குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, November 26, 2016

காயகப்பல்

சமீபத்தில் சித்தர் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது கிடைத்த அறிய பாடல் இது. பாடல் புரியும் என்று நினைக்கிறேன். எவ்வாறு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது போனதோ அதே போல ஒரு நாள் செல்லாது போகும் இந்த உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சித்தரொருவர் பாடி வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். 

சிந்தை குலைந்து மனம் சிதறி நிற்கையில் கொஞ்ச நேரம் இப்பாடல்களைக் கேளுங்கள். சிந்தை தெளிந்து சீராவீர்கள்.

இனி சித்தரின் அபூர்வ பாடல் :

ஏலேலோ ஏகரதம் சர்வரதம் 
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ. 

பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து 
பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி 
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம் 
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து 

ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி 
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி 
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி 
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து 

தஞ்சலான வெள்ளத்தில் தானே 
அகண்டரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ. 
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல் 

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் 
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு 
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல் 

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு 
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல் 
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு 
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ ஏலேலோ

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து 
பதினாலு லோகமும் தனையும் மறந்து

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி 
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.

பாடல் பாடிய சித்தர் அடியினைப் பணிந்து இப்பாடலை பதிவிடுகிறேன். 
நன்றி குருவே !

Wednesday, November 23, 2016

கரட்டான்

இன்னும் வங்கிகளில் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. சிறுவாட்டுப் பணத்தை எப்படி மாற்றுவது என்று கிழவிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பாட்டி சிறுவாட்டுப்பணமாய் பத்தாயிரம் வைத்திருக்கிறது. பாட்டியின் பக்கத்து வீட்டுக்காரர் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் கமிஷன் கேட்க பாட்டிக்கு ஆக்சிலேட்டர் எகிறி இருக்கிறது. பாட்டிக்கு சரியான கோபம் வந்து விட்டது. ஒன்றுமே சொல்லாமல் முறைத்துக் கொண்டு போய் விட்டது. ஆனால் அந்த கமிஷனால் ஏற்பட்ட கோபத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் இப்போது தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டும் பாட்டியைப் பார்த்தாலே எமனைப் பார்ப்பது போல எகிறிக் குதித்தோடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியிடம் மொத்த காசையும் வாங்கி, அது வைத்திருக்கும் கேஸ் கனெக்‌ஷன் அக்கவுண்டில் போட்டு, பாஸ்புக்கில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டார். பாட்டி இன்னொரு பக்கத்து வீட்டுக்காரருக்கு எள்ளுருண்டை, எள்ளடை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி என்னெவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் கிழவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கமிஷன் விஷயம். இவரைப் பார்க்கும் கிழவிகள் எல்லாம் என்னவோ பெரிய குற்றம் செய்து விட்டதாக தங்களுக்குள் அவரைப் பார்த்து ஆள் காட்டி விரலைக் காட்டிப் பேசப் பேச ஆள் என்னவோ மாதிரியாகத் திரிகின்றார்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். பாட்டியின் வாயில் விழுந்து தினம் தினம் வறுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் இப்போது சோகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றாராம். அவரிடம் கொஞ்சம் பெண் தன்மை அதிகம். ஆகையால் அவர் பாட்டியிடம் வாங்கிய பேச்சுக்களை மோடியிடம் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்துக் கொண்டு தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மனைவிக்கோ இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்படியெல்லாமா மனிதனுக்கு பிரச்சினைகள் எழும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. யாராவது கிராமத்துப் பாட்டியிடம் முயற்சித்துப் பாருங்களேன்.

இளம் வயதில் நான் செய்த ஒரு செயல் இப்போது என்னை பீதியில் தள்ளி விட்டிருக்கிறது. விஷயம் தெரியாத வயதில் செய்த செயலுக்கெல்லாம் இப்போது பயந்தே ஆக வேண்டிய சூழல். விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். 


வீட்டின் வடக்குப் பக்கமாக கிணற்றடி. கிணற்றின் கிழ புறமாக காசாலட்டு மாமரம் விரிந்து பரந்து இருக்கும். தாழ்ந்த கிளைகள் உண்டு. அதில் கயிறு கட்டி ஊஞ்சல் செய்து ஆடிக் கொண்டிருப்பேன். மாமரத்தின் வடபுறமாக வேலி. வேலியில் ஓங்கி வளர்ந்த பனைமரம் ஒன்று இருந்தது. ஒரு நாள் மதியம் போல இருக்கும். ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவன் பனைமரத்தின் உச்சியில் பார்க்க அகலமான கண்களுடன் சாம்பல் நிறத்தில் பெரிய பறவை ஒன்றினைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்குள் நடு நெஞ்சில் சிலீர் என்று பயம் ஏற்பட்டது. சரியாக அது தலையை நான்கு புறமும் சுத்த அதைக் கண்டு பயந்து அம்மா அம்மா என்று அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அம்மாகிட்டே கேட்டால் அது ஆந்தை என்றார்கள். அன்றிலிருந்து ஆந்தை என்றாலே எனக்கு ஆகாது. இருந்தாலும் யாராவது விளையாடுவதற்கு கூட வந்தால் மாமரத்தின் ஊஞ்சலுக்குச் சென்று விடுவேன். கண் ஒரு பக்கம் பனைமரத்தைப் பார்த்தாலும் உச்சியினைப் பார்க்காது. அவ்ளோ பயம்.


இன்னொரு சம்பவமும் எனக்கு ஏற்பட்டது. காசாலட்டு மாமரத்தில் காய்கள் பிடித்தவுடன் தொரட்டி வைத்து மாங்காய்களைப் பிடுங்கி வைக்கோல் போருக்குள் வைத்து விடுவேன். தினமும் எந்த மாங்காயாவது பழுத்து இருக்கிறதா என்று பார்ப்பேன். மாங்காய் பழுத்து விட்டால் நன்றாக அழுத்திப் பிசைந்து விட மாம்பழம் கொழ கொழவென ஆகி விடும். நுனியில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உறிஞ்சினால் மாம்பழ ஜூஸ். அடியேன் கண்ட மேனிக்கு மாம்பழத்தைத் தின்பதுண்டு. வீட்டில் வியாபாரிக்கு விற்றது போக மீதமுள்ள மாங்காய்களை வேப்பந்தழையில் போட்டு பழுக்க வைப்பார்கள். அந்தக் கணக்கு வேறு. ஆனால் யாருக்கும் தெரியாமல் நான் கொஞ்சம் மாங்காய்களை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுவதுண்டு. மாம்பழத்தின் ருசி அப்படி. அப்படி ஒரு நாள் பதுக்கி வைத்திருந்த மாங்காய்களை வைக்கோல் போருக்குள் கையை விட்டு பார்க்க ஏதோ தட்டையாக இருந்தது. யாரோ விளையாண்டு விட்டானே என்ற கோபத்தில் அதை இழுத்து வெளியில் போட மல்லாக்க விழுந்தது அந்த வஸ்து. என்ன வஸ்து என்று தெரியாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை குப்புற தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் அது மெதுவாக நகன்றது. பயத்தில் அம்மா என்று அலற அனைவரும் ஓடி வர பார்த்தால் அது ஆமை. அம்மா என்னைக் கண்ட மேனிக்குத் திட்ட ஒரு வழியாக ஆமையை தீயை வைத்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்தார்கள். இனிதான் விஷயமே இருக்கிறது.

(கரட்டான் என்றழைக்கும் ஓணான்)

ஞாயிற்றுக் கிழமைகளில் மாமா பையன் விட்டியன் என்னுடன் விளையாட வந்து விடுவான். அவனுக்கு ஏன் விட்டியன்னு பெயர் வந்துச்சுன்னு தெரியாது. விட்டிப்பயலைக் கூப்பிடு என்றுதான் சொல்வார்கள். நானும் அவனும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு கரட்டானுக்குச் சமாதி என்று அர்த்தம். அவன் கைகாட்டி தோட்டத்து வீட்டில் இருந்து வரும் போதே தென்னை ஓலையின் ஈர்க்கைக் கொண்டு வந்து விடுவான். ஈர்க்கு நரம்பு போலவே இருக்கும். நுனியில் சுறுக்குப் போட்டால் அவ்வளவு எளிதில் கண்ணுக்குப் புலப்படாது. வேலியில் பதுங்கி இருக்கும் கரட்டானைச் சுறுக்குப் போட்டுப் பிடித்து அடித்துக் கொன்று விடுவோம். பின்னர் அதற்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து மண்ணுக்குள் புதைத்தால் தான் இருவருக்கும் விளையாட்டு முடியும்.


பட உதவி சிறுகதைகள் தளம்

இப்படி பல கரட்டான்களைக் கொன்று கொன்று விளையாடிய நாட்கள் எப்போதாவது நினைவுக்கு வந்து செல்லும். கடந்த வாரம் ஒரு நாள் நானும் மனையாளும் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு வந்த போது நடு ரோட்டில் கரட்டான் நின்று கொண்டிருந்தது. சற்றே பெரிய கரட்டான் அது. நடு ரோட்டில் தலையைத் தூக்கிக் கொண்டு என்னை முறைத்துக் கொண்டு நின்றது. வண்டியை நிறுத்தி விட்டேன். மனையாள் ஒதுங்கிப் போங்க என்றார். இடது பக்கம் ஒதுங்கினால் இடது பக்கம் வந்தது. வலது பக்கம் திருப்பினால் வலது பக்கம் வந்தது. இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டு பின்னாலும் முன்னாலும் பார்த்தால் அந்த நேரம் பார்த்து ஒரு வண்டியும் வரவில்லை. கரட்டான் என்னைத் தடுக்க எனக்கோ பழைய நினைவுகள் வர சிலீரென்று பயமேற்பட்டது. நானும் விட்டிப்பயலும் கொன்ற கரட்டான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு புதிய பிறப்பாக பிறந்து இப்போது நேருக்கு நேராக மோத வந்து விட்டதோ என்று நினைத்தேன். விட்டியனுக்கும் எனக்கும் பாதிப் பங்கு ஆகவே கரட்டானே இருவரையும் ஒன்றாகப் பார்த்து தான் நீ சண்டைக்கு வர வேண்டும், இப்போது சென்று விடு என்று அதைப் பார்த்துச் சொன்னேன். அது அசைவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து லாரி ஒன்று வர கரட்டான் சாலையோரம் ஒதுங்கியது. விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த போது வேப்பமரத்தின் மீது ஒரு கரட்டான் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்ப்பதும் பின்னர் தலையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தது. விடாது கரட்டான் போல! என நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டேன். இப்போது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கரட்டானைத் தேடுகின்றன. அதைக் காணவில்லை. என்னை மன்னித்து விட்டதா? என்று தெரியவில்லை.

Wednesday, November 2, 2016

வார்த்தைகளின் வீரியம்

வெளி நாட்டில் படித்த தன் மகன் திரும்ப வந்ததும் தன் மருத்துவமனையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டுமென்று நினைத்தார் மருத்துவர். மகன் வந்ததும் அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு வீட்டில் அமைதியாக இருந்தார் மருத்துவர். ஒரு சில நாட்கள் கழிந்தன. 

மகன் தன் தந்தையிடம் வந்து, ‘அப்பா, நீங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து  கடந்த வாரம் வரை ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தீர்கள் அல்லவா? அந்தப் பெண்ணின் நோயை நான் மூன்றே நாட்களில் சரி செய்து விட்டேன்’ என்றான். அப்பாவை விட தனக்குத் திறமை அதிகம் என்ற பெருமையில் அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மருத்துவர் அவனை நோக்கி நகைத்தார்.

‘மகனே, அந்தப் பெண்ணின் நோயை நான் ஒரே நாளில் சரி செய்து இருப்பேன். ஆனால் செய்யவில்லை. நீ வெளி நாட்டில் படித்தது, இந்த எனது வீடு, கார், நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் அந்தப் பெண்ணின் பணம்’ என்றார்.

மகனுக்கு விஷயம் விளங்கியது.

‘அப்பா, அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சினை என்றுச் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னால் அந்தப் பயத்திலேயே அந்தப் பெண்மணி நடுங்கி விடுவாள்’ என்றான்.

மருத்துவர் தன் மகனை அருகில் அழைத்துச் சொன்னார், ’மருத்துவ தர்மத்தைப் புரிந்து கொண்டாய்’ என்று.

உலக மெடிக்கல் கவுன்சிலுக்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் செய்ததாய் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் கேத்தன் சேதாய் தலைவராக்கப்பட்டிருப்பதை நினைத்த போது எங்கோ படித்த கதை நினைவுக்கு வந்து விட்டது.

மருத்துவர் அந்தப் பெண்மணியின் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் மகனோ அவருக்கும் ஒரு படி மேல். நோயாளியிடம் மருத்துவர் சொல்வது ஒவ்வொன்றும் சத்தியமாக நம்பப்படும். யாரிடம் எந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொல்வார்கள்.

நன்றாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ’என்ன ஆள் இப்படி ஆகி விட்டீரே, சுகரா? பிரஷர் இருக்குமோ? என்று சும்மா கேட்டு வையுங்கள்’. அவனுக்குத் தூக்கம் வருமா? நிம்மதியாகத்தான் இருப்பானா? 

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். 

Friday, October 28, 2016

ஒரு பதிவு ஒரு பயணம்

நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை தினமலர் தீபாவளி மலரில் பல பெரிய மனிதர்கள் எழுதி தள்ளி இருக்கின்றார்கள். நம்ம ராசி அப்படி போலும். பிளாக்கில் இரண்டொரு கடிதப் பதிவுகளைக் கூடப் பார்த்தேன். இருக்கட்டும் ஒவ்வொருவருக்கும் யாரோ ஒரு நண்பர் இருப்பார் அல்லவா? எனது அந்தப் பதிவைப் படித்து விட்டு சில நண்பர்கள் போனில் அழைத்து அழ வைக்கின்றீர்களே என்று புலம்பினர். அப்படியெல்லாமா நாம் எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் நண்பர் “ஃபெதர் டச் தருகிறது உங்களின் எழுத்து” என்கிறார். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. அவரவர் பார்வையில் எனது பதிவுகள் பல்வேறு தோற்றங்களைப் பதிவு செய்கிறது போலும். ஒரு சினிமா இயக்குனர் பாடல் எழுதுகின்றீரா என்று கேட்டார். மற்றொரு நண்பர் நல்ல கதையொன்று எழுதித் தாருங்களேன் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறொரு நண்பர் பதிவுகளில் கோர்வையான பதிவுகளை எடுத்து வா.மணிகண்டன் போல புத்தகமாக்கி வெளியிடுங்கள் என்கிறார். பார்க்கலாம் அதற்கென காலம் நேரம் வர வேண்டுமல்லவா? இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

இன்றைக்கு அடியேன் எழுதிய பழைய எழுதிய பதிவுகளைப் படித்துப் பார்த்து வருகையில் சரவணனின் பதிவு ஒன்று கிடைத்தது. அதில் கடைசி வரியைப் படிக்கையில் எனக்குள் பயமே ஏற்பட்டு விட்டது. ”அவர் பொருட்டு எல்லோருக்கும்” என்று எழுதி வைத்து விட்டார். கோவையில் போன வருடம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இந்த வருடம் வருவேனா மாட்டானா என்று பயமுறுத்தும் வேலை பார்க்கிறது மழை. 

இதோ கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் விசயம் விளங்கும்.


2008ல் சரவணனுடன் உரையாடிய போது அவருக்குள் நிகழ்ந்த நெகிழ்ச்சியை வார்த்தையாகப் பதிவு செய்து விட்டார். அவரின் பெருந்தன்மை அது.அவர் இப்போது கிட்டத்தட்ட ஒன்பது புத்தகங்களின் ஆசிரியர். மிக நல்ல எழுத்தாளர். எந்த கோடுகளும் இன்றி சகிப்புத்தன்மையும் இன்றி எழுதுபவர். இதுவரை அவரின் ஒரு புத்தகங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை. அவரை நேரில் சந்திக்கும் போது ஓசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அரசே இலவசங்களைக் கொடுக்கிறது சரவணன் கொடுக்கமாட்டாரா?

மழை வேண்டி ஒரு சிறு பயணம் செய்யவிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேண்டி இறைவனிடம் முறையிட நானும் மனையாளும் செல்லவிருக்கிறோம். இதெல்லாம் ரொம்பவும் ஓவரா இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருந்தாலும் ஒரு நப்பாசை எனக்குள் இருக்கிறது. ஆகவே எனது பயணம் இனிதே தொடங்கவிருக்கிறது.

”மழையே விடாது பெய்து உலகைச்  சுபிட்சமாக்குக” என வேண்டிக் கொள்கிறேன்.

சரவண கார்த்திகேயன் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இனிய நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனது சகோதரர் சிவாவிற்கு அன்பு வாழ்த்துக்கள்.

எனது மூத்த சகோதரர் காமராஜ் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜெயமோகனின் அறச்சீற்றம்

கடந்த வாரம் என்று நினைக்கிறேன். வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் ஒரு பையனை இரண்டொருவர் சேர்ந்து அடித்து துவைத்தனர். பார்த்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டு எனது நண்பர்களை அழைத்து என்ன செய்யலாம் என்றுக் கேட்டேன். பல இடங்களில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கென முஸ்தீபுகளைச் செய்த போது அது முடிந்து போன சமாச்சாரம் என்ற தகவல் கிடைத்தது. ஆசிரியர்கள் பணி மாறுதலும் அந்த பசங்களுக்கு டிசியும் கொடுக்கப்பட்டதாகவும், அடி வாங்கிய பையன் விரும்பினால் இருவரின் மீது வழக்குப் பதியலாம் என்ற செய்தி கிடைத்ததும் தான் மனசு சற்று ஆசுவாசப்பட்டது. இது ஒவ்வொரு மனிதனுக்குள் உண்டாகும் அறச்சீற்ற உணர்வு. எனக்கு ஏற்பட்டது அந்த அடி கொடுத்த பையனின் மீதான கோபம் இல்லை. அங்கு தர்மம் மீறப்படுகிறது. அதனால் சீற்றம் உண்டாகிறது. அவ்வளவுதான் விஷயம். நீ யார் கோபப்பட? உனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் இருக்கிறது என்னிடம்.

சாலையில் அடிபட்டுக் கிடப்போரைக் கண்டு கொள்ளாமல் சென்றால் மனிதனா நீ என்றெல்லாம் பேசுகின்றோமே அது என்ன விதத்தில் சரி? சிலர் ஓடோடி உதவி செய்கிறார்களே அதைப் போலத்தான் கடும் கொடும் செயல் நடக்கும் போது மனிதர்களுக்குள் உண்டாகும் கோபம். அதே போலத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற வீடியோக்களைப் பார்த்ததும் படபடப்பும் நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஹீரோயிசமும் வெளி வந்து விடும். 

இதே போலத்தான் ஜெயமோகனும் செய்திருக்கிறார். அவருக்கு தன் கோபமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, எழுதி விடத்தான் செய்வார். அவரின் அந்தக் கோபம் அந்தப் பெண்மணி மீது உண்டானது என்று முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளால் நாட்டுக்கு எவ்வளவு இழப்புகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. நேற்று கூட சுப்ரீம் கோர்ட்டில் 85,000 கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இதுவரை கடன் கட்டாமல் தவிர்த்து வரும் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறது நம் மத்திய அரசு. வங்கிப் பணம் மக்களுடைய பணம் அல்லவா? வங்கிகள் திவாலானால் மனிதன் வங்கி மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை கூட சிதறுமானால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஹர்சத் மேத்தா என்ன செய்தார்? ஏதாவது நடந்ததா? பெரும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் வங்கி மேலாளர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றனவே அதையெல்லாம் யாரால் என்ன செய்து விட முடியும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

வங்கிகள் சாதரண மனிதனின் நம்பிக்கை. பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட காசைக் கொடுத்து வைத்துப் பின்னர் திரும்ப வாங்க முடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வங்கிக்கு நம்பிச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கைக் குலையும் படி நடந்து கொள்வது சரி என்கின்றார்களா? 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோரால் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல், மக்கள் மீது அலட்சியம். அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒன்றையே வேலையாக வைத்துள்ளார்கள். 

ஜெயமோகன் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் வேகத்தினைப் பார்த்துதான் கோபத்தில் எழுதி இருப்பார். இன்னுமா நாம் ஏமாற வேண்டும்? இப்படியுமா ஒரு அரசு அலுவலர் வேலை செய்வார்? என்ற உடனடிக் கோபம் தான் அது. அதற்காக அவரை இரண்டு நாட்களாக வறுத்து எடுப்பது சரியல்ல. கடந்து செல்ல வேண்டிய விஷயம் இது. ஜெயமோகனுக்கு உண்டானது அறச்சீற்றம். அது அழுக்கு அல்ல.

சிவா தன் பிளாக்கில் எழுதி இருந்ததை இங்கு மீள் பதிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் உண்மை. 

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 

ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.

நன்றி :  நிகழ்காலத்தில் சிவசுப்ரமணியன்

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Friday, October 14, 2016

நிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது

1900 ஆண்டுகளுக்கு முன்னாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நிலச் சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு யாரோ ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தார். பிறர் எல்லாம் விவசாயக்கூலிகளாக மட்டுமே இருக்க முடிந்தது. 

நிலச்சுவான்தாரர்கள் வைத்ததே சட்டம். ஊரே அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தது. அவர்களை எதிர்த்தவர்கள் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இது பற்றிய பல்வேறு புனைவுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். காந்தியின் சீடராக இருந்தவர் ஆச்சாரியார் வினோபா பாவே. அவர்கள் காந்தீயமார்க்கத்தை முன்னிறுத்தி சமுதாயத்தில் நிலவும் ஏழை பணக்கார தாழ்வுகளை சரி செய்திட தன் இயல்புகொண்ட காந்திய இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு பூமி தான யக்ஞ இயக்கத்தை துவங்கினார்.

பெரிய நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை நன்கொடையாகப் பெற்று ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமென்ற நோக்கில் பூமி தான இயக்கத்தை ஆச்சாரியார் வினோபா பாவே அவர் 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் பல ஏக்கர் நிலங்களை பூமி தான இயக்கத்துக்கு நன்கொடையாக கொடுத்தனர். 

அவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அளந்து அறுதியிடப்பட்டு தாசில்தாரால் பூமி தான இயக்கத்தின் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக நன்கொடையாகப் பெறப்பட்டவை சுமார் 28126 ஏக்கர். தானம் கொடுக்கப்பட்டவை சுமார் 20,290 ஏக்கர். மீதமுள்ளவை சுமார் 7800 ஏக்கர் நிலங்கள் (ஆதாரம் அரசாணை எண்.144/2016). மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் பொசிசன் எடுக்க இயலாமல் இருக்கின்றன. 

இந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. பூமி தான இயக்கம் பெயரில் பட்டா வழங்கப்பட்ட பூமிகளை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது. தொடர்ந்து வாரிசுகள் மட்டுமே அனுபவித்து வரலாம். இந்த வகை நிலங்களை வேறு எவரும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக மெங்கும் பூமி தான இயக்க பூமிகள் இருக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களினால் நில வருவாய் துறையினரால் சரி வர பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பூமிகளின் நிலங்களின் விவரங்களை கையாள முடியவில்லை என்பதால் இன்றைக்கு அரசு தனியாக கமிஷனரேட் லேண்ட் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பூமிதான இயக்க பூமியினைப் பராமரித்து வருகின்றது. ஆகவே பூமிகள் வாங்குவோர் பழைய ஆவணங்களை பெற்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மேலதிக விபரம் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்.




Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Wednesday, October 12, 2016

நீலகண்டன்

கோடை லீவு விட்டு விட்டார்கள். கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் அடியேன் கணிணி ஆசிரியராக பணி புரிந்து வந்தேன். ஆத்மானந்தா சாமியுடன் பேசிக் கொண்டிருந்த போது ”லீவில் ஏதாவது படிக்கின்றாயாப்பா?” என்று கேட்டார்.

எனக்கு விசுவல் சி++ மீது ஆர்வம் இருந்தது. கரூரில் படிக்க விருப்பமில்லை. அந்த நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் அப்போதுதான் புதிதாக கட்டி இருந்தார்கள். அதன் அருகில் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்திற்கு யாரோ ஒருவர் நன்கொடையாக நிலம் கொடுத்திருந்தார். அங்கு ஒரு பள்ளியும், ஆசிரமும் கட்டி விட சுவாமி ஆத்மானந்தா அவர்கள் ஏற்பாடுகள் செய்து வந்தார். சென்னையில் அந்த இடத்தில் தங்கி இருக்கவும், பள்ளி கட்டவும் ஒரு பிரதரை நியமித்திருந்தார்கள். இங்கு கரூர் ஆசிரமத்தில் உள்ளுரை சன்னியாசிகள் தங்களுக்குள் பயங்கர அரசியல் செய்வார்கள். ஒவ்வொரு சாமியும் செய்யும் அரசியல் இருக்கிறதே அய்யோ அய்யோ ரகம் தான். 

நான் ஆத்மானந்தா சுவாமியிடம் இவர்களின் அரசியல் பற்றிப் பேசுவேன். அதற்கு அவர்,”இவர்களை சமூகத்தில் உலவ விட்டால் என்னென்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாரப்பா, ஆசிரமத்தில் இருந்துகொண்டு இங்குள்ளவர்களுடன் தானே அரசியல் செய்கின்றார்கள் என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்” என்பார். உண்மைதான். இவர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தால் அப்பெண் படும் துயரம் கொஞ்சமாக இருக்காது. ஏதோ ஒரு வகையில் இந்த வகைச் சாமியார்களால் பல பெண்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு புதிதாக கரூர் ஆசிரமத்திற்கு வந்த சாமியார் நாராயணனந்தாவை சென்னைக்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தார் ஆத்மானந்தா. அவருடன் நானும் செல்வதாக ஏற்பாடு. சென்னையில் SSIயில் விசுவல் சி++ படிக்கவும் ஏற்பாடு செய்தேன். எனக்கு உதவி செய்ய கரூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பல அனாதைச் சிறுவர்களில் பத்துப் பேரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாளில் பத்து அனாதைச் சிறுவர்களுடனும், நானும் எங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடனும், பண்டம் பாத்திரங்களுடனும் சென்னையை நோக்கிப் பயணித்தோம். சிறுவர்கள் லாரியின் பின்புறமுள்ள பகுதியில் மூடப்பட்ட படுதாவுக்குள் இருந்தனர். நான் லாரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு ஆசிரமம் சென்று சேர்ந்தோம்.

20க்கு 60 அடியில் இரண்டு ஓலை வேய்ந்த கொட்டகைகள். தியான அறை, உணவறை, மாணவர்கள் தங்கி இருக்க படுக்கை அறை, சாமிக்கு ஒரு அறை, அலுவலக அறை என தடுக்கப்பட்டு வேலிக்கருவை மண்டிக் கிடந்த இடத்துக்குள் அந்த ஆஸ்ரமம் அமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற அன்றைக்குதான் போர் போட்டிருந்தார்கள். மின் மோட்டார் இன்னும் இணைக்கப்படவில்லை. ஆசிரமத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது. அதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்ரமத்தின் மற்றொரு இடத்தில் பள்ளி கட்டுவதற்காக அடித்தளம் போடப்பட்ட போது ஏதோ பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவ்விடத்தில் போர் போடப்பட்டிருந்தது. அந்த தண்ணீர் உப்புத்தன்மை அதிகம் கொண்டது. 

சைக்கிளில் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். பாத்திரங்கள் கழுவ, குளிக்க, பாத்ரூம் இவைகளுக்கு அந்த தண்ணீரைப் பயன்படுத்தினோம். பின்னர் கொஞ்ச நாளில் புதிதாகப் போட்டிருந்த போரில் அடிபம்பு ஒன்றினை மாட்டினார்கள். கரேர் என்று தான் தண்ணீர் வரும். படுபயங்கர நாற்றம் வேறு. நாராயணந்தா அந்த தண்ணீரில் தான் குளிப்பார். ஆனால் எனக்கு சிறுவர்கள் அருகிலிருந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள். 

அந்த அனாதைச் சிறுவர்களில் லோக நாதன் மற்றும் நீலகண்டன் என்ற இரு மாணவர்கள் இருந்தனர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் அனைவரும் என்னுடனே சுற்றிக் கொண்டிருப்பர். அவ்வப்போது எனக்கு திண்பண்டங்கள் கொடுப்பார்கள். நான் அதிகம் விரும்பமாட்டேன். எல்லாவற்றையும் அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவேன். வெளியில் சென்று வந்தால் பஜ்ஜிகள் வாங்கி வந்து கொடுப்பேன். கம்யூட்டர் சார் என்றுதான் அழைப்பார்கள். கொசுக்கடி தான் அதிகம். அனைவருக்கும் கொசு வலை இருந்தது. நான் கட்டிலில் படுத்திருப்பேன். என்னைச் சுற்றிலும் சிறுவர்களில் தரையில் பாய் விரித்து கொசுவலைக்குள் படுத்திருப்பர்.

தினமும் வடபழனியில் இருக்கும் SSIஇல் விசுவல் சி++ படிக்க காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை நான்கு மணிக்குத் திரும்புவேன். நாராயணந்தாதான் என்னைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவார். மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு மீண்டும் மாலையில் என்னை அழைக்க வருவார். அந்த பிரதருக்கும் நாராயணந்தாவுக்கும் சண்டை உச்சகட்டத்தில் இருக்கும். நான் தான் தீர்த்து வைப்பேன். ஒரு வழியாக அந்த பிரதரை கரூருக்கு திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஆசிரமம் நாராயணந்தாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இதற்கிடையில் சாரதா நிகேதன் கல்லூரிக்கும், அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா கல்லூரிக்கும் கணிணிகள், பிரிண்டர்கள் வாங்க அவ்வப்போது ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு பள்ளி ஆசிரியப்பணியோடு இந்த இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கணிணிகளை உருவாக்குவது, சர்வீஸ் போன்ற வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கிடையில் நான் ஆத்மானந்தா சுவாமியிடம் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். என்னை நான் விரும்பும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று விட்டு வாருங்கள் என்று நாராயணந்தாவிடம் சொன்னார். நான் என்னுடன் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு ரோகினி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்.

ஒரு மாதம் படிப்பு முடிந்தது. அன்று இரவு நான் கரூர் திரும்ப வேண்டும். என்னுடன் வந்த மாணவர்களில் இரண்டு பேர் மட்டும் என்னுடன் கரூர் ஆசிரமத்திற்கு திரும்பினர். மற்றவர்கள் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து ஆசிரமத்திலேயே தங்கி விட முடிவு செய்தனர். 

என் துணிகளைத் துவைத்து போட்டு காய வைத்து அயர்ன் செய்து தருவார்கள். எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். மாலையில் தியான அறைக்குள் பஜனை செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து பாட்டுப்பாடி மகிழ்வது என இருந்து விட்டு பிரிவது என்பது தீரா வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

அங்கிருந்த மணலில் நான் அமர்ந்திருந்தேன். அருகில் சிறுவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். நீலகண்டன் எனக்கு தான் கற்றுக் கொண்ட ஒரு பொறியலைச் செய்து தரட்டுமா? சாப்பிடுகின்றீர்களா சார்? என்று கேட்டான். சிரித்தபடி தலையசைத்தேன். 

நீலகண்டன் நீள கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி அதனை சட்டியில் இட்டு எண்ணெய் சேர்த்து உப்புச் சேர்த்து வேக வைத்து அதனுடன் மிளகாய் பொடி தூவி கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் மைசூர் ரசமும், சூடான சாதமும் தந்தான். மண் திட்டில் அமர்ந்து கொண்டே சாப்பிட்டேன். எனக்குள் எதுவோ உடைவது போல இருந்தது. மனதின் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல அழுந்தியது. ஒரு சக உயிர் கொள்ளும் அன்பின் வெளிப்பாடு நிகழ்த்தும் மாயாஜால வேதனையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

”லேட்டாயிடுச்சு சார், போலாமா?” என்றார் நாராயணந்தா.

“எங்களையெல்லாம் மறந்திடாதீங்க சார்” என்றார்கள் சிறுவர்கள்.

கரூர் வந்து சேர்ந்து விட்டேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே வந்த பிறகு ஏதோ ஒரு நாளில் சென்னை ஆசிரமத்திற்கு போன் செய்த போது நாராயணனந்தா ”நீலகண்டன் பாம்பு கடித்துச் செத்துப் போய்விட்டான்” என்று சொன்னார். 

மனைவி சமைத்து தரும் கத்தரிக்காய் வதக்கலை வாயில் எடுத்து வைக்கும் போதெல்லாம் அவனின் நினைவு வந்து விடும். 

”ஏங்க? என்னாச்சு?” என்று பதறிப்போய் கேட்பதும் அதற்கு நான் சிரித்து மழுப்புவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நீலகண்டன் மறைந்து விட்டான். அவன் எப்போதும் எனக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். இனி உங்களுக்குள்ளும் வாழ்வான்.

இந்த எழுத்துக்கள் இருக்கும் வரை அவனுக்கு மறைவேது?

Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Thursday, October 6, 2016

கற்பு ஒழுக்க விழுமியங்களின் முகமூடி

ராகுல் சாங்கிருத்தியாயனின் ’வோல்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படித்த போது மனித சமூகத்தின் வரலாற்றினை முன்னெடுத்துச் செல்ல காரணியாக இருந்தவர்கள் பெண்கள் என்ற விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வரலாற்று புதினமாக எழுதி இருந்தாலும் அதனுடைய விஷயங்களை மறுத்து விட நம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் அதாவது கிமு ஆறாயிரம் ஆண்டுகளில் பெண் தான் குடும்பத்தின் தலைவியாக இருந்து வந்திருக்கிறார். அப்பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் அது ஒழுக்க விதியாக இருந்தது.

இப்போதும் இமயமலைகளில் வாழும் ஒரு சில சமூகங்களில் ஒரே பெண்ணுக்குப் பல கணவர்கள் இருக்கின்றார்கள் என்று பல்வேறு ஆவணப்படங்கள் விவரிக்கின்றன.

காலங்கள் மாற மாற மனித சமூகம் மேம்பாடடைய பல்வேறு ஒழுக்க நியதிகள் வரையறை செய்யப்பட்டு சுய கட்டுப்பாடாகவே செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற விஷயம் கற்பு எனச் சொல்லப்படுகிறது. ஆணொருவன் பெண்ணொருத்தியுடன் திருமண பந்தத்தில் இணையும் போது அவனுடைய சொத்தாகப் பெண் ஆக்கப்படுகிறாள். அதன் காரணமாக பாலியல் விஷயங்களையும் அவன் அவளிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேறு பெண்களை மனதால் கூட நினைத்துப் பார்க்க கூடாது அப்படி நினைத்தாலே கற்பு நெறி கெட்டு விட்டது என்பதும் நடைமுறை வாழ்வியல் நெறிகள். இளங்கோவின் சிலப்பதிகாரம் அதற்கொரு சான்று என தமிழ் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறது. பிறன்மனை நோக்காது பற்றி திருவள்ளுவர் பாட்டெல்லாம் பாடி வைத்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கற்பு ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். அது ஒரு வித சுய ஒழுங்கினையும், நேர்மைத்தன்மையையும், மனதுக்குள் நான் நேர்மையானவன் என்ற கர்வத்தையும் தருகிறது. 

சமீப காலமாக தொழில் நிமித்தமாக பல்வேறு நபர்களைச் சந்திக்கும் போது நான் அவர்கள் வாயிலாக அறிய நேரிடும் விஷயங்கள் எதுவும் கற்பு விழுமியங்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. எனக்கு ஆச்சரியமும் மனிதனின் மீதான அவ நம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

மேட்டுக்குடித்தனக்காரர்களுக்கு டைவோர்ஸ் மீண்டும் மறுமணம் என்பது வெகு சாதாரணம். பொருளாதார வசதி கொண்ட சினிமாக்காரர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணமாக இருக்கிறது. அதே போல வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போரின் வாழ்க்கையிலும் அறுத்துக்கட்டுவது என்பது வெகு சாதாரணமாக மாறிப்போய் உள்ளது. ஆதாரம் ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். 

இந்த மிடில் கிளாஸ் வகுப்பினைச் சேர்ந்த மக்களிடையே மட்டும் இந்த வகையான ஒழுக்கங்கள் பேணி வரப்படுகின்றன என்ற மாயை சூழல், தேவை, அவசியம், தர்மம், வாழ்க்கை, சுகம் இவற்றை முன் வைத்து ஒழுக்க விழுமியங்களின் எல்லைகள் வெகு எளிதாக தாண்டப்படுகின்றன. சமீபகாலங்களில் இந்தப் போக்கினை மிடில் கிளாஸ் வகுப்பு மக்கள் வெகு எளிதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.

அவரவர் தேவைக்கு ஏற்ப கற்பு ஒழுக்கங்கள் மாற்றப்படுகின்றன. அதன் உப விளைவாக பல்வேறு மனச் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். உறவுகளுக்கிடையில் நம்பிக்கை சிதைந்து போகின்றது. 

சிதைந்த நம்பிக்கை வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. அதன் காரணமாக சமூகத்தில் பெரும் துயரங்கள் மேகம் போல கவிழ்ந்து வருகின்றது.

சாலை விதிகளை சரியாக கையாண்டு ஒருவன் சாலையில் பயணித்தாலும் எதிரில் வருபவன் சரியாக கையாளவில்லை எனில் விபத்து ஏற்படுகிறது. ஒருவன் தவறு செய்தாலும் அது அடுத்தவனுக்குப் பிரச்சினையாகி விடுகிறது. விதிகளைச் சரியாகக் கடைபிடித்தாலும் பாதிக்கப்படுகின்றேன் ஆகையால் நானும் விதிகளைக் கடைபிடிக்கப்போவதில்லை என்ற சூழலுக்கு அவன் தள்ளப்படுகின்றான். 

இந்த நிகழ்வுதான் தற்போது சமூகத்தில் மெள்ளென ஆரம்பித்து முழு வீச்சில் பாய ஆரம்பித்திருக்கிறது. விளைவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

மனித வாழ்க்கையின் ஆதார சுருதி பாதிக்கையில் சுருதி பேதம் ஏற்பட்டு அதன் காரணமாக தாளகதியும் அபஸ்வரங்களும் மாறிப்போய் கர்ண கடூரமான சங்கீதம் வெளிப்படுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு விட்டது. காலம் தான் இதற்கொரு நல்ல பதிலை தர வேண்டும். 

Friday, September 30, 2016

அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு அலுவலக வேலையாக மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, எனது வக்கீல் நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது கிட்டத்தட்ட 7 மணிக்கு மேல் ஆகி விட்டது. கணபதி ட்ராபிக் தாண்டி வீடு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதால் காந்திபுரம் பேரூந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரே ஒரு தோசை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு செல்ல முடிவு செய்து பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தேன்.



பார்சல் வந்ததும் கணபதி ட்ராபிக்கில் சிக்கி டீசல் பெட்ரோல் புகையினை சுவாசித்து வீடு வந்து சேர கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது. கோயமுத்தூர் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும். ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அன்னபூர்ணா தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை. வேறு ஹோட்டலில் சாப்பிட்டால் வாய்ப்புண் வந்து விடும். பின்னர் வாயுத்தொல்லை வேறு வந்து அவஸ்தைப்படுத்தி விடும்.

நண்பர்கள் வந்தாலும் அன்னபூர்ணாவினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. காசைக் கொடுத்து விட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்.

மனையாள் தட்டில் தோசையை எடுத்து வந்து கொடுத்தார். சாம்பாரை ஊற்றினார். தோசையைக் கொஞ்சமாய் கிள்ளி, சாம்பாரில் துவைத்து வாயில் வைத்தால் இனிப்பு. தேங்காய்ச் சட்னியோ அது ஒரு விதமான இனிப்பு. எரிச்சல் தான் வந்தது. சாம்பாரில் சர்க்கரையை ஏன் தான் கொட்டுகின்றார்களோ எனத் தெரியவில்லை? முன்பெல்லாம் அன்னபூர்ணா டிஃபன் என்றால் எச்சில் ஊறும். மிக நல்ல நிறுவனம், பசித்து வருவோருக்கு அன்னமிட்ட வளர்ந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட உணவகம் என்பதால் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒரு மெயில் தட்டி விடலாம் என நினைத்து எழுதினேன்.

அடுத்த நாள் அன்னபூர்ணாவிலிருந்து முப்பது வருடமாக வேலை செய்து வரும் திரு.கலைமணி அவர்கள் போனில் அழைத்தார்கள். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். எனது ஆதங்கத்தைக் கொட்டினேன்.

சாப்பாடு சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மீன் குழம்பில் மீன் கவுச்சி வாடை வரக்கூடாது; கறிக்குழம்பில் ரத்த வாசம் வரக்கூடாது; சாம்பார் சாப்பிட்டவுடனும் கை மணக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்புகள் உண்டு. மனையாளுக்கும் எனக்கு இந்த ஒரு விஷயத்தில் தான் அடிக்கடி முட்டிக் கொள்ளும், ஒரு சில சமயங்களில் அருமையாக சாம்பார் வைப்பார். பல தடவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு இது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக புரியவே புரியாத மர்மமாகவே இருந்து வந்தது. கவனமில்லாமல் சமைக்கின்றாரோ என்ற சந்தேகம் வேறு ஏற்படும். இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை கலைமணி அவர்கள் புரிய வைத்தார்கள். அந்தக் காலத்தில் விவசாயம் செய்து வந்த உணவுப் பொருட்களின் தரமும் இந்தக் காலத்தில் விவசாயம் செய்து வரும் உணவுப் பொருட்களின் தரமும் வேறு வேறு. அந்தக் காலத்தில் இருந்த சுவையை இந்தக் காலத்தில் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு உணவு சமைக்கப் பயன்படும் பொருட்கள் தன் வயத்தை இழந்து விட்டது என்றும் சொன்னார். ஆமாம் அது உண்மைதான்.

ஊருக்குச் சென்று வரும் போது ஆவணம் கைகாட்டி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வருவதுண்டு. மதுரைப் பக்கம் சென்றாலும் மாலை நேரச் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி வருவேன். உண்மையில் அந்தக் காய்கறிகள் வெகு மணமாக சுவையாக இருக்கும். முருங்கைக் கீரை வாசம் தூக்கும். முருங்கைக்காய் வாசமோ அள்ளும். பீட்ரூட் அடுப்பில் வேகும் போதே மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோவையிலிருக்கும் காய்கறிகள் உப்புச்சப்பின்றி ஒரு விதமான அவிஞ்ச வாசம் அடிக்கின்றன. இத்தனைக்கும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவேன்.

சந்தையில் இருக்கும் கருவேப்பிலைக்கும், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேப்பிலைக்கும் வட தென் துருவ வித்தியாசம்.

சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள த்ரீ சிக்ஸ்டியில் தான் வேலை நிமித்தம் சென்றால் தங்குவதுண்டு. சரவணபவன் சாப்பாடுதான் கொண்டு வந்து தருவார்கள். வாயில் வைக்கமுடியாது. அரிசி வெந்து இருக்காது. பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு படு கேவலமான பார்சல் செய்து அனுப்புவார்கள். கொடுமை. விலை ரூபாய் 180 என்று நினைக்கின்றேன். வேகாத ப்ரைடு ரைஸ் என்றொரு அயிட்டத்தை எப்படித்தான் சாப்பிடுகின்றார்களோ தெரியவில்லை? அரை குறை வேக்காடு அரிசியில் ஒரு உணவு பதார்த்தம்.

நவீன அறிவியல் உலகம் பணம் கிடைப்பதற்காக உண்ணும் உணவின் தரத்தை குறைத்து விட்டது. உணவுப் பொருட்கள் அனைத்தும் தன் இயல்பு மாறி வியாபார உத்திக்காக மாறிப்போய் விட்டது.

இனி அந்தக் கால பாரம்பரிய உணவு வகைகளை நாம் என்றைக்குமே சாப்பிட முடியாது என்று நினைக்கையில் வேதனை தான் மண்டுகிறது.

அன்னபூர்ணா கெளரிசங்கர் நிறுவனத்திற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கிறேன்.

”எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சுவைகளையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்குரிய ஏற்பாடுகளை தனிமனிதனால் உருவாக்கிட முடியாது. அது உங்களைப் போன்ற பெரும் நிறுவனங்களால் தான் இயலும். தமிழர்களின் பாரம்பரியத்தை உங்களைப் போன்ற நிறுவனங்கள்தான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கின்றாரோ அதைப் போல தாங்களும் இந்த தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.”

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


Tuesday, September 27, 2016

சித்தர்கள் சாபம் பலிக்குமா? உண்மைச் சம்பவம்

ஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.

அருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை. 

கண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்?

எழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.

சுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.

ஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார். 

“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.

ரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.

சுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். 

தபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.

விளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்? ஆடிய ஆட்டம் முடிந்தது. 

”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா?” என்றேன்.

“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே!” என்றார்.

சித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.

சித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது? செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும், 

இன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை. 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.

இரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன? பேரழிவு நடந்தது அல்லவா? 

இப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது! 

சித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.

Sunday, September 25, 2016

முருங்கை இலை சாம்பார் - சுத்தமான இயற்கை உணவு

எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன். தமிழகத்தில் காலரா வந்த காலம். மழை விடாது ஷவர் போலக் கொட்டிக் கொண்டே இருந்தது. பெரிய ஓட்டு வீடு எங்களது. பக்கத்தில் மாடுகள் கட்டிக் கொள்ள பெரிய கொட்டகை ஒன்றும், நிலக்கடலை செடிகளை வேய்ந்து வைத்திருக்கும் பெரிய உயரமான படல் ஒன்றும் இருக்கும். ஆடுகள், மாடுகள், பசு மாடுகள், கன்றுகள் என்று பத்துப் பனிரெண்டு உறுப்படிகள் இருக்கும். எல்லாம் மழையில் நனைந்து கொண்டே இருந்தன. விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்ததால் ஓடெல்லாம் நீரில் நனைந்து ஊறி இருந்தது. குளிர் விடாது அடித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாது மழை பெய்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஊருக்கு கிழக்கே இருந்த வயல்களில் இருந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கிக் கிடந்தன. கடைசி போய் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். காய்கறிகள், மீன் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. கடைத்தெருவில் ஒரு கடைகூட திறக்கவில்லை. 


வடக்கத்தியார் மளிகைக் கடையும், நவாஸ் கடையும் கூடத் திறக்கவில்லை. நவாஸ் கடையில் கோடை லீவுக்கு என்னை வேலைக்கு அனுப்பி வைப்பார்கள். கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போடும் வேலை தருவார் நவாஸ். கணக்குப் போட்டு கல்லாப்பெட்டியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மேரி பிஸ்கட்டும், பேரிச்சம்பழமும் கொடுப்பார். கோடை லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும் புத்தகப்பையும், நோட்டுகளும், பேனாக்களும் தருவார். அத்துடன் காசும் வேற. இப்போது எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.

விடாது கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் வீட்டில் இருப்போர் சாப்பிட அரிசு சோறு இருக்கும். குழம்புக்கு அம்மா வீட்டின் பின்புறமிருக்கும் முருங்கை இலையை பறித்து வந்து உருவி எடுத்து பொருமா போட்டு கீரைப் பொறியல் செய்வார்கள். கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து முருங்கைக் கீரைச் சாம்பார் வைத்து தருவார்கள். சுவையாக இருக்கும்.


இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் கீரைகள் பூச்சி மருந்து எண்டோசல்பானோ என்ன இழவோ தெரியவில்லை அடித்து சும்மா பச்சைப் பசேல் என்று கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். இந்த எண்டோசல்பான் பூச்சி மருந்தினால் தான் புற்று நோய் வருகின்றதாம். களைக்கொல்லி ரவுண்ட் ஆஃப் மூலமும் பல்வேறு நோய்கள் வருகின்றதாம்,

கத்தரி, வெண்டை, உருளை, கேரட், பீன்ஸ் என அனைத்தும் மருந்து மயம். சுத்த சைவம் சாப்பிட்டாலும் எந்த வடிவில் நோய் வருமோ தெரியவில்லை. இத்தனைக் களேபரத்திலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. செடி முருங்கை இல்லை. சாதாரணமான முருங்கைக் கீரை மட்டுமே சுத்தமான இயற்கை உணவு. முருங்கை மரத்துக்கு யார் உரம் போடுகின்றார்கள்? பூச்சி மருந்து அடிக்கின்றார்கள்? நம்பி உண்ணக்கூடிய சுத்தமான இயற்கை உணவு அது.

இனி முருங்கை இலை சாம்பார் வைப்பது எப்படி என்றுக் குறிப்புத் தருகிறேன். வாரம் ஒரு முறை விடாது சாப்பிடுங்கள். மூட்டு வலி தீரவும், உடம்பு இளைக்கவும் முருங்கை இலை சூப் வைத்துச் சாப்பிடுங்கள். உடல் தெளிவாய் இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார் செய்யும் விதம் எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
===========================

1.முருங்கை இலை உருவி சுத்தம் செய்தது நான்கு பிடி கை கொள்ளாமல் அள்ளும் அளவு
2,துவரம் பருப்பு - 100 கிராம் அளவு
3.தக்காளி ஒன்று
4.சிறிய வெங்காயம் பத்து அளவுக்கு
5,பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் சிட்டிகை
7.பச்சை மிளகாய் நான்கு (அவசியம் சேர்க்கவும்)
8.புளி சின்ன எலுமிச்சை அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்
9.மல்லித்தூள் (கடை மல்லித்தூள் ஆகாது. மல்லியுடன் சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மஞ்சள், மிளகு, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்)

அரைத்துக் கொள்ள:-
=====================
சீரகம் அரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
மிளகு பத்து
பூண்டு நான்கு பற்கள்

இனி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (மறந்து விடாதீர்கள் இல்லையென்றால் வயிற்றில் போய் விடும்) பெருங்காயத்தூள், தக்காளியை நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும்படி குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பை மசித்து விட வேண்டாம். இத்துடன் புளித்தண்ணீர், மல்லித்தூள் ஒன்றை டீஸ்பூன் அளவு, அறைத்து வைத்த மசாலா, தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பொறிந்தவுடன் வரமிளகாய் இரண்டும், தட்டிய பூண்டுப் பற்கள் நான்கையும் சேர்த்து எல்லாம் சிவந்தவுடன் கலந்து வைத்திருக்கும் பருப்பினை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்தவுடன், முருங்கைக் கீரையை சேர்த்து அது ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மூடி போட்டு வைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து கிளறி விடவும், மீண்டும் மூடி விடவும். சூட்டில் தான் கீரை வேக வேண்டும்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீரை வெந்து சாப்பிடத் தயாராகி விடும். பருப்புக் கலவையை ஒரே ஒரு கொதியில் முருங்கைக் கீரையச் சேர்த்து விடவும். அடுத்த கொதி வந்தவுடன் அடுப்பை மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும். இல்லையென்றால் குழம்பு கடுத்துப் போய் விடும். 

முருங்கை இலையை தொட்டவுடன் பொசு பொசுவென்று இருக்கும். முகர்ந்து பார்த்தால் கீரை வாசம் அடிக்கும். இந்தக் கீரைதான் குழம்புக்கு நல்ல மணத்தையும், சுவையும் தரும்.  அடிக்கீரையைச் சேர்க்க வேண்டாம், கொழுந்துக் கீரை தான் வேண்டும்.

சுத்தமான ஆரோக்கியமான சாம்பார். வாரம் ஒரு முறை மறக்காமல் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்து குண்டாக இருப்போர் உடல் இளைக்க எளிய முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

இந்தச் சூப் சாப்பிட்டவுடன் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே மாலை ஆறு மணிக்குள் பசி எடுப்போர் சாப்பிட்டுக் கொள்ளவும்.

இரவு எட்டு அல்லது ஒன்பது மணி வாக்கில் இந்தச் சூப்பை குடல் நிறையக் குடித்து விட்டுப் படுங்கள்.

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை, ஐந்து எண்ணிக்கை அளவு பச்சை மிளகாய், தேவையான உப்பு அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து இரண்டே விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் நின்றவுடன் வடிகட்டி அந்தச் சூப்பை தினமும் இரவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க முடிந்த அளவு குடித்துக் கொள்ளுங்கள். உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பிக்கும். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஷேக் குடிக்கிறேன் பேர்வழி என உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மூட்டு வலி பிரச்சினை இருப்போர் இந்தச் சூப்பை விடாது ஒரு பதினைந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு வலி ஓடிப்போய் விடும்.

சளி பிடித்திருக்கிறதா?  விடுங்கள் கவலையை. மேற்கண்ட சூப்பினை வைத்து இரவில் இரண்டு குவளை அளவில் நான்கைந்து நாட்கள் எடுங்கள். சளி என்ன ஆகும் என்று பாருங்கள். மாத்திரையும் வேண்டாம், ஆண்டிபயாட்டிக்கும் வேண்டாம்.  சொன்னால் புரியாது செய்து பாருங்கள். சளி பறந்து போய் விடும்.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சரி இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. ஓய்வாக இருக்க வேண்டிய நாள். வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் செய்ய செல்ல வேண்டும். வரட்டுமா?


Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.