குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 6, 2009

வாழ்க்கை என்னும் விளையாட்டு

மனித மனத்தில் சரியான எண்ணங்களை புகுத்தினால்தான் அதை தேவையான முறையில் நாம் இயக்க முடியும். இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்கள் பற்றியே திரும்பத் திரும்பப் பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட என்னென்ன வேண்டுமென்ற எண்ணங்களைப் புகுத்துவது தான் சரியான அணுகுமுறை.

அப்படிச் செய்தாலே, தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும்.
நம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போல, தேவைப்பட்டால் இயக்குவதும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்துக்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.

கனவு காணுவது நல்லது. அது உங்களுக்கு ஊக்கம் தருவது. ஆனால் நிறைய பேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்கப் பயப்படுகிறார்கள். உங்களை கனவு நிலையிலேயே வைத்திருக்க கூடியவற்றில் ஒன்று ஜோதிடம். ஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்ப்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை நீங்களே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு கிரகங்கள் அதிலே என்ன போடப் போகின்றன என்று பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உங்கள் தகுதியை, ஆற்றலை அறிந்து கொள்ளாத போது தான் அதிர்ஷ்டங்களை நம்பத் தொடங்குகிறீர்கள். வேகமாக ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். பதட்டப்படுகிறீர்கள். இந்தப் பதட்டத்தின் காரணமாகத்தான் ஜாதகத்தை நம்பிப் போகிறீர்கள். தன்னை அறிந்து கொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அதை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கி விடுவீர்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணிதத்தையோ பார்த்துக் கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.

தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால் தான் சில அற்புதங்கள் எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். இவையெல்லாம் பதட்டத்தின், அச்சத்தின் வெளிப்பாடு தான். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையை விளையாட்டாய் நடத்திச் செல்வது. இது ஒவ்வொருவருக்கும் சாத்தியமே.

நன்றி : காட்டுப்பூ மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ்.


காட்டுப்பூவை கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். கெட்டி அட்டையில் கடைசி பக்கங்களில் வரும் ஜென் கதைகள் எனக்குப் பிடித்தவை. தற்போது வரும் காட்டுப்பூ இதழில் மேற்கண்ட கட்டுரையினைப் போன்று எண்ணற்ற விஷயங்கள் வருகின்றன.

ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க திகட்டாத சுவை தருகிறது. சில கட்டுரைகள் வாழ்வியல் வினோதங்களை சுட்டுகின்றன. சில கட்டுரைகள் வாழ்க்கையின் முரண்பாடுகளில் மனித வாழ்க்கை சிக்கி சீரழிவதை காட்டுகின்றன. இதுபோன்ற வித விதமான கட்டுரைகள் வருகின்றன காட்டுப்பூவில். அனைவரும் படிக்க ஏதுவான ஒன்றாய் திகழ்கிறது. மதங்கள் இவ்விடத்தில் மறைந்து போகிறது. தனி மனித தன்மை மட்டும் தான் மனிதனை மாற்ற இயலும் என்று சொல்கிறது காட்டுப்பூ.

ஆகவே நண்பர்களே நான் படித்தக் காட்டுப்பூவில் இருந்து அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் ஒரு கட்டுரையினை மட்டும் மேலே பதிவிட்டு இருக்கிறேன்.


இப்புத்தகத்தை ஒரு வருடம் தபாலில் பெற ரூபாய் 180ம், இரண்டு வருடங்கள் பெற ரூபாய் 350ம், மூன்று வருடங்களுக்கு ரூபாய் 500ம் ஆகும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பெற இங்கு கிளிக்கிடவும். காட்டுப்பூ

2 comments:

Anonymous said...

அருமையான பதிவு.ஜக்கி வாசுதேவ் வார்த்தைகள் எல்லோரையும் கவரும்.

BOOPATHY said...

மிக அருமையான கட்டுரை. சாக்ரட்டீஸ் கூறிய உன்னையே நீ அறிவாய் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.
இதைப்போன்ற கட்டுரைகளை தொடர்ந்தும் தாருங்கள் வாசிப்பதில் மனது சாந்தமடையும். உங்கள் முயற்சிக்கு

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.