குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 4, 2018

நிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது

நில உச்சவரம்புச் சட்டத்தினைக் கையில் எடுத்து வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது தமிழக அரசு. செய்தி வெளி வந்து விட்டது. இனி எவரும் ஏக்கர் கணக்கில் சொத்துக்களைக் குவிக்க இயலாது. டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு உண்டு எனினும் அதற்கான அப்ரூவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே அப்ரூவல் பெற்றாலும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாகத்தான் கருதப்படுமே தவிர தனியார் நிலமாக இருக்காது. 

அதுமட்டுமல்ல இது போன்ற கம்பெனியின் கீழ் இருக்கக் கூடிய நிலங்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்குதல் அவசியம். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியும், இது பற்றிய விவரங்கள் தெரிந்த நல்ல ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே அது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி டிரஸ்ட் கீழ் வரக்கூடிய பூமிகளை வாங்குவதற்கும் ஏகப்பட்ட சட்ட விலக்குகள் தேவை என்பதையும் கவனத்தில் கொள்க. யாருக்கு எங்கே எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்கவும் வழிகள் உண்டு. நன்கு ஆலோசித்த பிறகே இது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதினை மறந்து விட வேண்டாம்.


இதோ கீழே தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி உங்களுக்காக.

நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 


குறிப்பு : ஒரு குடும்பத்திற்கு 60 ஏக்கர் என்பதன் கணக்கு வேறு. அரசு வைத்திருப்பது தர ஏக்கர் கணக்கு என்பது வேறு. 60 ஏக்கர் எனக் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் கணக்கு. ஊருக்கு ஊர் இந்த ஏக்கர் வித்தியாசப்படும் என்பதினைக் கவனத்தில் கொள்க.

1 comments:

நிகழ்காலத்தில்... said...

கட்டணச்சேவை உங்களிடம் உண்டா ?

தேவை இருப்போருக்கு பயன்படுமே...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.