குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, March 5, 2017

இன்றைக்கு முதல் நாள்

நாடு, மொழி, இனம், உறவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவன் இயங்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு குப்பைத்தொட்டி. அழுகி நாற்றம் வீசும் கருத்துக்களும், முன் பதிவுகளும் கடைசிக் காலம் வரை அவனை அக்குப்பைத்தொட்டிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வைத்து விடும். குப்பைத்தொட்டியில் இருந்து வெளியில் வந்தால் அல்லவா உலகத்தின் அற்புதமான தரிசனம் கிடைக்கும்? ஆனால் அதற்கான சிறு முயற்சியைக் கூட எவரும் எடுப்பதில்லை. குப்பைத்தொட்டியில் இருந்து வெளிவருவது எப்படி என்று எவரும் எளிதான முறையில் சொல்லிக் கொடுப்பதும் கூட இல்லை. இந்த நிலையில் மனிதனுக்கு எங்கே விடிவுகாலம் வரப்போகிறது? ஆளும் பிஜேபியினர் நிதர்சனத்தை உணர்ந்து அரசியல் செய்ய வேண்டும். பெரும் பிரயத்தனம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். வந்ததும் மக்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்தார்கள். கருப்பு பணமென்றுச் சொல்லி மக்களை அலைய விட்டார்கள். இப்போது தமிழகத்தை சுடுகாடாக்க முயல்கின்றார்கள். 

நெடுவாசல் நான் பிறந்த ஊர். 16ம் தேதியிலிருந்து நடக்கும் போராட்டம் இன்றைக்கும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. டிவிக்களில் விவாதங்கள், நொடிக்கொரு தடவை செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடரும் அஹிம்சா போராட்ட்டம், போராட்டக்களத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கிலிருந்தும் வரும் மக்கள். 

ஒரு கிராமம் அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் எங்களூரும் எங்கள் தொழிலும், நாங்களே எங்கள் நிலத்திற்கு முதலாளியாக இருந்து சம்பாதிக்கும் போக்கும் மாறிப்போய் விடும் என்று போராடுகிறார்கள். மக்களுக்காக அரசா? இல்லை அரசுக்காக மக்களா? என்று தெரியவில்லை. ஆளும் மத்திய அரசிலிருந்து ஒருவரும் நெடுவாசலுக்கு வர மாட்டேன் என்கிறார்கள். ஒருவர் நெடுவாசலில் வாழ்வுரிமைக்காக போராடுபவர்களுடன் நக்சலைட்கள் இருக்கின்றார்கள் என்கிறார். இனி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நெடுவாசலில் இருக்கின்றார்கள் என்பார்கள். சைனா மறைமுகமாக நெடுவாசலுக்கு சப்போர்ட் செய்கின்றார்கள் என்பார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் எமது ஊர் வினோத்குமார் தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை நெடுவாசலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார். எவரும் வரவில்லை. 

நெடுவாசல் கிராமத்தார் தங்கள் வயிற்றுப் பசிக்காக தங்கள் நிலத்தில் உழுது பயிரிட்டு விவசாயம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால் பிஜேபியினரும், அவர்களின் அடி வருடிகளும் தங்கள் வயிற்றுப் பசிக்காக பிறரை அழித்தாவது அரசியல் பிழைத்து வயிற்றுப்பசி போக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள். இதில் யார் அது இது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கிராம வளர்ச்சியில் தான் முன்னேற்றம் இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம். ஆனால் கிராம ஒழிப்பில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்கிறது பிஜேபி அரசாங்கம்.

அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த போது கோவையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த இருக்கிறோம் நீயும் வருகின்றாயா என்று கேட்டார். 

பதினோரு மணி வாக்கில் கேஜிசினிமாஸ் தியேட்டர் முன்புறம் உள்ள டீக்கடையின் முன்பு ஒன்று சேர்ந்தோம். ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசக்கூட விடவில்லை. கைது செய்து விட்டார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சிறிய ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட விடமாட்டேன் என்கிறது இந்த ஜனநாயக ஆட்சி. அடியேனை காவல்துறை அதிகாரி ஒருவர் ”வெயிலில் நின்று கொண்டு சிரமப்படாதீர்கள், மத்தவங்க போராடுகின்றார்கள், நீங்கள் ஏன் சிரமப்படுகின்றீர்கள்?” என்று கேட்டுக் கொள்ள வேறு வழியின்றி வீடு வந்து சேர்ந்தேன். அண்ணனும் ஊர்க்காரர்களும் கைது செய்யப்பட்டு எங்கேயோ கொண்டு போய் வைத்திருந்தார்கள். மாலையில் விடுதலை செய்து விட்டார்கள். 

அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைகளாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. பகடைகள் தானாகவே உருளும் சாத்தியங்கள் உருவாக ஆரம்பித்தால் அரசியல் சதுரங்க விளையாட்டு மாறி விடும். 

மக்களுக்கு எதிரான எந்த ஒரு விஷயமும் அழிந்தே போகும். இல்லையெனில் மக்களுக்கு எதிரானவர்களை காலம் அழித்தே விடும். அரசியல்வாதிகள் வரலாற்றினைப் படிக்க வேண்டும்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.