குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 13, 2012

6000 வருட பழமையான முட்டம் நாகேஸ்வரர் - முத்து வாளியம்மன்


எனது நெருங்கிய நண்பரொருவரின் உதவியால் ஆடிட்டர் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிசினஸ் விஷயமாய் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோசியம் பார்ப்பதாகச் சொன்னார். திருமணம் ஆன நாளில் இருந்து இது வரை நான் ஜோசியம் பார்க்க  சென்றதில்லை. என்  நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் எனது ஜாதகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது ஏதாவது பிரடிக்‌ஷன் சொல்லி வந்தார்கள். முதன் முதலாய் நானும் மனைவியும் ஆடிட்டரை ஜோசியம் சம்பந்தமாய் சந்தித்தோம்.

இன்று காலையில் மூன்று பேரிடம் பிசினஸ் பற்றிப் பேசி இருப்பீர்கள் சரியா? என்றார். மிகச் சரியாக ஆம் என்றேன். அதில் ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றார். அவரையும் கண்டு கொண்டேன் மிகச் சமீபத்தில். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் படமாய் கொட்டுகிறார் ஆடிட்டர். அசந்து போய் விட்டேன். என் வாழ்க்கையில் நடந்த இதுகாறும் எவரும் அறியாத சில சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்ட அசந்து தான் போய் விட்டேன். ஜாதகக் கணிப்பில் இப்படியும் சொல்ல முடியுமா என்ற பிரமிப்பு சூழ்ந்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டோம்.

மற்றொரு நாள், என்னை காளஹஸ்தி சென்று வரும்படிச் சொன்னார். அதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொன்ன போது, சரி பரவாயில்லை கோவை, ஆலந்துறையில் இருக்கும் முத்து வாளியம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்றார். பல கோவை நண்பர்களிடம் இக் கோவில் பற்றி விசாரித்தேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரிச் சொன்னார்கள். கோவில் இருக்குமிடமும் சரியாகத் தெரியவில்லை. காட்டுக்குள் இருக்கிறது என்றார் ஒருவர். கிராமத்திற்குள் இருக்கிறது என்றார் மற்றொருவர். இப்படியே சில பல விபரங்கள் கிடைத்தாலும் அது முழுமையானதாக இல்லை. சரி என்னவானாலும் பரவாயில்லை, ஆலந்துறை சென்று விசாரிப்போம் என்று கருதிக் கொண்டு கிளம்பினேன். 

வட்டத்தில் கால் வாசியை வெட்டினால் எப்படி இருக்கும் அப்படியான பூமிக்குள் நுழைந்தேன். மூன்று பக்கம் மலைகள் சூழ இருந்த ஆலந்துறையைக் கண்டுபிடித்து, அப்படியே செம்மேடு வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் “முத்து வாளியம்மனும், முட்டம் நாகேஸ்வரரும்” இவர்கள் குடிகொண்டிருக்கும் கோவிலையும் கண்டு கொண்டேன். சுற்றி வர மலை, பச்சைப் பசேல் செடிகள், மலையில் ஆங்காங்கே வெள்ளியை உருக்கி வார்த்தது போல நீர் வீழ்ச்சிகள், மேகங்கள் தழுவும் மலை முகடுகள், சில்லென்று காற்று, அவ்வப்போது தூறல்கள் என்று இயற்கை அன்னையின் அருள் தவழும் அற்புதமான இடம். மனச் சஞ்சலம் சுத்தமாய் அவ்விடத்தில் நம்மை விட்டு நீங்கி விடுகின்றது. சில்லென்று சூழ் நிலையில், மனம் ஒன்றிப் போய் இருவரையும் தரிசித்து விட்டு வந்தேன்.  

தடையால் நிற்கும் காரியங்கள், திருமணங்கள், முன்னோர்கள் செய்த பாவங்களால் அவஸ்தைப்படுவோர், துன்பத்தில் உழல்வோருக்கு அற்புத மனச் சாந்தியையும், ஆனந்தத்தையும் அருள்கிறார்கள் இருவரும். இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையம் இருக்கிறது. 

ஆறாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருவரும் இவ்விடத்தில் இருக்கின்றார்கள் என்றார் ஆடிட்டர். முத்துவாளியம்மனுடன் பிறந்தவர்கள் தான் மதுரை மீனாட்சியும், கன்னியாகுமரி அம்மனும். 

ராகு, கேது பரிகார ஸ்தலம். ராகு காலத்தில் சிவனுக்குப் பால் அபிஷேகம் செய்கின்றார்கள். கறந்த பசும் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். பல ஆதீனங்களும் மடத்தினரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை புதுப்பொலிவு பெறச் செய்திருக்கின்றார்கள்.

ராகு கேது பரிகாரம் தேடுபவர்கள் “முத்து வாளியம்மனிடமும், முட்டம் நாகேஸ்வரரிடமும்” செல்லலாம். நிச்சயம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். நிறைவேற்றியே தீருவார்கள்.

உங்களுக்கு அய்யன், அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் !

- கோவை எம் தங்கவேல்

7 comments:

PALDURAI said...

Sir
Will you please reveal how to go allandurai from coimbatore.
Thanks fro your article.
kasi rajan
Puducherry

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தகவல் பகிர்வுடன் ஒரு அறிமுகம்... குறித்துக் கொண்டேன்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...


அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

Thangavel Manickam said...

ஆலந்துறை செல்ல வழி : கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் பயணிக்கும் போது ஆலந்துறை வரும். ஆலந்துறையிலிருந்து ஈஷா யோக மையம் செல்லும் வழியில் செம்மேடு என்ற ஊர் வருகிறது. அந்த ஊரில் இருந்து கிழக்குப் பக்கமாய் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அய்யனும், அம்மனும் இருக்கின்றார்கள். சென்று வாருங்கள் !

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றி செய்திக்கும் பதிவிற்கும்...

கடலோரக் கவிதைகள் படத்தில் காட்டிய முட்டம் கிராமமும் இதுவும் ஒன்றா?

Anonymous said...

நல்லதொரு தகவல் .. ஆனால் நீங்கள் சொல்லும் 6000 பழமை என்பது நம்பும் படியாக இல்லை .. ஏனெனில் .. இந்தியாவின் எந்தவொரு கோவிலும் அந்தளவு பழமை வாய்ந்தது இல்லை ... !!!

ரேடியோ கார்பன் டேட்டிங்க் செய்யப்பட வேண்டும், அப்போது தான் அதன் வயதை நிர்ணயிக்க முடியும் ... !!!

6000 ஆண்டுகள் பழமை எனில் நிச்சயம் இது UNESCO பாரம்பரிய சின்னமாக அல்லவா இருந்திருக்கும் ..

6000 ஆண்டுகள் பழமையான காலத்தில் இருந்தவை பிரமிட்கள் போன்றவை தான். அத்தகைய காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் கோவில் கட்டும் அளவுக்கு நாம் நாகரிகம் அடையவில்லை..

ஆக உண்மைக்கு புறம்பான செவி வழிச் செய்திகளை உண்மை போல எழுத வேண்டாம்.. கோவிலின் பெருமைகள் கூறுங்கள் .. அது நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் நாம் ஒன்றும் கூறப் போவதில்லை. ஆனால் இந்த 6000 ஆண்டுகள் தான் உதைக்குது !!!

Thangavel Manickam said...

இக்பால் செல்வன் யுனெஸ்கோ அங்கீகாரம் இருந்தால் தான் அது 6000 வருடம் பழமையானது என்றுச் சொல்வது நமது தமிழர் நாகரீகத்தில் சாத்தியம் இல்லை. கார்பன் டேட்டிங் செய்து கண்டுபிடித்தல் என்பதெல்லாம் ஆன்மீக மார்கெட்டிங்க் மற்றும் வியாபாரம் சார்ந்தது.

ஆன்மீகம் என்பது அறிவியல் சார்ந்தததாய் நிச்சயம் இருக்க முடியாது.

எனது சிறு வயதில் நானொரு தமிழ் புலவருக்கு பாடல்களை அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுப்பேன். அதை அவ்ர் பிரிண்டிங் செய்ய கொடுப்பார். என் கண் எதிரில் வில்வ இலையை சிவபெருமான் கோவில் வாசற்படியில் வைத்து கண்மூடி பிரார்த்தித்தார். அப்போது இலைகள் சூடம் போல எரிந்தன. அதை அவர் இறைவனுக்கு தீபராதனை செய்தார். இதை எந்த அறிவியல் கண்டுபிடிக்க முடியும்.

நான் சித்தர்களுடன் பழகி வருபவன். வெகு சாதாரணமாய் இருப்பவர்கள் அவர்கள். மக்களோடு மக்களாய் வாழ்பவர்கள் அவர்கள். அவர்களால் கைகாட்டப்பட்ட விஷயத்தை நான் எழுதுகிறேன்.

உங்களுக்குத் தேவையான கார்பட் டேட்டிங் போன்றவை என்றாவது ஒரு நாள் தேவையென்றால் அய்யனும், அம்மனும் உலகிற்கு காட்டுவார்கள்.

என்னால் சில பேருக்கு அய்யனும், அம்மனும் தெரிய வேண்டுமென்றிருக்கிறது. அதை நான் செய்து விட்டேன்.

Thangavel Manickam said...

அறிவன் - அது வேறு இது வேறு.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.