குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 29, 2012

ஜனதா சாப்பாடும் கோவை ஸ்பெஷல் சாம்பாரும்




இந்தியாவின் நான்காவது பிரதமர், காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி மூலம் வந்தவர், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் இன்று. ஆட்சியில் இருந்த போது, முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சிக்கு பிறகான  ஜன நாயக ஆட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி அவர் ஆட்சிக்காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கும்படி மிகத் திறமையான ஆட்சியும் கொடுத்தார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு ஹோட்டல்களிலும்,  ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு போடும் படி, ஹோட்டல் தொடங்கியவர்களுக்கு கண்டிஷன் போட்டு அதைச் செயல்படுத்தியும் வந்தார். அனேகர் முகம் சுளிக்கும் யூரின் தெரபி என்ற வைத்தியத்தியமும் அவரால் பிரபல்யமானது.  99 வயது வரை வாழ்ந்த பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம். ஏனென்றால் ஊழல் கறை அற்ற உன்னதமான பிரதமர் அவர்.

இன்று இமாலய ஊழல் செய்யும் சக அமைச்சரைக்கூட என்ன செய்கின்றீர்கள் என்று கேள்வி கேட்கக்கூட முடியாத பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம். செயலற்ற பிரதமரை மட்டுமல்ல அரசு அலுவலர்களைக் கூட மக்களின் ஜன நாயகத்தால் எதுவும் செய்ய முடியாது என்கிற போது, மக்களின் இந்த ஜன நாயகத்தால் என்ன பிரயோசனம் என்பது எனக்குப் புரிவதே இல்லை.

கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று ஒன்று இருக்கிறது. அதுபற்றி பலருக்குத் தெரியாமலே போய் விடும் என்பதால் அதை நினைவு படுத்துவதற்காக தொடர்கிறேன்.

காயலான் கடைக்குச் சென்றீர்கள் என்றால் உடைந்து போன பல சாமான்கள் கிடக்கும். துருவேறி, உடைந்து, சிதைந்து போய் கிடக்கும் காயலான் பொருட்களை வைத்து தென்னகத்தில் ஓடும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்குச் சென்று வரும் போதெல்லாம் ஏசி கோச்சின் இருக்கைகள் பற்றி பல சிறுகதைகள் எழுத வேண்டுமென தோன்றும். ஒவ்வொன்றும் காலொடிந்து, சீட் கிழிந்து, பசை போல் ஒட்டும் தூசிகளை உப பொருளாய்க் கொண்டு இருக்கை போலத் தெரியும். இருக்கைகளுக்கிடையே அவ்வப்போது கரப்பான்கள் நம்மை வந்து வரவேற்றுச் செல்லும். கரப்பான்பூச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் உச்சஸ்தானியில் அலறும் சத்தம் ரயில் போடும் சத்தத்தை விட அதிகமானாலும் ஏனென்று கேட்க நாதியின்றி போகின்ற போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் திரு மம்தா பானர்ஜியின் கனவுத் திட்டமான துரந்தோ ரெயில் சேவை பற்றி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரை வந்தது. 625 ரூபாய் கொடுத்து கோவையிலிருந்து சென்னைக்கு நிற்காமல் செல்லும் துரந்தோ ரயிலில் சாம்பாருடன் இலவசமாய் கரப்பான் பூச்சிகளையும் சேர்த்துக் கொடுப்பார்களாம். அதைத்தான் நான் கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று பெயர் வைத்து அழைக்கிறேன். சாம்பாரில் கத்தரிக்காய் மிதக்கும், முருங்கை மிதக்கும், உருளை மிதக்கும். ஆனால் கோவையிலிருந்து செல்லும் துரந்தோ ரெயிலில் வழங்கப்படும் சாம்பாரில் கரப்பான் மிதக்குமாம்.

கேரளாவிலிருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலும் புத்தம் புதிதாய் மின்னும். ஆனால் தமிழகத்தில் ஓடும் ஒவ்வொரு ரயிலும் காயிலான் கடையில் இருந்து வந்தது போல இருக்கும். இத்தனைக்கும் உள்துறை அமைச்சரிலிருந்து, இணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என்று தமிழகத்தில் இருந்து ஏகப்பட்ட அமைச்சர்கள் மத்திய அரசில் இருக்கின்றார்கள். இருந்து யாருக்கு என்ன புண்ணியம்? இது  ஜன நாயக நாடு அல்லவா?
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 27, 2012

சைனாவில் இலவசமாய் படிக்கலாம்

போகின்ற போக்கினைப் பார்த்தால் சைனா இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள் போல. பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மா நிலமான அருணாசலத்திற்குள் சென்ற உடன், அது திபெத்தின் பகுதி என்று சைனா அறிக்கை விடுகிறது. அமைதியின் மறு உருவமான பாரதப் பிரதமர் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்ற போது கூட இதே போல லொள்ளு செய்தார்கள். இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கிறதென்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள். இல்லையென்றால் இந்த நேரம் இந்தியாவை அப்படியே விழுங்கி விட்டிருப்பார்கள் போல. உடனே நமது வெளியுறவுத்துறை அமைச்சர் (ஆச்சரியத்திலும் ஆச்சரியம்) சைனாவின் எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். யாருக்காவது பயன்படும் என்பதால் இப்பதிவு மலர்கிறது.

சைனாவும் இந்தியாவும் இணைந்து வழங்கும் ஸ்காலர்ஷிப் படிப்புகள் பற்றிய விபரம் கீழே.

எவ்வளவு ஸ்காலர்ஷிப் ?

சைனா டியூசன் காஸ்ட், போர்டிங், லாட்ஜிங் மற்றும் மெடிக்கல் செலவுகளை இலவசமாய் ஏற்றுக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் 15,000, 10,000, 8,500 ரூபாய்கள் ரிசர்ச், முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்பவர்களுக்கு மாதம் தோறும் செலவுகளுக்கு வழங்குகிறது. இந்தியா 9,000 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவுகளை ஏற்கிறது. (ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா?)

என்னென்ன படிப்புகள் ?

Chinese Langugage and Litereature, Business Management(MBA), Plant Breeding and Geneticts, Environmental Science, Fine Arts (Painting and Sculputre), Agronomy, Sericulture and Botany. Application made in other fields will not be considered.

என்ன தகுதி ?

இளங்கலை, முதுகலை படித்தவர்கள் அப்ளை செய்யலாம். சைனீஸ் மொழி புரிந்து கொள்ள வேண்டியது முக்கிய விதி. வேலை செய்பவர்கள் கூட அப்ளை செய்யலாம்.

எப்படி அப்ளை செய்வது?

தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அப்ளை செய்யலாம்.

இணையதளம் : www.education.nic.in/scho_announcements/

ஆன்லைன் அப்ளிகேஷன்ஸ் - www.sakshat.ac.in

என்னென்ன டாக்குமென்ட்டுகள் தேவை?

அப்ளிகேஷன் பார்முடன் கல்விப் படிப்புச் சான்றிதழ்கள், பிறந்த நாள் சான்றிதழ், 500 வார்த்தைகளில் உங்களைப் பற்றிய குறிப்புகள்

வயது வரம்பு ?

40 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி : மார்ச் 30க்குள்.

இதோ அதுபற்றிய விபரங்கள் - சைனாவில் படிப்புகள்
 
படிக்க விரும்புவோர் அப்ளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, February 25, 2012

மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 ப்ரிய மகளுக்கு !

இன்று பிறந்த நாள் காணும் உனக்கு உன் பெரியப்பாவின் அன்பும், ஆசீர்வாதமும்.








- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 20, 2012

அருவி - ஒரு ஒன்லைன் கதை

நடு நிசி. யாரோ தண்ணீருக்குள் நடக்கும் பொலக் பொலக் சத்தம். உற்றுப் பார்த்தால் இரண்டு உருவங்கள் கண்மாய்க்குள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உருவமும் ஜட்டி மட்டும் அணிந்திருக்கின்றன. மேலே ஒன்றுமில்லை. ஒரு உருவத்தின் தோளில் சாக்குப் பை போல ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு உருவம் தண்ணீருக்குள் கை விட்டு துலாவிக் கொண்டே நடக்கிறது.

ஒரு உருவம் கையை மேலே தூக்க, முரட்டு மீன் நிலவொளியில் துள்ளுகிறது. அதைப்  பிடித்து கோணிக்குள் திணிக்கும் போது, யாரங்கே?ன்னு” குரல் கேட்க, குரல் கேட்ட திசையைப் பார்க்க, அங்கு கையில் கம்போடு சத்தம் போட்டுக் கொண்டே ஒரு உருவம் ஓடி வருவதைப் பார்த்த இரு உருவமும், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றன.

வாய்க்கால், வரப்புகளைத் தாண்டி மரங்கள் சூழ்ந்த பகுதிக்குள் நுழைந்த அந்த உருவங்கள் ஓரிடத்தில் மூச்சு வாங்க நிற்கின்றன. அவர்கள்தான் முத்தையன்,மல்லையன். முத்தையன் மல்லையனைப் பார்த்து மூச்சு வாங்க வெற்றிப் புன்னகை பூக்கிறான். மல்லையன் அப்படியே தரையில் விழுகிறான்.

கோணிப்பைக்குளிருந்து இரண்டு விரால் மீன்கள் நழுவி வெளியில் வருகின்றன.இருவரும் வெற்றிப் பெருமிதத்தோடு அந்த மீன்களைப் பார்க்கின்றனர்.

காலையில் முத்தையன் ஊருக்குள் வரும் காவல்துறையினர், முத்தையனையும் மல்லையனையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

காவல்துறையினர் எப்படி சரியாக இருவரையும் அடையாளம் கண்டார்கள்? மீன் பிடித்ததற்காகவா காவல்துறை இவர்களைக் கைது செய்தது? ஏன் கைது செய்தது? என்ன காரணம்? (கதையின் நகர்வு இந்தப் பிரச்சினையை வைத்துதான் நகர்கிறது) 

முத்தையன் இளம் வாலிபன். மல்லையன் முத்தையனின் பக்கத்து வீட்டுக்கார தோழன். முத்தையன் எள்ளலும், எகத்தாளமும் உடையவன். அவனுக்கு சரியாக மல்லையன். முத்தையனின் அப்பாவிற்கு இருக்கும் நிலங்கள் மூலமாய் வருமானம் வருவதால் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவுகளுக்கு முத்தையனுக்குப் பிரச்சினை இல்லை. ஊர் சுற்றல், அங்கங்கே ரகளை என்று திரிகின்றவன். இப்படியான நாட்களில் ஒரு நாள், கட்சிக்காரர் ஒருவரைப் பகைத்துக் கொள்கிறான். கட்சிகாரருக்கு முத்தையனைக் கண்டாலே ஆவதில்லை. அதே போல முத்தையன் கட்சிக்காரரைப் பார்த்தாலே எரிமலையாகி விடுவான்.

இதற்கிடையில் வீரபாண்டி என்பவரைச் சந்திக்கும் முத்தையன் அவருடன் கைகோர்க்கிறான். அதன் காரணமாய் அவன் அரசுக்கு எதிரான தீச்செயல்களில் ஈடுபடுகிறான். முத்தையன் அப்பாவின் நண்பர் ஏட்டாக இருக்கிறார். அவர் முத்தையனின்  நட்பு பற்றி, அப்பாவிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கும்படிச் சொல்கிறார்.

முத்தையனின் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள். அதன்படி பக்கத்து ஊரில் இருக்கும் தன் உறவினரிடம் பெண் பார்க்கச் சொல்ல, அவர்களும் முத்தையனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைச் சொல்ல முத்தையனை வற்புறுத்திப் பெண் பார்க்கச் செல்லும்படிச் சொல்கின்றார்கள் பெற்றோர்கள்.

முத்தையன் அருவியைச் சந்திக்கிறான். அருவி குணத்தால் அழகானவள். படுரகளையானவள். ஏட்டிக்குப் போட்டி என்றாள் அருவிதான். அத்தனையும் குறும்பு. முத்தையனின் முரட்டுத்தனமும், அருவியின் குறும்பத்தனமும் ஒன்று சேர, காதலில் விழுகின்றார்கள். காதலியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அவனுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்சினை வந்து, அவளைச் சந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஏன் இப்படியாய் பிரச்சினை வருகிறது என்பது அவனுக்குப் பெரும் புதிராய் இருக்கிறது.

காதலியைச் சந்திக்க விடாமல் தடுப்பது எது? யார்? ஏன்? எதற்கு? 

முத்தையன் வீட்டில் திருமணத் தேதியைக் குறிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீரபாண்டியுடன் அரசுக்கு எதிரான ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறான் முத்தையன். இதன் காரணமாய் முத்தையன் அந்தப் பகுதி முழுவதும் பிரபல்யமாகின்றான்.காவல்துறை முத்தையனைத் தேடுகிறது.

தேதி குறிக்கச் செல்லும் முத்தையன் அங்கு தனக்கு மனைவியாக வரப்போகிற அருவி, தன்னால் முன்பு வெறுக்கப்பட்ட கட்சிக்காரரின் மகள் என்பதையும், அந்தக் கட்சிக்காரர் தன்னுடைய உறவினர் என்பதையும் அறிகிறான்.

ஆரம்பத்தில் காவல்துறை ஏன் முத்தையனைக் கைது செய்தது? யார் அந்த வீரபாண்டி? அவர் ஏன் அரசுக்கு எதிராய் நடக்கிறார்? இவர் கூட முத்தையன் ஏன் சேர்ந்தான்?  காவல்துறையினரையின் வழக்கிலிருந்து எப்படித் தப்பித்தான்? தன்னை வெறுத்த கட்சிக்காரரின் மகளை எப்படித் திருமணம் செய்தான்?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல் 

Saturday, February 18, 2012

மதமும் மனிதனும் - மயிலிறகுகள்

ஒவ்வொரு மனிதனையும் கேட்டுப்பாருங்கள். ஆயிரமாயிரம் ஏமாந்த கதைகளைச் சொல்வான். அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், மாமியார், மாமனார், மகள், மகன், மனைவி என்றொரு தான் ஏமாந்த லிஸ்டை எடுத்து விடுவான். அதுமட்டுமின்றி தான் செய்த தவறாலே தான் சில துன்பங்களை அனுபவிக்கிறேன் என்று கூட வேதாந்தியாய் பேசுவான். மனிதனுக்கு துன்பங்கள் அவனது உறவுகளாலே, நட்புக்களாலே வரலாம். சில துன்பங்கள் சம்பந்தப்படாத பிறராலே வரலாம். இந்தத் துன்பங்கள் எல்லாம் விலகக்கூடியன. இப்படியான துன்பங்களிலிருந்து விடுபட அனுபவம் மட்டுமே உதவி செய்யும்.

மனிதனுக்கு வயது ஏற ஏறத்தான் உலகத்தின் மாயை மீதான உண்மைகள் புலப்படும். ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பார்கள். உலகத்தின் நியதி மனிதனை தனிமைப்படுத்தி விடுவது. ஆனால் மனிதன் தானொரு பெரும் கூட்டத்தினை உடையவன் என்று நம்பிக் கொள்கிறான். அது உண்மையல்ல. ஒவ்வொரு மனிதனும் தனிமையானவன்.

ஒரு நண்பர் பெரிய கம்பெனி ஒன்றில் மேலதிகாரியாய் இயங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கேட்காமல் முதலாளி ஒரு ஃபைலில் கூட கையெழுத்துப் போடமாட்டார். இவர் தான் அக்கம்பெனியின் முக்கியமான ஆதாரமாய் இருந்தார். அது உலகெங்கிலும் கிளைகள் பல கொண்ட கம்பெனியின் அத்துணை பணியாட்களுக்கும் தெரியும். அப்படியானவருக்கு திடீரென்று உடல் நோய் கண்டது. ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் ஒரு மாதம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. கம்பெனியிலிருந்து முதல் நாள் அனைவரும் வந்து விசாரித்துச் சென்றார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனி ஆட்களின் வரத்து நின்று விட்டது. நோயில் படுத்திருக்கும் போது கூட கம்பெனி நினைவாகவே இருந்தார். மனைவியோ பிரபல கல்லூரியின் முதல்வர். மகளும் மகனும் அமெரிக்காவில். பேரன் பேத்திகள் ஹாஸ்டல் கல்விக் கூடங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள். நாளாக நாளாக அவர் பரபரப்பான உலகத்தின் கவனிப்பில் இருந்து ஒதுக்கப்பட்டார். அவர் தனிமைப் படுத்தப்பட்டார். இதுவரையில் அவரின் நினைவுக்கே வராத “கடவுள்” அவரின் நினைவுகளில் நிழலாடினார். துன்பப்படுபவர்களை நோக்கி தன் கரங்களை நீட்டும் ஒன்று தான் மதம் என்கிற கடவுள். ஆதரவிற்கு யாருமின்றி தவிப்போருக்கு இதோ நானிருக்கிறேன் என்றுச் சொல்லி அரூபமாய், தோற்றமின்றி, கதைகளாய், கருத்துக்களாய்,வேதாந்தமாய், நிச்சயமற்ற பலவகை உருவங்களாய் தோற்றத்தினைக் காட்டி தன் இருப்பினை கடவுள் காட்டுவார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை ஆராய்ச்சி செய்வதல்ல நோக்கம்.

எந்த மதமாக இருந்தாலும் சரி அது நோயுற்ற மனிதர்களை நோக்கி உங்களைக் குணப்படுத்துகிறேன் என்று அழைப்பு விடுக்கும். பிரச்சார கூட்டங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். யோகா முதற்கொண்டு பரிசுத்தமளிக்கும் கூட்டம் வரை நோயுற்றவர்களையே மதம் அதிகம் அழைக்கிறது. ஆரோக்கிய மனிதர்களுக்கு மதத்தின் தயவு தேவை இல்லை. ஆரோக்கியம்மற்றவர்களுக்கும், ஏழ்மையில் வாடுபவர்களுக்கும் மதம் வரம் தரும் ஒரு அற்புதமாய் தென்படுகிறது. கடவுளின் மீதான அதிகப்பட்ட நம்பிக்கையை நோயுற்ற மனிதனும், ஏழ்மை நிலையில் இருப்போரும் அதிகமாகக் கொண்டுள்ளனர். நன்றாக இருப்போர் எவராவது தினசரி வாழ்வில் கடவுளைப் பற்றி நினைப்பதுண்டா என்று கேட்டால் “சிரிப்பார்கள்”. அவர் ஒரு பக்கம் இருக்கட்டும், எனக்குத் தேவையென்றால் அவரிடம் செல்வேன் என்பார்கள்.

இது தான் உலகியலின் தன்மை. தேவையான போது பயன்படுத்திக் கொள்வதுதான் மனித இயல்பு. தேவையற்ற போது அது மூலையில் கிடைக்கும் ஏதோ ஒரு வஸ்துவாகிவிடும்.

ஒவ்வொரு மதமும் அன்பினைத்தான் போதிக்கின்றன. ஆனால் உலகில் ஒவ்வொரு நொடியும் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் பிறக்கும் முன்பே அவன் என்ன மதம் என்கிற முத்திரை குத்தப்படுகிறது. மதத்தினை அவன் தாய்ப்பாலுடன் சேர்த்து அருந்துகிறான். அப்பேர்ப்பட்ட மத போதனைகளால் மனிதன் தன் துர்குணத்தினை விட்டானில்லை. மீண்டும் மீண்டும் அவன் துர்ச்செயல்களைச் செய்து கொண்டே தான் இருக்கிறான். ஆக மதத்தின் பயன் தான் என்ன?

மதம் இருக்கிறது. அது இயலாதவர்களுக்குத் துணையாய் இருக்கிறது. இயன்றவர்களுக்கு மதம் பற்றிய கவலையோ கடவுள் பற்றிய பயமோ இல்லை. ஆக மதத்தின் இருப்பு என்பது ஒரு கேள்விக்குறியை நம்மை நோக்கி எழுப்புகிறது. விடை என்ன?

அது யாருக்குத் தெரியும்?


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


Tuesday, February 14, 2012

மயிலிறகுகள் - நாராயணசாமி வாத்தியார்

ஆவணம் கிராமத்தின் வடக்கே இருக்கும் ஆவிகுளத்தின் வடக்குப்புறமாய் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பழைய சைக்கிள் ஒன்றில் குட்டையாய், முறுக்கிய வெள்ளி மீசையுடன் வாயில் ஒரு அங்குலம் குறுகலும், ஐந்து அங்குலம் நீளம் இருக்கும் சுருட்டை வாயில் வைத்து புது வித சைக்கிள் புகை வண்டியாய், குனிந்த வளைந்த முதுகுடன் ஒரு உருவம் செல்வதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது செட்டியாரின் பொட்டிக் கடையில் அடிக்கடி அந்த உருவம் எதிரில் தென்படும். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது.

தேர்வு முடிவு எப்பவும் எதிர்பார்த்தது போலத்தான் வரும். ஆகவே அடுத்த வருடம் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும். அக்கா “விக்டோரியா டீச்சரு மாசமா இருக்காரு, அவரு பிள்ளைய தொட்டில் ஆட்டலாம்” என்பார். விக்டோரியா டீச்சரு கைத்தொழில் கற்றுத்தரும் டீச்சர்.  முஸ்லிம் தெருவில் குடியிருந்தார். நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது அவருக்கு “செந்தில்” என்றொரு மகன் பிறந்திருந்தான். நம்பவே மாட்டீர்கள். அக்கா சொல்லியது போல “பையனை” நான் பார்த்துக் கொண்டேன்.

ஆறாம் வகுப்பு “ஏ” கிளாஸ் ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த அறையில்தான் நடந்தது. மண்ணில் தான் உட்கார வேண்டும். சுவற்றில் போர்டு இருக்கும். அதற்கு கரி,ஊமத்தம் இலைக் கலவையைக் கொண்டு கருப்பு வண்ணம் ஏற்றுவோம். போர்டுக்குப் பின்னால் சமையல்கட்டு. மதியம் நேரம் சாம்பார் வாசம் தூக்கும். ஆனால் என்னால் சாப்பிட முடியாது. சாப்பிட்டது தெரிந்தால் மாமாவால் முதுகு தோல் உரிக்கப்பட்டு உப்பு தடவப்படும். அந்தப் பயத்திலேயே பத்தாம் வகுப்பு வரை அந்தச் சாப்பாட்டினை “திருட்டுத் தனமாய்” சாப்பிட்டுக்கின்றேனே தவிர சந்தோஷமாய் சாப்பிட்டது கிடையாது. மாமாவிடம் போட்டுக் கொடுக்க பக்கத்து வீட்டு கடுகுத்தேவரின் பையன் பாலு ரெடியாக இருப்பான். அவனுக்குத் தெரியாமல் சாப்பிட நாகராஜன் என்ற நண்பன் தான் உதவி செய்வான்.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதிதில் தான் அந்த சுருட்டு வாத்தியாரை பிரேயரின் போது பார்த்தேன். அவரின் மீசை என்னைப் பயமுறுத்தியது. மாமாவின் மீசைக்கு முன்னால் சாரின் மீசை பிச்சை வாங்கனும். இருப்பினும் அதன் கத்தி போன்ற அமைப்பு என்னைப் பயமுறுத்தி விடும். அவரைப் பார்த்தாலே அடிவயிற்றில் புளி சுரக்கும். அவர் எங்களுக்கு வரலாறு பாடம் எடுக்க வந்தார். அடிக்கடி இருமிக் கொண்டு, அந்தச் சுருட்டினை விடாமல் புகைத்துக் கொண்டிருப்பார். கர கர குரலில் பாடம் சொல்லிக் கொடுப்பார். கல்லூரி படிப்பு முடித்து விட்டு ஒரு முறை வீட்டிற்குச் செல்லும் போது அவரை பார்க்க நேர்ந்த போது, அதே பய உணர்வு என்னிடத்தில் தோன்றி மறைந்தது. அதே பழைய சைக்கிளில் வாயில் சுருட்டைக் கவ்வி புகை விட்ட படியே சைக்கிள் புகை வண்டியியை மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார் “நாராயணசாமி வாத்தியார்”.

குளிரும், வெக்கையும் கலந்த இந்த கோவையின் காலைப் பொழுதின் நேரத்தில் அவரைப் பற்றி நான் யோசிக்க காரணம் சென்னையில் நடந்த படுகொலை. அது கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை. அதைச் செய்தது அந்தப் பையன் அல்ல. இந்தச் சமூகம்.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 13, 2012

பூச்சுமை

கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி.

சம்சாரிகளுக்கு ஒரு கஷ்டமென்றால் ஏழைபாழைகளுக்கு வேறு கஷ்டம், இப்படியே வாழ்க்கை வண்டியை அதனதன் துன்பத்தோடு ஓட்டிச் சென்று முடியாத வாழ்க்கைப் பாதையில் வழியில் ஏதோ ஒரு திருடனால் கழட்டி விடப்படும் ஜனங்கள் நிரம்பிய அப்பூமியின் சில நிகழ்வுகளை மேலாண்மைப் பொன்னுச்சாமியின் பூச்சுமை புத்தகம் எழுத்துக்களில் காட்சியாய் வடித்திருந்தது.

புத்தகத்தைப் படிக்கப் படிக்க மனதில் பாரொமொன்று படிந்து விலக நேரம் பிடித்தது. பூச்சுமையில் அனைத்தும் சிறு கதைகள். என்னைப் பாதித்த ஒரு சிறுகதை “மைதானம்”.

பேச்சி என்கிற ஒன்பது வயதுச் சிறுமி தன் தாயின் துயரத்தில் பங்கெடுக்க தன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த தன் மைதானத்தை விட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்கிறாள். அங்கு தன் வயதின் காரணமாய் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க அதைக் கண்டு மேஸ்திரி திட்டுகிறான். கோபத்தில் அவரை எதிர்த்துப் பேசுகிறாள். மறு நாள் அவளை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மறுக்க அச்சிறுமிக்கு பயமேற்பட்டு விட, ஏஜெண்ட் ஏதேதோ பேசி சமாளித்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறான். பல பேர் முன்னிலையில் அவமானப்பட்ட அச்சிறுமியின் கண்களில் நீர்ப் பூக்கிறது. அதை மறைக்க அவள் சன்னலோரம் முகத்தை திருப்புகிறாள். அங்கு அவள் விளையாண்ட மைதானம் அவளை விட்டு தூரப் போய்க் கொண்டிருக்கிறது. அவள் தனக்குள் நினைக்கிறாள் “ விளையாடுவது தவறா?” என்று.

மனதைக் கனக்கச் செய்த சிறுகதை. அதன் தாக்கம் தீர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

வார்த்தைகளில் காட்சியைப் பிடிப்பது என்பது “ மேலாண்மை பொன்னுச்சாமி” அவர்களுக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு படம். மனித வாழ்க்கையின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இன்றைக்கு செய்தி தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பவர் கட் ஆன நேரத்தில் பக்கத்து வீட்டுப் பசங்களால் ஒரு பெண்மணி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்று. பவர் கட் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறதோ தெரியவில்லை. தங்கம் விற்கும் விலைக்கு பவர் கட் பல பேரின் வாழ்க்கையை கட் செய்து விடாமல் இருக்க வேண்டும். அரசு விரந்து ஆவண செய்தால் நலம்.

- ஃப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, February 9, 2012

புத்தக இடுக்கினுள் மறைந்து கிடக்கும் மயிலிறகுகளும் ஒன்பது மணி நேர மின்வெட்டும்



கோவையில் இதுவரையிலும் காணாத மின்வெட்டு. காலையில் மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம், இரவில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்து அடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்கிறார்கள், இதுவும் போதாது என்று விடிகாலையில் ஒரு மணி நேரம் என்று மின்வெட்டினை அமல்படுத்துகின்றார்கள் மின்சார வாரியத்தார். மொத்தமாய் ஒன்பது மணி நேர மின்வெட்டு.

எங்கள் பகுதியில் காலை ஒன்பது மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. ஆன்லைனில் வேலை பார்க்கும் என்னைப் போன்றோரின் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கஸ்டமருடன் தொடர்பு கொள்ள முடியவே இல்லை. இரவிலோ தொடரும் அசாதாரண மின்வெட்டினை நினைத்தாலே “டென்ஷன்” ஏறுகிறது. விடிகாலையில் மின்வெட்டு வேறு. பேசாமல் வீட்டினை சென்னைக்கு மாற்றி விடுங்கள், இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்றார் நண்பர்.

நடக்கக்கூடிய காரியமா இது? ஏன் இப்படியானது தமிழகம்? தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய சூழ் நிலைகள் ஒவ்வொன்றாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லையென்றால் மனிதன் எப்படித்தான் வாழ்வது? ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்றார்களே, என்ன ஆயிற்று? யாரிடம் கேட்பது இப்பிரச்சினை பற்றி? விரைவில் சரிசெய்கிறோம் என்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது.

கேபிள் டிவிக்கு 70 ரூபாய் கட்டணம் என்கிறது அரசு, ஆனால் எங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர் 100 ரூபாய் வாங்குகிறார். ஒளிபரப்பும் சரியில்லை. ஏன் என்று கேட்டால் அங்கிருந்து அப்படித்தான் வருகிறது என்கிறார்கள். இதுபற்றி யாரிடம் முறையிடுவது? எங்கே கம்ப்ளைண்ட் செய்வது என்றே புரியவில்லை. அரசு போடும் உத்தரவை கேபிள் ஆபரேட்டர் கூட மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.

உறவுகளால், நண்பர்களால் பிரச்சினை வரும். துன்பம் வரும், துயரங்கள் வரக்கூடும். ஆனால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அரசே உருவாக்குகிறது என்பது கொடிய விஷயம்.

தலைப்பிற்கும் இப்பதிவிற்குமான சம்பந்தம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

மேலே இருப்பது புலம்பல்கள். எழுதியாவது மன ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதியதால் மனவெழுச்சி கொஞ்சம் குறைந்திருக்கிறது.

மதத்திற்கு மனிதன் தேவையா? இல்லை மனிதனுக்கு மதம் தேவையா? என்பது பற்றிய முகத்தில் அறையும் அப்பட்டமான உண்மை பற்றிய பதிவினைத்தான் எழுத நினைத்தேன். ஆனால் ஆளும் அரசால் படும் வேதனை முன்னே வந்து நின்று கொண்டு மூளையை வேலை செய்ய விடமாட்டேன் என்கிறது. ஆகவே மின்சாரம் இருக்கும் போது, நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன். அதுவரை

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Sunday, February 5, 2012

தாம்பத்ய ரகசியம் என்பது என்ன?





”86 வயசு தம்பி” என்றார். இடமொன்றினைப் வாங்குவதற்காக பார்வையிடச் சென்றிருந்த போது, அருகிலிருந்த வீட்டில் வாயிலில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தன் பெரியவரிடம், தண்ணீர் கேட்க, கொடுத்த முதியவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது இப்படி.

”13 குழந்தைகள்” என்றார் தொடர்ந்து. விழிகள் விரிய அவரைப் பார்த்தேன். வீட்டுக்கார அம்மாள் சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்றார் மேலும் தொடர்ந்து. சுவாரசியமான மனிதராக இருப்பதை விட அனுபவசாலியாய் இருக்கின்றாரே, அவருடன் சற்றே உரையாடலாம் என்று நினைத்து, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி, வீட்டு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தேன்.

முதியவரின் மனைவி வீட்டினுள் இருந்து வந்து வரவேற்றார். பூமி வாங்கவா வந்தீர்கள் ? என்று விசாரணையை ஆரம்பித்து, கல்யாணம் ஆகிடுச்சா, எத்தனை குழந்தைகள் என்று தொடர, நானோ ”உங்க அளவுக்கு இல்லை பாட்டி, ஏதோ என்னால் முடிந்தது ஆணொன்று பெண்ணொன்று ”என்றேன். பாட்டி ரகளையான ஆள் போல. பேச்சில் எள்ளலும், துள்ளலும் விளையாடியது.

”இந்தக் கிழவனிருக்காரே, பெரிய ஆளு. மூனு மாசத்துக்கொருதடவை அணைச்சாருன்னா, இடுப்பொடுஞ்சி போகும். அடுத்து பத்து மாசத்துக்கு பக்கத்துலே விட மாட்டேன். போதும் போதும்னு சொன்னாக்கூட விடாமல், அதைச் சொல்லி, இதைச் சொல்லி 13 பேராக்கிட்டாரு தம்பி” ன்னாரு பாட்டி.

13 பெருக்கல் 10 - 130 மாதம் கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி பதினோறு வருடமாய் அலுக்காமல் சலிக்காமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும். அத்தனை பிள்ளைகளும் உயிரோடாதினிருக்கின்றார்களாம். திருமணமாகி பேரக்குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்களாம். திருமணம் ஆன ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைத்து விடுவாராம் பெரியவர். இப்படியே அனைவருக்கும். பெண்பிள்ளைகளுக்கு காலத்தே சொந்தத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். வரதட்சிணைப் பிரச்சினையெல்லாம் இல்லை தம்பி, ஏன்னா சொந்தக்கார பசங்களுக்கே பொண்ணுங்களைக் கொடுத்து, பெண் எடுத்தேன் என்றார் பெரியவர்.

இரவில் நீண்ட நேரம் கழித்து பார்ட்டிக்குச் சென்று வீடு திரும்பிய மனைவியைப் பற்றி அவள் அம்மாவிடம் ரிப்போர்ட் சொன்ன ஒரே காரணத்திற்காக, மருமகன் மீது பாகிஸ்தான் தீவிரவாதி இல்லை இல்லை சைனாக்காரன் அளவுக்கு பகை கொண்டு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்த பெண்மணியைப் பார்த்திருக்கிறேன். அதை பெண் சுதந்திரம் என்றுச் சொல்லி சப்பைக்கட்டு கட்டிய கணவருக்கு இன்று ஒரு வாய் சோறு போடக்கூட நேரமில்லாமல் பார்ட்டி, மீட்டிங், பேச்சு, அரசியல் என்று அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியை சமூகத்தில் பெண்ணுரிமைவாதி என்று பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.

இப்படியான ஒரு காலகட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தள்ளாத வயதில் தன் கணவனின் சளித் தொந்தரவிற்கு “தூதுவளை ரசம்” வைத்துக் கொண்டிருக்கும் முதிய பெண்மணியைப் பார்க்கின்ற போது மனதுக்குள் ஆயாசம் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

எனக்குத் தெரிந்த அரசியல்வாதிப் பெண்மணி ஒருவரைப் பற்றி இங்கே நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். கணவன் சம்பாதித்துக் கொடுக்கும் காசில் குடும்பம் நடத்த தெரியாதவள் பெண்ணே அல்ல என்பார்கள் கிராமப்புறத்தில். இந்தப் பெண்மணிக்கு கணவன் சம்பாதித்துக் கொண்டு வரும் காசு வாரம் ஒரு முறை சேலை வாங்கவே போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகாமை வீட்டிலிருந்த ஒரு கிளைச்செயலாளர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. கிளைச் செயலாளர் கட்சிக்குப் பணி செய்தாரோ இல்லையோ, இந்தப் பெண்மணிக்கு நன்றாக ஆயில் சர்வீஸ் செய்து, ஒருவழியாக பிரச்சாரத்திற்கு வந்த தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர்பாக தலைவருக்கு இவர் செய்த சர்வீஸ் காரணமாக, உயர்ந்த மாவட்டப் பிரதி நிதித்துவம் கிடைக்க காசு கொட்ட ஆரம்பித்தது. அதன் பிறகு அந்த தலைவருக்கு சப்ளை செய்யும் பிரதான வேலையைச் செய்ய ஆரம்பித்து என்னென்னவோ ஆகி விட்டது. இத்துடன் அரசியல் பெண்மணியைப் பற்றி முடித்து விடுகிறேன். மேலும் கிளறினால் “ நாறிப் போய்விடும்”.

மிடில் கிளாஸ் குடும்பங்களிடம் காணப்படும் ஜாதி வெறிகள் பணமுடையவர்களிடம் கிடையாது. பெரும் தனக்காரர்கள் பணம், பதவிகளை முன்வைத்து திருமணங்களை நடத்துகின்றனர். அவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. ஏனென்றால் பணத்திற்கு ஜாதி கிடையாது. ஏழ்மையான குடும்பத்திற்கும், மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் ஜாதி, ஜாதகம் போன்றவை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. இது ஒரு மாயவலை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இதற்கிடையில் பெண்ணீயவாதிகள் பெண்களுடனான தனிமையை பெரிது படுத்தி, நீ இதற்காகவா பிறப்பெடுத்தாய் என்றெல்லாம் ஊதி ஊதி குடும்ப வாழ்க்கைக்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனிமை மனிதர் அனைவருக்குமான பொதுவான ஒன்று. அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி. பெண்களின் வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிச்சம் என்பதாயும், அவர்கள் ஆண்களின் ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதாயும் இல்லாததும், பொல்லாததுமான புரட்டுக்களை கட்டுக்கதைகளாக்கி, குடிப்பதையும் கண்டவனுடன் படுப்பதையும் பெண்ணுரிமை என்று பேசி வருபவர்களால் குடும்ப அமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்யும் தவறுகளை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தி, பெரும்பான்மை சமூகத்தில் இந்த வகையான கொடுமைகள் நடந்து கொண்டிருப்பதாய் கதை விட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, பெண்களைத் தனிமைப்படுத்தி தன் இச்சைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர். ஆணோ பெண்ணோ தனக்காக மட்டுமே வாழ முடியாது. மனிதர்கள் பிறரிடமிருந்து பெற்று கொண்டு, பெற்றுக் கொண்டதை பிறருக்கு வழங்கி வாழ வேண்டியவர்கள்.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கையில் சலிப்பு தட்டி விடக்கூடாது என்பதற்காகத்தான் காலத்தே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இல்லற இன்பத்தில் சலிப்புத் தட்டுமுன் குழந்தை உருவாக்கம் ஒரு நீண்ட இடைவெளியை தம்பதியினரிடையே உருவாக்கி விடும். தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த இல்லற இன்பம் வாரிசுக்காக தள்ளி வைக்கப்படும் போது, மனைவியின் மீதான ப்ரியம் கணவனுக்குக் குறைந்து விடாது. அவள் நல்ல முறையில் குழந்தை பெற்று வந்து மீண்டும் தனக்கு இல்லற இன்பத்தைத் தர வேண்டும் என்ற ஆவலில் கணவன் ஆசையாய் உழைத்துக் கொண்டிருப்பான். மனைவியைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, அவள் வேண்டுவன வாங்கிக் கொடுத்து அரவணைத்து வருவான். அந்தப் பாட்டியும் பெரியவரும் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் 13 குழந்தைகள் பெற முடிந்தது. இன்னும் அவர்களுக்கிடையேயான இல்லறம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் தனியாய் வாழலாம் என்று இயற்கை நினைக்கவில்லை. அதை சில செக்ஸ் வெறி பிடித்த மனித அரக்கர்கள் நினைக்கின்றார்கள். ஆகையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட இத்தகைய பெண்ணீயம் பேசும் வாதிகள், பத்திரிக்கைகளிடம் இருந்து தன் குடும்பத்தை மட்டுமல்லாது தன் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்