குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 17, 2014

பெண்கள் சுயநலமானவர்களா?

பள்ளியில் இருந்து வரும்போது அம்மு முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

எனக்குத் தாங்காது.

விஷயமென்னவென்று விசாரித்தேன். 

பையன் லீவு நாளில் பாஸ்கெட் பால் ட்ரெய்னிங்கில் சேர்ந்து விட்டானாம்.
பயிற்சிக்கு அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால்  நாங்கள் யாரும் வெளியூர் போக முடியாது. அம்முவின் ஆண்டி அவளை மஸ்கட்டுக்கு லீவுக்கு அழைத்திருப்பதால் அவள் எப்படி மஸ்கட்டுக்குப் போவது? இதுதான் பிரச்சினை.

உன்னாலே நான் வீட்டுக்குள்ளேயே கிடக்கனுமா? என்று ரித்தியுடன் சண்டை. அதனால் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்தார்.

”உங்க மக ஊரு சுத்தறதுக்கு எம் மவன்(எப்பூடி பேசுறாங்கன்னு பாருங்க) பயிற்சிக்கு போகாக்கூடாதுங்கறளே, இவளைப் பார்த்தீங்களா?”ன்னு கோதை எரியற நெருப்புல எண்ணெயை ஊத்த அம்முவுக்கு பத்திக்கிட்டு வந்துருச்சு. அம்மு கண்ணுல தண்ணி. எனக்கு கிர்ரென்னு இருந்தது. மகள் அழுதுட்டா எனக்கு தன்னாலே பிபி உச்சத்துக்கு எகிறிடும்.

சாப்பிடும் போதும் அம்மு உம்முனே இருந்தார்.

ஒரு வழியா சாப்பிட்டு முடித்து உம்மென்ற முகத்தோடு படித்துக் கொண்டிருந்தார் அம்மு.

நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

”கோதை இன்னும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தால் அம்மு கூட யாராவது விளையாட கூட இருப்பாங்களே”

“ஆமா, என்ன என்ன செய்யச் சொல்றீங்க. எனக்கு இரண்டுதான்னு ஆயிருச்சு” என்றார் கோதை.

”வேற ஏதாவது ஐடியா இருந்தாச் சொல்லேன் கோதை” என்றேன்.

”வேற ஐடியாவா...? இனி ஒன்னே ஒன்னுதான் பாக்கி, நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்” என்றார் கோதை.

”சரி பொண்ணுக்கு எங்கே போறது?”

“ அதான் உங்க அக்கா, தங்கை, மாமா, அம்மான்னு ஆயிரம் பேர் இருக்காங்களே உங்களுக்கு. சொன்னா எங்காவது பிடிச்சு ஒரு பொண்ணைக் கொண்டாந்து நிறுத்திடுவாங்களே!”

”சரி அம்மாகிட்டே போனைப் போட்டுச் சொல்றேன். அம்முக்கு கூட விளையாட ஆள் வேணுமாம். அதானால நானும் கோதையும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்னு ஐடியா, அதனால பொண்ணு பாருன்னு பேசட்டுமா?”

“உடனே அதைச் செய்யுங்க...”

படித்துக் கொண்டிருந்த அம்மு  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு வெளியில் வந்தார்.

”நான் எங்கேயும் போகல. உனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்” என்றார்.

“இல்லம்மா, நீதானே மஸ்கட்டுக்குப் போகனும், ரித்தி இருந்தாதானே நல்லா இருக்கும்னு சொன்னியே” என்றேன்.

“சும்மா சொன்னேன். உடனே அப்பத்தாகிட்டே பேசி பொண்ணெல்லாம் பார்க்கச் சொல்லாதே. நானும் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்ந்துக்கலாம்னு இருக்கேன்” என்றார். அம்முவின் கண்கள் கோதையை ரகசியமாய் சந்தித்தன. அம்மாவும் மகளும் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டதை தெரிந்தும் தெரியாமலும் பார்த்தேன்.

சிரித்துக் கொண்டே அலுவலகம் கிளம்பினேன்.

பெண்கள் எப்போதும் சுய நலமே உருவானவர்களாகவே இருக்கிறார்கள் போல தெரிகிறதே என  நினைத்தேன்.

சுயநலம் எப்போதும் நன்மையைத் தருமென்றால் அது நலம் தானே !

1 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல தலைப்பு .நல்ல பதிவு .நல்ல சிந்தனை .

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.