குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 22, 2009

அக்காவும் தங்கையும்

அக்காவுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். தங்கைக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் கழிந்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லை. இப்படி இருக்க ஒரு நாள் அக்காவைப் பார்க்க சென்றாள். தங்கையை வரவேற்று இன் வார்த்தைகள் சொல்லி விருந்துச் சமையல் செய்து பரிமாறினாள் அக்கா. அப்போது தங்கையின் மனவோட்டத்தை ஒருவாறாக ஊகித்து விட்டாள். குழந்தைகளோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தங்கை. குழந்தைகள் சாப்பிடும் அளவை விட அதிகமாக உணவு பரிமாறினாள் அக்கா. குழந்தைகள் சாப்பிட்டு தட்டில் மிச்சம் வைத்து விட்டு எழுந்து விட்டனர். குழந்தைகள் மிச்சம் வைத்த உணவினை ஒவ்வொரு தட்டாக எடுத்து சாப்பிட்டு விட்டு, போதாமல் கொஞ்சம் சட்டியில் இருந்து உணவையும் எடுத்துப் போட்டு சாப்பிட்டாள் அக்கா. தங்கையைப் பார்த்து இன்னொரு குழந்தை இருந்தால் எனக்கு சாப்பாடு நிறைவாயிருந்திருக்கும் என்று சொன்னாள். தங்கை தான் என்ன நினைத்து வந்தாளோ அது நடக்காது என்று தனக்குள்ளே ஊகித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இக்கதையில் தங்கையின் எண்ணம் அக்காவிடமிருந்து ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்பது. ஆனால் அக்காவுக்கோ அப்படி குழந்தையைக் கொடுக்க மனமில்லை. அதை தங்கையிடம் எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டாள் என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

எனது அண்ணா அதாவது அப்பாவின் ஒன்று விட்ட தம்பிக்கு பிறந்தவர் கிராமியக் கதைகள் சொல்வதில் மன்னர். நேற்றைக்கு மீன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுச் சென்றார். கோயமுத்தூர் பக்கம் மீன் குழம்பில் தேங்காயை சேர்த்து சப்பென்று சமைத்து விடுவார்கள். அந்த டேஸ்ட் இவருக்குப் பிடிக்காது. பட்டுக்கோட்டைப் பக்கம் காரம், புளிப்பு என்று மீன் குழம்பு ரத்தக் கலரில் இருக்கும். மனைவிக்கு எங்கள் ஊர் சமையல் பக்குவம் அத்துப்படி. வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் பிறந்தாலும் எனது ஊர் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு விட்டாள். அண்ணா சாப்பிடும் முன்பு சொன்ன கதைதான் மேலே இருப்பது.

பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. வண்டி எப்படி அச்சாணி இன்றி இயங்க முடியாதோ அப்படித் தான் பெண் இன்றி எந்தக் குடும்பமும் இயங்க முடியாது. அந்தப் பெண்ணின் சகிப்புத் தன்மைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

Thursday, June 11, 2009

கெஸ்ட் ஹவுஸ்





இந்த முறை ஹோட்டலில் தங்காமல் ஏதாவதொரு பிரைவேட் ஹெஸ்ட் ஹவுஸில் தங்கலாமென்று நினைத்தேன். கடமைக்கு என்று சிரிக்கும் ரூம்பாய்களையும், சர்வர்களையும் சற்றே பார்க்காமல் தவிர்க்கலாம் என்று நினைத்தேன். ஃப்ரான்சில் வசிக்கும் எனது நண்பர் திரு ஆட்னன், ஒரு முறை கேரளா வந்து ஹெஸ்ட் ஹவுசில் தங்கியதாகவும், அதைப் பற்றிய அனுபவத்தை சிலாகித்தும் சொன்னது நினைவுக்கு வர அவருக்கு மெயில் அனுப்பி வைத்தேன். மறு நாள் விபரமாக அவரிடமிருந்து பதில் வந்தது. கொச்சியில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸைப் பற்றிய விபரக் குறிப்புகளை அனுப்பி இருந்தார். போட் ஹவுஸிலிருந்து நேராக அந்த ஹெஸ்ட் ஹவுசுக்குச் சென்றோம்.



மிஸ்டர் பேசில் எங்களை வரவேற்றார். பேக் வாட்டர் ஹோம் என்ற பெயரில் அருமையான பழங்காலத்து வீடு. கிட்டத்தட்ட 70 வருடங்கள் ஆகி விட்டது என்று சொன்னார். இரண்டு குளிர் சாதன வசதி கொண்ட அறைகள். பெரிய பாத்ரூம். பின்புறம் ஆற்றுத் தண்ணீர். சுற்றிலும் செடிகள், மரங்கள், மாமரம், கொய்யா என்று வித விதமான மரங்கள். வாசலின் இடது பக்கம் தோட்டம் என்று அமைதியான சூழலில் அழகான வீடு. வாசலின் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு நானும் அவரும் பழங்கதைகள் எல்லாம் கதைத்தோம். வெகு சுவாரசியமான மனிதர். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். என்ன சாப்பிடலாமென்று அட்வைஸ் வேறு. ஃபாரினர்ஸ் அவருடன் தங்கிய கதைகளையும், புகைப்படங்களையும் காட்டினார். சமீபத்திய மலையாள மேகசினில் வெளிவந்த அவரைப் பற்றிய கட்டுரையினையும் காட்டினார்.






இரவு மெனுவை விசாரித்துக் கொண்டு, டிரைவருடன் அவரும் கூடவே ஹோட்டலுக்குச் சென்று கூடவே, ஹாட்பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று டிஃபன் வாங்கி வந்து அவரே சூடாகப் பரிமாறினார். சாப்பிடும் போது ஷாம்பெயின் கொண்டு வந்து கொடுத்தார். மறுத்து விட்டோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தோட்டத்தில் பழுத்த மாம்பழம் பரிமாறினார். வெகு இனிப்பு. வீட்டுச் சாம்பாரும் வந்தது. அட்டகாசம். அவரின் மனைவி அன்போடு பழகினார்.




இரவில் நல்ல தூக்கம். விடிகாலையில் சுடச்சுட காஃபி வந்தது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டே குளிர்ச்சியான அந்த சூழ்நிலையில் காஃபியும் சுவையோடு இருக்க அந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்ன டிஃபன் வேண்டுமென்று கேட்டார். இடியாப்பம், சன்னா மசாலா என்று சொன்னேன். காலையில் எல்லாம் தயார். பூவரச இலையின் மீது வேக வைத்த இடியாப்பமும், சன்னா மசாலாவும் வெகு அருமை. குடும்பத்தோடு புகைப்படமெடுத்துக் கொண்டோம். மனைவியிடம் மாங்காய், ஜாதிக்காய் கொடுத்தார் திருமதி பேசில். கூடவே சன்னா மசாலா செய்முறை விளக்கத்தையும் கொடுத்தார். கேட்பதோடு சரி. செய்தெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று அப்போதே முடிவு கட்டிக் கொண்டேன். நல்ல பிள்ளைகளாக தம்பி மனைவியும், என் அம்மணியும் இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். மன நிறைவோடு வீகா லேண்ட் கிளம்பினோம் மறுநாள்.



கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் நல்லா இருங்க என்று எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரவில் சில படகுகள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எங்கோ ஓரிடத்தில் தண்ணீருக்குள் குடும்பத்துடன் தங்கும் போது. எங்கள் படகும் மற்றொரு படகும் அருகருகே நின்றிருந்தன. வலதுபக்கமாக நீண்ட நூறு அடி அகலமிருக்கும் நிலமும் அதன் மீது கட்டப்பட்ட வீடுகளும் தெரிந்தன. நாம் இங்கு தான் இரவில் தங்கப்போகின்றோமா என்று ராஜுவிடம் கேட்டேன். ராஜு படகில் எங்களுக்கு உதவியாய் வருகிறவர். ஆம் என்றார். இரவில் டின்னர். நாங்கள் வாங்கிக் கொடுத்த ப்ரானுடன், மீன் வறுவல், பருப்பு, ரசம், தயிர், பொறியல், ஊறுகாய் என்று மெனு. முதலில் ப்ரானை முடித்து விட்டு காய்கறிகளையும், கொஞ்சம் ரசத்தையும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டேன். பத்து மணி அளவில் தூங்கச் சென்றோம். ஏசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. சன்னலைச் சாத்தி விட்டு பெட்டில் படுத்து விட்டேன். குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென விழிப்பு வர, செல்போனில் மணி பார்த்தேன். பனிரெண்டு. தூக்கம் வராத காரணத்தால் சன்னலோரம் சென்று அமர்ந்தேன். ஆங்காங்கே வெளிச்சப்பொட்டுகளுடன் படகுகள் தண்ணீரில் சென்று கொண்டிருந்தன. மீன் பிடிக்க செல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் படகை சிறிய மிதவைப் படகு ஒன்று கடந்து செல்ல இருட்டில் கண்களைப் பழகிக் கொண்டு உற்றுப் பார்த்தேன்.

அதேதான். அடப்பாவிகளா ? இங்கேயுமா ???

பாவம் என்று எண்ணியபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் விடிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடும் பழக்கத்தால் எழுந்து சன்னலோரம் அமர்ந்தேன். அப்போதும் சில படகுகள் சென்று கொண்டிருந்தன. அதில் அதேதான். அதாவது இரவு பதினோறு மணிக்கு வேலைக்கு வந்து விட்டு, விடிகாலையில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமேற்பட,படகில் எங்களுடன் வந்தவரிடம் விசாரித்தேன்.

”சார், இங்கெல்லாம் குடும்பத்தோடு வரலாமா? தனியாக அல்லவா வரவேண்டும் “ என்று சொன்னார்.

”தனியாக வந்தால் என்ன ஸ்பெஷல்” என்று கேட்டேன்.

”எல்லாம் கிடைக்கும் சார்” என்று எல்லாமில் மிக அழுத்தம் கொடுத்தார்.

ஆமாம், எல்லாமும் (ஹி..ஹீ...) கிடைக்கும் என்று நினைத்தபடி அசடாக சிரித்து வைத்து விட்டு அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்.

குறிப்பு : அதே தான் என்பது அதே தான். மேலும் சொல்ல விரும்பவில்லை. பெரும்பாலானா டூரிஸ்ட் ஸ்தலங்களில் நடக்கும் கூத்து தான் இது. ”ஜெய் ஹோ”... போங்கய்யா, நீங்களும் உங்க .....

Thursday, June 4, 2009

தண்ணீருக்குள் இரண்டு நாட்கள்

ஆலப்புழாவில் படகில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன். சுற்றிலும் தண்ணீர். சமையல், குளியல் எல்லாம் படகிலே. சுமார் அரை மணி நேரம் படகு ஓட்டினேன். மனதுக்கு வெகு உற்சாகம் தந்த நாட்கள் அவை. வைரஸ் காய்ச்சலில் உடலும் மனதும் சோர்ந்து கிடந்தது. திரும்பவும் ரீஜார்ஜ் ஆகிவிட்டது. சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். வெகு சுவாரசியமான சம்பவங்களை விரைவில் எழுதுகிறேன்.












(ரித்திக் நந்தா)