தச் சம்பவம் யாருக்காகவோ, எங்கோ, எதுக்கோ, யாருக்கோ நடக்கிறது என்பதாய், அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

பைத்தியக்காரர்களாய், வெந்ததைத் தின்று விட்டு, விதி வந்து செத்துப் போவோம் என்றலையும் கூட்டம் தான் இந்த உலகில் நிறைந்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்த போது மனதெல்லாம் வெம்மை பரவி, கண்கள் சிவந்தன. முகிலன் அரக்கர்களிடம் மோதிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போனார். அரக்கர்களின் பாஷை வேறு. அப்பாஷையில் பேசினால் தான் அரக்கர்களுக்கு புரியும். ராமன் அப்படித்தான் பேசினான். கிருஷ்ணன் அப்படித்தான் பேசினான். அவை புராணங்களாகின. முகிலன் சின்னாபின்னப் படுத்தப்படுகிறார். இங்கு நல்லவனுக்கு மதிப்பில்லை. அயோக்கியனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் மதிப்பு.

ஒரு போராட்டம் செய்யவில்லை, ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை.  ஒரு நடிகன் பத்து லட்சத்துக்கும் மேல் ஓட்டு வாங்குகிறான். பத்துக் கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுக் கொண்டு டிவியில் தோன்றி மக்களை மடையர்களாக்கி, கட்சி நடத்துகிறான். அவனைப் பார்த்து புளகாங்கிதமடைகிறது தமிழ் நாடு. இந்தக் கொடுமையெல்லாம் இங்கு தான் நடக்கும். 

எம்.ஜி.ஆர் மட்டும் முதலமைச்சராக வராது இருந்தால் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்குமா? கேடு கெட்டவர்களால் ஆளப்பட்டிருக்குமா? சரோஜா தேவியின் இடுப்பாட்டத்தைப் பார்க்கத் தியேட்டர், தியேட்டராக அலைந்த அன்றைய விடலைகள் செய்த அக்கிரமம் தான், தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணம். முகிலன் ஒரு பறவையைப் போன்றவர். பூவைப் போன்றவர். பாவம் அவர் வாழ்வது அரக்கர்களின் உலகத்தில் என்பது அவருக்குப் புரியவில்லை. 

அரக்கர்களை அழிக்கும் வழி வேறு. புத்திசாலித்தனம் வேண்டும் அவர்களை ஜெயிப்பதற்கு. அதற்கு அர்த்தசாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். பகவத் கீதையைப் படிக்க வேண்டும். என்ன செய்யனும், எப்படிச் செய்யனும் என்பதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்ப செயல்படுத்தினால், அரக்கர்களின் கூட்டம் அல்லுச்சில்லு சிதற அழிந்து போவார்கள். அவர்கள் வழியில் சென்றால் தான் அவர்களை அழிக்க முடியும். கண்ணன் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஆனால் இங்கிருப்பவர்கள் அந்தளவுக்குச் சிந்தனையாளர்களா எனக் கேட்டால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். வாரிசுகளை தலைவர்களாக்கும் சுய நலவாதிகள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். 

நிற்க...! 

சமீபத்தில் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கினை மல்டிவெலல் மார்க்கெட்டிங்க் முறையில் விற்பதாகச் சொன்னார். என்ன விசேடம் அதில் எனக்கேட்டேன். தற்போது பெண்களுக்கு உண்டாகும் அத்தனை நோய்களுக்கு காரணமாக இருப்பது நாப்கின்கள் தான் என்றார் அவர். 

மூத்திரத்தின் மூலம் எளிதாக நோய் பிறப்புறுப்பைப் பாதித்து விடும் என்பதற்காக, மலத்தின் மீது மூத்திரம் பெய்யக்கூடாது என கிராமங்களில் சொல்வார்கள். 

நண்பர் சொல்லியவுடன் ஆராய்ச்சியில் இறங்கினேன். கிராமப்புறங்களில் அந்தக்காலப் பெண்கள் (வயதானவர்கள்) பலருடன் உரையாடினேன். இக்காலத்தில் இருக்கும் பல்வேறு பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் எதுவும் அவர்களைத் தீண்டியதில்லை என அறிந்தேன்.

காண்டமும், அதன் மீது தடவப்படும் பிளேவர் (என்ன எழவுக்கு அதில் பிளேவர் வேண்டுமோ தெரியவில்லை) ஆகியவை முற்றிலும் ரசாயனங்களின் கலவை. அது மட்டுமல்ல காப்பர் டி எனச் சொல்லும் கருத்தடை சாதனமும் பிளாஷ்டிக். நாப்கின்கள் உறிஞ்சுகின்றன எனச் சொல்கிறார்கள். திப்பி திப்பியாய் வரும் வஸ்துவை அவை எப்படி உள்ளுக்குள் கிரகித்துக் கொள்கின்றன எனத் தெரியவில்லை. ரத்தம் வெளியில் வந்தால் அது உடனடியாக காற்றில் இருக்கும் கிருமிகளுடன் சேர்ந்து படு அசுத்தமாய் மாறி, பெண்களின் பிறப்புறுப்பின் வழியே பல்வேறு நோய்க் கிருமிகளை உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன.

நாப்கின்கள் பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல உபாதைகள் ஏற்படுகின்றன எனச் சொல்வார் மனையாள். ஆக இந்த பொருட்களினால் பெண்களின் ஜனன உறுப்பின் வழியாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று கர்ப்பப் பை புற்று நோய், நீர்க்கட்டிகள், உடலுக்குள் பல்வேறு உபாதைகளை உருவாக்கி வருகின்றன என கிராமத்துப் பாட்டிகளுடன் பேசிய பிறகு அறிந்து கொண்டேன்.

காண்டம் பிளாஸ்டிக். அதில் தடவப்படும் பிளேவர்கள் முற்றிலும் ரசாயனம். ஆக இந்த வகைப் பொருட்களினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கர்ப்பமின்மையும் உருவாகாது என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தற்போது பெண்களுக்கு உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் போது, வேதிப் பொருட்கள் ஜனன உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என எவராது சொன்னால் நம்பக்கூடிய நிலை இல்லை.

உடம்பில் பயன்படுத்தும் சோப்பிலிருந்து, ஒவ்வொரு பொருளிலும் ரசாயனப் பொருட்கள் இல்லாது வருவதில்லை. சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களும் ரசாயன உரமின்றி வருவதில்லை. 

’புருஷன் தேவையில்லை, பிள்ளை பெற்றுக் கொள்ள எங்களிடம் வாருங்கள்’ என மருத்துவமனைகள் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை திம்மம் பகுதியில், நண்பரின் ஹெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த போது, அங்கிருக்கும் மலைவாழ் பெண்களின் கருமுட்டையை உறிஞ்சிக் கொண்டு, காசு கொடுத்துச் செல்லும் பிசினஸ் ஆட்களைப் பார்த்தேன். அம்முட்டைகள் மருத்துவமனைக்குச் சென்று எவரோ ஒரு ஆணின் விந்தணுவில் சேர்க்கப்பட்டு குழந்தைகளை உருவாக்கி கருப்பைக்குள் வைத்து, இன்றைய நவீன மருத்துவம் தொழில் செய்கின்றார்கள்.

உலகம் போற போக்குத் தெரியாமல், ஜாதிக் கட்சித் தலைவர்கள், ஜாதி, மதம் என மீட்டிங்க் போட்டுப் பேசிக் கொண்டலைகின்றார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, சில விடலைகள் தங்கள் உயிரை இழக்கின்றார்கள். இங்கு எவரின் விந்து, எவரோ ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு, யாரோ ஒருவரின் கருப்பைக்குள் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவரின் குழந்தையை தங்கள் குழந்தை என கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது உலகம். குழந்தைகள் இன்று இயற்கையாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா? 

இங்கு மனிதனின் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது. அதுதான் உயர்ந்த வாழ்க்கை என மூளைக்குள் நிமிடத்துக்கு நிமிடம் புகுத்தப்படுகிறது. இயற்கை நமக்கு விரோதி என்பது போல மாற்றப்படுகிறது. கொசுக்களை அழித்த தட்டான்கள் இன்று எங்கும் காணப்படவில்லை. எனது 19 வயது வரை கொசு என்றால் என்னவென்றே தெரியாது. நாகரீகக் கோமான்கள் வசிக்கும் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

என்னால் இதற்கு மேல் எழுத இயலாது. எழுததினால் எல்லோருக்கும் திகில் தான் பிடிக்கும். ஆகவே நண்பர்களே, இயற்கைக்கு மாறுங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்களையாவது, நோய் நொடிகள் இன்று சுகமாய் வாழுங்கள்.

சொல்ல வந்தது இன்னும் இருக்கிறது. சந்திப்போம் விரைவில்....!

Saturday, July 6, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (18+) - பகுதி 1

அன்பு நண்பர்களே,

உங்களை அன்போடு இப்பதிவினைப் படிக்க அழைக்கிறேன். விஷயம் கொஞ்சம் கடுமையானதுதான். இப்பதிவு திருமணமனமானவர்களுக்கு மட்டும் என்றுச் சொல்லி இருப்பதால் வயதுப் பெண்கள், குழந்தைகள் இவ்விடத்திலிருந்து விலகி விடும்படி வேண்டிக் கொள்கிறேன். 

தாய் தந்தை இச்சையினாலே தாரணியிலே நான் பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!

தண்ணீரைக் கூட தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!

அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!

மாட்டின்மேல் உண்ணியைப் போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம் நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!

தோழன் என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!

கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டு நான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!

ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான் செய்த தவறேதுவோ பரம்பொருளே!

தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்காரனாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!

ஒரு வேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனுக்கு மயங்குவதே பரம்பொருளே!

செய்யாத குற்றமெல்லாம் செய்தே எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!

எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்து துணையிருப்பாய் பரம்பொருளே!

பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய் நீ நானறந்தேன் பரம்பொருளே!

உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகிறேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!

கண்ணாடித் துண்டுகளென் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!

எங்கும் நிறைந்தாயே எவரையும் நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!

கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!

ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணையில்ல என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!

ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக்குருடனுக்கு நலமேது பரம்பொருளே!

பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!

ஆற்றில் ஒரு காலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!

எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லை எனத் துணிந்தேன் பரம்பொருளே!

உன்காலை வாங்கி உலாவ மறந்த பின்னர்
என் காலைக் கொண்டு பாப் எது செய்வேன் பரம்பொருளே!

தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்தது போல்
நான் போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!

சூதாடித் தோற்றவர்க்கு துணையிருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ

அரக்க குலமெல்லாம் அன்றோட ழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதய்யா!

பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய் நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!

எத்தனையோ கேள்விகளை எழுப்பி விட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான் ஒருவன் எப்படித்தான் பதில் சொல்வேன்!

துன்பத்தைத் தானே தொடர்தெனுக்கு வைத்தாய்
இன்பத்தை எப்போது எனக்கு வைப்பாய் பரம்பொருளே!

ஐயா நின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினை தீர்ப்பாய் பரம்பொருளே!

காவல் ஒரு வில்லாகக் கருணை ஒரு வேலாக
கோவில் உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ?

தூங்குகிற வேளை நீ தோன்றுவாய் கனவில் என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!

மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பது போல
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!

பழுதறியாப் பிள்ளை இது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!

நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என் சாட்சி!

மாற்றார் உரிமையை நான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுதான் அகக்கடமை என்றிருப்பேன்!

இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!

நற்கோவில் சிலையதனைக் நான் உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!

அடுத்தார் மனைவியை நான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய் விரித்துக் கிடந்திருப்பேன்!

நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பது உன் கருணை என நினைத்திருப்பேன்!

தாயை மகனைத் தனித்தனியே பிரிந்திருந்தால்
நாயையே என்னை விட நற்பிறவி என்றிருப்பேன்!

கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!

பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித் திரிந்திருப்பேன்!

நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய் திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!

சக்தியுள மட்டில் தவறாமல் நாள் தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!

மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என் நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!

தாயும் நீ தந்தை நீ சார்ந்திருக்கும் சுற்றமும் நீ
வாயும் நீ வயிறும் நீ வரமளிக்கும் தேவனும் நீ!

நோயும் நீ மருந்தும் நீ நோவுடன் சுகமும் நீ
ஆயும் குணமளிக்கும் ஆறாவதறிவும் நீ!

இறப்பும் பிறப்பும் நீ இருட்டும் வெளிச்சமும் நீ
மறப்பும் நினைப்பும் நீ மனக்கோவில் தேவதை நீ!

எல்லாமும் நீயே எனைப் பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!

இன்பவரம் தாராமல் இதுதான் உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!

கண்ணதாசனின் புலம்பலைப் படித்தீர்கள் அல்லவா? இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே? நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது மறந்து போனீர்களா?

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!

விதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே!

இந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா? குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம்? உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்?

இல்லை...! இல்லை!! நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா? தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா? நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம்? ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம்? ஓடுகிறோம்? இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

என் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ முடியாது. என்னைப் போல எவரும் போராட முடியாது. என்னைப் போல ஒருவரும் சகித்துக் கொள்ள முடியாது. என்னைப் போல துரோகத்தால், சூழ்ச்சியால் பாதிப்பட்டு இருக்க முடியாது. என்னைப் போல இன்னொருவர் சாதாரண விஷயங்களைக் கூட இழந்திருக்க முடியாது. நாமெல்லாம் அடிக்கடிச் சொல்வோமே, ‘அந்த அவன்’  என் மீது கொள்ளை கொலைவெறியில் இருப்பான் போல. பிறந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அடித்துக் கொண்டே இருக்கிறான். வீழ்கிறேன். அடிக்கிறான் அடியோடு அழிய. மீண்டும் திமிறி எழுகிறேன். அடிக்கிறான். வீழ்கிறேன். உள்ளத்துக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்து ஆர்ப்பரிக்கும் தன்னம்பிக்கையோடு உடல் துடிக்க மீண்டும் மீண்டும் எழுகிறேன். அடித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும், மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டே இருக்கிறேன். ஒரு நாளும் உள்ளம் சோர்ந்து, உடல் விதிர்த்து உட்கார்ந்திருந்தது இல்லை. நான் அழிந்து போகக்கூடியவன் அல்ல. சாம்பலானாலும் மீண்டும் முளைப்பேன் வேறொரு செடியாக, மரமாக, உயிராக. இயற்கையின் சிந்தாந்தம் அது. 

அடுத்த நொடியில் என்ன நடக்கும்? என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன்? வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும்? வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!!

சோம்பேறியா சோகத்தில் மூழ்க?

முட்டாளா புலம்பித் திரிய?

எழுந்திருங்கள்!!!

உங்களின் எண்ணத்தை, மனதை எழுப்புங்கள். உடல் கூடவே எழும்....!

முண்டாசுக் கவி பாரதியைப் பாருங்கள். அவன் வடித்த கவிதையைப் படியுங்கள்.

சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

அதுமட்டுமல்ல, எனது ப்ரியத்துக்கு உரிய வீரத்துறவி விவேகானந்தர் வார்த்தைகளைப் படியுங்கள்.

கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான் என்றார் விவேகானந்தர். 

உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் வரும் துன்பங்களை உதைத்து, உதைத்து உற்சாகமாய் கோல் போடுவோம். துன்பத்தையே வெற்றிப் பந்தாக்குவோம். வாழ்க்கையே இதுதான்....!

நிற்க...!

பதிவு பெரிதாகிப் போனதால், அடுத்தப் பதிவில் உங்களை அதிர வைக்குமொரு உண்மையை அனுபவ உண்மையை எழுதப் போகிறேன்....!

நன்றி : கண்ணதாசனுக்கும், அவரது பதிப்பகத்தாருக்கும்....!

மேலும் கொஞ்சமே கொஞ்சம்...!

ஒரு கடிதம் கீழே !

வணக்கம் ஐயா,

உங்களது நிலம் சம்பந்தப்பட்ட கட்டுரை படித்தேன். அதுவும் சரியான நேரத்தில் அந்த திருசெந்தில் ஆண்டவரே எனக்கு தங்கவேலை காட்டியுள்ளதாக நினைக்கின்றேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனது காதில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ஒலித்துக் கொண்டுள்ளது. எல்லாம் அவனின் செயலென்று நினைக்கின்றேன். ஐயா நான் XXXX. நேரில் தங்களை சந்தித்து எனது பிரச்சினைகள் தீர்க்க பேசவேண்டும். அனுமதி வேண்டும். எனது பெயர் XXXXXXXXX, மொபைல் & வாட்சப் எண் XXXXXXXXXX. உங்களின் பதிலுக்காக .....

நண்பரே! நாமெல்லாம் வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள். ஊருக்குச் சென்று பத்திரமாகத் திரும்புங்கள். அதுவரை காத்திருக்கிறேன் உங்களுக்காக. சந்திப்போம். பிரச்சினையை உடைப்போம். தூள் துளாக்குவோம்.

வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!

விரைவில் சந்திப்போம்.....! 

Thursday, June 13, 2019

சில பெண்கள் சில மாதிரி

எனது பசங்க படிக்கும் பள்ளியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் டைட் லெக்கிங்க் மற்றும் டைட் டிஷர்ட்டில் பள்ளிக்கு வந்திருக்கிறார். பள்ளியின் செயலாளர் அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். 

பள்ளியில் சுடிதார், துப்பட்டா மற்றும் அனுமதி. அடலசண்ட் வயதில் காதல், கத்தரிக்காய் என்று அரற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், உடையினால் இனக்கவர்ச்சி உண்டாகி விடக்கூடாது என்பதிலும், ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.

அப்பெண் குழந்தையின் அம்மா, செயலாளரைச் சந்தித்து "நான் சம்பாதிக்கிறேன், என் குழந்தை என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போட்டுக்கிட்டு வரும், உங்களுக்கு அதைத் தடுக்க அனுமதி இல்லை" என்றெல்லாம் கத்தி இருக்கிறார். செயலாளர் கூலாக "உங்கள் குழந்தைக்கு டிசி தருகிறேன், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னவுடன் சென்று விட்டார். மறு நாள் டைட் லெக்கிங்க் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறது அப்பெண் குழந்தை. மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அப்பெண் குழந்தையின் தாய் என்ன விதமானவர் என்பதைப் பற்றி எனக்கு மனக்கிலேசம் உண்டானது. தான் வாழாத ஒரு வாழ்க்கையை, தான் போட முடியாத உடையை தன் பெண் குழந்தைக்குப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறாரா? இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா? வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது? இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர்? ஏன் இப்படி மாறிப்போனார்கள்? என யோசித்தால் கண் முன்னே ‘சினிமா’ வந்து நிற்கிறது.

சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் மூன்றுச் சாலை முக்கு இருக்கிறது. காளப்பட்டியிலிருந்து இருந்து வரும் சாலையில் ஓசிடி (OCT) என்று நோட்டீஸ் போர்டு ஒட்டிய காரின் பின்னால் நின்றிருந்த போது சத்தி சாலையில் வேகமாக ஒரு அரசு பயனியர் பேருந்து வந்தது. இடையில் ஒருவர் கிழக்கே இருந்து பைக்கில் சாலையை நொடியில் கடக்க, அதற்குள் ஓசிடி காரினை ஓட்டி வந்த பெண் விருட்டென காரினை நகர்த்த, பேருந்து ஓட்டுனர் பதறிக் கொண்டு பிரேக் போட்டார். நான் போகாமல் நின்றிருந்தேன். ஓட்டுனர் என்னை போகச் சொல்லி, அந்தக் காரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். காருக்குள் பெண் இருந்ததைக் கவனித்தேன். அந்தக் கார் ஓட்டிய பெண், ஏதோ பெரிய சாதனையைச் செய்தது போல சிரித்துக் கொண்டு ஓட்டிச் சென்றது. பெண்கள் என்றால் பொறுமை என்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஹிஸ்டீரியா பிடித்தது போல காரை ஓட்டிச் செல்கிறது. 

பேருந்து வந்த வேகத்திற்கு மோதினால் பல், சில்லு எல்லாம் சிதறி இருக்கும். கார் ஓட்டுகிறேன் பேர்வழி என பல பெண்கள் சாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரி சென்றால் அதனை நேரம், இடம் கணித்து கடப்பது இல்லை. அதன் பின்னாலே ஓட்டிச் செல்வதும், பின்னால் வரும் கார்களுக்கு வழியும் கொடுப்பதும் இல்லை. சாலைகளில் பைக்கில் செல்லும் இளம் பெண்கள், காற்றில் முடி பறக்க விண்ணில் விமானம் ஓட்டுவது போல ஓட்டுகின்றார்கள். பல தடவைகள் சாலைகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு தெரு நாய் போல விழுந்து கிடப்பதை. ஸ்டைல் என்கிற பெயரில் இவர்களின் அழிச்சாட்டியும் கோவையில் எல்லை தாண்டிச் செல்கிறது.

விஜய் டிவியில் நடனம், பாட்டு, நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரியங்கா என்கிற ஒரு பெண் செய்யும் அஷ்டகோணல்கள், அவரின் ஆபாச பேச்சுக்கள் பெண்களின் மீதான பிம்பத்தை உடைக்கின்றது. பிரியங்கா போலவும் திவ்யதர்ஷிணி போல ஒரு பெண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எந்த நல்ல தகப்பனும், தாயும் நினைக்க மாட்டார்கள். முகம் சுழிக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள், சினிமா ஹீரோக்கள் வந்தால் கட்டிப்பிடித்டுஹ் கன்னத்தில் முத்தம் கொடுப்பது என அவர்களின் நடவடிக்கைகள், அவர்களைப் பெற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் மறக்கவில்லை. எல்லாம் சகஜம் என்பது போல மாறிப் போனார்கள். என்னை படுக்க அழைத்தார்கள் என வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ‘மீ டூ’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திவ்யதர்ஷினி ஒரே ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். அடுத்து டைவோர்ஸ். ரஜினியின் இரண்டாவது பெண் தனுஷை இயக்கினார். அடுத்து டைவோர்ஸ். அமலாபால் ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். டைவோர்ஸ்.  ஏன் டைவோர்ஸ் என்று கேட்டால் வேலை முடித்து வீட்டுக்கு வருவதில்லை. பார்ட்டிகளுக்குச் சென்று குடித்து விட்டு, கூத்தடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்ற சில்லரைத்தனமான செயல்களால் இவர்கள் டைவோர்ஸ் பெறுகிறார்கள். இதற்கு காரணமாக சில நடிகர்கள் இருக்கின்றார்கள். புருஷன்களோடு இருந்தால் நினைத்த நேரத்துக்கு அழைக்க முடியாதே? ஆகவே ஏதேதோ சொல்லி, புகழ்ந்து டைவோர்ஸ் பெற வைத்து, பின்னர் ஆடிக் களைத்து விட்டு கழட்டி விட்டு விடுவார்கள். புரியும் போது எல்லாம் முடிந்து போகும். கழண்டு போய், தோல் சுருங்கிப் போனால் சினிமாவில் நாய் கூட சீந்தாது. சினிமா மாய உலகம் இல்லை. அது கிரிமினல்கள் நிறைந்த துரோக உலகம். நாமெல்லாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் புதை குழி. டிவி அதை விட பெரும் மீள முடியாத மரணக்குழி. 

இதையெல்லாம் அறியாத பெண் பிள்ளைகள் சினிமாவில் இன்ஸ்டண்ட் புகழ் பெற நினைக்கின்றார்கள். ஆண்கள் உடனடி ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றார்கள்.

சினிமாவில் தான் ஜாதி மற்றும் அரசியல் அதிகம். கமல்ஹாசன் தன் படங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நடிக்க வைப்பார். அதற்கு கலை எனச் சொல்வார். ஏன் பிறருக்கு அதெல்லாம் இருக்காதா? கமல்ஹாசன் படங்களில் ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, கிரேஸி மோகன் என தன் இனத்தின் ஆட்களுக்குதான் முன்னுரிமை தருவார். இவர்கள் கமலைப் பற்றிப் பேசி, பேட்டி கொடுத்து ஒரு வெற்றுப் பிம்பத்தை உருவாக்குவார்கள். கமலுக்கு பணம் கொடுத்து படம் எடுக்கச் சொல்பவனை தேடினாலும் காட்ட மாட்டார்கள். அடுத்தவன் பணத்தில் அட்ரா சக்கை என தாளம் போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.

சினிமா ஜாதியால் மட்டுமே இயங்குகிறது. மூன்று, நான்கு க்ரூப்கள் இருக்கின்றன. அவர்களை மீறி எவராவது புதியதாக வந்தால் போச்சு. ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக அழித்து விடுவார்கள். அந்தளவுக்குப் புனிதர்கள் நிரம்பியது தமிழ் சினிமா உலகம்.

ரஜினி சிகரெட் புகைப்பது, தீக்குச்சியை பெண்களின் உடையில் உரசி, சிகரெட்டைப் பற்ற வைப்பது போன்ற நடிப்புகள், சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்தது. ஆனால் பாருங்கள். ரஜினி கண்டக்டராக இருக்கும் போது சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டது போலவும், அதைப் பார்த்த பாலச்சந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நடிக்க வைத்தது போலவும் செம பில்டப்பைக் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரஜினி சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்து நடித்தார் என்பது மட்டுமே. இன்றைக்கு என்னால் பல சாட்சியங்களைக் காட்ட முடியும்.

தமிழக இளைஞர்கள் ரஜினி ஸ்டைல் என்றுச் சொல்லி தங்கள் நுரையீரல்களை சிகரெட் புகையினால் நிறைத்தார்கள். ரஜினியை கொண்டாடினார்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் வேறு மாதிரி ஆகி விடும். சினிமாவில் நல்லவர்கள் நிறைய உண்டு. ஆனால் தீயவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதோ நாமெல்லாம் நல்ல நடிகர் என்று நினைத்து ரசிக்கும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி வந்துள்ள செய்தி. படியுங்கள். ரசியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நன்றி சினிக்கூத்து. இது ஒரு சாம்பிள் மட்டுமே. இதைப் போல பல உண்மைகள் உண்டு.






இவரைப் போல நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

நல்ல பெண்களைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தான் நாறித்தான் போவேன் எனும் பெண்களைப் பார்க்கக் கூட அனுமதிக்காதீர்கள். சமூகம் தான் மனிதனுக்கு கேடயம். அது சீரழிந்தால் மனிதனும் அழிவான்.

13/06/2019-2.50PM

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

Tuesday, May 28, 2019

நிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.

நல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.

மக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்? நல்லது நடக்கும்.

சரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

இனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.

அது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

மாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.

இதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.

மலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும். 

விரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்படி வசதிகளும் செய்து தரப்படும்.

மிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்....!

Saturday, May 4, 2019

எது சிறந்த வாழ்க்கை?

அன்பு நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களாகி விட்டன எனது வாழ்வியல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு. காலச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் மனதுக்கு இனிமையானதாக இருந்திருப்பின், என்னுள்ளத்தில் பொங்கி வரும் உணர்வுகளை எழுதுவேன். பணிச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் இல்லாத ஒன்றைத் தேடி ஓடச் செய்கின்றன. 

ஓஷோவின் புத்தகத்திலே படித்தேன் இப்படி.

ஏதோ ஓர் நாட்டிலே ஒரு புத்தர் கோவில் இருக்கிறதாம். கோவில் என்றால் உள்ளே சிலை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அந்தக் கோவிலில் புத்தர் சிலை இல்லை. கோவிலுக்குச் செல்வோர் ’எங்கே புத்தர்? எங்கே புத்தர்?’ என்று கேட்பார்களாம்.

அங்கிருக்கும் புத்த பிட்சுகள் என்ன சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்களேன். விடையைக் கீழே தருகிறேன். யோசித்துக் கொண்டே தொடருங்கள்.

எனக்கு அரசியலில் அனேக நண்பர்கள் உண்டு. நீதித்துறையிலும் அதிக நண்பர்கள் உண்டு. அரசியலில் இருக்கும் ஒரு நண்பரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் என்னை சிலிர்க்க வைக்கும். பரம்பரைப் பணக்காரர் அவர். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். சமீபத்தில் அவரின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன்.

அவரின் இப்போதைய தலைவரை நல்லவர், எளிமையானவர் என்றெல்லாம் விளித்திருந்தார். சிரிப்பு தான் வந்தது.

அந்த நண்பருக்கு சில கேள்விகள் கேட்க மனது ஆலாய்ப் பறக்கிறது.

இந்தியாவின் ஆன்மா அதன் அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் இருப்பிடம் சட்டசபைகள். ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தவர்களுக்கு பதவியும், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களின் பதவிகளையும் பிடுங்கிக் கொண்டு, சட்டத்தை தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நோக்கி அரக்கச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களில் ஒருவரைத்தான் நீங்கள் அவ்வாறு சொன்னீர்கள். உங்கள் கையில் கட்டி இருக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணக்கயிறுகளை எந்த நம்பிக்கையில் கட்டி இருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுத்தவர் எவரோ அவர் இப்படியானவர்களுக்கு என்ன பரிசு தருவார்? என அறிவீர்களா? பதிலை நீங்களே உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்களும், நானும், ஏன் உங்களால் வல்லவர், நல்லவர், எளிமையானவர் என்று விளித்திருப்பவரும் கால ஓட்டத்தின் முன்பு காணாமல் போவோமே, ஆனால் இந்தியாவை ஆளும் அரசியலமைப்புச் சட்டம் என்றும் இருந்து கொண்டே இருக்குமே, அதைக் கேலிக்குறியதாக்கி மகிழும் சிறு குழுவும் நாளைக்குள் என்ன எந்த நொடியில் வேண்டுமானாலும் காணாமல் போவார்களே, அவர்களையா நீங்கள் உயர்த்துகின்றீர்கள்? ஆனால் நீங்கள் அப்படியானவர் இல்லையே? ஏன் இந்த மாற்றம்? ஏனோ??? ஏனோ???? உங்களின் அறம் என்னவாயிற்று? வாடகைக்கோ அல்லது வட்டிக்கோ விட்டிருக்கின்றீரா?

இந்தியாவை ஆன்மீக நாடு என்று சொன்னால் அந்த ஆன்மீகம் சொல்லித் தந்த, கவுரவர்களின் கயமைத்தனத்தின் முடிவினை மறந்தீரா? இராவணன் தூக்கிச் சென்று சிறை வைத்த சீதாவைப் போல, எம் இந்தியத் தாயை தமிழகத்தில் ஆளும் ஆட்கள், ஆளுக்கு ஆள் கற்பழித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கு ராவணனின் கதி நடக்காது என்றா நினைத்தீர்கள்? சுத்தமாக துடைத்து எடுக்கப்படுவார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டாமென்பது என் ஆவல்.

கடவுள் என்னைப் பொறுத்தவரை முரண்பாடுகளின் மொத்த உருவமானவர். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் அவர் இன்பமாகவும் இருக்கிறார், துன்பமாகவும் இருக்கிறார். அவர் இருளாகவும் இருக்கிறார், வெளிச்சமாகவும் இருக்கிறார். அவர் உங்கள் கயிறுக்குள் தன்னைக் கட்டிக் கிடக்கவில்லை. அவரின் முரண்பாட்டின் விளையாட்டுப் பொம்மைகள் தான் நீங்களும், நானும், உங்களின் அந்த எளியவரும்.  ( நன்றி ஓஷோ)

உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொருவரின் இறுதியையும், மழையையும் எங்கே எப்படி என நடத்துபவன் அவனே. ஃபானிபுயலால் தமிழகம் நீரால் நிறையும் என்று கனவு கண்டாரே உங்களின் அந்த எளியவர். புயலின் தாக்கத்தால் இன்னும் அனேக கோடிகளை டெண்டரில் அள்ளலாம் என்று கனவு கண்டார்களே உங்களின் எளியவர்கள். ஒரு நிமிடத்தில் அது சென்ற பாதையைப் பார்த்தீரா? முடிந்தால் உங்களின் அவரை அதை மாற்றச் சொல்லித்தான் பாருங்களேன். சடுதியில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்களை வீட்டுக்கு விரட்டுபவரை மாற்றி அமைக்கச் சொல்லிப் பாருங்களேன். ரத்தத்தின் சூடும், பதவியின் நாற்காலியும் இருக்கும் வரை ஆடுவார்கள். ஆட விட்டு மொத்தமாக பிடுங்கி விடுவார் உங்களின் கையில் கட்டி இருக்கும் கயிற்றுக்கு நம்பிக்கை கொடுப்பவர்.

ஆகவே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த அறத்தினை கொஞ்சம் வெளியில் உலாவ விடுங்கள். கானல் நீரான நமது வாழ்க்கையில் கொஞ்சமேனும் உண்மையாக இருந்து விட்டுப் போகலாமே? 

உங்களை நான் நிரம்பவும் மதிக்கிறேன். அதற்காகத்தான் இந்தப் பத்திகள். நீங்கள் என்னை மதிக்கின்றீர்களா இல்லையா? என்னை பொருட்டாக கருதுகின்றீர்களா? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. நான் சொல்வதைச் சொல்லத்தான் செய்வேன். கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்.

நண்பர்களே, எங்கெங்கோ சென்று விட்டேன். மன்னித்தருள்க. உங்களின் பொன்னான நேரத்தின் ஒரு சில நொடிகளைத் தின்று விட்டன எனது இந்த முழுமையற்ற வார்த்தைகள். மன்னிக்கவும். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

ஒரு யூடிப் சானலில் பார்த்தேன். யாரோ ஒரு பையன் சாலையோரத்தில், செருப்புத் தைக்கும் ஒருவரையும், நெருப்பில் வெந்து ஆறிய முகத்தோடு அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவியையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே...!




மிகப் பொறுமையாக இந்த வீடியோவை பாருங்கள். மனது நெகிழும். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களின் வாழ்க்கையை முன் பதிவுகளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, நமது வாழ்க்கையையும், இந்த எளிய கணவன், மனைவியின் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மையான தாம்பத்தியம என்பது புரிய வரும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு பிள்ளைப் பேற்றுக்கு வந்த மனைவியை தன் பிள்ளையுடன், மீண்டும் அழைத்துச் செல்ல விரும்பிய கணவனின் ஆசையை மறுத்த மாமியாரால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதான் பணக்காரத் தாம்பத்தியம். இவர்களின் வாழ்க்கையில் அன்பு எங்கே இருக்கிறது?

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் காதலனுடன் பிரேக் அப்பாம். விகடன் செய்தி. காதலன் சொந்த சம்பாத்தியம் செய்யவில்லையாம், பெற்றோரின் உதவியால் தான் வாழ்கின்றானாம், அது ஸ்ருதிக்குப் பிடிக்கவில்லையாம். காதல் பிரேக் அப். உலகம் கொண்டாடுகிறது. விகடன் செய்தி வெளியிட்டு மகிழ்கிறது. அவர்கள் ஏன் பிரேக் அப் செய்தார்கள் என ஸ்ருதியின் நண்பர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? இது என்ன மாதிரியான காதல்? (என் படத்தை வெளியிட மறுத்தால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கண்ணீர் விட்டவரை தலைவன் என ஓட்டுப் போடுகின்றார்கள் தமிழகத்தில். இதை விட வெட்கக்கேடான செயலும் இவ்வுலகில் உண்டா? யோசிக்கும் திறனற்றாப் போனார்கள் தமிழர்கள்?)

காதல் என்பது என்ன என்பதற்கான டெஃபனிஷன்கள் என்னிடம் பல உண்டு. இதுதான் காதல் என்று சொல்ல முடியாது. ’ஏக் துஜே கேலியே’ காதல் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். தேவதாஸ் காதலெல்லாம் படத்தோடு சரி. அதுதான் உண்மை என நம்பிக் கொண்டு சென்றால் வாழ்க்கை நக்கிக் கொண்டு போய் விடும்.

பிறந்தாய், வளர்ந்தாய், உருவானாய், பிறக்க வைத்தாய், வளர வைத்தாய், சென்று சேர்வாய் - இயற்கை மனிதனுக்கு விதித்தது இதுதான். இதற்கிடையில் நடப்பவை எல்லாம் வெற்று நாடகம். காட்சி கலைந்ததும் காணாமல் போய் விடுவோம். உங்களையும், என்னையும் சுற்றி இருப்பது எதுவும் இல்லாத ஒன்றிலிருந்து பிறப்பெடுத்தவை. எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடும். அது உங்களின் அருமை பிள்ளையானாலும் சரி, அழகான மனைவியானாலும் சரி, கடவுளுக்கு நிகர் தந்தை, தாயானாலும் சரி.

சரி முன் பத்தியில் கோவிலில் புத்தர் சிலை ஏன் இல்லை என்பதற்கான பதில் கீழே.

”இந்த தூய்மையான, வெறுமையான மெளனமான இடமே புத்தர்”

இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை இனிதாய் கழியும்.

உங்களுக்கும், எனக்கும் எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது நண்பர்களே.....!

இதை என்றைக்கும் மறந்தும் மறந்து விடாதீர்கள்.

ஒரு பொண்ணு நெனச்சா திரைப்படப்பாடலும், அதன் வரிகளும் உங்களுக்காக.

" உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் இதயமே இதயமே உருகுதே உருகுதே நிழலினில் தொடரும் தொடரும் எனது ஜீவனே உறவுகள் வளரும் வளரும் எனது தேவனே விழி சிந்தும் ராகம் ஒன்று உனை நாடுதே எதிர்காலம் நீயே என்று தினம் கூடுதே கண்மணியே கண்மணியே மனம் இங்கு மயங்கிடுதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் சாலையில் சோலையில் காலையில் மாலையில் நிதம் ஒரு புதுமை பழகும் எனது ராஜனே இனியதும் இளமை குலவும் எனது தேவியே வசந்தத்தின் தேசம் எங்கும் வலம் போகலாம் வருகின்ற காலம் தோறும் சுகம் காணலாம் இரவுகள் மலருதே அமுதங்கள் பருகிடவே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன்"



விரைவில் சந்திப்போம் நரலீலையில்....!

- 04/05/2019

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள். 

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

Friday, April 5, 2019

நிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன?

நிலம் தொடர் 50வது பாகத்தை எழுதுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. காலம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. கணிணி ஆசிரியனாக வாழ்க்கையைத் துவங்கியவன் இன்றைக்கு ரியல் எஸ்டேட் தொழிலே மூச்சாக இருப்பதற்கு, காலத்தை மட்டுமே காரணம் சொல்வேன். 

இந்த துறையில் அனுபவப்பாடம் பயின்றது வில்லன்களிடம். மக்களை எப்படி ஏமாற்றலாம் என நினைத்த வில்லத்தனமானவர்களிடம் தொழில் கற்றேன். எதைச் செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொண்டேன். பின்னர் எது சரி எனப் புரிந்து கொண்டேன். யார் யாருக்கு என்னென்ன தெரியுமோ அந்த அறிவினை வைத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்கின்றார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் அதுவல்ல. அது ஒரு கடல். பல அரசுத் துறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட மர்மங்கள் மண்டிக் கிடக்கும் மாயக்கடல்.

இதற்கென பல தனித்தனியான துறைகள் இருக்கின்றன. நில ஆவணங்கள் பதிவு செய்வது, அரசு ஆவணங்களை உருவாக்குவது, அளப்பது என இதற்கே இரண்டு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைகளும் தனக்கென தனித்தனி ஆவணங்களை வைத்திருக்கின்றன. அந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு நிலத் தொழில் செய்வது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புரியும்படிச் சொன்னால் இந்திய சாலை அமைச்சகம் கூட நிலத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்தால் அதை ரெவின்யூ ரெக்கார்டில் கொண்டு வர எத்தனை காலம் பிடிக்கும் என உங்களுக்குச் சொல்லித் தெரியாத ஒன்றில்லை. ஏர்போர்ட் அத்தாரிட்டி மூலமாக கூட ஒரு நிலத்தின் ஆவணம் மாற்றப்படலாம் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

வங்கிகளில் லீகல் ஒப்பீனியன் பார்ப்பார்கள். அது சரியானதுதான் என்று என்னிடம் வாதிடுவார்கள். வக்கீல்கள் எப்படி லீகல் பார்ப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்ப்பார்கள். அவரிடம் அனைத்து டிபார்ட்மெண்ட்களின் ஆவணங்கள் இருக்குமா? என்றால் இருக்காது. நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு  அவர் சரி பார்ப்பார். ஆனால் உண்மை என்ன?  பல துறைகளில் பங்கெடுத்துக்கு இருக்கும் ஆவணங்களை அவர் எப்படி சரிபார்ப்பார்? இயலாது அல்லவா? ஒரு வாங்குபவரால் அத்தனை ஆவணங்களைத் திரட்ட முடியுமா? அது அவ்வளவு எளிதானதும் அல்ல. விற்பவர் தன்னிடம் இவ்வளவு தான் ஆவணங்கள் இருக்கின்றன என்பார். இருக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு சரி பார்ப்பது மட்டுமே இயலும். 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பெரும்பான்மையான தமிழக நிலங்களின் விபரங்களைச் சேகரித்து வைத்து இருக்கிறேன். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நிலங்களை அலசி விட நீண்ட வருடங்களாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன். கடின உழைப்பின் காரணமாக இதைப் போன்ற ஆவணங்களைத் தேடித் தேடி அலைந்து திரிந்து டிஜிட்டலாக்கி பாதுகாத்து வருகிறேன். உதாரணமாக ஒரு நிலத்தை வாங்கி சைட் போட்டு விற்கலாம் என முடிவு செய்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அந்த நிலம் சைட் போட தகுதியானது தானா எனக் கண்டறிய எளிதில் முடியாது. அதை ஒரு நிமிடத்தில் கண்டறிய தேவையானவைகள் என்னிடம் இருக்கின்றது. இப்போது புரியும் என நினைக்கிறேன்

கோடிக்கணக்கில் பொருள் முதலீடு செய்யும் போது இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு, எதிர்கால சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வது வாங்குபவர்களிடம் இருக்கிறது. கவனம் தேவை ! அவ்வளவுதான்.

இப்படி நான் ஆவணங்களை வகைப்படுத்திக் கொண்டு வரும் போது மானிய நிலங்கள் என்ற சொல்லை அடிக்கடி கேட்க ஆரம்பித்தேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவில் இருந்த நிலங்களை எல்லாம் முன்னர் இருந்தவாறே பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயே முறைப்படிதான் இன்றைய நில அளவுகள் தொடர்கின்றன. அவ்வப்போது அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.

இந்திய அரசு விடுதலை பெற்ற போது, திருவாரூர் ஆதீனத்தில் இருந்து ஒருவர் டெல்லி சென்று திருப்பதிகப் பாடல்களைப் பாடி மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலைப் பெற்று நேருவிடம் கொடுத்தார் எனவும், அது பற்றிய ஒரு புகைப்படம் திருவாரூர் மடத்தில் இருப்பதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்திய மக்களின் பிரதி நிதியான நேருவிடம் இப்படித்தான் மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நான்கு போர் விமானங்களும், கொஞ்சம் ராணுவ வீரர்களும், இந்தியா முழுவதும் பசியும், பட்டினியும் தான் இருந்தனவாம். ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தான் இன்றைய இந்தியாவை உருவாக்கியது. இதில் பல்வேறு இடைத் துரோகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் “நரலீலைகள்” நாவலில் படித்துக் கொள்ளுங்கள்.

பிஜேபியின் மோடி இன்றைக்கு எதெற்கெடுத்தாலும் காங்கிரஸைக் குற்றம் சாட்டி, எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருக்க காரணம் அந்த காங்கிரஸ் தான். உலகமே இருண்டு கிடப்பதாய் நினைத்துக் கொண்டு கோயபல்ஸ் வசனங்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள் பிஜேபியினர். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையைப் பற்றிப் பேசும் போது, பொய் எதிரில் வந்து விடுகிறது. அது போகட்டும் அரசியல் அந்தப் பக்கம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் பதிவு செய்த நில ஆவணங்களில் மானிய நிலங்கள் என்ற பகுதி உண்டு. இதற்கென நில ஆவணத்துறையில் இதற்கென தனி பதிவுகளே உள்ளன. மானியம் என்றால் இலவசம் என அர்த்தம் வரும். இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களே தற்போது அரசு ரயத்துவாரி என்றுக் குறிப்பிட்டு வரி வசூலிக்கின்றது. ரயத்துவாரி என்பது வரி வசூல் நிலங்களைக் குறிப்பது ஆகும்.

1953ல் இனாம் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு பெரும்பான்மையான நிலங்கள் ரயத்துவாரிகளாக மாற்றப்பட்டன. அவைகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. ஒரு சில நிலங்கள் ரயத்துவாரிகளாக்கப்பட்டு வரி பெறாமல் பொது மக்களின் உபயோகத்துக்காக, நன்மைக்காக, ஆன்மீகத்துக்காக விடப்பட்டன. அப்படி ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டதற்கு முன்பு என்னென்ன மானிய நிலங்கள் இருந்தன என்பது பற்றிப் பார்க்கலாம்.

ஒரு வெகு சுவாரசியான தகவல் ஒன்றினைப் பகிரலாம் என நினைக்கிறேன். இன்றைக்கு அக்ரஹாரம் என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது மானிய நிலத்தைக் குறிக்கும் சொல். பிராமணர்களுக்கு மன்னர்களால் கொடுக்கப்பட்டதுதான் அக்ரஹாரம். இந்த நிலத்திற்கு வரி வசூலிக்கப்படவில்லை. வேதம் சொல்லித் தரவும், வேதங்களைப் பரப்பவும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் இருக்கும் பகுதிதான் அக்ரஹாரம். பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை பார்க்கும் போது, பிராமணர்களுக்கு ஏன் மானிய நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அது பற்றி இப்போது பேசத் தேவையில்லை.

ராணுவ வீரர், படைத்தளபதி, ஆசை நாயகிகள், தேவதாசி, கலைஞர்கள், நாட்டை ஆண்ட அரசர்களுக்கு, நொடித்துப் போன அரசர்களுக்கு, நாவிதர், தச்சர், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி ஆகியோருக்கு மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கோவில், ஆதீனங்கள், மடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவற்றுக்கும் மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. மேற்படி மானிய நிலங்களை வகைப்படுத்தி இருந்தார்கள். தர்மதாயம், தேவ நாயம், பந்த் விருத்தி, ஸ்தோத்திரியம், ஜாகிர், தேஸ்முக்/தேஸ்பாண்டே, அமாம், நோபந்தம் என்ற பெயர்களில் மானிய நிலங்கள் வழங்கப்பட்டு, வரி இல்லாமல் மானியம் பெற்றவர்கள் பயனடைந்து வந்தார்கள்.

அக்ரஹாரத்தில் கூட சர்வ, பிலுமுக்த, ஜோடி என உட் பிரிவு மானிய நிலங்கள் இருந்தன. இந்த பிரிவுகளுக்கு தக்கவாறு வரி இல்லாமலும், ஒரு முறை வரி செலுத்துவதாகவும், குறைந்த வரி செலுத்துவதாகவும் நிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. கைரதி மானிய நிலங்கள் முஸ்லிம் உலமாக்களுக்கு வழங்கப்பட்டன என ஆவணங்கள் சொல்கின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக பந்த் விருத்தி மானிய நிலங்கள் தான் இருந்தன. இந்த நிலங்கள் தான் இப்போது இருக்கும் நிலங்கள்.

மேற்கண்ட எல்லா வகையான மானிய நிலங்களையும் 1953க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் அரசு ரயத்துவாரி என வரி விதிக்கும் நிலங்களாக மாற்றியது. அதன் பிறகு வரி இருந்தாலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு கொடுத்தது. இன்றைக்கு இருக்கும் நிலங்களின் முன் வரலாறு இதுதான்.

தற்போது அரசாங்கம் தேவதாயம், தர்மாதாயம், தசபந்தம், பிரம்ம தேயம், காவல் ஊழியம், கிராம ஊழியம், கைவினைஞர் இனாம் என்பதாகப் பிரித்து நில ஆவணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான பல்வேற் விஷயங்களை இப்பதிவில் எழுத இயலாது. நீண்டு விடும். அவ்வப்போது எழுதுகிறேன். தொடர்ந்து பிளாக்கினைப் படித்து வாருங்கள்.

பூமி ஒன்றுதான் அதற்குப் பெயர்கள் தான் வேறு வேறு. அரச காலங்கள் தொட்டு, ஜன நாயகம் காலம் வரை நிலம் தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. அதன் பெயர்களும், தன்மைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடு அடைகின்றன.

மேலும் ஒரு குறிப்பு :

நீங்கள் வரிக் கட்டும் போது பசலி ஆண்டு என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? அக்பர் காலத்தில் நிலவரி வசூலைப் பிரிக்க பசலி ஆண்டு என ஒரு கணக்கினை உருவாக்கினார்கள். ஷாஜகான் காலத்தில் தென்னிந்தியாவிற்கும் பசலி ஆண்டு வந்து சேர்ந்தது.  அப்போது ஆடி மாதம் 1ம் தேதி பசலி ஆண்டு தொடங்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்தில் ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30 தேதி வரை என வரையறுக்கப்பட்டு இது காலம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

Monday, March 4, 2019

நரலீலைகள் - சிவராத்திரி - (2)

அனைவருக்கும் வணக்கம். அடியேன் நரலீலைகள் நாவலின் ஆசிரியன். இன்றைக்கு சிவராத்திரியாம். மஹா சிவராத்திரியாம். எனக்கு அதன் அர்த்தமெல்லாம் தெரியாது.

சின்ன வயதில் அம்மா, “தம்பி, இன்னைக்கு சிவராத்திரிப்பா, ராத்திரி முழுக்க தூங்காம இருந்தா நல்லா படிப்பு வருமாம், உன்னைக் கொண்டு போய் கோயில்ல விட்டுட்டு வர்ரேன். விடிகாலம்மா வந்து கூட்டிட்டு வர்ரேன், போறியா” என்பார்.

”சரிம்மா” என தலையாட்டுவேன்.

பெயிண்ட் அடிக்காத, சிதிலமடைந்த சிவன் கோவில். கிழக்கு வாசலில் பழைய துருப்பிடித்த கம்பிகள் வேய்ந்த மரக்கதவிடுக்கின் வழியே சிவலிங்கனார் இருப்பார். அந்த சிவலிங்கத்தை தாத்தா மாணிக்கதேவர் தான் மன்னார்குடிப் பக்கம் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் ஏற்றிக் கொண்டு  வந்து, பிரதிஸ்டை செய்தார்கள் என்று சொல்வார்கள். வடகிழக்கு மூலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வைத்திருந்த வள்ளலார் புகைப்படம் இருக்கும். அதை ஒட்டினாற் போல தெற்குப் பார்த்தா மாதிரி யாரோ ஒரு பெண் சாமி இருக்கும். எனக்கு நினைவில் இல்லை. சிவபெருமான் சன்னதிக்கு எதிரில் பாழடைந்த ஒரு நந்தி மண்டபம் இருக்கும்.

எல் சேப்பில் இருக்கும் கோவிலில் வாசலை அடைத்தாற் போல பந்தலிட்டு அங்கே ஒரு மேடையிட்டு, அதன் மீது அமர்ந்து மழையூர் சதாசிவம் ஏதேதோ பாடிக் கொண்டிருப்பார். வாண்டுகளும், கொஞ்சம் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். நான் அந்த மண்ணுக்குள் தவழ்ந்து கொண்டிருப்பேன். விடிய விடிய அவரும் விடாமல் பாடிக் கொண்டிருப்பார். நானும் கண் அசராமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வப்போது அங்கே கிடக்கும் கல்லுக்கால்களில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். விடிகாலையில் யாரோ ஒருவர் சுக்கு மல்லிக்காப்பி கொடுப்பார். வாங்கிக் குடித்து விட்டு அங்கேயே சிவபெருமான் சன்னதி முன்னால் உருண்டு கொண்டிருப்பேன். தூக்கம் கண்ணைச் சுழட்டும். நல்லாப் படிப்பு வருமேன்னு தூங்க மாட்டேன்.

விடிகாலையில் அம்மா வந்து வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இவ்வளவுதான் எனக்கு சிவராத்திரி பற்றித் தெரியும். சிவராத்திரிக்கு கண் முழிச்சா நல்லா படிப்பு வரும்னு அம்மா சொன்னாங்கல்ல, அதே மாதிரி நல்லாத்தான் படிச்சேன்.

”ஏய் நீர் யாரப்பா? இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கிறாய்?”

”எம் பேரு மாயன்”

“ஆ..... சிவபெருமானா????”

“அதே, அதே...! கொஞ்சம் கண்ணை மூடி என்னைத் தியானி!”

“அப்படியே செய்கிறேன் சிவபெருமானே!”

* * * * *



லூசுப்பய. இவென்லாம் நாவல் எழுத வந்துட்டான் பாருங்க. வாசகர்களே! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே. மீண்டும் நானே உங்களுடன்.

”தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த ஆசிரியன் சிவராத்திரி அன்னைக்கு கண் விழித்திருந்தால் நன்றாகப் படித்ததாகச் சொல்கிறானே, அமெரிக்காரனும், பிரிட்டிஷ்காரனும், ஐரோப்பியனும் எந்த சிவபெருமான் கோவிலில் உட்கார்ந்திருந்தார்கள் என்று சொல்கின்றானா? பாருங்கள்?”

”அடேய்! அடேய்!! நீ யாரடா இடையில்? நில்லு நில்லு !!!!”

”அண்ணா, அடியேன் பேரு சந்துசிந்து. இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம். இந்த நாவலாசிரியன் எப்போது என்னைப் பற்றி எழுத ஆரம்பிப்பானோ தெரியாது. ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரம். ஆத்திரம். அதான் வந்துட்டேன்”

”வாப்பா, வா! நாவலின் முதல் பாத்திரம். என்னைப்போல ஒருவனா நீ!  ஆசிரியன் சொல் கேட்காத ஒரு கதாபாத்திரம். பரவாயில்லை. அதென்ன பேரு சந்துசிந்து?”

”சிரிக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

“சிரிக்க மாட்டேன் சொல்லு, அப்படி என்ன தான் சொல்லப்போறேன்னு பார்க்கிறேன். நான் பார்க்காத கதாபாத்திரங்களா?”

”இங்கே தான் கோயம்புத்தூர்ல ஈஷா ஈஷான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே ஒரு சிவராத்திரிக்கு அம்மாவும், அப்பாவும் போனார்களா? அடுத்த மாதம் நான் அம்மா வயித்துல கர்ப்பமாயிட்டேன்னாம். ஆனா ஏன் சந்துசிந்துன்னு பேர் வச்சாங்கன்னு கேட்டா, அம்மா சிரிக்கிறாங்க. ஒன்னும் புரியல”

“ஏன், உங்கப்பா கிட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அப்பா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லையே”

“என்ன????”

“அவரை நான் பாக்கவே இல்லை?”

என்ன இழவுடா இது? இந்த சந்துசிந்து மொத்தமா குழப்புகின்றானே. பார்த்தால் லூசுப் பய மாதிரி இருக்கான். இவனிடம் என்ன கேட்டு என்ன புரியப்போகிறது?

என் முகத்தைப் பார்த்த சந்துசிந்து,”எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”ன்னான்.

அவனே தொடர்ந்தான், “சநி”

மயக்கமே வந்தது எனக்கு...!

* * * * *

வெள்ளைக்காரனாவும் தெரியலை, நம்ம ஊர்க்காரனாவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கின்றானே யாராக இருப்பான் இவன்? இருக்கட்டும். என் பேரைக் கேட்டதும் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டான். அவன் போகட்டும். நான் வந்த விஷயத்தை சொன்னாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இந்த நன்னாளில்.

சவுக்கு சங்கர் அண்ணே, இருக்காப்லே அல்லவா? அவரு ஒரு படத்தைப் பேஸ் புக்குல போட்டிருக்காரு. அந்தப் படத்தை உத்துப் பார்த்தால் சிவன் சக்தி மேலே ஏத்தி மன்னிக்கவும், அருள் புரிந்த மகத்துவத்தைப் பார்க்கலாம். அந்தப் படம் கீழே. நான் ஏன் இதை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் புரியாதவர்கள் நரலீலைகள் நாவலைத் தொடர்ந்து படிக்காதீர்கள். உடனே விலகி விடுங்கள்.

* * * * *

அன்பு நண்பர்களே! நரலீலைகள் நாவலின் கதாபாத்திரங்கள் என்னைக் கேட்காமலே உருப் பெற்று உங்களுடன் உரையாடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள், நான் அறிமுகப்படுத்தும் முன்பே, உங்களுடன் பேசுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என எனக்கு இன்னும் புரியவில்லை. நான் எழுத நினைத்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அது அதுபாட்டுக்கு வருவதால் ஒழுங்கின்றி நாவல் கலைந்து போகும் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நாவல் ஒரு சிலர் சைவத்துடன் அசைவ உணவையும் உண்பார்களே அதைப் போல வரும் என நம்புகிறேன். என் கதாபாத்திரங்களை கட்டி ஆள, சிவனை நோக்கி தியானம் செய்யப் போகிறேன். மனம் ஒழுங்கானால் எல்லாம் ஒழுங்காகும் அல்லவா?

”மாயனே! எனக்கு அருள்வாய்! என் நாவலின் கதாபாத்திரங்கள் என் சொல் கேட்கட்டும்..

மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர்: இறைவன் 
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே - திருமூலர்

மாயனின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலிக்கிறது. அது உங்களுக்கும் கேட்கிறதா?

* * * * *
(04-03-2019)



Friday, February 15, 2019

34வது குருபூஜை விழா அழைப்பிதழ்

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ ஐக்கிய 34ம் ஆண்டு குரு பூஜை விழா இனிதே வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்பிதழ் யூடியூப்பில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இடம், நாள், தொடர்பு மற்றும் ஆசிரமத்தின் புகைப்படங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டு குருவருள் பெற்று சிறந்திட அன்புடன் அழைக்கிறேன்.



Monday, December 10, 2018

இந்தியா பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கிறதா?

சுப்ரமணியம் சாமியின் ஒவ்வொரு ட்வீட்டுகளையும் உன்னிப்பாக கவனிப்பேன். அவரின் ட்வீட்கள் யாருக்கோ செய்தியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கும். அந்த செய்தியின் தாக்கம் இரண்டொரு நாளில் வேறு எங்காவது வெளிவரும். அந்த முறையில் தமிழ் ஹிந்து திசையில் வெளிவந்த ஒரு கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது. அந்தக் கட்டுரை பலராலும் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் கூட பகிரப்படவில்லை என நினைக்கிறேன். ஆகவே அந்தக் கட்டுரை கீழே!


பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளும், டிவிகளில் வரும் விவாதங்களும் மக்களை திசை திருப்பவும், உண்மையை எவரும் உணர்ந்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான் வெளியிடப்படுகின்றன. இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் என எதிர் துருவ பத்திரிக்கைகள் இருந்தாலும் ஐந்து, பத்துக்காசு ஊழல்களைப் பற்றித்தான் அப்பத்திரிக்கைகள் எழுதும். டிவிக்களில் சமீபத்தில் தந்தி டிவியும், நியூஸ் செவன் டிவியும் ஆளும்கட்சியிடம் அடிபணிந்த விஷயம் நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. ஆகவே டிவி, செய்தி தாள்களின் செய்திகளின் உண்மைத் தன்மை 100 சதவீதம் நம்பிக்கையானதல்ல. அவசர செய்திகள், ஆலோசனைகள், அறிவுப்பகளை மட்டுமே நம்புங்கள். பிற அரசியல், பொருளாதார செய்திகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைகள்.

இனி அந்தக் கட்டுரை:


இந்தியப் பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கிப்போவது உண்மைதானா? ஆமாம். அதே சமயம், நொறுங்கிப்போகும் அளவுக்கு இல்லை, மீட்கும் நிலையில்தான் பொருளாதாரம் இருக்கிறது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைச் சில உண்மைகளிலிருந்து அறிவோம்.

1. இரு நிதியாண்டுகளாக, அட்டவணைக் குறியீட்டெண்ணுடனான ஜிடிபி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துவருகிறது.

2. இந்தியாவின் தேசிய முதலீட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் குடும்ப சேமிப்பு 34% என்பதிலிருந்து 2017-ல் 24% ஆகச் சரிந்துவிட்டது. குடும்பங்கள் அல்லாத நிறுவனங்களின் சேமிப்பு ஜிடிபியில் 5% மட்டுமே. அரசின் தேவையில்லாத குறுக்கீடுகளாலும் வரிவிதிப்பு நடவடிக்கையாலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ‘பொதுச் சரக்கு சேவை வரி’ (ஜிஎஸ்டி) நடைமுறை என்பது பெரும் தோல்வி. நான் எவ்வளவோ தடுத்தும்கூட நாடாளுமன்றத்தில் பெரிய விழா நடத்தி இதை அமல்படுத்தினார்கள்.

3. அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவு விரைவாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டது. வங்கிகள் புதிதாகக் கொடுக்கும் கடன் அளவைவிட வாராக்கடன் வளர்ச்சி வீதம் அதிகரித்தது. அரசுத் துறை வங்கிகள் நிதி வழங்கலை மேற்கொள்ள முடியாமல் நொறுங்கக்கூடிய அளவுக்கு வாராக்கடன் சுமை இருக்கிறது. இது 2019-ல் எல்லாத் துறைகளிலும் பிரதிபலிக்கும்.

4. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி அதிகம் தேவைப்பட்ட நேரத்தில் மிக முரட்டுத்தனமாக நிதி ஒதுக்கலை நிதியமைச்சகம் வெட்டிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ கொள்கை வெற்றிபெற அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு மட்டும் சுமார் ரூ. 72 லட்சம் கோடி தேவை. ஆனால், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் ‘உண்மை மதிப்பு’ 2014-க்கு முன்பு இருந்ததைவிடக் குறைவு.

5. உற்பத்தித் துறையில் அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் வளர்ச்சி 2% முதல் 5% அளவுக்கே இருக்கிறது. இத்துறைதான் தொழில் பயிற்சியே இல்லாத அல்லது ஓரளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

6. இந்திய வேளாண் விளைபொருட்கள்தான் உலகிலேயே மிகவும் மலிவு. உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலும் விளைச்சலை அதிகபட்சத்துக்கு உயர்த்த முடியவில்லை. வேளாண் விளைச்சலை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதியையும் அதே சமயத்தில் அதிகப்படுத்துவது அவசியம். அதிக பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேளாண் துறை தனது ஆற்றலுக்கும் குறைவாகவே உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டையும் அளிக்கிறது.

7. 2014 முதல் தொடர்ந்து நான்கு ஆண்டு களுக்குக் கச்சா பெட்ரோலியத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வெகுவாகக் குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 2018 நடுப்பகுதி வரை நிலையாகவே, ஒரு டாலருக்கு ரூ.65 என்று இருந்தது. இவ்வளவு சாதகமான நிலைமை இருந்தும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே 2014-17 காலத்தில் குறைந்தது.

எவையெல்லாம் அச்சுறுத்தல்

2018-ல் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ஆக இருக்கிறது. கச்சா பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 60 டாலர்களாக உள்ளது. இது நம்முடைய அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அச்சுறுத்தலாகியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடிய இந்தத் தருணத்தில் நேர்மையாக நாம் நமது பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கொள்கைகளை மாற்றிக்கொண்டு உச்சம் தொட வேண்டும். கட்டமைப்புகளில் மாற்றம் செய்து ஆண்டுக்கு 10% வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும்.

அதற்கு முதலாவதாக, காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சித்தாந்தரீதியாக மாற்று திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர்களுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஊக்குவிப்பு தர வேண்டும். வருமான வரியை முழுதாக ரத்துசெய்வதன் மூலம் ஊக்குவிக்கலாம். கடுமையான வரிகள், தீர்வைகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.

உலக அளவில் போட்டியிடக்கூடியதாக நம்முடைய பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் நாம் கையாள வேண்டும். அதற்கு அரசியல்ரீதியாகவும் நாம் காய்களை நகர்த்த வேண்டும்.

தனிநபர்களும் குடும்பங்களும் தங்களுடைய வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. பழையபடி உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். அரசின் முன்னுரிமையாக இருக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கப் புதிதாகச் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உடனடி அவசிய நடவடிக்கைகள்

1. சேமிப்புக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அளவுக்கு வட்டி வீதம் உயர்த்தப்பட வேண்டும், சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தக் கூடாது, சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

2. வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி 9% ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

3. 2019 நிதியாண்டு முழுக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 தான் என்று அரசே நிர்ணயிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் தேவைக்கேற்ப மாறுதல்களைச் செய்துகொள்ளலாம்.

1965-ல் கடுமையான உணவுதானிய பற்றாக் குறையிலிருந்து ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மாறியிருக்கிறோம். 1990-91-ல் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு ‘உயர்வேகப் பொருளாதார நாடாக’ மாறியிருக்கிறோம். நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாற்றை வினய் சீதாபதி எழுதியிருக்கிறார். ‘சோவியத் சோஷலிச பாணி ஜிடிபியாக (1950-1990) ஆண்டுக்கு 3.5% ஆக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, என்னுடைய பொருளாதார திட்டங்களைப் பயன்படுத்தி 8.5% அளவுக்கு உயர்த்தியுள்ளார் ராவ்’ என்று அதில் எழுதியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 71 ஆண்டுகளில் மிக நெருக்கடியான பொருளாதார நிலையிலிருந்து எளிதாக மீண்டுவந்திருக்கிறது. அந்தப் பழைய வரலாறே நமக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

- சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர், பொருளியல் பேராசிரியர், மத்திய வர்த்தகத் துறை முன்னாள் அமைச்சர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

 நன்றி : தமிழ் இந்து திசை

https://tamil.thehindu.com/opinion/columns/article25603583.ece