குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 16, 2017

பழைய சோறும் வெங்காயமும் டாக்டர் விசாகனின் மறைவும்

வாழ்க்கை எண்ணற்ற அனர்த்தங்களை உள்ளடக்கியது. புரிந்து கொள்ள முடியாத பல கணக்கு வழக்குகளைத் தன்னகத்தே கொண்ட மர்மம் பொருந்தியது. அப்படி எனது வாழ்க்கைப் பயணத்தில் என் கூட வந்த ஒருவரின் கணக்கினை முடித்து வைத்தது காலம்.

எனது நண்பரும் பல் மருத்துவருமான விசாகன் அவர்கள் கடந்த வாரம் தான் ஓட்டி வந்த காரால் ஆக்சிடெண்ட் ஆகி மரணமடைந்து விட்டார். நானும் அவரும் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். சென்னையிலிருந்து வரும் வழியில் இரவில் கார் ஆக்சிடெண்ட் ஆகி விட்டது. மறு நாள் காலையில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்றுச் சொன்னவர் இன்னும் வரவில்லையே என்று நினைத்து அழைத்தால் ரிங்க் போய்க் கொண்டிருந்தது. ஒருவரும் எடுக்கவில்லை. சென்னையிலிருந்து அழைப்பு வர எடுத்தால் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார் என்றார்கள்.

இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது. ஆயிரம் கிலோ பாரத்தைத் தூக்கி நெஞ்சுக்குள் வைத்தமாதிரி நெஞ்சு கனக்க ஆரம்பித்தது. கண்களிலிருந்து கண்ணீர் வரவா என்று துடித்துக் கொண்டிருந்தது. பிள்ளைகளும், மனையாளும் வருத்தப்படுவார்களே என  கண்களுக்குள் மனசு தானாகவே கேட்டைப் போட்டது. உடல் சோர்ந்து போனேன். சாப்பிடவே பிடிக்கவில்லை. வருத்தம், துன்பம், துயரம் அனைத்தும் அழுத்த மனசு பாரமாகி விட அன்றைய நாள் முழுவதும் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 

மறு நாள் திருச்சிக்குச் சென்று கடைசியாக அவரின் முகத்தைப் பார்த்ததும் கரையிட்டிருந்த துயரம் வெடித்துச் சிதறியது. உடல் அதிர கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ”அவ்வளவு அவசரமா உங்களுக்கு?” என்று அவரிடம் மனசு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. ஒரே ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில்களைச் சொல்லும் அவர் மவுனமாக கிடந்தார்.

ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த போது மனையாளிடம் ”தங்கச்சி, பழைய சோறு, மோர், சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு, கொஞ்சம் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு கையால் கரைத்துக் கொடும்மா?” என்றார். மனையாளும் செய்து கொடுக்க சாப்பிட்டவர் ”இதுநாள் வரைக்கும் இப்படி ஒரு சுவையான கஞ்சியை நான் குடித்ததே இல்லைம்மா!” என்றுச் சொல்லி அனைத்தையும் குடித்தார். அடியேனுக்கும் கொஞ்சம் கொடுத்தார்.

அவருக்கும் எனக்குமான நட்பு எப்போதுமே சர்ச்சைகள் மிகுந்ததாகவே இருந்தன. அவரின் கருத்துகளும், அவரின் முடிவுகளும் எனக்கு உகந்ததாக இருந்ததில்லை. இருவருக்கும் போனில் வாக்குவாதம் வரும். போனைக் கட் செய்து விடுவோம். ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த போன் வரும். இப்படித்தான் எங்களது நட்பு சென்று கொண்டிருந்தது.

இனி பழைய சோற்றினைப் பார்க்கும் போதெல்லாம் அவரின் நினைவு நிழலாடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியாது என் காலம் வரை. ஆனாலும் காலம் அதற்கான மருந்தினை எனக்கு அளித்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

1 comments:

ராஜி said...

ஆழ்ந்த இரங்கல்கள். எல்லா கருத்துக்கும் ஒத்து போவது நல்ல நட்பல்ல. விவாதத்திற்கு ஈகோ பார்க்காமல் பின் அழைப்பதே நல்ல நட்பு. அதுக்கு உதாரணமா திகழ்ந்திருக்கார் உங்க நண்பர்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.