குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 30, 2008

முந்தானை முடிச்சு

எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மீன் குழம்பு பற்றிய பேச்சு வந்தது.

“ என்னதான் சொல்லுங்க தங்கம், என் மனைவி வைக்கும் மீன் குழம்பை சாப்பிட்ட பிறகு வேறு எங்கும் மீன் குழம்பே சாப்பிட பிடிக்காது. மட்டன் குழம்பும், மட்டன் வறுவலும் இவள் கை பட்டால் போதும். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். நானும் ஊர் உலகமெல்லாம் சுற்றி வந்து விட்டேன் தங்கம். என்னவள் சமையல் செய்து சாப்பிட்டால் தான் சாப்பிடவே தோன்றும்” என்றார்.

ஆமோதித்தேன்.

நண்பரின் மனைவி தன் சமையல் பக்குவத்தால் கணவனை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் என்பது புரிந்தது. எவ்விடத்திற்குச் சென்றாலும் மனைவியின் நினைப்பு வருவது என்பது பெரிய விஷயம். நண்பரின் மனைவிக்கு தாம்பத்தியம் பற்றிய சரியான அர்த்தம் தெரிந்திருக்கிறது.

யாருக்காக சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனைவியின் முகம் அவனுக்குள் புரளும். மனைவியின் முகமும், அவளின் சுவையான சமையலும் அவனுக்குள் மனைவி மீதான அன்பினை ஊழிக்காற்றாய் ஊதிப் பெருக்கும். அவனுக்காக அவனுடன் இசைந்து பெற்றுத் தரும் குழந்தைகளையும், குடும்பம் நடத்தும் அழகினையும் எண்ணி அவன் மாய்ந்து போவான். அவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலோங்க ஓடி ஓடி சம்பாதிப்பான். இது தான் வாழ்க்கை. இது தான் தாம்பத்தியம். பிறருக்காக வாழ்வது தான் வாழ்க்கை.

கிராமப்புறங்களில் இந்த வாழ்வினைத் தான் முந்தானை முடிச்சு என்பார்கள். வாழ்வியல் கல்வியில் சமையல் கலை என்பது ஒரு முக்கியமான பகுதி. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் சமையல் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். விளைவு தாம்பத்திய வாழ்வு முறிவு.

மனிதன் வாழ்வது எதற்கு ? சிருஷ்டிக்காக. அதை மறந்து விட்டார்கள் இன்றைய மாந்தர்கள். புலனின்பமே வாழ்வின் அர்த்தமென்றெண்ணி வாழ்வினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கின்றார்கள்.


தாம்பத்திய வாழ்வின் இன்றியமையா பகுதி உணவு. இன்றைய ஸ்பெஷல் தென்னிந்திய மீன் குழம்பு வைப்பது எப்படி என்ற விளக்கப் படம். இப்படத்தைப் பார்த்து முயற்சிக்கவும்.

குறிப்பு : மீன் குழம்பில் கவுச்சி வாடை அடிக்க கூடாது. அப்படி கவுச்சி வாடை வந்தால் மீன் குழம்பு சரியில்லை என்று அர்த்தம். மீனை நன்கு கழுவி சற்று லெமன் சாறு சேர்த்து மீண்டும் கழுவினால் கவுச்சி வாடை போய் விடும். சங்கரா, வஜ்ஜிரம், பாறை, மஞ்சக்கிளி, உளி, தட்டக்காரா, செம்மீன், வெள மீன் போன்றவை மீன் குழம்புக்கு ஏற்றது. காரமும், புளிப்பும் சேர்ந்தால் தான் மீன் குழம்பு சுவையாக இருக்கும். ஆற்றிலிருந்து பிடித்து வரும் மீனுக்கும், கடல் மீனுக்கும் சுவை மாறுபடும்.

Monday, December 29, 2008

கோடீஸ்வரனும், குடியானவனும்

கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனின் உடல் நிலைக்கு சற்று ஹாட்டான இடம் தேவை என்று டாக்டர் நண்பர் அறிவுறுத்தியதால், என் நண்பர் சஹாரா என்று சொல்லும் சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வேறு வழியின்றி ட்ரெயினில் பயணம். ஏசி சேர்கார் ஒத்து வருமா என்று விடிகாலையில் டாக்டரிடம் கன்சல்ட் செய்த பின்னர் ட்ரெயின் ஏறினோம். காலை ஆறு முப்பதுக்கு கிளம்ப வேண்டிய ட்ரெயின் ஏழு பத்துக்குத்தான் கிளம்பியது. இரண்டரை மணிக்குச் சென்னை சென்று சேர்ந்தாகி விட்டது. தம்பி காருடன் காத்திருந்தான்.
இரண்டு நாட்கள் மகனின் உடல் நிலையின் மீது கவனம் கொண்டேன். சரியாகி விட்டான்.

இதற்கிடையில் நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு டின்னர் சென்றோம். வண்டி அனுப்பி இருந்தார்கள். குடும்பத்தோடு பயணம். துரைப்பாக்கத்திலிருந்து ஆறு மணிக்கு கிளம்பினோம். முகப்பேருக்கு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். இரண்டரை மணி நேரம். டிராபிக்கில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்.

இரண்டு கோடி செலவழித்து வாங்கிய பென்ஸ் காரில் அமர்ந்திருக்கும் கோடீஸ்வரனும், வெறும் ஆயிரம் ரூபாயில் வாங்கிய சைக்கிளில் அமர்ந்திருக்கும் குடியானவனுக்கும் ஒரே தீர்ப்பை வழங்கிய சென்னையின் சிக்னல்கள் தான் உண்மையான நீதியரசர்களாய் தெரிந்தார்கள்.

சைக்கிள்காரர் நின்றிருந்தார். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பென்ஸ் கார் முதல் அனைவரும் சிக்னலில் காத்து கிடந்ததைப் பார்த்த போது உலகில் உண்மையான சமத்துவம் நிலவும் இடமாக சென்னை ட்ராபிக் சிக்னல்கள் தெரிந்தது. உடனே அமைச்சர்கள், உயரதிகாரிகள் என்று விதண்டாவாதம் பேச ஆரம்பிக்க கூடாது.

வாழ்க்கையினூடே சில இடங்களில் சில தவிர்க்க இயலாத சம்பவங்களில் நாமும் மாட்டிக் கொள்வோம் என்பது உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Friday, December 19, 2008

சாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Monday, December 15, 2008

பெண் சமத்துவம்




பெண்கள் விடுதலை பற்றிப் பேசிவரும் பெண்ணுரிமையாளரும், பெரியாரிஸ்டுமான ஓவியா அவர்களின் பொன்மொழி :

”குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு எந்த பாலின சமத்துவத்தையும் கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் பெண் விடுதலை என்ற பாதையின் வழியாக போராடும் போது இந்தக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து விடும் என்பது என் கருத்து. அப்படி சிதைவதுகூட இருபாலாருக்கும் நன்மைதான் ”


மிஸ் வோர்ல்ட் 2008 இல் முதல் ரன்னர்அப்பாக வந்த பார்வதி, இரண்டாவது ரன்னரப் Gabrielle Walcott, மிஸ் வோர்ல்ட் 2008 பட்டத்தை வென்ற Ksenia Sukhinova இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். வாழ்க பெண்கள் விடுதலை. வாழ்க பெண் சுதந்திரம்.

Saturday, December 13, 2008

சகோதரியும் குழந்தைப்பேறும்

எனது தூரத்து உறவுக்காரச் சகோதரிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத டாக்டருமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு ட்ரீட்மெண்டுகள் எடுத்தாலும் ஒன்பது வருடமாக பயனில்லாமல் இருந்திருக்கிறது. மனது வெறுத்துப் போய், என் அக்கா, வருத்தத்தில் இருந்தபோது ஒரு நாள் மருத்துவரிடம் கறாராக எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்று வேதனையில் கேட்டார். டாக்டர் யோசித்து விட்டு ஜெனரல் ஜெக்கப் எழுதி கொடுத்தார். அப்போது தான் தெரியவந்தது தைராய்டு சுரப்பியில் சற்றுப் பிரச்சினை என்று. இதன் காரணமாகத் தான் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கண்டு பிடித்தார்கள். 50 மாத்திரைகள் கொண்ட மருந்து புட்டிதான் என் சகோதரியின் குழந்தையின்மைப் பிரச்சினையைத் தீர்த்தது. தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று இரு பிரச்சினைகள் இருக்கின்றனவாம். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார் என் சகோதரி.

சரியான நேரத்தில் சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்கவில்லை என்பதால் என் சகோதரி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது. மக்களில் அதிக பேர், தலைவலி வந்தால் தலைவலி போக மட்டும் தான் மருந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த தலைவலிக்குக் காரணமென்ன என்று அறிந்து கொள்வதில்லை. இதைப் போன்றே வாழ்விலும் சில பிரச்சினைகள் வரும் போது பிரச்சினைக்குக் காரணம் என்ன்வென்று கண்டுபிடித்து தீர்க்க வேண்டும். இல்லையெனில் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும்.

Thursday, December 11, 2008

மந்திரம் கால் மதி முக்கால்

இந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.

இந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.

அவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)

இதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா ? பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.

ஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.

சொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.
இவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

நாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.

நான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.

தர்மம் சூட்சுமமானது தானே ?

பின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் ? இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்?

அவர்பொருட்டு எல்லாருக்கும்

பெங்களூரில் இருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவை படித்து பாருங்கள்.

அவர்பொருட்டு எல்லாருக்கும்


நேரம் இருக்கும் போதெல்லாம் இந்த இணைய தளத்துக்கு சென்று வரவும். வெகு அருமையாக எழுதுகிறார்.

சரவணகார்த்திகேயன் - www.writercsk.com


நன்றி : ரைட்டர் சிஎஸ்கே இணையதளம்.

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் : பட்டினத்தார்.

பட்டினத்தாரைப் போல வாழ்ந்தாரும் இல்லை. வாழப்போவாரும் இல்லை. லெளகீக வாழ்க்கையின் உச்சத்தையும் தொட்டார். ஆன்மீக வாழ்வின் உச்சத்தையும் அடைந்தார். வாழ்க்கையின் விளக்கம் அவரது வாழ்க்கையிலே கிடைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே செய்யும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற படி பிறருக்கு துன்பமிழைப்பதையே வாழ்வின் நோக்கமாக கொண்டுள்ளனர் மாந்தர்கள்.

தெய்வம் நின்று கொல்லுமென்பார்கள். ஆனால் தெய்வம் அன்றே கொன்ற கதை ஒன்றும் உண்டு.

அவன் அந்த ஊரில் எவருக்கும் அடங்கா காளை. இரண்டு பெண்மக்கள் அவனுக்கு. இருப்பினும் பிறர்த்தியாருக்கு அவன் செய்யும் அடாவடி, கொடுஞ்செயலைக் கண்டு துளியும் கவலைப்பட்டானில்லை. ஆண்டவனும் அவனுக்குப் பாடம் புகட்டாமல் விடுவதில்லை என்று முடிவுகொண்டான்.

தன் வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த நிலத்தின் மீது கண் கொண்டான் கயவன். அந்த நிலம் கைம்பெண்ணின் ஒருத்திக்குச் சொந்தமானது. அதில் சிறு வீடு கட்டினாள். வேலை பார்த்த கொத்தனாரையும், சித்தாளையும் நையப்புடைத்தான் கயவன். எனக்கு இந்தச் சொத்தில் பங்கிருக்கிறது என்றான். கைம்பெண்ணோ அழுதாள். புலம்பினாள். விட்டானில்லை கயவன். தடுத்திட்டான் வீட்டு வேலையினை. ஊரும் பார்த்தது. ஒடுங்கிக் கிடந்தது. கேட்டால் ஊரே என்னது என்பான் இந்தக் கொலைக்கும் அஞ்சாத கயவன் என்று ஒதுங்கிக் கொண்டது.

என்ன செய்வது? சட்டத்தின் கதவினைத் தட்டினாள் கைம்பெண். சட்டம் அவனைக் கேள்வி கேட்கவுமில்லை. கைம்பெண்ணினுதவிக்கும் வரவில்லை.

யாருமெனக்குத் தேவையில்லை என்று சென்றாள் கோவிலை நோக்கி. அழுதாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

மறு நாள் காலையில் கயவனின் மகள் ஒருத்தி தாலி அறுத்தாள். மருமகன் மண்டையைப் போட்டான். அடுத்த நான்காவது நாளில் கையும் காலும் இழுத்துக் கொண்டது. வாயில் இருந்து எச்சில் ஒழுகியது கயவனுக்கு. கைம்பெண்ணின் வீட்டு வேலை ஜரூராக நடந்தது.

தெய்வம் நின்று கொல்லுமென்பது தெய்வத்திடம் அடைக்கலமாவோரின் வேண்டுதலைப் பொறுத்தது.

தர்மம் சூட்சுமமானது தானே....

Tuesday, December 9, 2008

பிண்டோற்பத்தி ...

சினிமா, டெக்னாலஜி, தர்மம் என்றெழுதி படித்த உங்களுக்கு சற்று வெறுப்புத் தட்டியிருக்கும். ஆகையால் இன்று வேறு பக்கம் சென்று வரலாமென்றுதான் இப்பதிவு. இப்பதிவும் கூட அறிவியல் கண்டுபிடிப்புத்தான். பிள்ளைகள் உருவாவது எப்படி என்று இன்றைய அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பே தமிழில் பாடி வைத்திருக்கிறார்கள். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பெறுவது எப்படி என்ற விளக்கமுமிப்பாடலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலில் காரிய சித்திக்கான நேரமும், மூச்சுப் பயிற்ச்சியினைப் பற்றிய விளக்கமும் கூட இருக்கிறது.

கேளப்பா மனமான வாயுகூடி
கெடியான சித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப் பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம் பெறவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
தாளப்பா மனதோடே வியானன்கூடும்
தனியான நாதத்தில் பானன் தானே

தானென்ற விந்துவினிற் சமானன்கூடும்
தனியான சித்தத்தில் வியானன் சேரும்
கானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்ற பத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்து வந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதான்கேளே

முறையான பெண்ணாணும் மெளனமுற்றால்
மோசமில்லைகருவங்கே தரிக்கும்பாரு
நிறையான வலத்தோடி லாணேயாகும்
நேராகயிடத்தோடிற் பெண்ணேயாகும்
உறையான கருப்பையிற் சுக்கிலமாய்ப்பாய
உத்தமனே சுரோணிதந்தா னுரைந்துகொள்ளும்
கறையாகப்பாய்ந்தவெளி தமருபோலக்
கழற்கொடிக்காய போற்றிண்டு சிரசுமாமே

ஆமப்பாசிரமோடே கையுங்காலும்
அப்பனே தத்துவங்கள் நரம்புமூளை
ஓமப்பாஅத்திமுத லுரோமத்தோடு
உத்தமனேபதினொருவா சலுமேகாணும்
காமப்பால்விழுந்த வழி சிரசினாலே
கைம்முறையாய்த் தாயுண்ட அன்னஞ்செல்லுஞ்
சேமப்பா நடுமையத் தொப்புளாலே
சென்றதெல்லாமலமாகக் கழியுந்தானே

தானென்றபதினொன்றாற் சடந்தான்முன்னே
சாதகமாயெடுத்துவரும் மடலெவ்வாறு
ஊனென்றபெண்ணுக்கு மனதுவேறாய்
உருதமுற்றுமெளனமுன்னாப் பாவத்தாலே
கானென்ற மலடாவாள் புருடனுக்குங்
கைமுறையாயிப்படிதான் கண்டுகொள்ளு
தேனென்றமொழியாட்குப் பரனார் சொன்னார்
செகமெல்லாம் இப்படித்தான் செனித்தவாறே

அது என்ன வலத்தோடி , இடத்தோடி என்று கேட்கின்றீர்களா.... அதன் விளக்கம் இந்தப் பாடலில் வருகிறது. இப்பாடலில் சில ரகஷியங்கள் மறைவாய் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி வெண்டிங்கள் விளங்கும் புதனிடம்
தெள்ளிய ஞாயிறு செவ்வாய் சனி வலம்
வள்ளல் வியாழம் வளர்பிறைக்கோரிடம்
ஒள்ளிய தேய்பிறைக் கேவலமாகுமே
மாறிவளர் பக்கமதிற் குறையும் பக்கம்
மதி நாடி கதிர் நாடி வளர்ப்பொன்னோடிப்
பேறுமிகவுண்டாகும் பிராணனிற்கும்
பின்புரைத்த காரியங்க ளெல்லாமேலாம்
கூறுகின்ற சனி நாளிற் பகலிராவிற்
குலவுசரம் வலமிடத்தே கோணாதோடில்
நாறுமலர்பெந்திருவே சொன்னோமிந்த
ஞாலமெல்லாம் புகழ்பெறவே நடக்குமென்றே


யோகிகள் எப்போதும் சுவாசத்தைச் சூரிய கலையிலேயே நடத்திக் கொண்டிருப்பார்களாம்.. சூரியகலையில் காரிய சித்தி வேறு ஆகுமாம். முயற்சித்துப் பாருங்களேன்.

ரகசிய வன்முறை : உயிரோசை

உயிர்மையின் இணைய இதழ் உயிரோசையில் வெளிவந்திருக்கும் ரகசிய வன்முறை கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிரோசையில் ரகசிய வன்முறை : தங்கவேல்


நன்றி : உயிர்மை மற்றும் உயிரோசை


* * *

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3

அந்த ஊர் முக்கியஸ்தரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஊரின் இன்னொரு முக்கியஸ்தரின் மகளோடு காதல். கவிதை மழை பொழிவான் காதலன். உலக அறிவின்றி இருக்கும் காதலியோ அவனெழுதும் கவிதைக்கு அர்த்தம் புரியாமல் என்ன இப்படியெல்லாம் எழுதுகிறாய் என்று கடிந்து கொள்வாள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனது கவிதையில் இதயமென்ற வார்த்தை தான் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

தினமும் சந்திப்பு நடக்கும். பார்வையோடு சரி. சாப்பாடு ஆச்சா? அம்மா எப்படி இருக்கிறார், அப்பா எப்படி இருக்கிறார்? இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். காதலன் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்தான். இவர்களின் காதல் ஊர் பெண்டுகளுக்குத் தெரிய கண் காது மூக்கு சேர்த்து பேச ஆரம்பித்தார்கள். காதலனின் அம்மாவிடமே அது பற்றி விசாரிக்க, காதலனின் வீடே பற்றி எரிந்தது. காதலிக்கு அவள் அப்பாவால் கும்மாங்குத்துகள் பரிசாகக் கிடைத்தன. காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன் ஊரை விட்டு வெளியேறினான்.

காலங்கள் கடந்தன. ஊருக்குத் திரும்பினான். காதலியைச் சந்தித்தான். திருமணம் பற்றிப் பேசினான்.காதலி மழுப்பினாள்.கடமை அழைக்க பிறிதொரு நாளில் சந்திக்கலாமென்று வேலைக்கு திரும்பவும் சென்றான். காலங்கள் கடந்தன. மீண்டும் ஊருக்குத் திரும்பினான் காதலியைப் பார்ப்பதற்கு.

காதலியைப் பார்க்க முடியவில்லை. காரணம் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. காதலி அவனிதயத்தில் குத்தி விட்டுச் சென்றாள். வலிக்கும் இதயத்தோடு மீண்டும் வேலைக்குத் திரும்பினான்.

காலங்கள் உருண்டோடின.

காதலன் ஏதோ விஷயமாக ஊருக்குத் திரும்பினான். காதலனின் நண்பன் காதலியைப் பற்றிச் சொன்னான். காதலிக்குப் பிறந்த மகனின் இதயத்தில் ஓட்டையாம்.

தர்மம் சூட்சுமமானது தானே ??????

மொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா ?



டெக்ஸ்டாப் மாடல் கம்ப்யூட்டர் இன்று லேப்டாப்பாக மாறி விட்டது. இன்னும் சிறிது காலத்தில் ”மொபைல்டாப்” கம்ப்யூட்டராக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் எதிர்கால மொபைல்டாப் எப்படி உருவாக்கலாம் என்ற யோசனைதான் இந்தப் பதிவு.

தற்போது இருக்கும் மொபைல் போனில் சிறு மாறுபாடுகளைச் செய்தால் போதும், மொபைல் போனை முழுக் கணிணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான வசதிகள் : இன்பில்ட் இண்டகிரேட்டட் புரஜெக்டர் (INBUILD INTEGRATED PROJECTOR), கீபோர்ட் (KEY BOARD), மெளஸ்(MOUSE), மொபைல் போனுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் (OPERATING SYSTEM). இந்த வசதிகளை மொபைல் போனில் கொண்டு வந்தால் போதும். அட்டகாசமான கம்ப்யூட்டர் தயார். தற்பொழுது ரேடியோ, டிவி, இணையம் மூன்றினையும் மொபைலில் பயன்படுத்துகிறோம். மொபைலை மொபைடாப் ஆக மாற்றி விட்டால் உள்ளங்கைக்குள் உலகம். அகன்ற திரையில் டிவி பார்க்கலாம். சாட்டிங்க் செய்யலாம். இன்னும் என்னென்னவோ செய்து தூள் கிளப்பலாம். ஆளுக்கொரு கணிணி. ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டால் போதும். ஆளாளுக்கு தனி உலகம். திரை தேவையில்லை. ஸ்கிரீன் தேவையில்லை. செல்போனிலிருந்து சுவரிலோ அல்லது தரையிலோ செல்போனின் உள்ளிணைந்த இண்டகிரேட்டட் புரஜெக்டர் மூலமாக ஸ்கீரினைக் கொண்டு வரலாம். மொபைல் போனுடன் (தேவையென்றால் இணைத்துக் கொள்ளும் வசதி) இணைந்த கீபோர்ட், மெளஸ் மூலம் கணிணியில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்யலாம். பேப்பர் வடிவில் சுருட்டி வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீபோர்டுகள் வந்து விட்டன. மெளஸ்ஸும் சிறிய சைஸ்சில் கிடைக்கின்றன. இணைய இணைப்புக்கு 3ஜி டெக்னாலஜி பயன்படுத்தலாம். இதற்கு என்று பெரிய அளவில் செலவு ஏதும் பிடிக்காது. பிரச்சினை என்னவாக இருக்குமென்றால் ஸ்டோரேஜ். இதற்கும் வழி இருக்கிறது. அதிவேக பிராசஸர், மற்றும் ரேம் மெமரியுடன், எஸ்டி கார்ட் மூலம் இப்பிரச்சினையையும் எளிதில் தீர்த்து விடலாம். 3ஜி வந்து விட்டால் இணைய வேகமும் உயரும். ஆக, மொபைல் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இவ்வகைக் மொபைல் கம்ய்யூட்டரை உருவாக்கியே தீர வேண்டும். இதற்கான விலையினைக் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்குள் அடக்கி விடலாம். பவர் பிரச்சினை இருக்காது. யூபிஸ் தேவையில்லை. இப்படி எவ்வளவோ வசதிகள் தரப்போகும் மொபைல்டாப் எப்போது வரும் ??????

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2

அந்த கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர். சமமாக சொத்து பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அண்ணனுக்கு நான்கு பிள்ளைகள். தம்பிக்கு ஒன்று. தம்பி மனைவிக்கும், தம்பிக்கும் அண்ணனைப் பார்த்து பொறாமை. பக்கத்து பக்கத்து வீடாகையால் அடிக்கடி ஏதாவது பிரச்சினை செய்வார் தம்பி. அண்ணன் ஒதுங்கிச் செல்வார். அண்ணன் மீதும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துவேஷம் கொள்ளக் காரணம் அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் விடுதலைப் போராட்ட வீரருக்கான பணம் வருவது. இது இப்படி இருக்க, அண்ணன் குடும்பத்தார் அனைவரும் விவசாய வேலையில் இறங்கியதால் குடும்பம் முன்னேறிக்கொண்டிருந்தது. தம்பிக்கு ஒரே ஒரு பிள்ளை ஆகையால் கூட மாட வேலை செய்ய ஆள் இல்லை. அதனால் அவரின் வளர்ச்சி தடைப் பட்டது. அண்ணன் குடும்பம் முன்னேறுவது கண்டு வெம்மையில் வாடிய தம்பி குடும்பம், பட்டுநூல்கார மந்திரவாதியை அணுகினர். எப்படியாவது அண்ணன் குடும்பத்திலிருப்போரை ஒழித்துக் கட்டி விட வேண்டுமெனச் சொல்லி காசையும் கொடுத்தனர். கொடுத்த காசுக்கு துரோகம் செய்யாமல் பட்டு நூல்காரனும் பில்லி வைத்தான். அண்ணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாட்டு மந்தையில் இருந்த மாடுகள் செத்து வீழ்ந்தன. பாரம் இழுக்கும் வண்டி மாடுகள் வாயில் ரத்தம் தள்ளி இறந்தன. ஆட்டு மந்தையில் ஆடுகளும் இறந்தன. என்ன காரணமென்று தெரியாமல் கலங்கினர் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பமோ குதூகலத்தில் கொக்கரித்தது. அண்ணன் மனைவி கால் கடுப்பிலேயே செத்தாள். குடும்பத்தின் குலவிளக்கு அணைந்தது. ஒழிந்தது அண்ணன் குடும்பம் என்று சந்தோஷத்தில் மிதந்தது தம்பி குடும்பம். தம்பி மகனுக்கு வந்த மனைவியும் பட்டு நூல்காரனை விடாமல் பிடித்துக் கொண்டாள். விளைவு மேலும் மேலும் அண்ணன் குடும்பத்தில் இழப்புகள். பிரச்சினைகள். அண்ணன் குடும்பம் தவித்தது.

அண்ணன் வீட்டிற்கு ஒரு பாதிரியார் வந்தார். வீட்டின் சனி மூலையிலும், சனி மூலைக்கு நேரெதிர் மூலையிலும் புதைக்கப்பட்டிருந்த பில்லியினை எடுத்து சுடுகாட்டில் வைத்து எரித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்ன காரணமென்று தெரிந்து கொண்டார்கள் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பத்தார் செய்யும் எந்த மந்திரவாத தொல்லைகளும் தங்களைப் பாதிக்காதவாறு தற்காத்துக் கொண்டார்கள். தம்பி குடும்பத்தார் சோர்ந்து போனார்கள். அண்ணன் குடும்பத்தில் வளர்ச்சி வேகமெடுத்தது.

காலங்கள் உருண்டோடின. பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அண்ணனுக்கும் தம்பிக்கும் பேரன் பேத்திகள் வந்தார்கள். தம்பி திடீரென நோயில் விழுந்தார். தம்பி மகன், தகப்பனை வீட்டின் வெளியில் இருந்த மரத்தடியில் போட்டான். மலம், நீர் எல்லாம் படுக்கையிலேயே சென்றன. உடம்பில் புண் வைத்து புழு நெளிந்தது. சாப்பாடும் கிடைக்காது. கத்தி கத்தி தொண்டையும் வறண்டு போனது. மருமகளும், மகனும் உதாசீனப் படுத்தினர். மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடினான் தம்பி. தம்பியின் துயரம் பொறுக்க முடியாமல் தம்பி மகனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் அண்ணன் சாப்பாடு வாங்கி வந்து போட்டார். தம்பி அழுதான். தம்பியை தன் பராமரிப்பில் விட ஆள் வைத்து தூது விட்டான் அண்ணன். தம்பி மகன் மறுத்து விட்டான். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் ஒரு குடையின் கீழ் மரத்தடியில் கிடந்தான் தம்பி. ஊரே பார்த்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. இரவுகளில் அழுது புலம்புவான் தம்பி. தம்பி மனைவியை வீட்டை விட்டு அடித்து விரட்டினாள் மருமகள். தம்பியைச் சுற்றிச் சுற்றி வருவான் அண்ணன். ஒரு நாள் உடம்பில் புழுக்கள் அதிகமாக, குடிக்க கஞ்சியின்றி மழையிலும் வெயிலிலும் கிடந்து செத்தான் தம்பி. ஊரே ஒன்று கூடி மலர் படுக்கையில் கிடத்தி சுடுகாட்டில் வைத்து எரித்தார்கள். பலகாரங்கள் சாப்பிட்டார்கள். கறி சமைத்து ஊரே சாப்பிட்டது. தம்பியின் மனைவி ஊரை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு வீட்டில் கொண்டு போய் கிடத்தப்பட்டாள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கிடைத்து அவளுக்கு. அவளும் இருட்டறையில் கிடந்து பசியோடு செத்தாள். அவளுக்கும் காரியத்தைச் செய்து முடித்தார்கள். தம்பியின் இழப்புத் தாங்காமல், தம்பி செத்துப் போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் செத்துப் போனான்.

தர்மத்தின் தீர்ப்பைப் பார்த்தீர்களா? தர்மம் சூட்சுமமானது தானே? எப்படி சூரியனும் பூமியும் ஒரு வித கணக்கோடு இயங்குகிறதோ அது போல மனிதனின் வாழ்க்கையும் மாயமான கணக்கின் ஒழுங்கோடு இயக்கப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

குறிப்பு : தர்மம் சூட்சுமமானது எந்த தலைப்பில் வெளிவந்த முதல் பதிவுக்குப் பின் வரும் பதிவுகள் கதைகளாய் எழுதப்பட்டு, இன்றிலிருந்து தலைப்பும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளாய் மாறிவிட்டது. படிக்க படிக்க கடவுளின் மீது பற்று ஏற்படுவதாய் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. நடந்ததைச் சொல்கிறேன். இக்கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மூலம் கேட்ட சம்பவங்கள் தான் கதைகளாய் எழுதப்படுகிறது. சம்பவங்களின் உண்மைத் தரத்துக்கு நான் உத்திரவாதம் தர இயலாது. ஒரு வேளை இக்கதைகளின் மாந்தர்கள் சொல்லிய கதைகள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

Sunday, December 7, 2008

மேஜிக் செய்வது எப்படி ? மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்

சமீப காலமாக சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவிக்களில் மேஜிக் ஷோக்கள் களைகட்டுகிறது. பார்க்க படு சுவாரஸியமாக இருக்கிறது. இன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் அப்படி என்றால், என் சிறு வயதில் என் அப்பா வைத்திருந்த மகேந்திர ஜாலம் புத்தகத்தில் ஒரு மேஜிக் சமாச்சாரம் பற்றி படித்தேன். அதாவது நாயுருவி இலையினை நன்றாக மென்று குதப்பி துப்பிய பின்பு மண்ணை வாயில் போட்டு மெல்லலாம் எனவும், கண்ணாடியைக் கூட கடிக்கலாம் என்று எழுதி இருந்தார்கள். பரீட்சித்துப் பார்க்கலாம் என்று செயலில் இறங்கிய போது அதை எப்படியோ மோப்பம் பிடித்த மாமா என் முதுகில் விளையாடி விட்டார். முதுகில் அடிவாங்கிய பின்பும் தொடர்ந்து பரீட்சையில் இறங்கினால் விளைவுகள் படு மோசமாய் இருக்குமென்பதால் அத்தோடு மறந்து விட்டேன். மேஜிக் நிகழ்ச்சியினைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை.

அந்தப் புத்தகத்தில் இன்னொரு சமாச்சாரம் படித்தேன். வேரில்லாக் கொத்தான் செடி என்று ஒன்று இருக்கிறதாம். அது கள்ளிச் செடிகளின் மேல் கொடி போல படர்ந்து இருக்குமாம். வேர் இருக்காதாம். பின்னே எப்படி பச்சையாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். நடு இரவில் அந்த கொடி பூமியில் புதைந்து கிடக்கும் அதன் வேரான கிழங்கினை நோக்கி திரும்பும் எனவும், அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் என்று எழுதி இருந்தார்கள். உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இந்த வேரில்லாக் கொத்தானை ஏதாவது எதிர்கள் வீட்டில் சொருகி வைத்து விட்டால் அவ்வீடு குட்டிச்சுவராய் ஆகிவிடும் என்று எழுதி இருந்தனர்.

நிலம்புரண்டி வேர் என்று ஒன்று உண்டாம் இந்தச் செடியின் விசேஷம் என்னவென்றால், புதையலைக் கண்டு பிடிக்க உதவுமாம். காடுகளில் கிடைக்கும் இந்தச் செடி மனித வாடை பட்டதும் பூமிக்குள் மறைந்து விடுமாம். இதைக் கண்டு பிடிக்க தேத்தா மரத்தின் கொட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்றால், இந்தச் செடி இருக்கும் இடத்தில் தேத்தா மரத்துக் கொட்டைகள் வெடிக்குமாம். இப்படியெல்லாம் ஏதேதோ எழுதி இருந்தது. புலிப்பாணி ஜாலமென்று இன்னுமொரு புத்தகம் கிடைத்தது. படித்தால் தலை கிறு கிறுத்து விடும். அந்த அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என்பது எனக்கு புதிய தகவலாய் இருந்தது.

அந்த வயதில் சுபாவின் நரேந்திரன், வைஜெயந்தி நாவலில் மூழ்கி இருந்த எனக்கு இப்படிப் பட்ட புத்தகங்கள் வேறொரு உலகினை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பதிவின் மூலமாக அந்த உலகத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

புலிப்பாணி ஜாலமென்ற புத்தகத்தில் இருந்து ஒரு பாடலையும், காசு, கார்டு வைத்து எப்படி மேஜிக் செய்வது என்ற வீடியோவினையும் உங்களுக்கு வழங்குகிறேன். படித்தும், பார்த்தும் ரசித்து விட்டு இதைப் போன்றதொரு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூசித்தான் வெற்றிலையிற் பொட்டைப் பார்த்தாற்
புவனத்திலுள்ளதெலா முனக்கே தோன்றும்
நேசித்த சேடன்முடி காண்பாய் வைத்த
நிதியான புதையலெலா முன்ன தாமே
பூசித்தே சக்தியின்மா பீஜம் நாட்டிப்
புணர்ப்பான வாயிரத் தெட்டுருவே செய்ய
நேசித்துக் கருணையுடன் வருவளானா
னிதியோடு சூனியந்தர னெடுத்திடாயே


இது அஞ்சன மை தயாரிக்கும் முறை பற்றிய பாடல். அஞ்சன மை என்பது பரவை அஞ்சனம், பாதாள் அஞ்சனம் என்று இரு வகைப்படும். பரவை அஞ்சனமை பூமியிலுள்ள பொருட்களை எல்லாம் காட்டுமாம். பாதாளமென்பது பூமிக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் காட்டுமாம்.

வாழ்க்கை படு மர்மமாக இருக்கிறது அல்லவா... ???????

சரி, மேஜிக் ட்ரிக் எப்படி செய்கிறார் என்று பார்த்து முயற்சிக்கவும்.


Saturday, December 6, 2008

தர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1

எங்கள் ஊரில் மிகப் பெரிய பாடகர் ஒருவர் இருந்தார். ஊரில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் அவரின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். சினிமா பாடல்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரை வெளி நாட்டு பாடகர்கள் கூட ஒப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவர். இவர்கள் பரம்பரையே பாடல் பாடி புகழடைந்தவர்கள். பாடகரின் அப்பாவும் பாடகராக புகழ் பெற்றவர். இவர் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பாடுவதில் கில்லாடிகள். தற்போது டிவிக்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கூட பாடகரின் தகப்பனார் கலந்து கொள்வது உண்டு.

இப்படி புகழ் பெற்ற பாடகரிடம் இருக்கும் கெட்ட குணம் - பெண்கள். இவர் பெண்களை வேட்டையாடியது போல வேறு எவரும் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு மேடைக் கச்சேரியிலும் பாட்டுப் பாடிய பின்னர் அன்றைக்கே கச்சேரி கேட்க வந்த ஏதாவது ஒரு பெண்ணை ஒதுக்கி விடுவார். முதலில் கல்யாணமென்று தான் பேச்செடுப்பாராம். அவர் குரலுக்கு மயங்கிய அந்தப் பெண்ணும் விரைவில் அவரிடம் மயங்கி கிடப்பாள். அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்து காரியம் பார்ப்பதற்காக அடுத்த மேடைக் கச்சேரியில் நீதான் என்னுடன் பாட இருக்கிறாய் என்று சத்தியம் செய்வாராம். காரியம் முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாராம். மஞ்சள் கலர் என்றால் பாடகருக்கு ரொம்பவும் இஸ்டமாம். மஞ்சள் கலரில் எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது. உறிஞ்சி விடுவாராம். பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாடகிகளை பெட்ரூமில் பெண்டு நிமிர்த்தி விடுவாராம். சரியாக அந்த சமாச்சாரத்திற்கு ஒத்துழைக்காத பாடகிகளை சுருதி சரியில்லை தாளம் சரியில்லை என்று ஒத்திகையின் போதே மானத்தை கப்பலேற்றி விடுவாராம். வேறு வழியின்றி பாடகிகளும் அந்தச் சமாச்சாரத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்களாம். இப்படி இவரால் குத்திக் குதறப்பட்ட பாடகிகள் எத்தனையோ பேராம்.

ஏமாற்றி விட்டாய், அது இதுவென்று அழுது புரண்டு அழிச்சாட்டியம் செய்தால் அந்தப் பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டு சொல்லியும், ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் அந்தப் பெண்ணைப் பற்றிய பொய்யான புரளியை பரவ விட்டும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செய்து விடுவாராம். வேறு எங்குமே கச்சேரி கிடைக்க விடாமல் வேறு செய்து விடுவாராம். இப்படி அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுத்து சொல்ல முடியாதாம்.

இவரின் இந்த அழிச்சாட்டியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய கசிய, அவரின் மீதான க்ரேஸ் குறைந்து அவரை மேடைகளில் பாட அழைப்பது குறைந்தது. பார்த்தார். இனி இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று விவசாயத்தில் இறங்கினார். விவசாயத்தில் அவருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நிலையில் அவருக்கு முன்பே கலியாணமும் ஆகியிருந்தது. மூன்று பிள்ளைகள் வேறு. முதல் பிள்ளை பிறந்தவுடன் தான் அவருக்கு அதிர்ஷடம் அடித்ததாகச் அவரே சொல்வாராம். அந்தப் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்திருக்கிறது. எங்கெங்கோ சிகிச்சைகள் எடுத்தார்கள். பாடகர் தன் முதன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராம். இந்த மஞ்சள் காமாலையினை எவராலும் சரி செய்ய இயலாதாம். அதனால் பாடகரின் மகன் அற்ப ஆயுளில் உயிரை விட்டிருக்கிறார். ஆள் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாராம். நான் என்ன செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று அழுது புலம்புகிறாராம்.

பெண்களின் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுவும் மஞ்சள் கலர் பெண்கள் என்றால் பாடகருக்கு கொள்ளை ஆசையாம். இவரின் பையனுக்கு வந்த்தோ மஞ்சள் காமாலை நோய். விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா?

தர்மம் சூட்சுமமானது தானே ?????

குறிப்பு : இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதால் படிக்க சுவாரசியமாய் இருக்கும் பொருட்டு “உண்மை” என்ற பதம் தலைப்பில் சேர்க்கப்பட்டது.

Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????