குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 27, 2020

நிலம் (71) - பத்திரம் எழுத வக்கீல் மற்றும் பத்திர எழுத்தர் தேவையா?

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

நிலம் தொடர் 71வது கட்டுரை எழுதுகிறேன். இது வரையிலும் எனது பதிவுகளைப் படித்து வரும் பல்வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகள் ஒவ்வொன்றும் அனுபவங்களின் வாயிலாக எழுதப்படுகிறது. 

வாய் மொழியாக கேள்விப்படும் செய்திகளை நான் எழுதுவதில்லை. என்னளவில் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும் பட்சத்தில் எழுதுகிறேன். எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். பொழுது போக்க பல வழிகள் உண்டு. இந்த நிலம் தொடர் பல கருத்துக்களையும், சட்டப்பிரிவுகளையும் நடைமுறையோடு ஒன்றி எழுதப்பட்டு வருகிறது. 

தலைப்பு விஷயத்துக்குப் போகும் முன்பு, உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாற்றம் நடைபெற அரசு உத்தரவிட்டிருக்கிறது அல்லவா? அதைப் பற்றிய ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்.

பதிவு அலுவலகம் என்பது என்னைப் பொறுத்தவரை லீகல் ஒப்பீனியன் பார்க்கும் அலுவலகம் இல்லை. ஒரு சப் ரிஜிஸ்டரர் தவறுதலான ஆவணங்களைச் சரிபார்க்காமல், இன்ன பிற விஷயங்களுக்காக ஒரு சொத்தினை இன்னொருவருக்குப் பதிவு செய்து கொடுக்கலாம். அவ்வாறு செய்யப்படும் பத்திரப்பதிவுக்கு, பட்டாவும் கிடைத்து விட்டால் அது தொடர்ச்சியாக பல கிரையங்கள் ஆகி விடும். அதையெல்லாம் கண்டுபிடித்து சரி செய்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். சொத்து வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது.

சொத்து பரிமாற்றம் சரிதானா? துல்லியமானதா? என்று சப் ரிஜிஸ்டரர் எப்படி கண்டுபிடிப்பார் என்பது கேள்விக்குறிய ஒன்று. ஆகவே சொத்துப் பதிவு செய்யப்பட்ட பிறகு, பட்டா மாற்றம் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாறுதல் செய்தல் ஒன்றே சரியான வழி. அதற்கு ஆன்லைன் மூலமாகவே அரசு வி.ஏ.ஓ மற்றும் ஆர்.இ - தாசில்தாருக்கு அனுமதி வழங்கி, வசதிகள் செய்து தரலாம்.

ரெவின்யூ அதிகாரிகளின் அட்ராசிட்டி, அலைச்சல் போக்கு மக்களுக்கு பதிவு அலுவலகத்திலேயே பட்டா மாற்றம் ஆகி விட்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டதன் காரணமாக, எதிர்காலத்தில் விளையக்கூடிய பெரும் பிரச்சினைகளை அறிய மறுக்கின்றனர்.

ஆகவே அரசு பத்திரப்பதிவு அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல் செய்வதை மறுபரிசீலனை செய்தலும், பட்டா மாற்றத்தை பதிவு முடிந்த ஒரு மாதத்திற்குள் ரெவின்யூ டிபார்மெண்ட் மூலமாகவே ஆன்லைன் வழியாக செய்வதற்கும் வழி வகைகளை ஆராய வேண்டும்.

அடுத்து பத்திரம் எழுத வக்கீல்கள் அல்லது பத்திர எழுத்தர் தேவையா என்பது பற்றி பார்க்கலாம்.

26.08.2020ம் தேதியன்று தினமலரில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது. கீழே இருக்கும் பெட்டிச் செய்தியை முழுமையாகப் படித்து விடவும்.

பதிவு பெற்ற ஆவண எழுத்தர்களும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட வக்கீல்கள் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது போல மேற்கண்ட செய்தியில் சொல்லி இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது.

இந்தியப் பதிவுச் சட்டத்தில் சொத்து வாங்குபவரோ அல்லது சொத்து விற்பவரோ தானாகவே அதாவது தானே பத்திரம் எழுதி, கையொப்பம் இட்டு, சாட்சிகளுடன் பத்திரப் பதிவு செய்யலாம் என இருக்கிறது. 

அடியேன் பல பத்திரங்களைச் சொத்து வாங்குபவர் பெயரில் எழுதி பதிவு செய்து கொடுத்திருக்கிறேன். வக்கீல்கள், பத்திர எழுத்தர்கள் மட்டுமே ஆவணம் எழுதி பதிவு செய்தல் என்பது தேவையில்லை. அவர்களின் கையொப்பமும் தேவையில்லை.

பத்திரம் எழுதுவதற்கு கொஞ்சம் பத்திர எழுதும் திறன் தேவை. வக்கீல்களும், பதிவு எழுத்தர்களும் தேவையே இல்லை.

ஆன்லைனில் பதிவு செய்யும் போது அது பற்றிய கொஞ்சம் அனுபவம் தேவை. அவ்வளவுதான்.

துல்லியமான லீகல் ஒப்பீனியன் பார்க்க வேண்டும். பிறகு மாடல் டிராஃப்ட் தயார் செய்து ஆன்லைனில் பதிவு செய்து, நேரடியாக சாட்சியுடன் பதிவு அலுவலகம் சென்றால் போதும். 

தற்போது பல பத்திரப்பதிவுகளில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், நில பரப்புகளில் தவறுகளும் நடந்து, அதன் தொடர்ச்சியாக பிழை திருத்தல் பத்திரங்களும் செய்யப்படுகிறது.

ஆகவே நமக்குத் தேவையான பத்திரங்களை நாமே தயார் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒரு சில கம்பெனி வகையறா, பவர் பத்திரங்கள் எழுதும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையுடன் பதிவு செய்வது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Friday, August 21, 2020

பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? - அலசல்

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவினால் எனக்குச் சட்ட சிக்கல் வருமா என்று தெரியாது. ஆனாலும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

அறம் கொன்றார்க்கு அறமே கூற்றாகும் என்கிறது மூதுறை. நீதியையும், தர்மத்தையும் கொன்றார்க்கு, அதுவே எமனாக வரும் என்பது அர்த்தம்.

எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவை விட, சசிகலாவை விட உயர் அதிகாரத்தில் இந்தியாவில் எவரும் இருந்திருக்க முடியாது. ஆனானப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி ஜெயிலில் போட்டவர்கள்.

அப்பேர்பட்டவர்களுக்கு அறமே கூற்றாக இருந்து தர்மத்தை நிலை நாட்டியது. ஜெ சசி இருவரும் ஜெயிலுக்குப் போவார்கள் என்று எவராது நினைத்திருப்போமா? ஆனால் அறம் அதைச் செய்ய வைத்தது. 

இவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்துச் செய்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இச்செயலை எவரும் நியாயப்படுத்த இயலுமா? தர்மத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அறம் கொன்ற எந்த நீதிபதிக்கும் இதுதான் நடக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எவரும் தப்ப முடியாது தர்மத்தின் தண்டனையிலிருந்து. 

அறம் கொன்ற ஒவ்வொருவரின் வேரும் வேரடி மண்ணும் முற்றிலுமாக துடைக்கப்படும் என்று சாத்திரங்களும், தர்மத்தைப் போதிப்பவர்களும் சொல்கிறார்கள்.

இராமருக்கு கோவில் அறவழியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இராமன் என்றால் நீதி, அறம் என்று வாழ்ந்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அவருக்கு இப்படியான ஒரு நிலையில் கட்டப்படும் கோவில் பற்றி எதிர்கால சந்ததியினர் மிச்சம் சொச்சம் இல்லாமல் விமர்சிப்பார்கள்.

குறைந்த பட்சம் 30 வருட அனுபோக பாத்தியதை அல்லது கோவில் இருந்ததிற்கான சிறு சாட்சிகளையாவது நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டுமென்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு சட்டம் வளையுமானால் அது வளைந்து போன சட்டம் தான். வளைந்த சட்டத்தை ஸ்ரீராமரின் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருக்கும் இராம பாணங்கள் சரி செய்யும் என அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நம்புகின்றார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காத எத்தனையோ சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கவனத்தில் கொண்டு, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கலாம். 

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அப்பட்டமாக மீறியது. ஆனால் அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அவமதிப்பாக கருதவில்லை. ஏனென்று தெரியவில்லை. தனி மனிதனுக்கும் அரசுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

ஒரு சிலசூழலில் அறச் சீற்றம் எழுவதும், அதன் தொடர்ச்சியாக கோபத்தில் வார்த்தைகள் வருவதும் இயல்பு. இது ஒவ்வொருவருக்கும் வரும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டியே கொடுத்த முதல் இந்திய வரலாறும் உண்டு. 

இந்திய அரசு - நீதிபதிபதிகள், தீர்ப்புகள் விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்ப்புக் கொடுக்கும் நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்படிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் கீழ் நீதிமன்ற தீர்ப்புகள் தள்ளுபடி செய்யும் போது, அவ்வகையான தீர்ப்புகள் மீது விசாரனைகள் வேண்டும் என சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் விரும்புவார்கள். ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்க முடியாது அல்லவா?

எதேச்சதிகாரம் நீதிமன்ற விஷயத்தில் எடுபடக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு ஏழை இந்தியன் அரசுக்குச் செலுத்தும் வரியில் நீதிபதிகள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை ஏழை இந்தியன் அறிய விரும்புகிறான்.

இதோ கீழே ஒரு சில நீதிபதிகளின் வாழ்க்கை இருக்கிறது. 

பிரஷாந்த் பூசன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

நன்றி : மெயில் டுடே பத்திரிக்கை. செப்டம்பர் 23, 2009ம் தேதியில் இப்பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.