குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, March 4, 2014

நிலம் (4) - வில்லங்கசான்று

இன்றைய (04.03.2014) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முதல் பக்கச் செய்தி ஒன்று வந்திருந்தது.

அதற்கு முன்பு பத்திரப்பதிவு பற்றிய முக்கியமான விஷயங்களைக் காண்போம்.

சொத்து ஒன்றினை வாங்க முடிவெடுக்கின்றீர்கள். அதற்கு என்னென்ன டாக்குமெண்டுகள் தேவை?

1) விற்பனை செய்யக்கூடிய சொத்தின் பத்திரம்
2) வில்லங்கச் சான்று
3) சொத்து பத்திரத்தின் சர்ட்டிபைடு நகல் 
4) சிட்டா
5) அடங்கல்
6) கந்தாய ரசீது
7) இன்ன பிற சில சான்றுகள்

இதில் வெகு முக்கியமான சான்று - வில்லங்கச் சான்றுதான். இந்தச் சான்றிதழில் சொத்தின் சர்வே எண், எல்லைகள், அதன் விஸ்தீரணம், கிரையம் செய்யப்பட்ட ஆண்டு, கிரைய ஆவணத்தின் எண், கிரையம் கொடுத்தவர், கிரையம் வாங்கியவர், விற்ற விலை போன்ற அத்தனை விபரங்களும் இருக்கும்.

இந்தச் சொத்து இன்னாருக்குச் சொந்தமானது என்பதைக் கட்டியம் கூறும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சொத்தினை வாங்கினாலும் பிரச்சினை வரும் என்று உங்களால் நம்ப முடிகிறதா?  அரசு நாங்கள் கொடுக்கும் வில்லங்கச் சான்று பிழையற்றதாக இருப்பதாக கருத முடியாது என்றுச் சொல்கிறது.தமிழக அரசால் வழங்கப்படும் இந்தச் சான்றிதழ் மட்டுமே ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரை அடையாளப்படுத்தும். 

ஆனால் சமீபத்தில் சென்னை ஹை கோர்ட்டில் நடைபெற்ற வழக்கொன்றில் தமிழக அரசு குறைபாடறற்ற வில்லங்கச் சான்றிதழை வழங்குவது என்பது முடியாது என்றுச் சொல்லி இருக்கிறது. 

இப்படி வழங்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழை வைத்து சொத்து வாங்கிய ஒருவர் நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார். உடனே கைதுதான். வில்லங்கச் சான்றில் வராத சொத்தினை வாங்கியது அவருக்கு பெரும் பிரச்சினையைத் தந்து விட்டது. இது அரசின் தவறு. ஆனால் பாதிக்கப்பட்டது முதலீடு போட்டவர் அல்லவா? (இந்தச் செய்திதான் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கிறது)

பின்னர் எதை நம்பி எப்படித்தான் சொத்துக்களை வாங்குவது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். பின்னர் ஏன் அரசு வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கின்றார்கள் ? அதற்கு ஏன் நாம் பணம் கட்ட வேண்டும்? பின்னர் பதிவுத்துறை ஏன் இருக்கிறது என்று பல வித கேள்விகள் மனதுக்குள் எழலாம்.

இது மிகப் பெரிய பிராஜெக்ட். பிரச்சினை வர வரத்தான் தீர்வுகளை உருவாக்க முடியும். அரசினைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் பழைய சர்வே எண்ணும், புதிய சர்வே எண்ணும் மிகப் பெரிய குழப்பத்தை உண்டாக்கும். பூமியைப் பார்ட் பார்ட்டாக விற்பார்கள். அதனுடைய எல்லைகளை வைத்துதான் ஒரு சொத்தினை அடையாளம் காண முடியும். அதிலும் பலவித குளறுபடிகள் நடக்கும். 

நமக்கும் தெரியாத ஒரு சில நுணுக்கங்களை இந்தத் துறையில் அதிக அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து பெற வேண்டியது அவசியம் என்பது உங்களுக்குப் புரிய வரும். 

பெரும் உழைப்பில் கிடைக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்யும் முன்பு பல வித ஆலோசனைகளை தகுந்தவர்களிடம் கேட்டுப் பெற வேண்டியது அவசியம்.

குறிப்பு: பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பத்திரம் தயாரிப்பது, சொத்தில் இருக்கும் வில்லங்கங்களை நீக்கிச் சரிசெய்வது போன்ற பல்வேறு சேவைகளை எமது நிறுவனம் வழங்கி வருகிறது.

தொடர்பு கொண்டு எமது சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

9 comments:

BABA said...

வணக்கம். எங்களது இல்லத்தினை, அதில் நாங்கள் இன்றளவும் வசித்து வருகையிலே, எங்களுக்குத்தெரியாமல், போலி ஆவணங்கள் மூலம், விற்கிரய ஒப்பந்தம், பொது அதிகாரப்பத்திரம், விற்கிரயம் என பல மோசடி பதிவுகளை ஏற்படுத்தியதை அறிந்து, சார்-பதிவாளர் அலுவலத்தில் வில்லங்க சாண்று கேட்டு இணைய தளம் மூலம் விண்ணப்பித்ததில், வில்லங்கம் எதுவும் இல்லை என்று சான்று கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, நேரில் சென்று பெற்றதில் 5 வில்லங்கங்கள் இருப்பதை அறிந்து விளக்கம் கேட்டமைக்கு, கம்ப்யூட்டரில் சரியாக அப்டேட் செய்யவில்லை என்ற பதில் கிடைத்தது. எப்படியெல்லாம் ரூம் போட்டு ஏமாற்றுகின்றனர் பதிவுத்துறையினர். பதிவுத்துறை போன்ற ஊழல் துறை எதுவும் இருக்க முடியாது.

Thangavel Manickam said...

பிரச்சினை தீர்ந்து விட்டதா பாபா? கமெண்டுக்கு நன்றி. விரைவில் பட்டா பற்றிய பதிவு வர உள்ளது. அடுத்து பாகப்பிரிவினையில் பங்கு பற்றியும் எழுத உள்ளேன். நேரமிருக்கும் போது படித்து மனதுக்குள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Unknown said...

பயனுள்ள நல்ல தகவல் !

Unknown said...

அறிந்து கொள்ளவொரு அரிய தகவல்...

Unknown said...

ஐயா .என் அப்பாவிக்குகும் அவரது சகோதரர்கள் இருவருக்கும் 2.40 ஏக்கர் நிலம் இருக்கின்றது.அதில் மூவரும் சேர்ந்து 1.40 ஏக்கர் நிலத்தை பிரித்து 22 நபர்களுக்கு 1970 ஆம் ஆண்டு முதல் விக்கு வந்துள்ளனர்.2000 ஆண்டு முதல் விற்கவில்லை.கூட்டுபட்டா சொத்தை என் சித்தப்பா ஓருவரே என் அப்பாவிற்கும் இன்னொரு சித்தப்பாவிற்கும் தெரியாமல் பவர் எழுதி கொடுத்து விற்று விட்டார்.அது எங்களுக்கு 2014 ஆம் ஆண்டு தான் தெரிந்து என் சித்தப்பாமீதும் அவரிடம் பவர் வாங்கியவர் மீதும் மேலும் அவரிடம் கிரயம் பெற்ற 10 பேர் மீதும் கிரிமினல் வழக்கு என் அப்பா தொடர்ந்தார்.கோவை சிவில் கோர்ட்டில் என் சித்தப்பா எங்களுக்கு தெரியாமல் எழுதி கொடுத்த பவர் பத்திரத்தை ரத்து செய்யும்படி வழக்கு தொடர்ந்தார். 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு இன்னும் உறுத்துக்கட்டளை கிடைக்கவில்லை. இடம் வாங்கியவர்கள் வங்கி மூலம் கடன் பெற்று 4 வீடுகள் கட்டி குடியேறி விட்டனர்.கிரிமினல் வழக்கில் 2 வருடங்கள் எதிரிகள் ஆஜரானார்கள் இந்த 3 வருடங்கள் நீதிமன்றத்திற்கு யாரும் வருவதில்லை.அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிரிமினல் வழக்கு இறுதியில் என்னவாகும்.சிவில் வழக்கில் என் சித்தப்பா எழுதி கொடுத்த பவர் ரத்தாகுமா.பவர் ரத்தானால் அதற்கு பின்னால் ஆன் 10 பத்திரங்கள் ரத்து ஆகுமா.இடம் வாங்கி வீடு கட்டியவர்கள் நிலமை.ஒருவேளை அனைத்து பத்திரங்களும் ரத்து ஆகிவிட்டால் வங்கி எப்படி வீடு கட்டியவர்களிடம் பணம் வசூலிக்கும். வங்கி கடன் வாங்காமல் வீடு கட்டியவர்களை என்ன செய்வது .வீடு கட்டியவர் வழக்கு முடிந்தபின்னர் வீடு காலிசெய்வார்களா.எப்படி வீடுகட்டியவர்களிடம் எடுத்துக்கூறுவது.எனக்கு தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.வழக்கில் என்ன மாதிரியான தீர்ப்பு வரும்.என் சந்தேகத்தை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Pkk said...

சப் ரிஜிஸ்டர் அலுவகத்தில் ஆவணங்கள் சேதமடைந்தால் வேறு எங்கு கிடைக்கும்

RAJASEKARAN said...

வில்லங்க சான்று பெற "செக்குபந்தி" அவசியமா?

Thangavel Manickam said...

அவசியம் தேவை. தற்போதைய சப்டிவிஷன் நம்பரும் தேவை. துல்லியமான வில்லங்கச் சான்றிதழுக்கு மூன்று தடவை சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கணிணி பிழையும், மேனுவல் சான்றில் மனிதப் பிழையும் சகஜம்

Thangavel Manickam said...

வழக்கு விபரங்கள் எனக்குத் துல்லியமாக தெரிய வேண்டும். சமீபத்தில் ஒருவரின் ஆக்கிரமிப்புச் சொத்தினை வெகு எளிதில் மீட்க உதவினேன். ஆனால் அவர் என்னிடம் சொன்ன வழக்கு விபரத்துக்கும், நான் எடுத்த முயற்சிக்கு தொடர்பே இல்லை. ஆகவே வழக்கு விபரத்துடன் அணுகவும்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.