குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, December 18, 2017

பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலுமா?

அதிசயம் என்று நினைக்கவோ, நீங்கள் ஆச்சரியப்படவோ இதை எழுதவில்லை. இப்படி நாமும் இருக்கலாம் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.  பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பலில் “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்று புலம்பி இருப்பார். அதென்ன தூங்காமல் தூங்கி சுகம் காண்பது என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருப்பேன். 

உடலுக்குத் தூக்கம் அவசியம் என்பார்கள். அதை விட மெய்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்து தூங்காமல் தூங்குவதற்கும் பயிற்சியும், முறையான வழியும் உண்டு என்கிறார்கள் சித்தர்கள். இதையெல்லாம் பாடல்களாய் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சாட்சி? உண்மையா என்று உணர்வதற்கு ஏதேனும் நிகழ்கால நடப்புகள் இருக்கின்றனவா என்று தெளியாத மனசு கேள்வி கேட்கும். அப்படித்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு யோகியின் கதை என்கிற புத்தகத்தில் யோகேஸ்வரானந்தரின் அனுபவங்களைப் படித்த பிறகு கொஞ்சம் தெளிவு பிறந்தது. என் அறிவு உணர்ந்து கொள்ளாத, அல்லது அறிந்திடாத விஷயங்களை நான் இனி மறுப்பது கூடாது என்ற கொள்கைக்கு வந்தேன். அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்று இனி ஆராயத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். மானிடர்கள் தனக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக உடனடியாக மறுதலித்து கிண்டல் செய்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அது அவர்களின் அறியாமை. அது அவர்களின் பிரச்சினை. தாம் அறிந்து கொண்டிருப்பது பிறரின் கூற்று என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறிவிலிகள். நாம் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை ஒவ்வொன்றும் பிறரால் நமக்கு வழிகாட்டப்பட்டவை அல்லவா? இதில் நம் புத்தி எங்கே போனது? அது இருந்தாலல்லவா நாமெல்லாம் உண்மையான மனிதர்களாக இருப்போம். நாம் பிறரின் பதிப்பு அவ்வளவே. நம் சிந்தனை கூட பிறரால் வழி காட்டப்பட்ட வழியில் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. தனக்கான சிந்தனை என்று எவரும் சிந்திப்பது இல்லை.நேற்று காலையில் எனக்கு நிரம்பவும் பிடித்த தம்பதிகளுடன் உரையாடிட காலம் கிடைத்தது. இருவரும் ஆன்மீக வழி நின்று சேவைகள் செய்து வருபவர்கள். அந்தத் தம்பதியினரைச் சந்தித்த போது, அப்பெண்மணியின் முகம் தேஜஸ்சில் ஜொலித்தது. அப்படி ஒரு தெளிவு. இதுவரை நான் அந்த முகப் பொலிவை எந்தப் பெண்ணிடமும் பார்த்தது இல்லை. அல்ல, அல்ல பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவரின் கணவர் என்னிடம் வருத்தப்பட்டார், ”இவர் தூங்கி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது” என்று.  அது சாத்தியமா? என்று எனக்குப் புரியவில்லை. அடியேனோ எட்டரை மணிக்கு மேல் தலையாட்டிட ஆரம்பித்து விடுவேன். விடிகாலை நான்குக்கு மேல் படுக்கை முள்ளாகி விடும். விடிகாலையில் துயில் எழுவதும், சீக்கிரமே தூங்கச் செல்வதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த முகத்தில் ஒரு சிறு கரு வளையமோ அல்லது அயர்ச்சியோ அல்லது சோர்வோ இல்லை. துடைத்து வைத்தக் குத்து விளக்காக இருந்தார் அவர். அதெப்படி பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலும்? என்றொரு கேள்வி எழ, அவர்களை அழைத்துக் கொண்டு குருநாதரைத் தேடிப் புறப்பட்டோம்.

ஆழ்ந்த தெய்வபக்தி கொண்ட தம்பதிகளின் சரியான நேரச் சேர்க்கையினால் பூமிக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி என்று விரித்துரைத்தார் ஜோதி சாமி என்னிடம் தனியாக.

காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில் விழுவது போன்று இல்லறத்தில் ஈடுபடுவதினால் தான் வாரிசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போய் விடுகின்றன ஆண்டவனே என்றார். அவர் தூங்க வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறு அவர் தூங்க ஆரம்பித்தால் பின்னர் எழவே மாட்டார் என்று அவரின் கணவரிடம் சொன்னார். ஆகவே வருத்தமோ அல்லது கோபமோ பட வேண்டாம் என்று கனிவுடன் அறிவுறுத்தினார். இருவருக்கும் நிரம்பவும் மகிழ்ச்சி. பத்து வருடங்களாக மனதுக்குள் பாரத்தோடு இருந்தவர்களுக்கு அது ஒரு நோய் அல்ல என்பது புரிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 

அலோபதி மருத்துவர்கள் இதற்கு பல பெயர்களைச் சூட்டுவார்கள். ஒரு யோகியின் கதை புத்தகத்தில் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தவரின் புகைப்படம் இருக்கிறது. அது சாத்தியமா என்று அறிவியலால் நிரூபிக்க முடியாது.

தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபடவும் நேரம் காலங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் பின்பற்றுவதில்லை என்று சொன்னார் சாமி. உடனே ஜோசியக்காரர்களிடம் சென்று முதலிரவுக்கு நேரம் குறித்தால் போதுமா என்று உங்கள் மனசு கேட்க ஆரம்பிக்கும். அந்த நேரம் அல்ல இது. சாமி என்னிடம் கூறியது வேறு. இனி அது எனக்குப் பயன்படாது என்பதாலும் குழந்தைகளுக்கு ஆதர்ஷ மனிதனாய் இருக்க வேண்டும் என்கிறதாலும் அதிகம் கேட்கவில்லை.

போன வாரம் என்று நினைக்கிறேன். சாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ”700 வருடங்களுக்கும் மேல் வாழ வழி இருக்கிறது ஆண்டவனே” என்றார்.  அதற்குரிய எளிய வழி முறைகளையும் என்னிடம் எடுத்துரைத்தார். எனக்கு அதுவும் தேவைப்படாது. இந்த உடலை வைத்துக் கொண்டு 1000 வருடங்கள் வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறோம், போதுமடா சாமி, என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றைக்கு மகிழ்வாய் உடலை உகுத்திட வேண்டுமென்று எண்ணமுள்ளதால் (உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் அல்லவா?) அவர் சொன்ன எளிய வழிமுறையை இங்கு எழுதிடவில்லை.

ஒரு ஹிட்லர் 60 வருடம் வாழ்ந்ததிற்கே இத்தனை கொலைகள் செய்தார். இன்னும் 1000 வருடங்கள் வாழ்ந்தால் என்ன ஆகும்? என்று நினைத்தாலே நடுக்கமெடுக்கிறது. ஆகவே கலிகாலத்தில் விதிக்கப்பட்டது எதுவோ அது  அப்படியே நடக்கட்டும்.

வாழ்க வளமுடன் !

Saturday, December 16, 2017

மக்களை முட்டாளாக்கும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்

பல்வேறு செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வருபவை செய்திதாள்களும், டிவி மற்றும் இணையதளங்கள். ஆனால் இவைகளில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன? என்பது பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு மீடியாவும் தங்களுக்கு ஏற்றவாறு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்று பேசுவோம். ஆனால் அதை மறந்து விட்டு, அந்தச் செய்திகள் உண்மை என நினைத்து விடுகிறோம். இந்த இடத்தில் தான் நாம் நம்பிக்கை என்று மன ஏற்பால் ஏமாற்றப்படுகிறோம்.

ஆடு தன் முன்னாள் செல்லும் ஆட்டின் வாலைப் பார்த்துக் கொண்டே செல்லும் என்பார்கள். அதே போல தினசரிகளில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டு இன்றைக்கும் டீக்கடைகளிலும், பலர் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு, கமெண்ட், லைக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு டீக்கடை, இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர். ஆனால் ஏமாறுவது நாம் என்று அறியாமலே ஏமாந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் என்றைக்கு கட்சி சார்பானதாக மாறியதோ அன்றைக்கே மீடியா தன் தர்மத்தை இழந்து விட்டது. பேனாவின் நிப் உடைந்து போய் அரசியல் சாக்கடையில் விழுந்து விட்டது. பத்திரிக்கைகளில் பேனா நிப்பினைப் போட்டு நான்காவது தூண் என்றெல்லாம் எழுதுவார்கள். அதை உண்மை என்று நம்பி பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்கள் எதார்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு, பிழைக்கும் வழிக்கு மாறி விட்டார்கள். பிழைக்கும் வழி - “உண்மையை சார்ந்திருப்பதுக்கு ஏற்ப பேசுவது இல்லை மறைப்பது” 

உங்களுக்கு சாட்சிகள் இல்லையென்றால் நம்பமாட்டீர்களென்பதால் சாட்சியுடன் வந்திருக்கிறேன். இனி பேப்பர் படித்து அந்தச் செய்தி உண்மை என்று நம்புவதை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன். 

தினமலரில் இன்றைக்கும் 16/12/2017 அன்று வந்த செய்தியின் படம் கீழே
.

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி தினகரனில் வெளிவந்த செய்தி கீழே. உடனே அது பிஜேபி பத்திரிக்கை, இது திமுக பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடாதீர்கள். செய்தி ஒன்று. ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முயலுங்கள். மீடியாக்காரர்களை நாம் என்னவென்று அழைக்கலாமென்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.



அதுமட்டுமின்றி தினத்தந்தியின் செய்தியின் இணைப்பு கீழே இருக்கிறது. அதையும் படித்து விடுங்கள்.

சொல்ல வந்தது அவ்வளவுதான். 

மார்கழி பிறந்து விட்டது. கோவையில் குளிர் அதிகம் வாட்டுகிறது. விடிகாலை கோலம், சாணி, கோவில் குளங்களுக்குச் சென்று வருவது எல்லாம் கிராமப் புறங்களில் நடக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆன்மீகம் நல் வழிப்படுத்தும் பாதை. ஆனால் கடவுள் தான் இன்றைக்கும் இந்த பூமிபந்தின் மிக உயர்ந்த வியாபாரப் பொருளாக மாறிப் போனார் என்பது வருத்தம் அளிக்கிறது.


Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன். 

Saturday, December 9, 2017

வங்கி டெபாசிட்டும் இனி அம்புட்டுதானா?

பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனதும் இந்தியா வல்லரசாகி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். கண்ணை மூடினால் வெண் தாடி மோடிஜி மாவீரன் சிவாஜி போல தோற்றமளித்தார். ஓட்டைக் குத்தி விட்டு வந்தேன்.

எனக்கு இருக்கும் அரைகுறை பொருளாதார அறிவில், மோடிஜியின் செல்லா நோட்டு அறிவிப்பு கண்டு குஷியானேன். ஆஹா என்னே ஒரு திட்டம் என்று புளகாங்கிதம் அடைந்தேன். வயித்துப் பாட்டுக்கே தகிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்கையில் பிளாக்கில் ஏது பணம்? தேர்தல் நேரங்களில் பஸ்களிலும், கண்டெய்னர்களிலும் கட்டுக்கட்டாக கரன்சிக்களை, டிவிக்களில் பார்ப்பதோடு சரி. தமிழகத்தை நல்ல மாநிலமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் எனது ஆஸ்தான நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களில் கட்டுக் கட்டாகப் பார்த்ததுண்டு. ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு கோடிகளைக் குவிக்க ரஜினியின் டிரைவராக இருந்திருக்க வேண்டும். ம்... அதையெல்லாம் யோசித்து என்ன செய்ய? அதிர்ஷடம் வேண்டும். அதுவும் எப்படித் தெரியுமா?

நம்ம யோக்கியனுக்கு எல்லாம் யோக்கியராகப் படம் எடுக்கும் சங்கரின் படத்தில், கிட்ட நின்னு பார்க்கக் கூட முடியாத இலியானா அழகியின் மெத் மெத் சமாச்சாரம் இடிக்க, ஸ்கூட்டரில் பயணிக்கும் கும்பகோணத்து சுப்ரமணியம் ஹோட்டலுக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம் போல நமக்கும் அடித்தால் மூட்டை மூட்டியாக கரன்சிக்கள் கிடைக்கும். உடனே சங்கர் படத்தில் கும்பகோணத்து அய்யர் எப்படி நடித்தார் என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நம்ம இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் சென்று அதெப்படி நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரானீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். (இந்த அரசியல் எல்லாம் தெரிந்தால் நீ பிளாக் எழுத வருவாயா என்று திட்டுகிறவர்களுக்கு ஒரு சல்யூட். நிச்சயமாக இந்த அரசியல் தெரிந்தால் நானல்லவா இந்தியாவின் பிரதமராக இருந்திருப்பேன்?)


காசு பணம் சேர வேண்டுமெனில் அவரவருக்கு நேரம் வர வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதைய தமிழக அரசில் எம்.எல்.ஏவாக இருப்போரும் எம்.பியாக இருப்போரும் லக்கால் சூழப்பட்டவர்கள். கொட்டிக்கொண்டிருக்கிறது மழை. என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கின்றார்கள். அந்தளவுக்கு மழை கொட்டோ கொட்டுன்று கொட்டிக் கொண்டிருக்கிறது. (அமலாக்கத்துறையினரும், அய்ட்டிக்காரர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள். நான் உண்மையிலேயே மழையைத்தான் சொல்கிறேன் அரிச்சந்திரன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே. தவறாகப் புரிந்துகொண்டு விடாதீர்கள் ப்ளீச்....!(ஷ்க்குப் பதில் ச் தான் இங்கு சரியாக வரும்)

என்ன சொல்கிறேன் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் நீங்களெல்லாம் ஆஃபிரிக்காவுக்குச் சென்று விடுங்கள். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை. அப்பிராணிகள் ஆஃப்ரிக்காவில் தானே இருக்க வேண்டும். என்ன நான் சொல்வது?

இன்று கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். பகலிலேயே கனவு வருகிறது. கனவில் அலறி அடித்துக் கொண்டு எழும்புகிறேன். பகல் கனவு பலிக்காது என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். அப்படியா? உங்களுக்குத் தெரியுமா?

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன். வழக்கம் போல தினமலரில் இந்தச் செய்தி வரவில்லை. தினகரனில் படித்தேன். படித்தவுடன் பக் என்று ஆகி விட்டது. நீங்களும் படியுங்கள். இந்தியா நிச்சயம் வல்லரசாகி விடுமென்று நான் அடித்துச் சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்??? அதுமட்டுமா அரோகரா அரோகராவும் இனி போட வேண்டிய சூழல் வந்து விடும். ஆகையால் பழனி முருகனை வழி பட்டு வாருங்கள். ஒரே ஒரு கோவணத் துணி கூடவா நம்ம இந்தியாவில் கிடைக்காமல் போய்விடும்? நிச்சயம் கிடைக்கும் கோவணம். கோவணம் இருந்தும் என்ன பயன் என்று புலம்பும் பெண்மணிகளுக்கு “அம்மா, தாய்மார்களே! ஏதோ பிழைச்சுப் போகிறேன்” என்று பெரிய மனது பண்ணி விட்டு விடுங்களேன். ப்ளீஸ்...!

செய்தி கீழே. நன்றி தினகரன்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வங்கிகள் திவாலானால், அதனை மீட்டெடுக்க வாடிக்கையாளர்கள் போட்ட பணத்தை பயன்படுத்திக்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது எனவும், இந்த விதியை நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. சிறுசேமிப்பு என்பது சிறுவயது முதல் பெரியவர்கள் கற்றுத்தரும் அனுபவ பாடம். பணத்தை பாதுகாப்பாக போட்டு வைப்பதற்காகவே வங்கிகளில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்கள் ஏராளம். சேர்க்கப்பட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்ற நிம்மதி வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் இந்த அடிப்படை அம்சத்தையே ஆட்டிவைக்கும் நிலையில், புதிய நிதி மசோதா பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் 14ம் தேதி, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ‘நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு - 2017 மசோதா’ என்ற ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.   இதில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகள் திவால் ஆகிவிட்டால், அதில் வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள டெபாசிட் பணத்தை வங்கிகள் எடுத்துக்கொண்டு திவால் பிரச்னைக்கு தீர்வுகாண பயன்படுத்திக்கொள்ளும் என்ற ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, ஜூன் 14 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - 2017 மசோதா’வுக்கு (எப்ஆர்டிஐ மசோதா) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் 10 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது அறிக்கையை, வரும் 15ம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையை சேர்ந்த ஷில்பா  என்ற பெண் சேஞ்ச்.ஓஆர்ஜி இணையதளம் மூலம் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ‘நிர்வாக குறைபாட்டால் திவாலான வங்கிகளை மீட்க, அதில் டெபாசிட் செய்துள்ள அப்பாவி மக்களின் பணத்தை பயன்படுத்தாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கைெயழுத்து இயக்கம் தொடங்கி 24 மணி நேரத்தில் சுமார் 40,000 பேர் கைெயழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இது 74,000ஐ தாண்டிவிட்டது. இதன்பிறகுதான் இந்த மசோதா பற்றிய அச்சம் பலரையும் தொற்றிக்கொண்டு விட்டது.

அதாவது, இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தீர்வுக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும். இதை செயல்படுத்த இயக்குநர் குழு அமைக்கப்படும். இதில் நிதியமைச்சகம், செபி, ரிசர்வ் வங்கி, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகியவற்றில் இருந்து ஒரு நபரும், மத்திய அரசு சார்பில் ஐந்து உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். வங்கி, கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அபாய கட்டணத்தை எட்டியிருப்பதாக கருதப்பட்டால், அந்த நிறுவனத்தை மூடுவதற்கும், வேறொரு நிதி நிறுவனம் அல்லது வங்கியுடன் இணைப்பதற்கும், ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பவும் இந்த கழகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது. அதோடு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சொத்துக்களை விற்று தீர்வுகாணவும் உத்தரவிடலாம். வங்கிகள் திவாலானால், மேற்கண்ட தீர்வுக்கழகம் ஒரு குறிப்பிட்ட அளவு வரை டெபாசிட் காப்பீடு வழங்கும். ஆனால் எந்த அளவுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படவில்லை. இதை தீர்வுக்கழகம்தான் முடிவு செய்யும். தற்போது வங்கிகள் திவால் ஆனால் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் மூலம் ஒரு லட்சம் கிடைக்கும். ஆனால் இந்த உத்தரவாதம் புதிய மசோதா விதிகளில் உள்ளதா என்பது தௌிவுபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. 

அதோடு, காப்பீடு அளிக்கப்படும் தொகைக்கு மேல் உள்ள டெபாசிட் பணத்தை, திவாலான வங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல், ஐந்து ஆண்டுக்கு இருப்பு வைத்து அதன்பிறகு திருப்ப அளிக்கலாம். ஆனால், அவசரத்துக்கு தேவைப்பட்டால் இதை எடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களில் கூட முறையீடு செய்ய இயலாது. வங்கிகள் பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்கின்றன. இவை திரும்ப வராதபட்சத்தில் வங்கிகள் நிதிநிலை மோசமாகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு வாடிக்கையாளர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்பது எதிர்ப்பு தரப்பின் வாதம். ஆனால், வாடிக்கையாளர் வங்கியில் போட்ட பணத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளில் உள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு இதிலும் உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

* கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 
* மசோதாவில் உள்ள பிரிவு 52ன்படி , வங்கி திவாலானால் டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை கோரும் உரிமையை இழக்கிறார்கள்.
* மசோதாவில் உள்ள இந்த விதியை நீக்கக்கோரி ஆன்லைனில் நடத்திய எதிர்ப்பு பிரசாரத்தில் 74,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
* வராக்கடனால் வங்கி நிதி நிலை மோசமாகும்போது, கடன் வாங்கியவர்கள் அல்லாமல், டெபாசிட்தாரர்கள் பலிகடா ஆவதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 
* ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 12 கடனாளிகளிடம் வசூலிக்க வேண்டிய சுமார் ரூ.2.5 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. இது வராக்கடனில் 25%
* இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தீர்வுக்கழகம் உருவாக்கப்படும். இதை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி, செபி அதிகாரிகள் அடங்கிய இயக்குநர் குழு அமைக்கப்படும்.
* வங்கிகளில் உள்ள மொத்த வராக்கடனில் ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி திரும்ப தராத நிறுவனங்கள் 88% உள்ளன.
* 2016-17 பட்ஜெட் தாக்கலின்போது, நிதிநிறுவனங்கள் திவால் தொடர்பான தீர்வுகளுக்கு சட்ட விதிகள் ஏற்படுத்துவது பற்றி ஜெட்லி குறிப்பிட்டார்.
* இந்த மசோதாவை வரையறுக்க 2016 மார்ச்சில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அஜய் தியாகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

‘பாதுகாப்பு உண்டு’ அரசு விளக்கம் 

நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீட்டு மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், நாடாளுமன்றத்தி–்ல் அறிமுகம் செய்துள்ள எப்ஆர்டிஐ மசோதாவில், வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு உள்ள தற்போதைய பாதுகாப்பு உத்தரவாதம் நீடிக்கிறது. அதைவிட கூடுதல் பாதுகாப்பும், வெளிப்படை தன்மையும் புதிய மசோதாவில் உள்ளன. நிதிச்சேவை நிறுவனங்கள் திவால் ஆவது அசாதாரணமான நிகழ்வு. இதற்கு விரைவான தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற சட்ட விதிகளில் உள்ளது போன்று டெபாசிட் பணத்தை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்படவில்லை. நாடாளுமன்ற குழு பரிசீலனையில்தான் உள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு ஏற்ற மாற்றங்களுடன் இது உருவாக்கப்படும். தற்போது டெபாசிட்களுக்கு உள்ள கிரெடிட் கேரன்டி திட்டம் இதிலும் தொடரும். அச்சம் அடையவேண்டாம் என தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

தற்போதைய விதி என்ன?

வங்கிகள் திவால் ஆகும்போது வாடிக்கையாளருக்கு பணத்தை அளிக்க காப்பீடு அவசியம். அனைத்து கமர்ஷியல் வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் இந்த காப்பீட்டை தர வேண்டும். இந்த காப்பீட்டை ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் (டிஐசிஜிசி) வழங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு வங்கிகள் தங்களின் டெபாசிட் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்துகின்றன. இந்த காப்பீட்டின்படி ஒரு நபர் எவ்வளவு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், திவால் ஆன பிறகு அசல், வட்டி சேர்த்து அதிகபட்சம் ஒரு லட்சம் கிடைக்கும்.




Saturday, November 11, 2017

கடவுளின் கவலை

கமல்ஹாசனுக்குத் திடீரென வீரம் வர, சினிமா ஹீரோ போலவே அரசியலும் இருக்குமென நினைப்பில் அல்லுப்படுத்திக் கொண்டிருக்கிறார். கமல் வந்தாலே எனக்கு பூநூலும் நினைவுக்கு வந்து விடுகிறது. சிறிய வயதுப் பழக்கம். வாழ்ந்தாலும் செத்தாலும் அய்யர் சொல் கேளாமல் ஆகாது எங்களூர் பக்கம். அய்யர் வந்து சொன்னால் தான் எல்லாமுமாக இருந்து வந்த ஊர் எமது பிறந்த ஊர். இன்றைக்கும் என்னால் விடவே முடியவில்லை. குலதெய்வத்திலிருந்து எல்லா தெய்வங்களையும் தரிசிப்பது என்பது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகிப் போனது. அய்யர் வந்து சொன்னால் தான் நல்ல நாள் தெரியும். வீடுகட்ட, கலப்பை ஏர் உழ, விதை விதைக்க இப்படி எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் நாள் குறிப்பார்கள். நாள் குறித்தால் தவறாது வேலை. கோவில் குளங்களுக்குச் செல்வதென்றாலும் அவர்கள் சொன்னால் தான் உண்டு. இந்தப் பழக்கம் இன்றைக்கும் என்னிடமிருந்து விலகி விடமாட்டேன் என்கிறது. பூநூல் போட்டவர் என்றால் சாமி என்ற சொல்லைத்தவிர வேறு சொல் வருவதில்லை.

அதுபோல கோவில் பக்கம் சென்றால் கைகள் தானாகவே உயர்ந்து கொள்கின்றன. நவீன யுகத்து யுவனாகையால், சினிமா ஹீரோயினிக்கள் போல உதடுகளில் கையால் தட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

இந்த நாத்திகர்கள் இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை என்றே புரியவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று எவரும் வாளா இருப்பதில்லை. எதையாவது எழுதி வைத்துப் போய் விடுகின்றார்கள். அப்படியும் இருக்குமோ இப்படியும் இருக்குமோ என மனசைக் கிளறி விட்டு விடுகின்றார்கள். அண்ணாதுரையின் கடவுளின் கவலை பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு குழம்பித்தான் போய் விட்டேன். அதுமட்டுமல்ல எனது குருநாதரின் “அது உங்களின் அறியாமை” என்ற வார்த்தைகளும் என்னைச் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கின்றன. குழம்பினால் தான் தெளிவாகும். நான் குழம்பி விட்டேன். நீங்கள்?????

இதோ அந்தக் கட்டுரை கீழே....!



நன்றி : அறிஞர் அண்ணாத்துரை மற்றும் இதைப் பதிப்பித்தவர்களுக்கும். இந்த நூல் நாட்டுடைமை யாக்கப்பட்டிருப்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. ஆகவே எவருக்கும் உரிமை உண்டு இந்த நூல் மீது. அது மட்டுமின்றி அடியேன் பக்கா ஆத்தீகன். எத்தனை அண்ணாத்துரை வந்தாலும் எனக்கு நெற்றியில் திருநீறு வைக்காமல் பொழுது விடிவதில்லை. அவ்வப்போது தர்ஹாவின் பாங்கு அழைப்பும் கேட்க வேண்டும் எனக்கு.

திருவையாற்றங்கரை நினைவலைகள்

கடந்த வாரம் என நினைவு. இரு கரை தொட்டு பொங்கிப் புரண்டோடும் திருவையாரில் செல்லும் காவிரியின் போட்டோவை தினமலரில் பார்த்தேன்.  நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அதற்கு முன்பு தினமலரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் ராமசுப்பு என்கிற அந்துமணி அடிக்கடி தினமலரில் தென்படுகிறார். தலையில் வெளிர் நீல நிற தொப்பி அணிந்து திமுக மேடையில் அமர்ந்திருந்தார். பிரதமர் தமிழக விசிட்டின் போது பார்வையாளர்களில் பகுதியில் அமர்ந்திருக்கிறார். தினமலர் வாரமலரில் அந்து மணி என்ற கேரக்டர் இவர்தான் என பத்து வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. இப்போது அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தொடர்ந்து தினமலரை வாசித்து வருவதால் அதன் செய்தி வடிவம் நெகடிவ் தன்மையாக மாறி வருவதை என்னால் அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி அரசியல் சார்பும் தெளிவாகத் தெரியும்படி தினமலர் நடந்து கொள்கிறது. பையன் பள்ளியில் நியூஸ் வாசிக்க செய்திகளைக் குறித்துத் தரும்படி கேட்பான். அப்போது எந்தச் செய்தியை எடுத்தாலும் நெகட்டிவ் தலைப்பு வருகிறது. 

குறிப்பாக மன்னார்குடியினரைப் பற்றியும், அதிமுகவினரைப் பற்றியும் சமீபத்திய செய்திகள் தான் முழு பக்கத்தையும் நிரப்புகின்றன. மன்னார்குடிக்கும் தினமலருக்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை. இந்த ஒரு பிரச்சினை பற்றிப் படிக்க செய்தி தாள் வாங்கவில்லை என்று தினமலர் உணர வேண்டும். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக்குவது தினமலருக்கு வேண்டுமெனில் நன்மையாக இருக்கலாம். ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு எரிச்சல் தான் வரும். தினமலர் என்ற மாபெரும் நிறுவனம் தனி மனித செய்திக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

தினமலரின் தலைப்புச் செய்திகள் உட்பட உள் செய்திகளின் தலைப்புகள் நெகட்டிவ் செய்திகளாகவே வருவது தலைமை மாறியதால் வந்த பிரச்சினையா என்று தெரியவில்லை. தினமலர் தலைமைப் பொறுப்பாளர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் அதை புகைப்படத்தில் வெளியிட்டு மகிழ்வதும் தினமலரின் தகுதிக்கு குறைவான செயல் என்றே படுகிறது. தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் தினமலர் என்ற மாபெரும் அமைப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே அந்துமணி அவர்கள் எனது இந்த பதிவை சற்றே கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

எனக்கு பனிரெண்டு வயதாகிய போது தந்தை நாடி மாணிக்க தேவர் காலமானார். அறியாத வயது. கருமாதிக்காக தாய் மாமக்களுடன் திருவையாறு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் பஸ் தான் ஒரே வழி. ஊரிலிருந்து பட்டுக்கோட்டை, பின்னர் தஞ்சாவூர், பிறகு திருவையாறு. இரவில் சென்று ஒரு மடத்தில் தங்கிக் கொண்டோம். சரியான குளிர். எனக்கு மேலே போர்வை போர்த்தவில்லை என்றால் தூக்கமே வராது. பாயில் இரவு முழுவதும் தூக்கம் வராமல் குளிரில் நடுங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தேன். விடிகாலையில் எழும்பியதும் சலூனுக்குச் சென்று முடி மழித்து அய்யருடன் சென்றோம்.

கரை புரண்டோடும் காவிரியாற்றினைக் கண்டு மலைத்துப் போனேன். பனி படர்ந்து குளிர்ந்த அந்த விடிகாலைப் பொழுதில் தண்ணீருக்குள் குளித்து வர வேண்டுமென்று நினைத்தாலே நடுங்கியது. வேறு வழி இன்று படிகளில் இறங்கி குளித்தால் காவிரித்தாய் தன் வெது வெதுப்பான நீரில் உடலைத் தழுவினாள். குளிர் உடம்பை விட்டு ஓடியே போனது. அய்யர் ஏதோதோ செய்யச் சொன்னார். எல்லாம் முடித்து மீண்டும் குளியல் போட்டு பஸ்ஸில் வரும் போது நீண்ட அந்தப் பாலத்தின் வழியாக காவிரியைப் பார்த்தேன். இரு கரை தொட்டு கடல் போல விரிந்து சென்றாள் அவள். கரைகளோரம் வாழைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. எங்கு நோக்கினும் பச்சைப்பசேல் செடிகொடிகள். விவசாயம் என செழித்திருந்தன.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஒரு சினிமா ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அப்பாவின் நினைவு நாள் மறு நாள் வந்தது. அப்போது திருவையாறு சென்றிருந்தேன். அகன்று விரிந்த காவிரியின் நடு மத்தியில் சள்ளைப் பிள்ளை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மனசே ஆறவில்லை. 

சின்ன விஷயம் தான். மனிதனிடம் இருந்த மனிதம் இறந்து போனது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் செத்தார்கள். தண்ணீரை எவரும் கண்டு பிடிக்கவும் இல்லை, அதற்கு உரிமையாளர்களும் இல்லை. ஏன் இந்தப் பூமியில் மனிதன் வந்து செல்லத்தான் இயற்கை அனுமதித்திருக்கிறதே ஒழிய உரிமை கொண்டாட அல்ல. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

எத்தனை தெய்வங்கள் வந்தாலும், எத்தனை நன் நூல்கள் இருந்தாலும், எத்தனை மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்தினாலும் அவன் இதுவரையிலும் சரியானதே இல்லை. சக மனிதனை மனிதனாகக் கூட நினைக்க மாட்டேன் என்கிறான். அவனின் மிருக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகவே மாற்றி விட்டிருக்கின்றன.

தன் பிள்ளை பசியாக இருப்பதை அறிந்த உடன் தன் தட்டில் இருக்கும் உணவைக் கொடுத்து பசியாறச் செய்யும் ஒருவன், அதே பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கொடுக்க மாட்டேன் என்கிறான். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பூண்டியில் கணிணிப் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி விழாவில் திருவையாறு கல்லூரியிலிருந்து வந்த ஒரு பெண் காயத்ரி என நினைவு, ஆசை அதிகம் வச்சு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அன்றிலிருந்து பூண்டி கல்லூரியே காயத்ரியின் மீது மயக்கம் கொண்டது. ஒரு சிலர் திருவையாறுக்கே சென்று அவளைக் கல்லூரியில் தேடினார்கள் என்றுச் சொல்லக் கேட்டேன். பாத்ரூம்களில் காயத்திரியின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதுவும் கொஞ்ச நாள் தான். கல்லூரி காயத்ரியை மறந்து போனது.

ஆனால் என் நினைவுகளில் காவிரி ஆறு இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

Friday, October 27, 2017

பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என. 

ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.

விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)

இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?

சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?

மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.

விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.

ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.

ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.

”சொல்லுங்க சாமி” என்றேன். 

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.

ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை  ப.ராமநாதப் பிள்ளை)

”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். 

“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.

ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம். 

Thursday, October 26, 2017

உள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்

தீபாவளி அன்று இரண்டு மணிக்கு எழுப்பி விட்டார் மனையாள். தூக்கக் கலக்கத்தோடு சென்றால் ஒரு கூடை சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், வெல்லம், சுக்கு, ஏலக்காய் என்னைப் பார்த்துச் சிரித்தன.

”இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் வடை, சுழியம், பாலப்பம் செய்ய வேண்டும், படபடவென வெங்காயத்தை உரித்து நறுக்கி, மிளகாயை மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை வெகு சிறிதாக கட் செய்து விட்டு, அப்படியே சுக்குவை தனியாகவும், ஏலக்காயைத் தனியாகவும் பொடித்து தனித்தனியே வைத்து விடுங்கள். வெல்லத்தை பொடிப்பொடியாக தூள் செய்து வையுங்கள், அப்படியே அந்த ஆறு மூடி தேங்காயைத் துருவி வைத்து விடுங்கள்” என்றுச் சொன்னார். மலைத்துப் போய் விட்டேன். முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. செய்து தான் ஆக வேண்டும். நானே விரும்பி காதலித்து திருமணம் செய்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் சின்னதா ஒரு பிட்டைப் போடுவோமென நினைத்து, ”உடம்பு வலிக்கிறா மாதிரி இருக்கே”ன்னு சொல்வதற்குள் ”சுக்கு மல்லிக்காப்பி அதோ இருக்கிறது, குடித்து விட்டு, லூசுத்தனமா பேசாம வேலையைச் செய்யுங்கள்” என்றார்.

கண்கள் எண்ணைத் தேய்த்துக் குளிக்காமல் குளிக்க சிறிய வெங்காயத்தை உரித்து நறுக்கி, பச்சைமிளகாயை வெகு மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை தோல் உறித்து நறுக்கிக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் வடையின் வாசனை வந்தது. அடுத்து கத்தியால் வெல்லத்தைச் சீவி(புதிய டெக்னிக், காப்பிரைட் என்னிடம் உள்ளது) பருப்புடன் சேர்த்து அதனுடன் சுக்கு  கொஞ்சமும், ஏலக்காய் கொஞ்சமும் சேர்த்து வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்து கொடுத்தேன். சுழியம் அடுத்த அடுப்பில் வெந்தது. பாலப்பத்திற்கு தேவையானவைகளைச் சேர்த்து அம்மணியே பலகாரத்தைச் செய்தார்கள். 

ஒரு வழியாக சமைத்து முடிக்க பசங்க இருவரும் எழுந்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். நல்ல நேரம் பார்த்து நால்வரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு குருவினைத் தரிசிக்க கிளம்பினோம்.

இந்த வருடம் வெடிச்சத்தங்கள் அதிகம் இல்லை. சாலையெங்கும் பரவிக்கிடக்கும் பட்டாசுக் காகிதங்கள் சுத்தமாக இல்லை. ஆங்காங்கே ஊசிப்பட்டாசு வைத்துக் கொண்டு கையில் புகையும் ஊதிபத்தியுடன் சிறுவர்கள் திரிந்தார்கள். எவரின் முகத்திலும் மலர்ச்சி இல்லை. 

வரி என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை மக்களிடமிருந்து பறிக்கிறது அரசு. வருமான வரி போக, ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்க வேண்டியதாகி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருக்கும் பணத்தை கஜானாவுக்குள் கொண்டு சேர்க்கிறது மத்திய மாநில அரசுகள். லூசில் விற்கப்படும் பருப்புகளுக்கு வரி இல்லையாம். பாக்கெட் போட்டால் வரியாம். இந்தக் காலத்தில் எந்தக் கடை லூசில் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. வரி வாங்குங்கள் தப்பே இல்லை. ஆனால் ஊழல் இல்லாமல் செய்ய முடியவில்லையே? கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க மாட்டேன் என்கிறதே அரசு. மிக நல்ல சிகிச்சைக் கிடைக்க வேண்டுமெனில் தனியாரிடம் அல்லவா செல்ல வேண்டி இருக்கிறது. 

முன்பெல்லாம் பில் இல்லாமல் பொருள் வாங்கினோம். அண்ணாச்சிகள் பெரும் பணக்காரனானார்கள். இப்போது பில் போடாத பெட்டிக்கடை அண்ணாச்சிகள் கல்லாவைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களை மத்திய அரசு என்ன செய்து விட முடியும்? வாட்சப்பில் ஒரு மெசேஜ் கிடைத்தது.

2000 ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால் 8 சதவீதம் வட்டி ரூ.200 கிடைக்கும். அதே இரண்டாயிரம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்று நாம் வட்டி கட்டினால் 13 சதவீதம் ரூ.260 கட்ட வேண்டும். ஆனால் அதே இரண்டாயிரம் ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.300 வரியாகக் கட்ட வேண்டும். இதைத்தான் பகல் கொள்ளை என்கிறார்கள்.

ஏற்கனவே வருமானத்துக்கு வரி பிடித்துக் கொள்கின்றார்கள். மிச்சம் இருக்கும் பணத்துக்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி வாங்குகின்றார்கள். இப்படியே தொட்டதுக்கெல்லாம் வரி வாங்கினால் மக்களிடம் பணம் எப்படி மிச்சமாகும்? பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. வேறு வழியே இன்றி பொருட்கள் விலை குறையும் சூழல் உருவாகும். இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யும் அல்லவா?

இந்த அக்கப்போரு என்றைக்கும் முடியப்போவதில்லை. அரசு எனும் பூனைக்கு மக்கள் எனும் எலிகள் என்றைக்கும் மணி கட்டபோவதில்லை. அது முடியவும் முடியாது.

அரசியல் களம் என்பது துரோகமும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும், பொய்யும், சூதும், வாதும் நிரம்பியவை. அக்களம் அப்படித்தான் இருக்கும். உண்மையானதாக மாறவே முடியாது. அரசியல் என்பது அதுதான். ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் அரசியலின் இரு கண்கள். சுய நலம் என்பது அரசியலின் அடி நாதம். அதில் அயோக்கியத்தனம் என்பது தூண்கள். ஆகவே அரசியல் அக்கப்போரு பேசி ஒன்றும் ஆவப்போவதில்லை. பட்டுத்தான் தீர வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் அல்லவா அரசியல்வாதி நல்லவராக இருப்பார்.

நடிகனுக்கு நாட்டைத் தூக்கிக் கொடுக்கும் நமக்கெல்லாம் மானம், ரோசம், நல்லவை, கெட்டவை எதுவும் இருப்பதில்லை என்கிற போது அரசியல் பற்றிப் பேச தகுதியே இல்லை. முட்டாளாக இருப்பதே சுகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பிரயோஜனம்?

ஒரு வழியாக வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ சமாதிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கு இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தீபாவளி அன்றைக்கும் வீட்டிலிருந்து செல்லும் பலகாரங்களைச் சாப்பிடுவதற்காக வருடம் தோறும் வந்து விடுவார்களாம். ஏன் தாமதம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் போல நானும் ஜோதி சாமியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அடியேன் ஓஷோவின் புத்தகங்களை வாசிப்பவன். அடிக்கடி அவரின் பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருக்கும். கடவுள் இல்லவே இல்லை என்கிறார் அவர். ”அது சரிதானா? சாமி” என்றுக் கேட்டேன்.

“ஆமாம், கடவுளே!” என்றார் சாமி.

அதிர்ச்சியாக இருந்தது.

”பின்னே நான் ஒவ்வொரு கோவிலாகச் சென்று வழிபாடு செய்வது என்பதெல்லாம் என்ன?” என்றொரு கேள்வியைக் கேட்க, அவரோ ”அது உங்களின் அறியாமை” என்றார்.

கேட்ட எனக்கு குழப்பமே மிஞ்சியது.

“கோவில்கள் மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் மிருகமாகி விடுவார்கள் ஆண்டவனே!” என்றார் தொடர்ந்து.

“ஒன்றுமே புரியவில்லை சாமி” என்றேன்.

அதற்கு அவர், “உள்ளம் சிவமானால் உடலே கோவிலாகும்” என்றார்.

எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


Monday, October 16, 2017

அமேசான் ஜாக்கிரதை

ரித்திக் மியூசிக் பிளேயர் வேண்டுமென்று கேட்டிருந்தான். பாடலைக் கேட்டவுடன் கீபோர்டில் வாசிக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ஒரு எம்.பி 3 பிளேயரை வாங்கிக் கொடுத்திருந்தேன். அது ரிப்பேர் ஆகி விட்டது. ஆகவே மீண்டும் ஒரு பிளேயர் வேண்டுமென்றான். போன் வாங்கினாலும், எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கினாலும் விலை குறைவானதாகவே வாங்குவேன். ஐபோன் வாங்கி அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஒரு வருடம் முடிவதற்குள் அடுத்த வெர்சன் வந்து விட்டது. நான் வைத்திருந்த ஐபோன் இப்போது குப்பைக் கூடைக்குள் கிடக்கிறது. நிவேதிதா கேம் விளையாடுகிறார் அவ்வப்போது. 

பிளிப்கார்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. முதன் முதலாக அமேஜானில் தேடி ஆர்டர் செய்தேன். பத்து நாட்கள் கழித்து பதினைந்து தடவைக்கும் மேல் போனில் அழைத்து முகவரி கேட்டு ஒரு வழியாக வீடு வந்தார் டெலிவரி ஆள். 450 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை வாங்கினேன். அப்போது சரியாக மழை பிடித்துக் கொண்டது. டெலிவரி ஆட்கள் இருவரும் வீட்டுக்குள் வர, பார்சலைப் பிரித்தால் உள்ளே ஒரு வாட்சும், விசிட்டிங் கார்டு ஹோல்டரும் இருந்தது. அதிர்ந்து விட்டேன். டெலிவரி ஆள் பணம் கொடுக்க முடியாது என்கிறான். கொரியர் அலுவலகத்திலிருந்து போன் செய்து நீங்கள் அமேசானில் கம்ப்ளைண்டு செய்து பணத்தை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாகப் பேசினார்கள். கண் முன்னே பணம் இருக்கிறது, அதைக் கட்டி விட்டு மீண்டும் கிளைம் செய்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். கதை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

விட்ட சவுண்ட் எஃபெக்டில் பணம் கைக்கு வர, பார்சலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டேன்வி. இதோ கீழே போட்டோ இருக்கிறது. ஆகவே அமேஜானோ வேறு என்ன ஆன்லைன் கடையானாலும் சரி காசு கொடுப்பதற்கு முன்பு பிரித்துப் பார்த்து விட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் போன் செய்தே மண்டை காய்ந்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். 


இந்த வருடம் ஆன்லைன் பிசினஸ் வர்த்தகம் 9000 கோடி ரூபாய் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய ஒரு டிவி விவாவதத்தில் எனக்கு நிரம்பவும் பிடித்த விஜயதாரணி எம்.எல்.ஏ (தில்லு எம்.எல்.ஏ) அவர்கள் பொதுமக்களிடம் ரீடெயில் மார்க்கெட்டில் பொருள் வாங்குவது 40 சதவீதம் சரிந்து இருக்கிறது என்கிறார். பிஜேபியின் தலைவர் அமித்ஷாவின் குமாரர் பிரச்சினை பிரதமருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது.

எனது நண்பர் ஒரு நாள் திடீரென போனில் அழைத்து, “வாழ்க்கையில் ஒன்றுமே நிலையில்லைப்பா” என தத்துவம் பேச ஆரம்பித்தார். ஒன்று இவருக்கு ஏதோ பிரச்சினை அல்லது ஏதாவது சம்பவத்தைப் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். இல்லை என்றால் ஆள் இப்படியெல்லாம் பேசமாட்டார்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஒருவரின் மகன் தெருவில் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் காசு கேட்கிறாராம். அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுக்கின்றார்களாம். கஜானா கடைக்கு (டாஸ்மாக்) செல்கிறாராம். ஊட்டியில் படிக்க பங்களா, சென்று வர கார் என வசதியெல்லாம் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர். யாருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ அவரின் இன்றைய நிலையோ பரிதாபகரம்.

பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகி விடும். அமித்ஷா இருக்கும் பதவிக்கு அவரின் பிள்ளையால் வந்த தொல்லையினால் தலை(மை) பதவி போகுமா? தப்புமா? என்பதெல்லாம் பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் இடையே இருக்கும்  பிணைப்பூ தான் நிர்ணயிக்க வேண்டும். 

பொருளாதாரம் சரிந்து இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள். அது என்ன எழவு பொருளாதாரமோ தெரியவில்லை. சாமானியனின் சம்பளம் மட்டும் ஏறாத பொருளாதாரத்தையும், அரசு அலுவலர்களின் சம்பளமும் கிம்பளமும் ஏறும் பொருளாதாரத்தையும், பதினெட்டு சதவீதம் லாபம் அடைந்த தனியார் நிறுவன பொருளாதாரத்தையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் கோடி வாராக்கடனாக இருந்த வங்கிக் கடன், இந்த வருடம் ஒன்பது இலட்சம் கோடியாக உயர்ந்திருப்பதன் (வாராக்கடன்) பொருளாதாரத்தையும்.  ஃபேன் வாங்கக் கூட காசில்லாத தலைவர்கள் கோடிகளில் சொத்துக்கள் வாங்கும் பொருளாதாரத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வழக்கம் போல வந்து செல்லும் தீபாவளி பலருக்கு பல செலவுகளை வைக்கும். ஒரு சிலருக்கு கடனைக் கொண்டு வந்து சேர்க்கும். சமூகத்தில் வாழ வேண்டுமெனில் அதற்கென ஒரு விலையை நாம் காலமெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். தவறாகப் பேசுவார்கள் என்ற ஒரு நிலைக்காக நாம் இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருங்கள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வாழ்க வளமுடன்!

Wednesday, September 27, 2017

16347 கோடி முதலீட்டிற்காகக் கொட்டிக் கொடுக்கப்போகும் இந்தியர்கள்

கிரிக்கெட் இந்தியாவின் மர்ம விளையாட்டு. ஐபில் கிரிக்கெட்டைப் பற்றி அடியேன் எழுதிய கட்டுரை பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் வெளியானது. அதன் இணைப்பையும் அக்கட்டுரையினையும் கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.


கடந்த செம்டம்பர் மாதம் 6ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது. செய்தி கீழே,

Star Sports under the Star India umbrella shelled out an exorbitant Rs 16,347.5 crore or $2.55 billion for IPL media rights over the next five years till 2022. This is nearly triple of what Sony, the previous TV rights holders, had paid for ten years in 2009. In all it converts to Rs 55 crore from every IPL match or Rs 23.3 lakhs for every legal delivery bowled. It leaves the IPL sandwiched between the English Premier League (Rs 84 crore per match) and the NBA (Rs 18 crore per match) in terms of highest grossing sporting leagues in the world, with the NFL the clear leader earning Rs 150 crore per match. But beyond the sheer astronomical numbers, the query for the fans, other broadcasters and the DTH providers revolves around how to compete with their sheer might.


படித்து விட்டீர்களா? இப்போது விஷயத்துக்கு வருவோம்.

சாதாரண டிவிதானே, நாம் பொழுதைப் போக்குகிறோம் அதை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா? என்று திகைக்கின்றீர்கள். ஆமாம் உங்களின் பொழுதுபோக்கையும் காசாக்கிட முடியும் என்பது தான்  முக்கியமான சாரம்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் விளையாட்டினை ஐந்து வருடம் ஒளிபரப்புச் செய்ய ஸ்டார் குழுமம் 16347 கோடி ரூபாய் கொடுக்கிறது என்றால் ஒளிபரப்புச் செலவு, அலுவலகச் செலவு, அட்மின் செலவுகள் இதையெல்லாம் சேர்த்து 20000 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இந்தளவு முதலீடு செய்வது நஷ்டமடையவா செய்வார்கள்? இல்லை அல்லவா? 20000 கோடி முதலீடு 100000 லட்சம் கோடி வருவாய் கிடைக்கத்தான் இவ்வளவு முதலீடு போடுவார்கள். இத்தனையும் எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது? விளம்பரதாரர்களிடமிருந்து அவர்களுக்கு கொட்டக்கூடிய பணமும் எங்கிருந்து கிடைக்கிறது? டிவி பார்க்கும் மக்களிடமிருந்து விளம்பரதாரர்கள் வசூலித்து அதில் பத்து பர்செண்டேஜ் அளவு பணத்தினை மீடியாக்களிடம் கொடுக்கின்றார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். மலைத்து விட வேண்டாம். 

ஒரு சோப்பின் உண்மையான அடக்கவிலை 5 ரூபாய் இருக்கலாம். ஆனால் விற்கும் விலை 40 லிருந்து 60 ரூபாய் வரை. இந்தக் காசுதான் மீடியாக்களுக்கும் செல்கிறது. அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் செல்கிறது. ஆக மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணம் தான் இத்தனை கோடி. 5 ரூபாய் சோப்புக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இப்படியாகச் செல்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் விளம்பரங்களைப் பார்த்து தானே வாங்குகிறோம். தேவைக்கு ஏற்ப என்று எவராவது சிந்திக்கின்றீர்களா? பிராண்டட் தான் போடுவேன் என்பவர்களிடமிருந்து எப்படி காசைப் பறிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

காலம் நேரம் தெரியாமல் டிவி முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்களே அதற்கு நீங்கள் கொடுக்கும் விலையில் ஒரு சதவீதம் தான் மேலே எழுதி இருப்பவை.

டிவியின் முன்பு உட்காரும் போது இந்தக் கணக்கை நினைவில் கொள்ளுங்கள். வீட்டிற்குள் இருக்கும் வில்லன் யார் என்று தெரிய வரும்.  

ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நடிகன் முதல்வராக ஆசைப்படுவதையும் தடுக்கலாம். ஒழுக்கம் கெட்டவர்கள் தலைவர்கள் ஆனால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

அடியேன் டிவி பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்தியே விட்டேன். எப்போதாவது டிராவல்ஸ் அன்ட் லிவிங், டிஸ்கவரி சானல், ஹிஸ்டரி சானல் பார்ப்பதோடு சரி. முக்கியமாக செய்தி சானல்களைப் பார்ப்பதே இல்லை. விவாத நிகழ்ச்சிகளை எட்டிக் கூடப் பார்க்கமாட்டேன். காலையில் செய்திதாள்கள் படிப்பேன். அவ்வளவுதான். வேலை இல்லையென்றால் புத்தகங்கள் படிப்பதோடு என் நேரம் கழிந்து விடுகின்றது. ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. மாதம் ஒரு தடவை சும்மாவாச்சும் லாக்கின் செய்வேன். 

நீங்களும் ஒரே ஒரு நாள் அவ்வாறு இருந்து பாருங்கள்.செம ஜாலியாக இருக்கும்.


Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.

Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Tuesday, August 15, 2017

அறத்தின் கோடு - கமலின் தர்மம் - பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர். 

பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன். 

தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.

தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?

கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.

கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.

Wednesday, August 2, 2017

சாண்டியின் ஏழு குட்டிகளும் கொஞ்சம் ஓவியாவும்

குழந்தைகளும் நானும் பிக் பாஸ் பார்த்து வருகிறோம். இருவரும் அதிர்கிறார்கள். அப்பா இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். பையன் மாணவர் துணைத் தலைவனாக வேறு இருப்பதால் பிக் பாஸ் மூலம் சக மனிதர்களை புரிந்து கொள்ள முயல்கிறான். மனிதர்கள் இப்படித்தான் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் புதிய உலகைக் காணும் குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. சகமனிதர்களின் உள் ரகசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆகவே எவராவது உன்னைத் தவறாகப் பார்த்தால், பேசினால், துன்பமிழைத்தால் எளிதில் கடந்து விடுங்கள் என்று புரிய வைக்கிறேன். ஓவியா அதற்கு உதவுகிறார். மிக்க நன்றி ஓவியா! 

காயத்ரி என்று கேரக்டரைப் போல என் வாழ் நாளில் ஒரு பெண்ணை இதுவரை நான் சந்தித்ததே இல்லை. கொடூரத்தின் சாயல்.  தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களைக் கழுத்தை அறுப்பார்கள். அதைக்கூட எளிதாகக் கடந்து விடலாம் போல. இப்படியெல்லாம் பெண்கள் இருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்தப் பெண் எலிமினேஷனுக்கு வரவே இல்லை. அதுதான் அந்தப் பெண்ணின் நரித்தனம்.

விகடனில் வெளியான ஒரு பத்தி கீழே !

ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும்கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்டபோது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் தொடக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளிகூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியைப் பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

பரணி முதலிலேயே தப்பித்துவிட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்குக் காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிகக் குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. ( நன்றி விகடன்)

ஓவியா நல்ல பெண்...! இப்படி ஒரு பெண்ணைப் பார்ப்பது இன்று வெகு அரிதாக இருக்கிறது. ஆச்சரியம்தான்.

இந்த விஷயத்தைக் கடந்து விடலாம்.

பக்கத்து வீட்டில் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒருவரின் சகலை கெஸ்டாக தங்கி இருந்தார். அவர் சாண்டி என்கிற பெண் நாயை வளர்த்து வந்தார். வீட்டு ஓனரும் அவரும் நண்பராகையாலும், வீட்டு ஓனரும் சேர்ந்து சேண்டியை வளர்த்தனர். அந்த கெஸ்ட் ரூடோஸைப் பார்த்து ஹாய் சொன்னால் சாண்டி அழ ஆரம்பித்து விடும். என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்வார். அவர் வேலை முடிந்ததும் ஊருக்குச் சென்று விட்டார். வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டி விட்டு, சாண்டியை வெளியில் விட்டு விட்டுச் சென்று விட்டார். சாண்டி நிறைமாசமாக இருந்திருக்கும் போல. எனக்குத் தெரியாது. காலையில் பார்த்தால் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரத்தடியில் ஏழு குட்டிகளோடு படுத்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது சாண்டி. ஒரு குட்டி வேறு பக்கம் கிடக்க அதை எடுத்து அதன் அருகில் போட்டால் விர்ரென்று சீறியது. அன்று முழுவதும் படுத்தே கிடந்தது. அதற்கு உணவு கொடுத்து, தண்ணீர் வைத்தோம். அழகான கண்கள் திறக்காத ஏழு குட்டிகள். அவைகளுக்கு சண்டி, மண்டி, டியூஸ்டி, வென்னிஸ்டி, தர்ஸ்டி, பிரைடி, சாட்டி என்று பெயர் வைக்கலாம் என பேசிக் கொண்டிருந்தோம்.

சாண்டி இரண்டு நாட்களாக படுத்தே கிடந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை. நேற்றைக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. அதற்கு உடம்பில் தெம்பு ஏறியவுடன் அந்தப் பக்கம் யாராவது வந்தால் துரத்த ஆரம்பித்தது.

வீட்டில் வளரும் நான்கு மாத ரூடோஸ் சாண்டியைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தது. அதற்கு சாண்டியைப் பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டது. ரூடோஸ் அடிக்கடி சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது. சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. நேற்று காலையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த சாண்டி ரூடோஸ்ஸைக் கழுத்தில் கடித்து விட்டது. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை முடித்து வீட்டுக் கூட்டி வந்தார் மனையாள். நானும் வீட்டுக்குச் சென்று விட்டேன். ரித்திக் வந்ததும் சாண்டியின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற பதட்டம் ஏற்பட ஆரம்பித்தது. வாசலில் ரூடோஸைக் கட்டி வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். சாண்டி நைசாக ரூடோஸைக் கடிப்பதற்கு முயன்று கொண்டே இருந்தது. வீட்டுக்கு தபால் கொண்டு வந்த தபால்காரர் சாண்டியின் அதிர்ச்சித்தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடினார். கேஸ் கொண்டு வந்தவர் அலறிக் கொண்டோடினார். சாண்டி தன் குட்டிகளைக் காப்பதற்காக வீராவேசம் கொண்டு வீரத்தாயாக மாறியது.

மழை பெய்வது போல வானம் இடித்துக் கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் சாண்டி தன் குட்டிகளுடன் ரூடோஸ் இடத்துக்கு வந்து விட்டால் ரூடோஸின் நிலை என்னவோ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். சரியாக பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் விபரம் சொன்னால் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, இந்த வீடே என் வீடு இல்லை என்றுச் சொல்லி நழுவ ஆரம்பித்தார். எனக்கு வந்த டென்சனுக்கு கத்த ஆரம்பித்தேன். அதற்குள் பையன் வந்து விட்டான். ரூடோஸை சாண்டி கடித்து விட்டது என்றதும் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான். அவனைச் சமாளித்து இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படித்தான் வெளிவருவது என்று டென்சன் ஏறிக் கொண்டிருந்தது.

(சாண்டியும் அதன் ஏழு குட்டிகளும்)

வீட்டுக்காரரை கோபமாக எகிறியவுடன் ஒரு வழியாக சாண்டியை நெருங்கி கம்பி போட்டுக் கட்டினார். அவர் தொட்டால் சிவனேன்னு நிற்கிறது. நாங்கள் அருகில் சென்றால் உர்ர்ர்ர் என்கிறது. அவர் எங்கோ பேசி, அவரின் நண்பரின் தோட்ட வீட்டுக்கு குட்டிகளையும், சாண்டியையும் கொண்டு சென்றார். தோட்ட வீட்டில் விட்டு விட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் பேசவே இல்லை. சாண்டியைக் கட்டிப் போட்டு வளர்த்து அதற்கு உணவிட்டு விட்டு, குட்டி போட்டதும் அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்கிறார் அவர். அதுமட்டுமாவது பரவாயில்லை. அந்த வீடே என் வீடு இல்லை, நான் கெஸ்ட் என்றார். அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வீடு இதுவரைக்கும் அவர் பெயரில் கிரையம் ஆகி உள்ளது. (யார் கிட்டே?)

ஹிந்தி வகுப்பு முடிந்து வந்ததும் ரித்திக்கும், நிவேதிதாவும் ரூடோசுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சேண்டியும், அதன் குட்டியும் வெயிலில் துயரப்படக்கூடாது என்பதற்காக அடியேனால் பின்னப்பட்ட தென்ன ஓலைத் தட்டி சும்மா கிடந்தது. குட்டிகளுக்குப் பால் கொடுத்து விட்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் சேண்டியின் நினைவு என்னைப் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இரவில் கனவில் சேன்டி ஒரு குட்டியைக் கவ்விக் கொண்டு வீடு தேடி வருவது போல இருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். விடிகாலையில் தென்னைமரத்தடியில் சேண்டி தன் காலால் சமன் செய்து வைத்த இடம் வெறுமையாக இருந்தது. எனக்குள் ஆற்றாமையும், எரிச்சலும் மண்டியது.

”சாண்டி உன் இயல்பு அது. ஆனால் அது பிறருக்கு கொடுமையாக இருக்கிறதே? நானென்ன செய்ய? என்னை மன்னித்து விடு தாயே!” என்று மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தேன். இதில் நானென்ன செய்வது? கையாலாகத்தனத்தின் வேதனை தான் மனசெல்லாம் நிரம்பி இருக்கிறது.

Wednesday, July 26, 2017

சிவன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா - குழப்பிய திருமூலர்

திருமூலரின் திருமந்திரம் எனக்கு மிகவும் பிடித்த நூல். அதன் பாடல்களின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்காக மூவாயிரம் பாடல்களின் தெளிவுரை புத்தகம் ஒன்றினை சமீபத்தில் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தேன். மண்டை காய வைத்தார் திருமூலர். பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆறாவது பாடலைப் படித்ததும் திகில் தான் ஏற்பட்டது. ஏதோ ஒரு உணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன். அறியாமையா, போதாத அறிவா, தெளிவடையாத புத்தியா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இதுகாறும் நான் பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று தெய்வங்கள் தான் படைத்தல், காத்தல், அழித்தல் செய்கின்றார்கள் என்று நினைத்திருந்தேன். நீங்களும் என்னைப் போலத்தான் நினைத்திருப்பீர்கள். வழி வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட ஆன்மீகம் இதுதான். ஆனால் திருமூலர் இந்த மூவருக்கும் மூத்தவன் ஒருவர் உளார். அவரின் பெயர் சிவன் என்று பாடி இருக்கிறார். கிறுகிறுவென ஆகியது எனக்கு.

அதுமட்டுமின்றி அந்தச் சிவன் எப்படி இருப்பார்? அவருக்கு உருவ வழிபாடு இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறார். இதுவரை சிவன் என்றால் சிவபெருமான், சிவலிங்கம் என இரண்டு உருவ வழிபாடு தானே செய்து வந்தோம். சிவன் வேறு, ருத்ரன் வேறு என்றால் ருத்ரன் எப்படி இருப்பார்? அவரின் உருவம் எப்படி இருக்கும்? இப்படி பல்வேறு கேள்விகள் ஊற்றுக்குள் இருந்து கொப்பளிக்கும் தண்ணீரைப் போல மனதுக்குள் எழும்ப ஆரம்பித்தது. ஜோதி ஸ்வாமியிடம் கேட்டேன் அவர் விளக்கங்கள் சொன்னார்.

ஆனாலும் பழைய வாசனை என்னை விட்டு அகலவே மாட்டேன் என்கிறது. குழப்பமான குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டியவாறு எனக்கு இருக்கும் புத்தியில் பதியும் படி திருமூலர் தான் அதற்கொரு விடையைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் குழம்பினால் போதாது என்று உங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டேன். விடை தெரிந்தால் மெயில் அனுப்பி வையுங்களேன். புண்ணியமாகப் போகும்.


இதோ திருமூலர் என்னை திக்குமுக்காடச் செய்த அந்தப் பாடல்.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

இதன் உரையை கீழே படியுங்கள்.

ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு - சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.

இணைப்பு : http://www.ssivf.com/ssivf_cms.php?page=262