குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, April 16, 2012

சவக்கடை (அனைவரும் படியுங்கள் ப்ளீஸ்)




எனக்காக இன்றைக்கு மட்டும் ஒரு ஒரு தடவை என்று ஆரம்பிக்கப்படும் குடி, அடுத்து மாதமொருமுறை என்று மாறும். அடுத்து வாரம் ஒரு முறை என்றாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று மாறி, பின்னர் வீட்டிலேயே குடிக்கலாம் என்று (உபயம் : தமிழ் சினிமாக்கள்) மாறி, பின்னர் தினம் தோறும் ஒரு சுமால் பிறகு ஆஃப் என்று தொடர்ந்து புல் ஆகி விடும். பிறகு குடிக்காமல் இருந்தால் கைகள் நடுங்க ஆரம்பித்து, வேறு வழி இன்றி தினமும் உணவு போல குடி மாறி விடும். நோய்கள் உருவாகும். மருத்துவம் ஆரம்பிக்கும். குடிக்கான சிகிச்சை ஆரம்பிக்கும். 

முடிந்து வீடு வருபவருக்கு, ஒரு சொட்டு குடித்தால் என்ன என்று தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பிப்பார். நடுக்கமெடுத்த கைகள் குடியை நிறுத்தி மீண்டும் குடிக்க ஆரம்பித்த பிறகு தன்னை அறியாமலே உளற ஆரம்பிப்பார்கள். மனைவியை சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். உறவினர்களுடன் வம்புக்குச் செல்வார்கள். நண்பர்களுடன் சண்டைக்குப் போவார்கள். வெளியிடங்களில் குடித்து விட்டு விழுந்து கிடப்பார்கள். ஆல்கஹால் உடம்பை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் சூழலில் மனைவியை அல்லது நண்பர்களை கடித்து வைப்பார்கள். 

இந்த நிலை தான் ஆல்கஹால், தனக்கு அடிமையானவனை முடித்துக் கட்டக் கூடிய நிலை. அடுத்து திடீரென தற்கொலைக்கு முயல்வார்கள். ஆல்கஹால் இதைத்தான் செய்கிறது. குடிக்கும் மனிதனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சமூகத்தில் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி கொன்று போடும். 

மானம் போய், மரியாதை போய், காசு போய், முடிவில் உயிரும் போய் விடும். குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும். குடிகாரன் மனைவி, குடிகாரன் மகள், மகன் என்று சமூகத்தில் ஒரு அடையாளமும் இலவசமாய் கிடைக்கும். 

யார் யாரெல்லாம் பீர் குடிக்கின்றார்களோ (வெயிலுக்கு குடிக்கிறேன் பேர்வழி என்று அலப்பறை செய்யும் லூசுகள்) அவர்களுக்கும் இதே நிலைதான். ஆல்கஹாலை எவன் ஒருவன் விரும்புவானோ அவனை அது பேயாய் பிடித்துக் கொள்ளும். எனது நண்பனொருவரின் அண்ணன் குடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆல்கஹாலின் பிடியில் எப்படி விழுந்தார் என்பதைத்தான் மேலே எழுதி இருக்கிறேன். ஆல்கஹால் குடிப்பது என்பது ஃபேஷன் அல்ல அது கொஞ்சம் கொஞ்சமாய் உடலுக்குள் ஆக்ரமித்துக் கொல்லும் விஷம். குடிப்பவர்கள் உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

டாஸ்மாக் என்பது சவமாய் மாற மனிதர்களை ஊக்குவிக்கும் ஒரு சவக்கடை என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

7 comments:

சேகர் said...

கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்தவேண்டிய அரசு மதுபான கடைகளை நடத்தினால் மக்கள் திருந்த வழியில்லை...

துளசி கோபால் said...

தலைப்பு உண்மை!!!!

நெருங்கிய நண்பர் குடிகாரராகிக் கடைசியில் தற்கொலை செய்துகொண்டார்:(

ப.கந்தசாமி said...

உண்மை.

கூடல் பாலா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு!

Anonymous said...

உண்மைதான் !!! ஆனால் நம்ம ஊர் வித்யாசமான ஊர். இப்போதெல்லாம் யாராவது குடித்தால் எல்லோரும் தான இப்படி இருகாங்கன்னு சமாதானம் பட்டு கொள்ளும். ஆனால் உடம்புக்கு நல்லது என்று சைக்கிள்ல போனா கஞ்ச பிசினாரின்னு தூற்றும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு சார் !

அமர பாரதி said...

அருமையான பதிவு. வேறு எந்தக் காரணத்தை விடவும் ஏழு மணியிலிருந்து ஓரிரு மணிகளைக் கொல்வதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமை. இதில் வித்தின் லிமிட்ஸ் என்பதற்கு அர்த்தமே இல்லை.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.