குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 8, 2011

மையலும் காதலும்

உதயணனன் - வாசவதத்தை கதை தெரியுமா உங்களுக்கு?  ஐங்குறு காப்பியத்தில் ஒன்றான பெரும்கதையின் கதாமகன் தான் உதயணன். இசைக்கு மயங்காதோர் யாதுமில்லை இவ்வுலகிலே என்பதற்கு உதாரணமாய் தன் ”கோடபதி” என்னும் யாழ் இசையால் வெறி கொண்ட யானையைக் கூட மயக்கும் திறமை கொண்டவன் இந்த உதயணன். இந்த உதயணனுக்கு மனைவிகள் ஏராளம். ஆனால் அவனின் முதல் மனைவியும், காதலியுமானவள் “வாசவதத்தை” என்பாள். பொதுமையை அவன் மணமுடிக்க காரணமே அவள் வாசவதத்தையைப் போன்று இருந்தாள் என்பதற்காகத்தான் என்று  நா.பார்த்தசாரதி “வெற்றி முழக்கம்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். காதல் என்பது வேறு. மையல் என்பது வேறு. மையலைக் காதலாய் கருதுவதால் கொலைகள் நடக்கின்றன. விவாகரத்துக்கள் நடக்கின்றன.

சினிமாக்களில் இன்றைய காதலை “பார்த்தவுடனே உள்ளுக்குள் பொங்கி வரணும்” என்ற முறையில் வரையறுக்கின்றார்கள். பார்த்தவுடனே பொங்கி வருவது காதல் அன்று அதன் பெயர் மையல்.  மையலைத் தான் இன்றைய உலகம் “காதல்” என்கிறது. மையல் கொண்டால் அதன் முடிவு எரிச்சல் தரும். ஒரே மனது ஒன்பதாய் மாறுவதும் மையலின் முடிவில்தான்.

மையல் வந்ததும் பற்றி எரிய வைப்பதும், மையல் தீர்ந்ததும் இல்லாதவைகளை எல்லாம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதும் மனதுதான். அனிச்சை செயலாய் காற்றுக்கு ஒதுங்கும் துணியை இழுத்து விடும் பெண்ணின் கையும், மையலும் ஒன்றே !

மையல் கொண்ட காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு ஒரு நீண்ட கவிதையை படிக்க அளிக்கிறேன். இக்கவிஞனின் கவியோட்டத்தின் ஊடே நீங்கள் நுகரப் போகும் அந்தத் தன்மைதான் “மையல்”.
இதோ அந்தக் கவிதை வரிகளின் இணைப்பு -> சலனம் - ஜேவியர் தாசையன்

காதல் என்பது என்ன தெரியுமா? 

பிரதிபலன், குற்றம், குறை பாராமல் அப்படியே ஏற்றல். எங்கே உங்கள் மனதினை ஒரு முறைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களிடம் இருப்பது என்னவென்று?


- இனிய வணக்கங்களுடன்
கோவை எம் தங்கவேல்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவின் முடிவில் சிந்திக்க வைக்கும் பதிவு.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.